Tuesday, November 23, 2021

திரௌபதி வஸ்திராபஹரணம்

 

T.C.வடிவேலு நாயகர் பற்றிய புத்தகம் அச்சில் கொண்டு வரும் முனைப்புடன் இறுதிக் கட்டமான வேலைகளை செய்துகொண்டிருந்தேன்.திரௌபதி வஸ்திராபரஹணம் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கிடைக்கிறது.அந்தக் காட்சியில் டி பி ராஜலக்‌ஷ்மியும், எம் டி பார்த்தசாரதியும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.



ஒரே ஆண்டில் ( 1934ல்) திரௌபதி வஸ்திராபஹரணம் என்ற தலைப்பில் 2 படங்கள் வெளி வந்தன.ஒன்று சேலம் ஏஞ்சல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் டி பி ராஜலக்‌ஷ்மி, வி ஏ செல்லப்பா இன்னும் பலர் நடித்தது.எம் டி பார்த்தசாரதி இடம் பெறவில்லை என்ற குறிப்பு மட்டும் இங்கே தேவையானது.

இன்னொரு திரௌபதி வஸ்திராபஹரணம் ஸ்ரீனிவாசா சினிடோன் தயாரிப்பில் கே ஆர் சாரதாம்பாள்( திரௌபதி), டி எஸ் சந்தானம் (துரியோதனன்) நடித்து வெளியானது அகிலா விஜயகுமார் முயற்சியில் வந்த பாட்டு புத்தகங்கள் தொகுப்பில் உள்ளவாறு,.இந்தப் படத்திற்கான பாட்டு புத்தகமோ, மேலதிகத் தகவல்களோ கிடைக்கவில்லை.

கவிஞர் பொன் செல்லமுத்து அவர்கள் இதே படக்காட்சியைப் பகிர்ந்திருந்தார். அதில், கஜேந்திர மோட்சம் என்று அச்சாகியிருக்கிறது.

ஆனால், இந்தப் படக்காட்சி உண்மையில் சீனிவாசா சினிடோன் தயாரிப்பில் வந்த படத்தில் இடம் பெற்றதென்பது உறுதியாகிறது.எவ்வாறெனில், அர்ஜூனனாக நடித்தவர் செருகளத்தூர் சாமா என்றும், பீமனாக நடித்தவர் C.S.D. சிங் என்கிற சி எஸ் தன்சிங் என்றும் தகவல் கிடைத்தது.இந்தப் படத்தில்  நடுவில் திரௌபதியுடன் பஞ்ச பாண்டவர்களும் காட்சி தருகிறார்கள். வலது பக்கத்தில் முதலில் நிற்பவர் செருகளத்தூர் சாமா என்பது உறுதியாகத் தெரிகிறது.சி எஸ் டி சிங் தோற்றமும் ஒத்துப்போகிறது.மேலும், மௌனப் படக்காலத்திலிருந்தே இவர்கள் இருவரும் ஏ. நாராயணனுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்ற குறிப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

 நடுவில் திரௌபதிக்கு அருகில் நிற்பவரின் உருவம் எம் டி பார்த்தசாரதியுடன் நன்றாக ஒத்துப் போகிறது ( குறிப்பாக, மூக்கு ). எனில், தருமராக நடித்தவர் பார்த்தசாரதி என்று இதிலிருந்து புலனாகிறது.இவரும் ஏ . நாராயணனுடன் இணைந்து பணியாற்றியவர்.

 ராண்டார் கை அளித்த தகவல்களின் படி https://tcrcindia.com/ குறிப்பிட்டிருக்கலாம். ஆய்வுப் பணிகளில் பிழைகள் எளிதானவை. 2011 லேயே ராண்டார் கை எழுதியிருக்கிறார் என்பதே போற்றுதலுக்குரிய சாதனை.