Friday, May 18, 2012

சூத்திரர்களின் கதை


சூத்திரர்களின் கதை


                             ஒரு நூல் நாவலாகவும், தன் வரலாறாகவும், இனவரைவியல் கூறுகளோடும், அரசியல் பின்னணியோடும், தகவல்களோடும், ஆய்வறிக்கைகளாகவும், கலை நேர்த்தியான எழுத்தோடும்தன் முன்னேற்ற நூலாகவும்  என்று பன்முகத்திறன் கொண்டு விளங்கமுடியுமா? முடியும் என்பதற்குச் சான்றாக ‘ஒரு சூத்திரனின் கதை நூலைச் சொல்லலாம். ஏ.என்.சட்டநாதன் எழுதிய தன் வரலாறே இந்த நூல்.முழுமையடையாத தன் வரலாறு.   நூலாசிரியர் படித்துமுடித்துவிட்டு, வேலை தேடும் சமயத்தில்  நூல் நின்றுவிடுகிறது.ஆனாலும், அதற்குப் பிறகான சட்டநாதன் என்பவரைத்தான் பலரும் அறிந்திருக்கக்கூடும். இட ஒதுக்கீடு  வழங்கும் சமூக நீதி ஏற்பாட்டில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கிய தமிழ் நாட்டில், அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் என்ற வகையில் அறிந்திருக்கமுடியும்.

  

                                இந்த நூலை அவர் தன் விருப்பப் பணிவோய்வுக்குப் பிறகே எழுதத் துவங்கிருக்கிறார். ஆனாலும், தன் சிறுவயது காலத்தையும் ஈரம்காயாமல் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார். பள்ளிக்கூட மாணவர்கள் பயன்படுத்துவது போன்ற கோடுபோட்ட ஒரு நோட்டில் சட்டநாதன் எழுதிவைத்ததை அவருடைய பேத்தியும், இலண்டன் பல்கலைக்கழக கோல்ட்ஸ்மித் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றும் உத்தரா நடராஜன்  நூலாகப் பதிப்பித்திருக்கிறார். பெர்மணண்ட் பிளாக் என்னும் வெளியீடு மூலம் முதலில் ஆங்கிலத்திலேயே இந்நூல் PLAIN SPEAKING:  A SUDRA’S STORY’ என்று வெளிவந்திருக்கிறது. ஆங்கிலப் பதிப்பைவிட, தமிழில் விலை குறைவாகவே காலச்சுவடு அளிக்கிறது.இதை தமிழில் மொழிபெயர்த்து இருப்பவர்கள் கே.முரளிதரன் மற்றும் ஆ.திருநீலகண்டன் ஆகியோர். மேலும்,  இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சட்டநாதனின் உரைகளை தமிழில் மொழிபெயத்தவர்கள் வ.ஜெயதேவன், சிவ.மாதவன் ஆகியோர். இந்நூல் தமிழில் வர உறுதுணையாக இருந்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி என்று அறிய முடிகிறது.


                    பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, பணிகள் என்பன போன்ற விவரங்களை முன்னுரையிலேயே படித்துவிட முடிகிறது. இதைத் தாண்டி ஒரு தன் வரலாற்று நூலுக்குள் என்ன இருந்துவிடப்போகிறது  என்கிற சலிப்போடு படிக்கத்துவங்கியபோது, ஆச்சரியமாக , நூல் அப்படியே வசியப்படுத்திக்கொள்கிறது. உத்தரா நடராஜன் எழுதியுள்ள முன்னுரை குறிப்பிடத்தகுந்தது.
சட்ட நாதனின் பூட்டி(பாட்டியின் தாய்) முதல், இந்த நூலை பதித்தவரான சட்ட நாதனின் பேத்தி உத்தரா நடராஜன் வரை என்று எடுத்துக்கொண்டால் ஆறு தலைமுறைகளை உள்ளடக்கி, ஒரு நாவலின் பின்புலத்தோடும், வெளிப்பாட்டு அழகோடும் அமைந்திருக்கிறது.

                      பள்ளி என்று இருந்த சாதியை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டங்களில், பலருடைய தொடர்முயற்சிகளால் வன்னிய குல ஷத்ரியர் என்று பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த சட்டநாதன் சாதியில் சத்திரியர் என்னும் பின்னொட்டு  இருக்கும்போதும் இவராகவே சூத்திரனின் கதை என்று தன்கதையை எழுதியிருப்பது ஏன்?ஏனெனில், பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் சூத்திரர்களாகவே கருதப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டும் ஒரு இடமும் கதைக்குள் வருகிறது. வன்னியர்கள் சிறுபான்மையாக, ஆதிக்கம் இல்லாதவர்களாக இருக்கும் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சட்டநாதன். இதையும் நாம் கவனிக்கவேண்டியதாகிறது.ஆனாலும், இவர் தன் சாதி மீதான ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இருந்தவராக தென்படவில்லை. சாதிபேதங்களை வெறுப்பவராகவே இருந்திருக்கிறார்.

                                  இலக்கிய வாசிப்பின் வழியாக பல மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில், வெவ்வேறு ரூபங்களில் நிலைத்து நிற்கின்றனர். அதில் சட்டநாதனின் தாய்வழிப் பாட்டியும் சேர்ந்துகொள்கிறார். நூலில் முகப்பு அட்டையில் அமைந்துள்ள புகைப்படத்தில் தென்படுபவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் தரப்படவில்லை.

                                   சுயசரிதை என்பதை தமிழ்ப்படுத்தினால் தன் வரலாறு என்று எழுதப்படுகிறது. ஆனால் வரலாறாக ஆகமுடியாதவர்கள்கூட சுயசரிதை எழுதுவதாலும், மேலும் பொருத்தமான தமிழாக்கமாகவும் சுயசரிதை என்பதை தன்கதை என்று குறிப்பிடலாம் என்றே எண்ணுகிறேன்.

                                    சட்டநாதன் அவருடைய தன்கதையில், இடம்பெறும் பெரும்பாலான மனிதர்களின் பெயர்களை நேரடியாகப் பதிவு செய்யாமலேயே தவிர்த்திருக்கிறார்.குறிப்புப் பெயர்களாகவும், உறவுமுறைகள் பெயர்களாலுமே குறிப்பிடுகிறார்.

                              ஆனர்ஸ் படிப்பில் தன்னுடன் படித்த தோழிகளைப் பற்றியும், பின்னர் அவர்கள் என்னவானார்கள் என்றும் சொல்லும் இடம் வருகிறது.அப்போது, அவ்வளவாக படிப்புவராத ஒரு தோழி அரசியல்வாதியானதைப் பற்றி மிக இயல்பாகச் சொல்லும்போது, ரசிக்கும்படியாக உள்ளது.

                          சட்டநாதனை பார்ப்பனர் என்று எண்ணிக்கொண்டு வேலைதரும் ஒரு பார்ப்பனர், பின்னர் உண்மை தெரிந்தவுடன் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கொள்கிறார். அதே பார்ப்பனர்தான் பிறகு, சட்டநாதன் தன் இளைமைக்காலம் வரை  பல இன்னல்களையும், அவமானங்களையும் எந்த ஐ.சி.எஸ். படிப்பின் பொருட்டுப் பொறுத்துக்கொண்டு , கனவு கண்டுகொண்டிருந்தாரோ அந்த  ஐ.சி.எஸ். படிப்பிற்கே,    வாழ்க்கை இலட்சியத்திற்கே தடையாக நின்று சதி செய்கிறார். இந்தச் சம்பவம் சட்டநாதன் அவர்களின் வாழ்க்கையில் எப்படியொரு முக்கியமான இடமோ, அதுபோலவே சமூகத்தைப் பிரதிபலிப்பதிலும் முக்கியமான இடம். ஒருவர் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் எத்தனைதான் அறிவும், திறனும் பெற்றிருந்தபோதும் அவர் தாண்டவேண்டிய தடைகளும், தோல்விகளும், வாய்ப்புமறுப்புகளும், அவமானங்களும் சேர்ந்து முன்னேற்றத்தையே தடுத்துவிடுகிறது.உயர்சாதியினரைவிட மிகவும் போராடித்தான் வெற்றியை அடையமுடிகிறது.காணாமல்போகக்கூடியவர்களே நிறையபேர். அதையெல்லாம் கடந்து வெற்றி கண்டவர்களுடைய வரலாற்றில், மறைக்கப்பட்டது, மறுக்கப்பட்டது, திரிக்கப்பட்டது, பதிவு செய்யப்பாடாதது போன்றவற்றையெல்லாம் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருப்பவை சிலவே.

                                சிக்கல்களை உணர்ச்சி கலக்காமல், தெளிவாக அதன் ஆதாரம் நோக்கி சிந்திப்பவராகவும், செயல்திறனும், விடாமுயற்சியும் கொண்டவாராக இவர் இருந்தது, சிறுபிராய காலக்கட்டங்களிலேயே தென்படுகிறது.இதுவே, இவரது பின்னாளைய வளர்ச்சிக்கு ஆதாரமான காரணிகள். கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் படித்தவர் என்பதால் அதன் தேவையை நன்கு உணர்ந்திருக்க இவரால் முடிந்திருக்கும்.

சமூகத்தில் சாதி எவ்வளவு பெரிய காரணியாக இருக்கிறது என்பதை பல படிப்பினைகளின்மூலம் உணரமுடிவதுபோலவே, சட்டநாதனின் வாழ்க்கை மூலமும் அறிய முடிகிறது. ஆனால், அமைதியான முறையிலும், சார்பு நிலைகொள்ளாமலும்தான் சாதியைப் பற்றிய இடங்களிலெல்லாம் சட்டநாதன் எழுதியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. சாதி பற்றி எழுதும்போது மட்டும் என்றில்லாமல்,எப்போதுமே தற்சார்பை நிலை நிறுத்தாமல் விலகி நின்றே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இந்த நூலை வெளியிட்டமைக்காக காலச்சுவடு பதிப்பகமும், அதற்கு உறுதுணையாய் நின்றவர்களும், உழைத்தவர்களும் பாராட்டுக்குரிவர்கள். சட்ட நாதன் ஆற்றிய உரைகள், மற்றும் கட்டுரைகள் ஆகியவை இணைப்பாக அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஒரு சூத்திரனின் கதை
சட்டநாதன் ஐ.ஏ.எ.ஸ்
தன் வரலாறு
காலச்சுவடு பதிப்பகம்

Tuesday, May 15, 2012

பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்


புனைவுக் கலையில் பூரண நிலை


ஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள்.  ஏழை, எளிய, சிற்றூர் மக்களின் கடவுள்கள் அவர்களைப்போலவே ஏழ்மையோடும், சிறுதெய்வங்களாகவுமே இருக்கிறார்கள். மண்ணின் மனிதர்களைப்போலவே, மண் சாமிகள்.தெய்வத்திலும்கூட சிறு தெய்வங்கள், பெருந்தெய்வங்கள் என்று மனிதர்களுக்குள் பிரிவினை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கண்மணி குணசேகரனின் அண்மைய சிறுகதைகளின் தொகுப்பு பூரணி பொற்கலை. மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அத்தனைக் கதைகளுமே ஓரிழையை அடிப்படையாக, தொடர்ச்சியாகக் கொண்டு ஒரு வரிசையில் வைக்கத்தக்கவை.காவல் தெய்வமான அய்யனார்,அய்யனாரின் மனைவிகள் பூரணி, பொற்கலை, அய்யனாரின் சேவகர்கள், மற்றும் சிறுதெய்வங்கள் ஆகியோரை கதை மாந்தர்களாகவே  கொண்டு எழுதப்பட்டவை.மானுடர்களும், அமானுடர்களும் கதைகளுக்குள் கலவாமல் கலந்து கதை மாந்தர்களாகியிருக்கிறார்கள். இப்படி ஒரே சரடில் கற்பனைவளத்தோடு எழுதித்தள்ளும் திறன் இருப்பதை கண்மணி இலக்கிய உலகிற்கு இத்தொகுப்பின் மூலம் பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

கண்மணி குணசேகரனுடையது யதார்த்த வகை எழுத்து. இந்தத் தொகுப்பைப் பொருத்தவரை யதார்த்த எழுத்தோடு சேர்த்தும், சற்று அதிலிருந்து மாறுபட்டும், இலக்கிய உத்திகளை மிக இயல்பாகச் சேர்த்துக்கொண்டும், புனைவுகளின் வழியாக வாசிப்பு சுவாரசியமளிக்கும் வகையில் எழுதப்பட்டவை இக்கதைகள்.யதார்த்தங்களிலிருந்து விலகிய புனைவுகளின் வழியாக இலக்கியம் செயல்படும்போது, அதற்கு பன்முகத்தன்மை அளிக்கும் சாத்தியங்கள் கூடுகிறது. கவிதைகளிலேயே இவ்வுத்தி பெருமளவில் செயல்படுகிறது. இத்தொகுப்புக் கதைகளிலும்  நாம் காணும் அய்யனார் மற்றும் சுற்றத்தினர் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக நமக்குக் காட்சியளிப்பார்கள். ‘ நாம வாழவச்ச மனுசாளுவோ, நம்ம வாழவச்சுப் பாக்காம வேரை வெட்டுதுங்க... வெந்நீரை ஊத்துதுங்க’ என்று சாமிகளே புலம்புவது, புறக்கணிக்கப்படுகிற பெற்றோர்களை, வாழ்ந்து கெட்டவர்களை, கலாச்சாரங்களை, கலைகளை என்று பல வகையில் நினைவுபடுத்திவிடுகிறார்கள். புனைவின் சாத்தியமே இங்குதான் சிறப்பாகச் செயல்படுகிறது.இவ்வாறு, சாமிகள் படிமங்களாக நின்று, பல்வேறு சூழலுக்குப் பொருந்திப்போகிறார்கள்.. பெண்ணியம் பேசுகிற, தலித்தியம் பேசுகிற, மாய யதார்த்தவாதம் என்கிற உத்திகளை இயல்பாக உள்ளடக்கிய,ஆனால் எளிமையாக சொல்லப்பட்ட கதைகள்.

நடைமுறை வாழ்வில் சாமிகள் எப்படி கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்? என்றொரு கேள்வியெழுவது இயல்புதான். குற்றவாளிக்கு உறுத்துகிற மனசாட்சியாகவும், அச்சுறுத்துகிற கனவாகவும், இயற்கை  நிகழ்வுகளின் காரணிகளாக கற்பிக்கப்படுபவர்களாகவும் வருகிறார்கள் சாமிகள்.

படையல் என்கிற கதையில் வீரனாருக்கும், அய்யனாருக்குமே சண்டை மூள்கிறது. மாமன், மச்சான் சண்டைதான். இடையில் சமரசம் செய்துவைப்பவள் பூரணிதான்.என்னதான் சாமிகளென்றாலும், அவர்களும் சராசரி மனிதர்களைப்போலவே நடந்துகொள்கிறார்கள். எனவே, இங்கே சாமிகள் குறியீடுகளாகவே நிற்கிறார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் , நெய்வேலியைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு பகுதியைச் சொல்கிறது, புழுதி எனும் கதை.

முன்பெல்லாம் மாட்டிறைச்சி  சற்று கமுக்கமான இடங்களில் விற்கப்பட்டு வந்தது.ஆனால், இன்று நகரங்களில்  நெரிசலான சாலையோரங்களில்கூட மாட்டிறைச்சி விற்கும் கடைகளும், அதில் வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சியும் பரவலாக காணமுடிகிறது. காலத்தால் ஏற்பட்டுள்ள இந்தச் சமூக நிலை மாற்றத்தை பதிவு செய்யும் இலக்கிய நுட்பமான, ஆவணமான ஒரு வாய்ப்பு ‘வேட்டை’ கதைக்குள் அமைந்திருக்கிறது.


உண்மை மனிதர்களுக்கும், சாமிகளுக்கும் தொடர்புபடுத்துகிற சந்தர்ப்பங்கள் புனைவின் உச்சம். பூரணி பொற்கலை கதையில் ஈயம் பூசும் குடும்பத்தைப் பார்த்து ஊர்த்தலைவன் மனம் பதைக்கும் இடம் அதற்குச் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம் .உடனே அதற்குப் போட்டியாக அரண் கதையில், மீண்டும் குடிப்பழக்கத்தைத் தொட நினைப்பவனை விரட்டி வந்து காப்பாற்றும் குதிரையையும் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுகொள்ளும் வகையில் வரிசையில் தள்ளுமுள்ளு  கட்டி நிற்கின்றன.
நமது மண்ணின் சிறுதெய்வங்கள் வானத்திலிருந்து குதித்தவர்களில்லை. நம்மிடையே வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களேதான். அவர்கள் செய்த தியாகங்களுக்காகவும், வஞ்சிக்கப்பட்ட ஆறாத்துயரங்களுக்காகவும், வீரதீரச் செயல்களுக்காகவும் வழிவழியாக போற்றப்பட்டு வந்து சாமிகளாகவே ஆகிவிட்டவர்கள். இக்கருத்தை சுட்டிக்காட்டுவதுபோல், சுவர் என்கிற கதையில் வருகிற மலையம்மாள் என்கிற குலசாமியைப் பற்றிய தகவல் கதைக்குள்ளேயே வருகிறது.

வாழ்ந்துமறைந்த நமது முன்னோர்கள் என்பதால்தானோ என்னவோ அவர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன போலும்.அந்தவகையில், தமுக்கு வீரன் கதை ஒடுக்கப்பட்டவனின் எழுச்சியை, தலை நிமிர்வை முன்வைக்கிற கதை. ஒடுக்குபவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையும்கூட. நடு  நாட்டு வட்டார மொழியிலேயே சாமிகளும் பேசுவது புனைவின் சுவையைக் கூட்டுகிறது.

ஒவ்வொரு கதையும் சமூகத்துக்கான செய்திகளாக, அறிவுறுத்தல்களாக அமைந்திருந்தாலும் அவை போதனைக் கதைகளைப்போல் அல்லாமல் இயல்பாக, உணர்த்துகிற வகையில் சொல்லிச்செல்கிறது.

ஆணிகளின் கதை என்கிற கதை மட்டும் கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பில் முன்னமே இடம்பெற்றது. என்றாலும், பொருத்தப்பாடு கருதி இத்தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆணிகளின் கதை ஆவிகளின் கதைதான். இந்தக் கதையில் மட்டும் சாமிகளுக்குப் பதில் ஆவிகள். ஆவிகளின் கதைகள் நமக்கு உணர்த்துவதும்,சாமிகளின் கதை போலவேதான். குலசாமிகளின் கதைகளைப்போலவே, கதைகளில் வருகிற உவமைகளும் தனித்துவமான, மண்சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளிப்படும் உவமைகள்தான்.


நெகிழ்ச்சியான காட்சிகளாலும், உரையாடல்களாலும் அதேபோல்  அங்கதச் சுவையாலும் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தருகின்றன கதைகள். வாசிப்பின்போது, மௌனக் கரை உடைத்து சிரிக்காமலும், தழுதழுக்காமலும் இக்கதைகளை படித்துவிடமுடியாது எனலாம்.

எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே அத்தகைய திறனை, இயல்பாகக் கொண்டு பிறக்கிறார்கள், அதுவொரு மானுட நிகழ்வு என்றொரு கூற்று உண்டு. (ஒருவேளை மகாகவிகளுக்குமகா எழுத்தாளர்களுக்கு இக்கூற்று பொருந்தலாம் என்பது என் எண்ணம். சிறந்த கவிகளாக, எழுத்தாளர்களாக உருவாக தீவிரமான முயற்சியும், பயிற்சியுமே போதும் என்று எண்ணுகிறேன்) இக்கதைகளை படிக்கிறபோது இக்கூற்று உண்மைதானோ என்று நம்பத்தோன்றுகிறது. கண்மணி குணசேகரன் என்கிற கலைஞனின் எழுத்து வல்லமைக்கு சிறந்தவொரு சான்றாக, வெற்றிச்சின்னமாக , பூரணி பொற்கலை சிறுகதைத் தொகுப்பு பெருமை சேர்க்கிறது.தமிழினி வெளியீடாக வந்திருக்கிற இத்தொகுப்பில் எழுத்துப்பிழைகள் சற்று தென்படுகிறது.

சிறுதெய்வ வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை அறிமுகமேயில்லாத நகர, மாநகர வாழ் மக்கள்கூட இக்கதைகளை வாசிப்பதன் வழியாக அவற்றை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு கதைகளை வாசித்தபிறகு சிற்றூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சிறுதெய்வங்களின் சிலைகளை வெறும் சிலைகளாக பார்க்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அச்சிலைகள் உயிர்பெற்று கற்பனைக் கண்களுக்குள் துள்ளித்திரியும்.