Saturday, January 17, 2009

எஸ். ராமகிருஷ்ணனுடன் 2 நிமிடப் பேச்சு.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 10-01-08 ,சனிக்கிழமை சென்றிருந்தேன். நிறைய புத்தகங்களை வாங்கிவிடக் கூடாது என்ற தீர்மானத்தோடேயே போனது நகைப்புக்குரிய முரண். ஆனால்,புத்தகக் காட்சியரங்கிற்காக ஆவலோடு காத்திருந்தேன். ஏற்கனவே உள்ள புத்தகங்களையே இன்னமும் படிக்காமல் வைத்திருப்பதுதான் காரணம்.


அடையாளம் பதிப்பகத்தின் கடைக்குள் கண்மணி குணசேகரனின் உயிர்த் தண்ணீர் (சிறுகதைகள்), மற்றும் அ.வெண்ணிலாவின் ‘நீரில் அலையும் முகம்’ (கவிதைகள்), வாங்கிக் கொண்டிருந்தபோது, வாசலில் உரக்கவும், மிரட்டல்போலவும், ஒரு குரல் இலக்கியம் பேசிக்கோண்டிருந்தது.
யாரது என்று எட்டிப் பாரத்தால் நம்ம எஸ்.ராமகிருஷ்ணன். உடன் உரையாடிக் கொண்டிருந்தவர் ந.முருகேச பாண்டியன் அவர்கள். அவரை நேரில் பார்த்தபோது நன்கறிந்த இலக்கிய முகம் என்று மட்டும் பிடிபட்டுவிட்டது. ஆனால், யாரென்பது தெரியவில்லை. நல்ல வேளையாக, கடைக்காரர் அப்போதுதான் தொலைபேசியில் இவர்கள் இருவரும் இங்கிருக்கும் விபரத்தை யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்.


மாலையில் உயிர்மை கடையில் இருப்பதாகத்தானே இணையத்தில் குறிப்பிட்டிருந்தார். என்று யோசித்தவாறு அவரிடம் போனேன். நான், எனது நண்பனும், வகுப்புத் தோழனுமான மணிமாறனுடன்தான் செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். ஆனால், அவனுக்கு அன்று முக்கியமான வேலை (உயர்நீதி மன்ற வழக்கறிஞர், நல்ல இலக்கிய வாசகன்) ஒன்று வந்துவிட்டதால் வரமுடியாத காரணத்தை வருத்தத்தோடுத் தெரிவித்திருந்தான். அவனுக்கு திரௌபதை கூத்துப் பற்றியும், நாடகங்கள் பற்றியும் அறிய வேண்டியிருந்தது. அதற்காக, எஸ்ரா வைச் சந்திக்கவேண்டும் என்பது எங்களின் திட்டமாயிருந்தது. ஆனால் அவனால் வரமுடியாமல் போகவே, நானே கேட்டுவிடுவது என முடிவு செய்து அவரிடம் போனேன்.
தங்கள் இணையப் பதிவுகளைப் படித்து வருவதாகச் சொன்னேன். நல்லாருக்கா என்று ஆர்வமாகக் கேட்டார். எனக்கு வேண்டியதைப் பற்றி விபரங்களைச் சொன்னேன். சிறிதும் தயங்காமல், ஆர்வத்தோடு உதவி செய்தார். அவருடைய செல்பேசி எண்ணை வேண்டுமானால் பெற்றுக்கொண்டு நண்பரைப் பேசச் சொல்லுங்கள் என்றார். நான் உடனடியாக, என் கைபேசியிலிருந்து அவனை அழைத்து, ‘ மணி, எஸ்ரா பேசறார். பேசு’ எனக் கொஞ்சமும் மரியாதையில்லாமல் அவர் முன்னாலேயே சொல்லிவிட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்.அவர் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் முருகேசபாண்டியன் அவர்களிடம் சற்று நேரம் மொக்கைப் போட ஒதுங்கினேன். எஸ்ரா பேசி முடித்ததும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். (செல்பேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். யார் கேட்டாலும் தரமாட்டேன். ஆ.. அஸ்கு...புஸ்கு)


புத்தகக் காடசியரங்கில் நான் சந்தித்த மற்ற சில பிரபலங்கள் அழகிய சிங்கர், ரா.ஸ்ரீனிவாசன், பழனிவேள், மற்றும் உன்னதம் ஆசிரியர்(கௌதம சித்தார்த்தன் என்று நினைக்கிறேன்).


இரண்டு இளைஞர்கள்,தலையணை அளவான புத்தகங்களாகவே வாங்கிக் கொண்டிருந்தனர். வினோதமாகப் பார்த்தேன். ஒரு இளம்பெண் மற்றுமொரு இளைஞர் தமிழினியில் நம்ம தல ஜெமோ புத்தகங்களை என்ன ஏது என்றெல்லாம் ஆராயாமல், எல்லாவற்றிலிருந்தும் ஒன்றை எடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். அட! நம்ம ஆளுங்க ! (ஆனா,நான் வாங்காமலே இப்படிச் சொல்லிக்கக் கூடாது)
.

5 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உன்னதம் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் தான்.

நல்ல சிறுகதையாசிரியர்.

ச.முத்துவேல் said...

வருகைக்கும், தகவல்களுக்கும் நன்றிங்க, சுந்தர்ஜி.

குப்பன்.யாஹூ said...

good post

Anonymous said...

பட்டாம்பூச்சி விருது உங்களுக்கு, பெற்றுக்கொள்ள என் வலைப்பதிவுக்கு வரவும்.

ச.முத்துவேல் said...

நல்வரவு குப்பன் யாஹூ
கருத்துக்கு நன்றீ.