Tuesday, January 13, 2009

கண்மணி குணசேகரனின் அஞ்சலை

அசலான , துல்லியமான எழுத்து


கண்மணி குணசேகரன் ,2007 ஆம் ஆண்டில், 40 வயதிற்கும் குறைந்த இளம்படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.

கண்மணி குணசேகரனின் அஞ்சலை என்கிற புதினம் தமிழினி பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

கண்மணி குணசேகரன் ஒரு சாதாரண ITI படித்த தொழிலாளி. அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணிபுரிகிறார். சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.

அஞ்சலையின் சிறப்புகளாக நான் கருதும் சிலவற்றை (ஒழுங்கற்ற முறையில் ) பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக, ஒரு பெண்ணை மையமாக வைத்த புதினத்தை ஒரு ஆண் எழுதியிருப்பது வரவேற்கத் தகுந்தது. நடுநாடு என்று சொல்லப்படும் முந்திரிக்காட்டுப் பகுதியின் செம்மண் புழுதி, படிக்கிறவர்களின் கால்களிலும் ஒட்டிக் கொண்டுவிடும் அளவுக்கு இவரின் விவரிப்புகள் ,ஒரு திரைக்கதை போல எழுதப்பட்டுள்ளது. ஒரு கதையை 4 வரிகளிலும் சொல்லிவிடமுடியும்.400 பக்கங்களுக்கும் எழுதலாம். 400 பக்கங்கள் எழுத ஏதோ ஒரு திறன் தேவைப்படுகிறது.அது கண்மணிக்கு மிக நன்றாக வாய்த்திருக்கிறது.


ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு குழுவினரின் உழைப்பு. ஆனால், ஒரு திரைப்படைத்தை பார்ப்பதுபோல் நம் கண்முன் காட்சிகளை துல்லியமாக விவரிக்கிறார்.


பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பார்களே அதுபோல அமைந்ததுதான் அஞ்சலையின் வாழ்வு. அஞ்சலை என்கிற தலித் பெண்ணின்
வாழ்வில் மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்கிற பச்சாதாபம் நமக்கே ஏற்படுகிறது.முதல் கணவன், ஆளே மாறிப்போய் ஏமாற்றுகிறார்கள் என்றால், இரண்டாவது கணவனின் பெயர்கூடத் தெரியாமல் திருமணம் நடக்கிறது.

”நேற்று மணக்கொல்லையில் விடிந்தபோது, இன்று தொளாரில் விடிந்தது”என்று ஒரு இடத்தில் சித்தரிப்பு வரும். இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.

அஞ்சலை வரப்பில் நடந்துபோகிறாள் என்றால், அங்கிருப்பது வரப்பும், அவளும் மட்டும்தானா? அணில் இருக்கிறது.அது பழம் தின்னுகிறது. முந்திரி மரங்கள் இருக்கிறது. அந்த முந்திரி மரங்களைப் பற்றிய குறிப்புகளை விளக்குகிறார்.

தேங்காய் எண்ணெய் பனிக்காலத்தில் உறைந்துபோய் இருப்பதை ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்.

அவளின் கெட்ட நேரம் ஒரு கணவன் என்பது இல்லாமல் இருவருக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. எனினும், சோரம் போவளாக இல்லை.

ஒரு கிழவன்/கிழவிக்கிருக்கும் அனுபவப் பக்குவத்தோடு எழுதியுள்ளார். அதிலும் பெண் வாழ்வை, வலியை, உணர்வை, பழக்க வழக்கங்களை எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.

”கையெடுத்துக் கும்பிட்டாள் பால் சுறாக்காரனையும்,தன் அக்கா வீட்டுக்காரனையும் மானசீகமாய்.,” என்று ஒரு இடத்தில் வரும். நெகிழவைக்கும் தருணங்கள் அவை.

”தண்ணீர் பட்டு நனைந்த தரை புழுதியடங்கிப் போயிருந்தது” என்று ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு சித்தரிப்பு வரும். ஆனால், இது நுணுக்கமான, குறியீட்டு சித்தரிப்பு என்றே நான் கருதுகிறேன்.

ஒரு கட்டத்தில்,அஞ்சலை மற்றும் அவளின் நடு அக்காவும் உரையாடும்காட்சிகள் நெகிழ்ந்து கண்ணில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது.

”இல்லாதவளின் கதை” என்கிற தலைப்போடு இரண்டாவது பதிப்புக்கு கண்மணி முன்னுரை எழுதியுள்ளார். இதுதான் இக்கதையின் மையமோ என்று நான் யோசிக்கிறேன். இருக்கப்பட்டவளாக அவளது பெரிய அக்காவே இக்கதையில், இம்மையத்துக்கு வலு சேர்க்கும் உதாரணமாக வந்து போகிறாள்.

“அவசரத்துல அண்டாக்குள்ள கை நுழையலயாம்” போன்ற கிராமத்து சொலவடைகளும், உருவகங்களும் நிறைந்து காணப்படுகிறது.

இன்னும் நிறைய எழுதலாம். எனக்குத்தான் தெரியவில்லை.

நூல் விபரம்

அஞ்சலை ( புதினம்)
ஆசிரியர்-கண்மணி குணசேகரன்

யுனைடெட் ரைட்டர்ஸ் (தமிழினி)
63, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை, 14.
விலை .ரூ.160
பக்கங்கள் 320

8 comments:

முபாரக் said...

நன்றி..

கண்மணி குணசேகரனின் வேறு புத்தகங்கள் உள்ளதா?

ச.முத்துவேல் said...

நல்வரவு முபாரக்.
நிறைய உள்ளது. அவரின் கவிதைகள் பற்றி நான் ஒரு அறிமுகம் எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பிட்டுள்ளேன். மேலும், வடகரைவேலன் அவர்களின் அண்மைய கதம்பத்திலும் தகவல்கள் கிடைக்கிறது. இவரின் பெரும்பானமையான நூல்கள் தமிழினியில் கிடைக்கும். வருகைக்கு நன்றி.

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவரின் வெள்ளெருக்கு படித்தீர்களா, நன்றி நூல் அறிமுகத்திற்கு.

Anonymous said...

முத்துவேல்,

அஞ்சலை சிறந்த படைப்பு. ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை இவ்வளவு நுட்பமாக எழுத்தில் வடிக்க முடியமா என ஆச்சிரியப்படுத்துகிறார்.

அவரின் “கோரை” நாவல் படியுங்கள், ஒரு சம்சாரி படும் சிரமங்கள் நூல் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது.

ச.முத்துவேல் said...

வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி, நிலாப்ரியன்.

ச.முத்துவேல் said...

வெள்ளெருக்கு படித்திருக்கிறேன். வருகைக்கும், பகிர்தல்களுக்கும் நன்றி.

ச.முத்துவேல் said...

கோரை இனிமேல்தான் படிக்க வேண்டும் ஜெமோ கூடப் பரிந்துரைத்துள்ளார். நன்றி, அண்ணாச்சி