Thursday, April 2, 2009

இரவுக்கு முன்பு வருவது மாலை


1

எழுத்தாளர் ஆதவன் அவர்களின் எழுத்துக்களை இதற்கு முன் நான் படித்திருக்கிறேனென்றால், அவர் எழுதிய நூல்களின் சில தலைப்புக்களை மட்டும்தான் சொல்லலாம். இப்படியொரு சூழ்நிலையில் நான் படித்ததுதான், இரவுக்கு முன்பு வருவது மாலை என்கிற அவரின் குறு நாவல் தொகுப்பு. மொத்தம் ஆறு குறு நாவல்கள்.

1. இரவுக்கு முன்பு வருவது மாலை

2. சிறகுகள்

3. மீட்சியைத் தேடி

4. கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்

5. நதியும் மலையும்

6. பெண், தோழி, தலைவி.

இவற்றில், ”பெண், தோழி, தலைவி” என்கிற கதை வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாதது.கிட்டத்தட்ட 1960 களுக்குப் பிறகான காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை இவை அனைத்தும் என்று அறிய நேருகிறபோது சற்று ஆச்சரியமாகத்தானிருக்கிறது. காரணம், புதுமையும், இளமையான எழுத்து நடையும் தான். லேசான நகைச்சுவை உணர்வும் விரவிக் கிடக்கிறது.

ஒரு கலங்கிய குட்டை, பிறகு தெளிவடைவதைப்போல, கிட்டத்தட்ட எல்லாக்கதைகளிலுமே, கதை மாந்தர்கள் தெளிவு பெறுகிறார்கள். அவ்வகையில், இக்கதைகள் அர்த்தமுள்ளவை.

ஆசிரியர் புதுதில்லியில் இருந்திருக்கிறார் என்பதால், இவரின் இந்த குறு நாவல்களில் எந்த வகையிலாவது புது தில்லி இடம் பெறுகிறது. (பாலசந்தர் படங்களில் பாரதியார் வருவது போல) நடுத்தர, அலுவலக ஊழியர்களின், வாழ்வை அனுபவித்துச் சித்தரிக்கிறார்.


சிறகுகள்

ஒரு இளம்பெண்ணின் கடைசிக் கல்லூரி நாளோடுத் துவங்கும் இக்கதை, அவளின் திருமண நாளுக்கான முந்தின இரவு வரை நடைபெறும் காலக்கட்டத்தைச் சித்தரிக்கிறது.இக்கதையைப் படிக்கும்போது, எனக்கு கண்மணிகுணசேகரனின் அஞ்சலை படித்த நினைவு லேசாய் வந்து போனது. காரணம் இரண்டு அம்சங்கள்.

1.ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்தரித்திருப்பது.

2.கதை நகர்வுக்கு ஒட்டிய தத்ரூபமான காட்சி விவரணைகள்.

நான் நிறையப் படித்தது இல்லை என்பதால் எனக்கு இப்படி மட்டுமே ஒப்பீடு எழுகிறது. ஒரு வகையில் இக்கதை பெண்ணிய எழுத்து என்றால், மறுக்கமுடியாது. ”அம்மா என்பவள் வீட்டுவேலைகளுக்கெல்லாம் மேலே, வீட்டைக் காவல் உத்தியோகம் வேறு செய்கிறாள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. பெண்களேக்கூட என்ன செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டால், ”வீட்டில்தான் இருக்கிறேன், சும்மாதான் இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளையும், வீட்டைக் காவல் காப்பதையும் பெண்கள் செய்யும் உத்தியோகம் என்கிறார் ஆசிரியர்.சிறகுகள் என்கிறத் தலைப்பு ,ஒரு பெண், பிறந்த வீட்டிலிருந்து, புக்ககம் செல்வதற்கானக் காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், சொல்லப்பட்டிருக்கிறது.அதே சமயம் பெண் விடுதலைக்கான காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது. வளர்ந்துவிட்டப் பையனுக்கும், தந்தைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட மகள்- தாய் நெருக்கம் அன்னியோன்யமானதும், கூடுதல் அந்தரங்க நெருக்கம் கொண்டதாகவும் இருக்கும் என்கிற யதார்த்தத்தை, இக்கதையில் இயல்பாகக் காணமுடியும். அதேபோல், ஒரு பதின் வயதுப் பெண்ணின் மன ஓட்டங்கள், திருமணம், காதல் குறித்த ஏக்கங்கள், கனவுகள், அச்சங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் காட்சிகள், அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு, மிக இயல்பாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.ஒரு காட்சியில், கதையின் நாயகியை எதிர் வீட்டு இளைஞன் பார்ப்பான். அவள் நேராக வீட்டிற்குள் சென்று கண்ணாடியைப் பார்த்துக்கொள்வாள். உடனேயே,” எதற்காக நான் இப்படிப் பார்த்துக்கொள்கிறேன்?அவன் என்னைப் பார்த்தபோது நான் எப்படி இருந்தேன் என்று தெரிந்துகொள்ளவா?”

இதுபோல், ரசனைக்குரிய, உளவியல் உண்மை சார்ந்த காட்சிகள் பரவலாகத் தென்படுகிறது. வேலைக்குச் செல்வது அலுப்பான செயல் என்றும், அதற்குக் காரணம் நிர்ப்பந்தம்தான் எனும் விவரணையும் அப்பாக் கதாபாத்திரத்திலன் மூலம் சொல்லப்பட்டிருக்கும்.


இரவுக்கு முன்பு வருவது மாலை

இக்கதை படித்து முடித்தது பாலசந்தர் அவர்களின் படம் ஒன்று பார்த்ததுபோல் இருந்தது.அவரின் நவீனமான மனிதர்கள், பழக்கங்கள், புதுமை, என்று பல அம்சங்கள் இவ்வாறு நான் எண்ணிக்கொள்ள காரணமாகலாம்.

தனித்தன்மையான, ரசனையான ஒரு ஆணும், பெண்ணும் விளையாட்டாக(விதியின் ?) சந்தித்துக்கொள்கிறார்கள்.அவர்கள் புதிதாகச் சந்தித்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் கதையினூடே அறிமுகமாகும்போது, வாசகர்களுக்கு சேர்ந்து அறிமுகம் ஆகிறார்கள். இரு intelectuals சந்தித்துக்கொண்டதும் நெருங்கிப் பழகுகிறார்கள். புகைப் பிடிக்கிறார்கள்.கட்டிப் பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள். நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்துகிறார்கள்.எனவே, படிப்பதற்கு விறு விறுப்பாகயிருக்கிறது.கடைசியில், எதுவரைப் போகிறார்கள், போனார்களா இல்லையா என்கிற ஆவலே படித்துமுடிக்க வைத்துவிடும். இருவரின் மனவோட்டங்களும் மாறி மாறி விவரிக்கப்பட்டும்,கதைக்குள் கதைகளாகவும்,கற்பனைகளாகவும் நீள்கிறது. இருவருமே சற்று அசாதாராணமானவர்களாக இருப்பதால், இவர்களின் உரையாடலில் பல சுவாரசியமான தெறிப்புகள்.கதை சட்டென்று முடிந்துவிடும்.

அசாதாராணமான நிகழ்வுகள், மனிதர்கள் என்பதாலேயே இக்கதை ஒரு தனி அனுபவம். நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.


மீட்சியைத் தேடி

புது தில்லியிலிருந்து தன் சித்தப்பா வீட்டிற்கு வருகிறான், சங்கர்.மாநகர சூழலிலேயே

வளர்ந்த அவனுக்கு ஏனோ அந்த நவ நாகரிக வாழ்க்கையும்,அது தரும் போலியான வேடங்களும், நிர்ப்பந்தங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தஞ்சாவூர் வந்திறங்கி, பேருந்தில் பயணிக்கும்போது, கருப்பான நிறமுடையவளாய், காவியேறிய பற்களுடனிருக்கும் இளந்தாய் ஒருத்தியிடம் கூட ஏதோ ஒரு அழகு இருப்பதாய்க் கருதும், உணர்வெழுச்சிப் பெற்ற நிலையில் இருக்கிறான்.

இவ்வாறான, மனவெழுச்சிப் பெற்ற சுழலில், சித்தப்பா வீடிருக்கும் திருவையாறும், சித்தப்பாக் குடும்பத்தினரின் எளிய வாழ்க்கை முறையும்,கிராமம் சார் நிலங்களும், காவிரியும்

அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அக் கிராம வாழ்வை அவன் நேசிக்கத்தொடங்குவதோடு, அதற்காக ஏங்கவும், வருந்தவும் செய்கிறான். பின் ஊருக்குப் புறப்படும்போது தெளிவு பெற்றவனாய், உற்சாகமாய் திரும்புகிறான்.திருவையாற்றில் அவனுக்கு ஏற்படும் நிகழ்வுகளும், சித்தப்பாவுடனான கலந்துரையாடலும் என ஒட்டுமொத்தமாய் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்தி, ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்கிறது.

நல்ல கதை. எளிய வாசகனுக்கும், பிடிக்கக்கூடிய வகையில், திருப்புமுனையோடு அமைந்த கதை.

(தொடரும்…)




17 comments:

ஆதவா said...

அவர் ஆதவன் தீட்சண்யாவா??

நம் வலைப்பதிவர்கள் ஆதவா என்று என்னை நினைத்துவிடக்கூடும்!!!

அகநாழிகை said...

முத்துவேல்,
நல்ல பதிவு. ஆதவனின் இயல்பான எழுத்து நடை எல்லோரையும் வசீகரிக்கும் தன்மையுடையது.
கடந்த வாரங்களில் வெளியான பதிவுகளில் பல, பதிவர்களின் வழமையான சிந்தனையோட்டத்தில் ஏற்பட்டுள்ள தெளிவான, ஆரோக்கியமான நகர்தலை உணர்த்துகிறது. சந்தோஷமான விஷயம்தான். தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.. முத்துவேல்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
அ(ட)ப்பாவி... ஆதவா,
உண்மையிலேயே அது ‘ஆதவன்‘தான்.
ஆதவன், ஆ.மாதவன், ஆதவன் தீட்சண்யா எல்லாமே வேறு வேறு நபர்கள். ஆதவாவும் அந்த இடத்தை பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

- பொன். வாசுதேவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் விமர்சனம் ஆதவனை வாசிக்க தூண்டுகிறது.

வாங்கி வாசிக்க வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் விமர்சனம் ஆதவனை வாசிக்க தூண்டுகிறது.

வாங்கி வாசிக்க வேண்டும்.

குடந்தை அன்புமணி said...

எனக்கும் படித்ததும் நம்ம வலைப்பதிவர் ஆதவனா என்று நினைத்தேன். பின்னூட்டத்தில் ஆதவாவே முதலில் வந்திருந்து என் சந்தேகத்தை நீக்கிவிட்டார். உங்களின் விமர்சனத்தை பார்த்ததும் வாசிக்க மனம் ஏங்குகிறது.

மண்குதிரை said...
This comment has been removed by the author.
மண்குதிரை said...

வழ்த்துக்கள் நண்பரே. நல்ல பார்வை.

ஆதவனின் கதைகளை ஏன் பாலசந்தர் திரைப்படத்துடன் ஒப்பிடுகிறேர்கள் நண்பரே?

Unknown said...

நல்ல பதிவு. ஆதவன் கதைகளை நானும் புரிந்த/புரியாத வயதிலும்,
படித்து சிலாகித்திருக்கிறேன்.

“என் பெயர் ராம சேஷன்” நாவல் படியுங்கள்.

இவர் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம்.
நன்றாக வீணை வாசிப்பார்.
சிருங்கேரியில் ஆற்றில் குளிக்கும் போது சுழற்ச்சியில் மாட்டிக்கொண்டு இறந்து போனார். சோகம்.

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு! படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு!

ச.முத்துவேல் said...

@ஆதவா
நன்றி ஆதவா.உங்களிக்கு எல்லாவற்றையுமே அக நாழிகை சொல்லிவிட்டார்.அவரின் விருப்பமே என் விருப்பமும்.

ச.முத்துவேல் said...

@அக நாழிகை
நன்றிங்க அக நாழிகை

ச.முத்துவேல் said...

@அமிர்தவஷினி அம்மா
வாங்கி வாசிக்க இன்னொரு வழியும் இருக்கிறது.
http://thoughtsintamil.blogspot.com/2008/12/nhm-2.html
விரும்பினால்,சுட்டியிலுள்ளபடி செய்யுங்கள். நன்றி. நன்றி.

ச.முத்துவேல் said...

@அன்புமணி
வாசிக்கும் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி.
http://thoughtsintamil.blogspot.com/2008/12/nhm-2.html
இங்கே சென்று பாருங்கள்.
நன்றி.

ச.முத்துவேல் said...

@மண்குதிரை
பார்வை நன்று என நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பாலசந்தர் படத்துடன் ஒப்பிட்டதற்காக வருந்துகிறீர்களா? குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்ற ஆதங்கமா?ஒரு ஒப்பீட்டுக்காக அப்படி, எனக்குத் தெரிந்தவரை சொல்லியிருந்தேன்.உங்களின் உணர்வுகள் சரியானதே. நன்றி.

ச.முத்துவேல் said...

@ரவிஷங்கர்
முதல் பின்னூட்டம். நல்வரவாகுக.
நான் துவக்க நிலை வாசகன். உங்கள் பரிந்துரையை படிக்கிறேன்./நன்றாக வீணை வாசிப்பார்./
அட ஆச்சரியம்!
நன்றி.

ச.முத்துவேல் said...

@சந்தன முல்லை
ரொம்ப நன்றிங்க.படித்துவிட்டு நீங்களும் எழுதுங்கள்.

ச.முத்துவேல் said...

@அனைவருக்கும்..
இவ்வளவு பெரிய இடுகையை, ஒரு சுகமான, விரும்பி ஏற்றுக்கொண்ட நிர்ப்பந்தத்தினால், எழுதினேன். இன்னும் வரும். ஆனால், இணையத்தில் இவ்வளவு சிரமப்பட்டு நான் எழுதுவதை இத்தனைப் பேர் படிப்பீர்கள் என்றோ, அதில் நிறைய பேர் பின்னூட்டமும் இடுவீர்கள என்று நம்பவில்லை. என் நம்பிக்கையை, உங்கள் அன்பினாலும், வாசிப்பு ஆர்வத்தாலும்
பொய்யாக்கியிருப்பது மகிழ்ச்சியும்,
ஊக்கமும் அளிக்கிறது.அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.