Saturday, June 13, 2009

ஸ்ரீ நாராயணகுரு

இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் சமய நெறியிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள்.இந்தியாவில் இருந்த சாதி வேறுபாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.சாதிகளின் ஏற்றத் தாழ்வுகள் மதங்களிலும் ஊடுருவியது.பல்வேறு காரணங்களால் விசுவரூபமெடுத்த சாதிப் போராட்டங்களிலிருந்து மக்களைக் காத்த மகான்களின் வரிசையில் முதன்மையானவர்,கேரளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாராயணகுரு.சமய, சமுதாய உரிமைகளுக்காக அயராது அமைதி வழியில் உழைத்த நாராயணகுரு19 ஆம் நூற்றாண்டில் தோன்றி 20 ஆம் நூற்றாண்டில் மகா சமாதியடைந்த மகான்.எளிய குடும்பத்தில் பிறந்து, மாடு மேய்த்து , விவசாயம் செய்து, ஆசிரியராகப் பணியாற்றி,ஆயுர்வேதம் கற்று மருத்துவத்தொண்டாற்றி, தன் முயற்சியால் உயர்ந்து ஞான குருவானவர்.



ஓணம் திருவிழாவின் 3 ஆம் நாளான சதய நட்சத்திரத்திம் கூடிய நன்னாளில், 1854 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் அதாவது,கொல்லம் 1030 ஆம் ஆண்டு சிம்ம(ஆவணி) மாதம் 13 ஆம் நாள் நாராயணகுரு திரு அவதாரம் செய்தார். நாராயணகுருவின் தந்தை மாடன் ஆசானும் சிறந்த கல்வியாளர்.மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், சோதிடம்,ஆயுர்வேதம் என்று மாடன் ஆசான் பல துறைகளில் திறமைபெற்றவர்.குட்டியம்மை-மாடன் ஆசான் தம்பதியர் நான்கு குழந்தைகள் பெற்றனர். அவர்களில் மூவர் பெண்கள். ஒருவர் ஒப்பற்ற குரு நாதர் நாராயணகுரு.திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பழந்தி என்கிற கிராமத்தில் வயல்வார வீட்டில் பிறந்தார். பிறந்தபோது குழந்தை நாராயணகுரு அழவேயில்லையாம்.

அக்கால கேரளத்தில் தீண்டாமை உச்சத்தில் இருந்தது.கீழ்ச்சாதியினர் உயர்சாதியினரிடம் 32 அடி தொலைவில் இருந்தே பேசவேண்டும் என்ற கொடிய வழக்கம் அங்கு நடைமுறையில் இருந்தது.நாராயணகுருவின் பெற்றோர் இது குறித்து அவரிடம் கூறி எச்சரிக்கை செய்திருந்தனர். நாணு இளமையிலேயே தீண்டாமைக் கொள்கையை வெறுத்தார்.நாராயணகுரு ஈழவர் சாதியில் பிறந்தவர் என்று அறிய முடிகிறது. இது அங்கே பிற்படுத்தப்பட்ட சாதி என்பதாகவே கணிக்க முடிகிறது. ஈழவரினும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட சாதியினர் ஒருவர் வீட்டில் உள் நுழைந்து வந்த சிறுவன் நாராயணகுருவை பற்றி அவர் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியானம் ,யோகம், பிரணாயாமம்,மருத்துவம்,என கற்றுத் தேர்ந்த நாராயணகுரு தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மும் மொழிகளிலும் புலமை பெற்றவராவார்.தமது 24 ஆவது வயதில் மும்மொழிகளிலும் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றுள்ளார்.தமிழில் தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றைக் கற்று அறிந்திருந்தார்.நாராயணகுருவின் இளமைப்பருவத்தில் உறவுப் பெண்ணொருத்தியை மணமுடிக்க அவரின் பெற்றோர் நினைத்தபோது மறுத்துவிட்டார்.அய்யாவுசாமி என்ற தமிழர், திருவனந்தபுரத்தில் அரசுப் பணியில் இருந்தவர்.அய்யாவுசாமி ஆன்மீக அறிவும் முற்போக்குச் சிந்தனைகளும் உடையவாராகத் திகழ்ந்தார்.யோகக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாராயணகுருவுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.மேலும் பல உபதேசங்களையும் கற்றுத் தந்தார்.அய்யாவுசாமியின் உபதேசத்தை நாராயணகுரு தமது வாழ்நாள் முழுதும் பின்பற்றி நடந்தார்.

நாராயணகுரு1888 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் அருவிப்புரத்தில் சமத்துவத் திருக்கோயிலை நிறுவினார்.”இங்கே அமைந்திருக்கும் கோயில் ஒரு முன் மாதிரியாக விளங்கவேண்டும், மனிதர்கள் யாவரும் உடன்பிறந்தவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். சாதி பற்றிய தவறான கருத்துகள் அழிக்கப்படவேண்டும். இக் கருத்துக்களை விளக்குவதற்காகத்தான் இந்த் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார் நாராயணகுரு.'ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்” என்பதே நாராயணகுருவின் முக்கிய உபதேசம்.

நாராயணகுரு சாதி, மத வேறுபாடுகளைக் களைய ஆல்வாய் அத்வைத ஆசிரமத்தில் சர்வ மத மாநாட்டை நடத்தினார். ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வ சமய மாநாடு இதுவேயாகும்.உயர்கல்வி, சமஸ்கிருத அறிவு, தூய்மை, பண்பு, ஒற்றுமை ஆகிய ஐந்தின் மூலமே முன்னேறி, சமுதாயத்தில் முதல் நிலையைப் பெற முடியும் என்று கருதினார் நாராயணகுரு.கைத்தொழிலை வலியுறுத்தினார்.சுவாமிகளின் அமைதியான அணுகுமுறையினால் கேரளத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கல்வி, வழிபாட்டு உரிமை, வேலை வாய்ப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் கேரளம் முன்னேறியது.கேரள மக்கள் தங்களுக்குள் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடர்ந்து முன்னேற்றம் பெற்று வருகின்றனர். இவை அனைத்துக்கும் குருதேவர் கொண்ட்டிருந்த தீர்க்க தரிசனமும் அமைதி வழியுமே காரணம்.

நாராயணகுரு தர்ம பரிபாலன யோகத்தின் முதல் செயலாளராகத் தொண்டாற்றியவர் மகாகவி குமரன் ஆசான். இவர், கேரள மாநிலத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர். தமது கவிதைகளின் வழியே சமத்துவக் கொள்கைகளை எடுத்துரைத்தவர்.நாராயணகுருவை மகாத்மா காந்தி அவர்கள் சந்தித்துள்ளார். 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் இச் சந்திப்பு நடந்துள்ளது.”அழகு நிறைந்த திருவாங்கூர் ராஜ்ஜியத்துக்கு வந்தபோது, புண்ணிய ஆத்மாவான நாராயணகுருவைத் தரிசிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பினை என் வாழ்வின் பெரும்பேறாகவேக் கருதுகிறேன்” என்று காந்திக் குறிப்பிட்டுள்ளார்.தேசியக் கவிஞர் ரவீந்திரனாத் தாகூர் சந்திதுவிட்டு, “ நான் உலகின் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். ஆங்காங்கு பல சித்தர்களளையும் மகரிஷிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், மலையாள நாட்டில் இருந்த நாராயணாகுருவைச் சிறந்த அல்லது இணையான மகா ஞானியை நான் எங்கும் பார்த்ததில்லை. அந்த மகானின் யோகக் கண்களும் ஒளிர்விடும் முக தேஜஸும், என்னால் ஒருபோதும் மறக்க இயலாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.பெரியார், ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,டாக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர்களும் நாராயணகுருவைச் சந்தித்துள்ளனர். மலையாள மனோரமா 1988 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவில் பிரபலங்களில் முதன்மையானவராக பல நூறு பேர்களிடையே நாராயணகுருவை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

நாராயணகுரு தமிழகத்தில் பல இடங்களுக்கு வருகை புரிந்திருக்கிறார்.இவரின் தர்ம பரிபாலன யோகம் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் இயங்கி வருகிறது.”என்னை முதலில் புரிந்துகொண்டது தமிழ் நாடே” என்று பலமுறை நாராயணகுரு குறிப்பிட்டுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு சாலைக்கு ”திரு. நாராயணகுரு சாலை” என்றுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.திருக்குறளில் மூன்று அதிகாரங்களை (கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு & நீத்தார் பெருமை)மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் நாராயணகுரு. திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை நாராயணகுரு சந்தித்துள்ளார்.இச் சந்திப்புப் பற்றி இன் நூலில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சுவையானவையாகும்.

1928 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் நாராயணகுரு சமாதியடைந்தார்.கேரளத்தின் கயிறு, ஓடு முதலான தொழில்கள் உருவாகக் காரணமாயிருந்தவரும் சாதி, சமய வேறுபாடுகளைக் களைய தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான நாராயணகுருவை கேரள மக்கள் தெய்வமாக எண்ணுவதில் வியப்பேதுமில்லை.


- நிறைய படங்களுடன் கூடிய ஸ்ரீ நாராயணகுரு என்கிற நூலிலிருந்து.

பின் குறிப்பு_ நாராயண குரு பற்றிய திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படுவதாகவும் அதி நாராயணகுருவாக நடிப்பவர் தலைவாசல் விஜய் என்பதும் அண்மையச் செய்திகள். நாராயணகுருவின் பிம்பமாகத் தோன்றும் தலைவாசல் விஜய்க்கு கேரளத்தில் இப்போது ஏக மரியாதையாம்.

நன்றி-கிழக்கு பதிப்பகம்.

நூல் விபரம்

ஸ்ரீ நாராயணகுரு
ஆசிரியர்-பருத்தியூர் கே. சந்தானராமன்
112 பக்கங்கள்
விலை ரூ.60.

இந்நூலை இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்

13 comments:

rathinapugazhendi said...

நாராயணகுரு பற்றிய பதிவு நன்று முத்து

ச.முத்துவேல் said...

@இரத்தின புகழேந்தி
முழுசா படிச்சு முடிச்சுட்டீங்களா! முனைவராச்சே. உங்களுக்கு புடிச்சமாதிரியான பொருளடக்கம் வேற.மகிழ்சி மற்றும் நன்றி.

அகநாழிகை said...

நல்லாயிருக்கு முத்துவேல். இது கிழக்கு பதிப்பக புத்தக விமர்சனமா ?

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

பிரவின்ஸ்கா said...

ரொம்ப நல்லா எழுதியிருகீங்க .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

யாத்ரா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முத்து, நான் நாராயண குரு, நித்ய சைதன்ய யதி போன்றோர்களையெல்லாம் ஜெமோ சொல்லி கேள்விப்பட்டதைத் தவிர இவர்களைப் படித்ததில்லை, நீங்கள் குரு பற்றி நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நித்ய சைதன்ய யதி பற்றி நீங்கள் படித்திருந்தால் எழுத வேண்டுகிறேன், உங்கள் உரைநடை மிக சரளமாக தெள்ளிய நீரோடை போல் வெகு அழகாக உள்ளது, கவிதையோடு உரைநடையும் அடிக்கடி எழுத வேண்டுகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாராயணகுரு பற்றி கொஞ்சமே கொஞ்சம் பள்ளிக்காலங்களில் படித்த ஞாபகம்.

நீங்கள் எழுதியிருப்பது சுவாரசியம்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் முத்துவேல்

அது எப்டீங்க எந்த பால் போட்டாலும் சிக்ஸ்ர் அடிகிறீங்க
கவிதை ஆன்மிகம் நூல் விமர்சனம்
பன்முக சாதனையாளர்ங்க நீங்க..

ச.முத்துவேல் said...

நன்றி வாசு.ஆமாம் கிழக்கு புத்தக விமரசனம்தான்.

நன்றி பிரவின்ஸ்கா

நன்றி யாத்ரா

நிதயா பற்றி இதுவரை படிக்கவில்லை. நாணுவைக்கூட தத்துவம் சார்ந்த எதிர்பார்ப்போடுதான் தேர்ந்தெடுத்துப் படித்தேன். ஆனாலும் அவசியம் அறிந்துகொள்ளப்படவேண்டியவர் நாராயணகுரு.

நன்றி அமித்து அம்மா

நன்றி நேசமித்ரன். நல்வரவாகுக.(ஆஹா! நீங்க சொல்றமாதிரி வரணும்னு எனக்கும் ஆசைதான்)

@ எல்லோருக்கும்
உரை நடையில் என் எழுத்துப்
பற்றி பாராட்டிச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இதில் என் சொந்தக் கருத்து அல்லது நடை என்பது இல்லவேயில்லை. புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்ட வரிகளே இவை.எனில் பாராட்டு, ஆசிரியர் பருத்தியூராருக்கே.என் வேலை சற்றுத் தொகுத்தது மட்டுமே.அதற்குண்டான பங்கை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

பகிர்வுக்கு நன்றி.

ச.முத்துவேல் said...

உங்கள் பகிர்வுக்கு என்னுடைய நன்றி, உழவன்.

anujanya said...

எனக்கும் நாராயண குரு பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. இந்த விமர்சனம் படித்ததில் ஓரளவு தெரிகிறது. ஆசிரியர் நல்ல நடையில் எழுதி இருக்கிறார்.

முத்து, தெரியும், நீங்கள் இதை எழுதவில்லை என்று. இருந்தாலும், உரைநடையும் எழுதுங்கள். முன்பே நீங்கள் எழுதியதை வாசித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

நல்ல, பயனுள்ள இடுகை.

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!

ச.முத்துவேல் said...

நன்றி அனுஜன்யா
நன்றிங்க சந்தனமுல்லை.

நன்றி தமிழ் ஸ்டுடியோ.காம்.(உங்கள் பக்கத்தில் இதை வெளியிட்டு சிறப்பு செய்தமைக்கு)