Sunday, April 11, 2010

இன்றைக்கும்…


இன்றைக்கும்…


குழந்தை பொறக்கறதுக்கான ட்யூ டேட் நெருங்கி வரவர சரண்யாவுக்கு ஒடம்பில வீக்கம் தெரிய ஆரம்பிச்சுடுச்சி.ஒருநாள் காலையிலேயே ஒடம்புக்கு ஒன்னும் முடியலன்னுச் சொன்னா. உடனே ஆஸ்பிட்டலுக்கு வண்டியிலக் கூட்டிக்கிட்டுப் போனேன். ஸ்பெஷலிஸ்டுங்கள்லாம் வர ஒன்பது மணீயாகும். இப்ப ட்யூடி டாக்டர் மட்டுந்தான். அவங்கள்லாம் புதுசா படிச்சுட்டு வேலைக்கு வர்றவங்க.எக்ஸ்பீரியன்சுக்காகவும், வெறும் எம்பிபிஎஸ் தான்ங்கிறதாலயும், இதுமாதிரி சின்னச் சின்ன அவசரத்துக்கு மட்டும் வைத்தியம் பாக்கிறவங்க. அப்படித்தான் ஒரு சின்ன வயசு டாக்டர் அன்னைக்கு இருந்தார். அவர்ட்ட போய் நின்னு இத மாதிரி பிரச்னையெல்லாம் இருக்குதுன்னு சொன்னதும் அவரும் நல்லா செக் பண்ண ஆரம்பிச்சார். எப்போ டேட் குடுத்திருக்காங்க,எத்தனை நாள்ல எவ்வளவு எடை கூடியிருக்குதுங்கிற விபரமெல்லாம் கேட்டாரு. பிரஷர் பார்த்தாரு. பாத்துட்டு லேசா முகத்தை கலவரமாக் காட்டுனாரு. மறுபடியும் பிரஷர் பார்த்தாரு. பாத்துட்டு, பொறுமையா சொன்னாரு. ‘பிரஷர் ரொம்ப அதிகமாயிருக்குது. இப்போதைக்கு நான் எழுதித் தர்ற மாத்திரைய சாப்பிடுங்க. ஒம்போது மணிக்கு கைனாகாலஜிஸ்டைப் பார்த்துடுங்க’ன்னு சொல்லி சீட்டு எழுதிக்கொடுத்தாரு.

ம்போது மணிக்கு கைனாகல்ஜிஸ்டுக்கிட்ட காமிச்சப்போ, அவங்களும் ‘பிரஷர் அதிகமாத்தான் இருக்குது. அட்மிட் பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. சரண்யாவுக்கு அட்மிட்டுன்னாலே கசக்கும். ஆஸ்பிட்டல்ல படுத்தப் படுக்கையா இருக்கிறதுன்னாலே அவளுக்கு ஏதோ கொடுமையான தண்டனை குடுத்தமாதிரி. என்னை பக்கத்துலயே இருன்னு சொல்லுவா. பொம்பிளைங்க எசகுபிசகா இருக்கிற மெடர்னிட்டி வார்டுல, என்னதான் தனித்தனி ரூமா இருந்தாலும், ஒரு ஆம்பள எந்நேரமும் உட்கார்ந்துக்கிட்டிருக்கமுடியுமா? போதாக்குறைக்கு மத்த வேலையெல்லாம் இன்னும் இருக்குதே. வீட்டுக்குப் போய் வேண்டிய துணிமணி, பாத்திரம் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துக் குடுக்கணும். ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லணும். வீட்டுல பாத்திரம், துணிமணி எல்லாம் போட்டது போட்டதுபடியிருக்குமே.சரண்யாவ மெட்டர்னிட்டி வார்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, அங்கயிருக்கிற நர்ஸ்க்கிட்ட டாக்டர் தந்த சீட்டக் காமிச்சு அட்மிஷன் போட்டுட்டு, அவங்க தந்த பேப்பர்லல்லாம் சைன் போட்டுட்டு, உடனே வாங்கிட்டுவரச் சொன்ன மருந்துங்களையெல்லாம் வாங்கிட்டுவர மருந்துக் கடைக்கு கிளம்பனேன். சரண்யாவுக்கு சாப்பாடு இனிமேல் ஆஸ்பிட்டல்லதான்ங்கிறதால ஒரு பிரச்னையில்ல. நான் ஓட்டல்லதான் சாப்பிட்டாகணும். என் வீட்டுக்குள்ள தினமும் ஒருமுறையாவது நான் போய்வர்ற வேலையில்லாத ஒரே இடம் சமையல் அறைதான். யோசிச்சுப்பாத்தாத்தான் தெரியுது. சமையலறைக்குப் போறதே எப்பவோ ஒருசிலவாட்டிதான்னு. கைக் கழுவ, தண்ணிக் குடிக்கன்னு அதெல்லாம் கூட எப்பவாவதுதான்.குடிக்கத் தண்ணிவேணுன்னாதான் சரண்யாக்கிட்ட சொன்னாப்போதுமே. அவளே எடுத்துக்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கிற இடந்தேடி எடுத்துக்கிட்டு வந்துக் கொடுத்துடறா. அவளுக்குந்தான் என்ன பெருசா வேலை இருக்குது? ஊர்ல எங்க அம்மாவோ, இல்ல அவங்க அம்மாவோ செய்ற வேலையோடயெல்லாம் பார்த்தா, இவ செய்றது ஒன்னுமேயில்ல. கிரைண்டர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ்,வாஷிங் மெஷின், கெய்ஸர், ஃப்ரிட்ஜ், டிவி,ன்னு எல்லா வேலையையும் செய்றதுக்குத்தான் மெஷினுங்க இருக்குதே. சட்னிக்கு மல்லாட்டை உறிக்கிற வேலைகூட இல்லை. ஸ்ட்ரெயிட்டா உறிச்சு வறுத்த மல்லாட்டையேதான் இப்ப கடையில விக்குதே. அட வெளியில போறப்பயாவது கொஞ்சம் நடக்கிறது உண்டா? அது எப்படி? வண்டியிருக்கும்போது நடந்துபோனா பாக்கிறவங்க என்னா நினைப்பாங்க.சரி போவுது. தனியா வாக்கிங்காச்சும் போறதுண்டா. அதுவுங்கிடையாது. அதுக்கெல்லாம் நேரமேது. இல்ல, இப்ப என்னா வயசாகியாப் போச்சு. வாக்கிங்லாம் போற அளவுக்கு.ஆம்பிளை இப்படி குளிக்க பாத்ரூமுக்குள்ளப் போறப்போ, இவ சமையல் ரூமுக்குள்ள நுழைவா. குளீச்சுக்கிட்டிருக்கும்போது மிக்ஸி ஓடற சத்தம் கேக்கும். குளிச்சுட்டு வர்ற அஞ்சு பத்து நிமிசத்துல பாத்தா தட்டுல டிஃபன் ரெடியாயிருக்கும்.ஆனா, இதையேன் ஃபாஸ்ட் ஃபுட்னு சொல்லிக்கமாட்டேங்கறாங்க.

கைகானலஜிஸ்ட் டாக்டரம்மா அவுட் பேஷ்ண்ட்ங்கள்லாம் பாத்து முடிச்சுட்டு லேபர் வார்டுக்கு வந்தாங்க. அதுக்குள்ள சரண்யாவுக்கு டாக்டரம்மா எழுதிக்குடுத்த ஊசியெல்லாம் போட்டிருந்தாங்க. வந்து சரண்யாவப் பாத்தாங்க. ‘என்னா சரண்யா. பயந்துட்டியா. ஏன் பயப்படுற. அதனாலதான் பிரஷர் இப்படி அதிகமாயிடுச்சி. பயப்படக்கூடாது, என்னா? ஆங். பாப்போம். பிரஷ்ர் குறையறதுக்கு ஊசி போட்டிருக்கோம். சாயந்தரம் வரைக்கும் குறையுதா இல்லையான்னு பாப்போம்’ அப்படின்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாங்க. சரண்யாவ ஆஸ்பிட்டல் ட்ரஸ்ல பாக்கவே கஷ்டமாயிருந்துச்சி. ஜெயில்ல கைதிகளுக்குக் குடுக்கிற மாதிரி பழைய சிவாஜி படத்துலல்லாம் காட்டுவாங்களே அந்த மாதிரி, மெல்லிசா கட்டங்கட்டமா போட்ட பாவாடை, சட்டைமாதிரி ஒரு அங்கி.ட்ரிப்ஸ் எல்லாம் வேற ஏறிக்கிட்டிருந்தது.

சாயந்தரம் வந்துபாத்த டாக்டரம்மா, செக் பண்ணிட்டு ரூமுக்குப் போயிட்டு, இன்னொரு டாக்டரம்மாக்கூட ரொம்ப நேரமா டிஸ்கஸ் பண்ணாங்க. அப்புறம் நர்ஸ் வந்து என்னைக் கூப்பிடறதாச் சொல்லிட்டுப் போனாங்க. நான் பதட்டத்தோட அவங்க ரூமுக்குள்ள போனேன்.’ ஒன்னும் பதட்டப்படாதீங்க. பிரஷர் குறையவே மாட்டேங்குது. ரொம்ப அதிகமாயிக்கிட்டே போகுது. அப்புறம் ஃபிட்ஸ் வந்துடலாம். இப்போதைக்கு பிரஷர் ஷூட் ஆகாம ஊசி போட்டிருக்கோம். பிரஷர் குறையலன்னா சிசேரியன் பண்ணி குழந்தைய வெளியே எடுத்துடணும். அதுதான் சேஃப். பிரஷர் குறைஞ்சிட்டா நார்மல் டெலிவருக்கு வாய்ப்பு இருக்குது.நீங்க என்ன செய்றீங்கன்னா, வீட்டுக்குப் போயிட்டு சரண்யாவுக்குப் போட்டுக்க ட்ரஸ் அப்பறம் வேற என்னென்னெ வேணுமோ எடுத்துக்கிட்டு வந்துடுங்க. பெரிய ஆஸ்பிட்டலுக்குத்தான் போகணும். வண்டி வச்சுருக்கிங்க இல்லையா. சரி, போயிட்டு வந்துடுங்க. ஒன்னும் அவசரமில்ல. நீங்க பாட்டுக்கு பதறி, வண்டிய எங்கயாவது போட்டு, அப்புறம் உங்களைப் பாக்கிற மாதிரில்லாம் ஆகிடவேணாம். என்னா சரியா?’ ன்னாங்க சிரிச்சுக்கிட்டே.பத்ட்டத்தைக் குறைக்கிறதுக்காகவே அப்படி சிரிச்சமாதிரி தெரிந்தது. நானும் பதிலுக்கு சிரிச்சுக்கிட்டே, சரின்னுட்டு கிளம்பினேன்.காலையிலேயே ஃபோன் பண்ணி சரண்யா அம்மாகிட்டச் சொல்லி வரச்சொல்லியிருந்தேன். அவங்களும் ஊர்லயிருந்து வந்துட்டு பஸ் ஸ்டேண்ட்லயிருந்து ஃபோன் பண்ணாங்க. நேரா போய் முதல்ல அவங்களைக் கூட்டிக்கிட்டு அப்புறம் வீட்டுக்குப் போனேன்.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, ஆஸ்பிட்டலுக்கு வந்து ஆம்புலன்ஸக் கூட்டிக்கிட்டு, பெரிய ஆஸ்பிட்டல் கிளம்பினோம். ஆம்புலன்ஸா, ஏதோ இத்துப்போன பழைய வண்டி மாதிரியிருந்தது. உள்ளே காத்தும் வரல. ஒன்னும் இல்ல. வெளியில நல்லா இருட்டிப்போய் மணி ஏழு மணிக்கு மேல ஆகியிருந்தது. ஒன்றரை மணி நேரம் ஆகும் பெரிய ஆஸ்பிட்டல் போக. ஆஸ்பிட்டல் கிட்ட வந்து ரயில்வே கிராசிங்ல கேட் போட்டுட்டான். இன்னும் டென்ஷன் ஏறிக்கிட்டே போகுது. அப்பத்தான் கூட வேலைசெஞ்ச சுந்தரம் மருமகக் கதை ஞாபகத்துக்கு வருது. அந்தப் பொண்ணுக்கும் பாவம் இதே மாதிரி பிரசவம் நெருங்கற நேரத்துல பிரஷர்தான். சரியா கவனிக்காம விட்டுட்டாங்களாட்டம் இருக்குது. வலிப்பெல்லாம் வந்து, பாவம் காப்பாத்த முடியாம செத்தேப்போச்சு. நல்லா வசதியான குடும்பந்தான். ஆனா, என்னா பண்றது?

ஒருவழியா ஆஸ்பிட்டல் போய்சேர்ந்து, சக்கர நாற்காலியில் உட்கார வச்சு, சறுக்குப்பாலம் வழியா , மேல்மாடிக்கு கூட்டிட்டுபோய் அட்மிட் பண்ணீயாச்சு. அங்கப்பாத்தா பெரிய டாக்டர் இல்லயாம். அவரு நாளைக்குத்தான் வருவாருன்னாங்க. அவரு சம்சாரமும் டாக்டர்தான். அவங்களும் நல்லா பக்குவப்பட்டவங்கதான்னு சொன்னாங்க. அவங்கதான் வருவாங்கன்னு சொன்னாங்க. அதேமாதிரி, அவங்களும் வந்து பாத்துட்டு, ஊசியெல்லாம் போட்டுட்டு, ஏற்கனவே எங்க டாக்டரம்மா சொன்னாமாதிரியே சொன்னாங்க. ‘பிரஷர் குறைஞ்சா நார்மல் டெலிவரியே பாத்துடலாம். முடிஞ்சவரைக்கும் நார்மல் டெலிவரிக்கு ட்ரை பண்றோம். இல்லேன்னா மட்டும் சிசேரியன் பண்ண வேண்டியதிருக்கும்’
எங்க? இங்கத்தான் சரணயாவுக்கு இருக்க இருக்க பயம் அதிகமாயிட்டே போகுதே.மாசமாயிருந்தா குழந்தை பொறக்கும்னு முன் கூட்டியே தெரியாதா? இவளுக்கு சொந்தக்காரப் பொண்ணு ஒருத்திக்கு, டெலிவரி ஆகும்போது ரொம்ப எசகு பிசகாயிப் போய் அவஸ்தைப்படுறதை கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால கூடவேயிருந்து பார்த்திருப்பாளாட்டம் இருக்குது. அது இவ மனசவிட்டு நீங்காமயிருந்துக்கிட்டு, இப்ப வந்து எல்லாரையும் தொந்தரவப் பண்ணிக்கிட்டிருக்குது. அதுவும் சிசேரியனைப் பத்தி கேள்விப்பட்டு ரொம்பவே பயந்துபோய் இருந்தா. ‘நல்லா கருவுக்குள்ள இருக்குற குழந்தைமாதிரி மடிச்சுவச்சு நடு முதுகுல ஊசி குத்துவாங்களாம். அது காலத்துக்கும் வலிச்சுக்கிட்டேயிருக்குமாமே’ன்னுட்டு எங்கிட்ட அவப் பேசியிருக்கிறா.இந்தக் காரணமெல்லாம் அவ மனசுலயிருக்குன்னு நானா நினைச்சுக்கிறது. இதும் தவிர வேற என்னஎன்ன புதுசு புதுசா கண்டுபுடிச்சு பயப்படறாளோ. இன்னும் ஒன்னே ஒன்னு மட்டும் என் மனசுக்கு நல்லாத் தெரியும். அது நான் சம்பந்தப்பட்டது. ஆமா, அவகூட நான் எப்பவும் இருந்துக்கிட்டேயிருக்கணுமின்னு நினைக்கிறவ அவ. இந்த நேரத்துல அவளுக்கு எதுனா ஏடாகூடாமா ஆகி,என்னைப் பிரியறதுன்னா அவளாலே நினைச்சிக்கூட பாக்கமுடியாதுன்னு எனக்குத் தெரியும்.ஆஸ்பிட்டல்ல மிட் நைட் வரைக்கும் பிரஷர் குறையவேயில்லன்னு தெரிஞ்சதும், சிசேரியன்தான்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுக்குண்டான மருந்து, மாத்திரையெல்லாம் கீழ போய் என்னை வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நானும் வாங்கியாந்து கொடுத்துட்டு , நீட்டுன பேப்பர்லயெலாம் கையெழுத்துப் போட்டுக்குடுத்துட்டு காத்துக்கிடக்க ஆரம்பிச்சுட்டேன். அதே நேரத்துல டெலிவரி பாக்கிறதுக்கு மூனு, நாலு கேஸ் ஒன்னொன்னா நடக்குது. அவங்கவங்க சொந்தக்காரங்க வாசல்ல நிக்கிறாங்க. அன்னைக்கு மட்டும் நடுராத்திரியிலருந்து விடியறதுக்குள்ள 5 பிரசவம் அந்த ஆஸ்பிட்டல்ல மட்டுமே ஆச்சு. நார்மல், சிசேரியன், பையன் ,பொண்ணுன்னு வரிசையா. சரண்யாவுக்கு பையன் பொறந்து வெளியிலெ எடுத்துக்கிட்டு வந்து காமிச்சுட்டுப் போனாங்க. சரண்யா எப்படியிரூக்கிறான்னு அவங்க அம்மா கேட்டதுக்கு எதுவுமே சொல்லாம உள்ளேப் போயிட்டாங்க. அப்புறம் சரண்யாவை மயக்க நிலையில ஸ்டெட்சர்ல வச்சு, ரெஸ்ட் ரூம்ல கட்டில்ல போட்டாங்க. கூடவே குழந்தையையும் போட்டுட்டுப் போனாங்க. ஆளே பயங்கரமா ஊதிப்போய் பெரிய பொம்மனாட்டி மாதிரியா இருந்தா. அர்த்த நாரீஸ்வரர் மாதிரி சரிபாதி ஒரு பக்கம் உடம்பே பயங்கரமா உப்பி, இன்னொரு பக்கம் உடம்பு அதைவிட கொஞ்சம் கம்மியா வீங்கி பாக்கவே ஐயோன்னு இர்ந்துச்சி. மயக்கத்துலயே வேற இருந்தா. மயக்கன்னும் சொல்லமுடியாது. கூப்பிட்டா தெரியுது. தூக்கத்துல கேக்குறமாதிரி, ‘ஆங்’ன்னு லேசா உடம்பை அசைக்கிறா. ஆனா. அதையே ரொம்ப சிரமப்பட்டு செய்றாமாதிரியும், திகிலாவும் தெரிஞ்சுச்சி.அப்பத்தான் அவமேல அப்படியொரு பரிவும் பாசமும் எனக்குத் திரண்டு வந்துச்சி. பிரசவத்துக்கு அப்புறம் என்னையோ, அவங்க அம்மாவையோ ஏன் தன்னோட குழந்தையக் கூடப் பாக்க முடியாதுங்கிற நிலைமை. அப்படியே அடிச்சுப்போட்டவளை மாதிரி அசந்துகிடந்தா. கூப்பிடறது மட்டும் எங்கியோ கனவுல கேட்கிற மாதிரி இருக்கும்போல. பையனப் பாத்தேன். நல்ல சிவப்பு.அப்ப அவன் பொய்ங்க்ன்னு சின்னதா ஒரு சத்தம் போட்டான். நாங்கேட்கிற அவன் மொதோக்குரல். ஒரு நாள் காலயில ஆரம்பிச்சு, அன்னைக்கு நடுராத்திரிக்குள்ள இவ்வளவும். இதுக்கப்புறம் நடந்ததெல்லாம் இதைவிட . சிசேரியன் பண்ணதால கட்டில்லயே அசையாம கிடக்கவேண்டியதுதான். தையல் பிரிஞ்சுடும்னுட்டு ஒருவாரங்கிட்ட அப்படி இருக்கச்சொல்லிட்டாங்க. சாப்பாடெல்லாம் கிடையாது. வெறும் ட்ரிப்ஸ்தான். அது ஒரு பாலிதீன் பையில மூத்திரமா வந்து சேர்ந்துடும். மத்தப் பொமபளங்கள்லாம் அழகா எழுந்து நடக்க ஆரம்பிச்சு, அழகா டிஸ்சார்ஜ் ஆகிப்போயிக்கிட்டிர்ந்தாங்க. சரண்யாதாம் ரொம்ப சிங்கினாதாம் புடிச்சுக்கிட்டுக் கிடந்தா. கையக்கால அசைக்கிறதுக்கே ஆஊன்னு கத்துவா. டாக்டரமா ஒரு நாள் வந்து நகரச்சொல்லியிருக்காங்க. இவ அசையக்கூட மாட்டேங்கறாளாம். ஆனா அசையற மாதிரியே ஆக்‌ஷன் மட்டும் ரொம்ப நேரம் காட்டறாளாம். டாக்டரம்மா புடிச்சி சரக்குன்னு இழுத்து நகர்த்திப்போட்டிருக்காங்க. இவ, ஐயோகுய்யோன்னு கத்தியிருக்கா..டிஸ்சார்ஜ் பண்ற அன்னைக்கி, ஒரு கார்வச்சு, அலுங்காம குலுங்காம கூட்டிக்கிட்டு வந்தேன். என் நண்பனோட கார்தான்.ஸ்பீட் பிரேக்கர்ல ரொம்பப் பொறுமையா , பக்குவமா ஓட்டிட்டு வந்தான். அவன் சுபாவத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத செயல் அது. அப்படியும் சில நேரங்கள்ல அவன் பாணியில ஓட்டினான். சரண்யா, அவ அம்மால்லாம் பதறிப்போயிட்டாங்க. நானுந்தான். அப்புறம் அவன் கொஞ்சம் ஒழுங்கா ஓட்டிக்கிட்டு வர வீடு வந்து சேர்ந்தோம்.


ப்ப எம்பையன் யூ.கே.ஜீ. படிக்கிறானாலும், அன்னைக்கு அவன் போட்ட சத்தம் இன்னைக்கும் என் காதுல சொகமாக் கேட்டுக்கிட்டேயிருக்குது.கொஞ்ச நாட்களுக்கு முன்னால, மும்பை போயிட்டு திரும்பி ட்ரெயின்ல வந்துக்கிட்டிருந்தேன். இரவே புறப்பட்ட ரயில் மறு நாள் பகலில் ஊர்ந்துகொண்டிருந்தது. எனக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு வயதான பாட்டியம்மா இருந்தார்கள். தமிழ்தான். ஆனா, மராட்டி, இந்தியெல்லாம் தெரிந்திருந்தது.ஒரு நிறுத்தத்தில் ரிசர்வ்டு பெட்டியில நிறைய அன்ரிசர்வ்டெல்லாம் ஏறுனாங்க. காலேஜ் போற பசங்கதான் நிறைய பேர். உட்கார இடமில்லாம , நிக்கவே சிரமப்பட்டு நெருக்கிகீட்டு நின்னுக்கிட்டு வந்தாங்க. அதுல ஒரு இளம்பெண் கைகுழந்தையோடு இருப்பதைப்பார்த்ததைப் பார்த்ததும் என்னருகிலிருந்த அந்த வயதான தமிழ் பாட்டியம்மா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இடம் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு அப்படியொரு அழகு. ஒரு பணக்காரக் களை. நல்ல சிவப்பு. வழுவழு சருமம். கூட ஒரு பொம்பள இருந்தாங்க. ஆம்பள மாதிரியான ஒரு இறுக்கமான, கட்டான, காப்பேறிய உடம்பு. குள்ளமாயிருந்துச்சி. புடவைக் கட்டுல்லாம் பாத்தா ஆதிவாசிகள, ஞாபகப்படுத்தற மாதிரியாயிருந்தது. தோற்றமும் அப்படித்தானிருந்தது. அந்தம்மாதான் அந்த இளந்தாய்க்குத் துணையா வந்திருந்தது. வேலைக்காரப் பெண்மணியா இருக்கும் என்று யூகித்தேன். சரியா காத்து வராததால குழந்தை பொய்ங்ன்னு கத்திச்சு. எம்பையன் கத்துன மாதிரியே புதுசான குரல். அந்த வயசான காட்டுப்பொம்பளை குழந்தையைக் கையில வாங்கி ஃபேனுக்காத் துக்கிப்புடிச்சுக்கிக்கிட்டு நின்னுக்கிட்டே வந்தது. பாட்டியம்மாவும் அவங்கக்கிட்ட எதையெதையோ இந்தியிலயோ, மராத்தியிலோ பேசிக்கிட்டே வந்தது. ஒரு ஸ்டேசன்ல அவங்க இறங்கிட்டாங்க. அப்போ அந்தப் பாட்டியம்மா, ‘’ பாத்தியாப்பா. ஆஸ்பத்திரியிலருந்து குழந்தை பொறந்து நேரா அப்படியே வருந்துங்க. இப்பத்தான் குழந்தைப் பொறந்துச்சாம்’னு ஆச்சரியத்தோட சொன்னாங்க. அந்த வயசாளியம்மா அந்த இளந்தாயோட அம்மாதானாம். நான் ஆவலோட அவங்களை எட்டிப்பாத்தேன். தூரத்தில வயல் வெளிகளுக்கு நடுவில தொடுவானத்தை நோக்கிப் போறாமாதிரி போயிட்டிருந்தாங்க. அவங்கள விட்டு வேகவேகமா எங்களை, எங்க ட்ரெயின் தூர விலகிக்கிட்டே வந்துகொண்டிருந்தது

5 comments:

Unknown said...

நல்லா வந்திருக்கு முத்துவேல்.

"உழவன்" "Uzhavan" said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
 

"உழவன்" "Uzhavan" said...
This comment has been removed by the author.
adhiran said...

vasuvin blog - mahal neya. ennudaya blog-l link ullathu.
nanri.

ச.முத்துவேல் said...

@செல்வராஜ் ஜெகதீசன்,
@உழவன்

இருவருக்குமே நன்றி. இவ்ளோ பெரிய இடுகையை படிச்சுட்டு, பின்னூட்டத்தில் தெம்பளித்ததற்கு.

@ ஆதிரன்
தகவலுக்கு நன்றி.