பரத்தை கூற்று பற்றி  CSK வுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் இங்கே:
*******
அன்புள்ள நண்பர் CSK (சரவணகார்த்திகேயன்)
மிகவும் தாமதமான இந்தக் கடிதத்திற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக்  கொள்கிறேன். ஏனோ, இப்போது எதையுமே எழுதவோ, முன்பு போல் ஆர்வத்தோடு படிக்கவோ  இயலாமல் ஒருவித அயர்ச்சியோடும், சோம்பலோடும் இருக்கிறேன். அதனால் தான்  உடனடியாக எழுதவில்லை. பரத்தைக்கூற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு முந்தின  நாளே நான் தொகுப்பைப் படித்து முடித்து விட்டிருந்தேன். ஆனாலும் மேற்சொன்ன  காரணங்களினால் எழுத முடியவில்லை. இத்தனைக்கும் அன்று நூல் வெளியீட்டு விழா  முடிந்த பின்னர், பரத்தைக்கூற்று பற்றி சாருவுக்காகவே எழுதி விட வேண்டும்  என்றொரு உத்வேகம் எழுந்திருந்தது. அங்கிருந்த நண்பர்களுடன் கூட நான் இதைப்  பகிர்ந்து கொண்டேன். வீடு வந்து சேர்ந்ததும் உத்வேகத்தை லௌகீக வாழ்க்கை  இழுத்துக்கொண்டது.
நீங்கள் மிகவும் விரும்புகிற, மதிக்கிற சாருவே உங்கள் நூல் வெளியீட்டு  விழாவுக்கு வந்து சிறப்பித்தது அரிய பேறு தான். அவர் அந்த மேடையை வழக்கம்  போல தன் பெருமையை, தன்னைப் பற்றியே பேசும் மேடையாகப் பயன்படுத்திக்  கொண்டார் என்பதில் எனக்கு வருத்தம். பரத்தைக்கூற்று பற்றி, உங்களைப் பற்றி  அவர் என்ன விதமான கருத்துக்களை வேண்டுமானாலும் சொல்லட்டும். விரும்பி  அழைக்கப் பட்டதாலேயே, வந்து துதி பாடிவிட்டுச் செல்லும் சந்தர்ப்பவாத  மனப்பான்மை சாருவுக்கு இல்லையென்றால் அது பாராட்டத்தகுந்தது தான். ஆனால்,  தொகுப்பைப் பற்றி, அல்லது தமிழ் இலக்கியங்களைப் பற்றியாவது இன்னும் சற்று  விரிவாகப் பேசியிருக்கலாம். கவிதை என்கிற வடிவத்தில் தமிழ் எத்தனை  முன்னோடியான பாரம்பரியமும், பெருமையும் கொண்டது! நல்லவேளை, தமிழில் 5  லிருந்து 10 பேர்வரை  நல்ல கவிஞர்கள் தேறுவார்கள் என்று பெரிய மனது பண்ணி  வாய் உதிர்த்தாரே!
’பரத்தையர்களுக்கு குரல் கொடுக்க நீங்கள் யார்?’ என்றார். இப்படிக் கேட்க  அவருக்கு உரிமை இருக்கும் காரணத்தை அவர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலே  சாட்சி. பரத்தையர்களின் வாழ்வை, வலியை, திமிரை அவர்களே எழுதுவது தான்  மிகப்பொருத்தம் என்று நானும் சொல்வேன். ஆனால், அதற்காக மற்றவர்கள்  செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இலக்கியப் படைப்புகளின்  வழியாக வாழ்பனுவத்தைப் பெற்றுக் கொள்கிறான் வாசகன். கற்பனைத்திறன் மூலம்  உணர்ந்து தான் சாராத வாழ்க்கையிலிருந்தும் கூட படைப்பை உருவாக்குபவனே  சிறந்த படைப்பாளி. தான் சார்ந்த அனுபவங்களை, எண்ணங்களை படைப்புகளாக்குவதை  விட அறைகூவலானதாகவும், எழுத்தாளன் என்கிற அங்கீகாரத்திற்கு  பொருந்துவதாகவும் இந்த கற்பனாவாதத் திறனே அமைகிறது. சில நூறாண்டுகள்,  ஆயிரமாண்டுகள் முன்பு நடந்த காலக்கட்டத்தைப் புனைவாக எழுதும்போது நாம் குறை  சொல்கிறோமா? பெண்களின் மன நிலைகளை , சிக்கல்களை மிகவும் அந்தரங்கமானதாக  உணர்ந்து எழுத்தில் வெளிப்படுத்தும் ஆண் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.  இதுவொரு உதாரணம். அந்த ஆண் படைப்பாளிகளிடம் சென்று எந்தப் பெண்களும்  ’எங்களைப் பற்றி எழுத உனக்கு என்னத் தகுதியிருக்கிறது’ என்று  குரலெழுப்பியதாக நான் அறியவில்லை. எனவே, பரத்தையர் பற்றிய உங்களின் குரலை  நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இந்தத் தொகுப்பை ஒரு நல்ல முயற்சி  என்று நான் குறுக்கிவிட விரும்பவில்லை. நிச்சயம் அதற்கும் மேலான இடம்  இதற்கு உண்டு.
மறக்கவியலாது -இத்தனைக்காலம்
மலத்துளையருகே நானறியாமல்
ஒளிந்திருந்தப் பேரழகுச் சிறு மச்சம்
கண்டெடுத்த சோடாபுட்டிக்காரனை
புட்டிப்பால் வாங்கவேண்டும்
குழந்தைக்கு-முலைப்பாலையும்
விடுவதில்லையெம் புரவலர்கள்
உறக்கத்தின் அருமை கேள்
கறைபடாத இரவொன்றில்
கம்பளி போர்த்தித் துயிலும்
நிம்மதியின் சுகஸ்பரிசத்தைப்
பெருங்கனவாய் தரிசிக்கும்
ஓர் தேவடியாளிடம்.
எந்நிறுவனமாவது
எம் யோனிகளுக்குத்
தருமா காப்பீடு?
இவை போன்ற கவிதைகளில், அந்தக் கற்பனைத்திறனின் துல்லியம் நிகழ்வதை உணர முடிகிறது.
2007ம் ஆண்டில் ஆகஸ்டு இதழில் என் முதல் கவிதை இடம் பெற்றிருந்த அதே  குங்குமம் இதழில் உங்கள் கவிதையும் வந்ததை, நமக்குள் இணையம் வழி அறிமுகம்  ஏற்பட்டபோது பகிர்ந்துகொண்டோம். அது தான் உங்களுக்கும் முதல் கவிதை என்றும்  சொல்லியிருந்தீர்கள். வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அக்கவிதைகளில் உங்களின் கவிதை முத்திரைக்கவிதையாக சிறப்பு அங்கீகாரத்தோடு  வந்திருந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன்.  நம் முதல் கவிதை ஒரே நாளில்  வெளியிடப் பட்டிருந்தாலும், இன்று நீங்கள் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு  விட்டீர்கள். மேலும், அறிவியல் சார்ந்த ஒரு (சந்திராயன்) நூலையும்  வெளியிட்டுவிட்டீர்கள். உங்களின் ‘சகா- சில குறிப்புகள்’  நான் மிகவும்  ரசித்துப் படிப்பது. தொடர்ச்சியாகவும், நிறையவும் எழுதும் வல்லமை  உங்களுக்கு இருப்பதை குறிப்பிட்டு அதைப் பாராட்டும் முகமாகவே நான்  இவற்றையெல்லாம் சொல்கிறேன். அதே போல், ஒரே மையப்புள்ளியில், தளத்தில்   அமைந்த பல கவிதைகள் எழுதி, ஒரு தொகுப்பாக்குவது சாதனை தான் என்றே சொல்வேன்.  பழமலயின் குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் தொகுப்பை ஒரு உதாரணமாக, ஏற்கனவே  உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பரத்தையர் கூற்று கவிதைகளில் நீங்கள்  தன்னளவிலான தணிக்கையை கறாராகவே செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.  தேர்ந்தெடுத்த 150 கவிதைகள் ’பத்தோடு ஒன்று பதினொன்றாக இருந்து விட்டுப்  போகட்டுமே. தொகுப்புதானே’ என்று அலட்சியம் காட்டாத வகையில் இருக்கின்றன  என்று சொல்வேன்.
கவிதையின் இலக்கணமாக ஒரு கொள்கை கடைபிடிக்கப்படுவதை நான் காண்கிறேன்.  அதாவது, கவிதை என்றாலே ஒரு அழகிய பொய் இருக்க வேண்டும். அதாவது, மிகை  யதார்த்தம். நதி சிரித்தது, ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும்,  பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்... என்பதாகவெல்லாம் சொல்லலாம். இவற்றிற்கு  நான் எதிரியல்ல. இவற்றை நான் வெறுக்கவுமில்லை. எனக்கு இம்மாதிரி எழுத  வரவில்லையே என்கிற ஆதங்கம் தான் எனக்குண்டு.  நீங்களும் பரத்தைக்கூற்று  கவிதைகளை நேரடியாகவே, எளிமையான வெளிப்பாட்டுடனேயே எழுதியிருப்பது எனக்கு  நெருக்கமாயிருக்கிறது. உங்களின் எழுத்துக்களின் வழி நல்ல வாசிப்புப்  பக்குவம் உங்களுக்கிருப்பது தென்படுகிறது.
செய்நன்றியறிதல் பகுதியில் என் பெயரைப் பார்த்தவுடன் முதலில் வியப்பும்  பதற்றமும் ஏற்பட்டது. பின், நெகிழ்ச்சியாகவும், கூச்சமாகவும் உணர்ந்தேன்.  என் பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி.
’பரத்தையர் கூற்று படித்துவிட்டு, நிச்சயம் தொலைபேசி வழியாகவோ, மின்னஞ்சல்  மூலமாகவோ என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன்’ என்று நானளித்திருந்த  வாக்குமூலமே,  நல்லவேளையாக இந்தச் சோம்பேறியை எழுதவைத்தது.
பகுத்தறிவு
யாதெனில்
கலவிக்கு
காசு கேட்பது
என்று படித்தவுடன் சிரிப்பும், சிந்தனையும் எழுகிறது. காமம் என்கிற  இயற்கையின் உந்து சக்தியே, மனிதனை சீரழிக்கும் சக்தியாகவும் ஆகக் கூடியது.
’ஒவ்வொரு மனசும் ஒவ்வொரு யோசனை’ என்கிற வரியை நான் மிகவும் ரசித்தேன். பொதுவான இவ்வரிகள், நான் அடிக்கடி உணர்வதின் மொழி வெளிப்பாடு.
சாரு சொன்னது போல் நிறைய சொல்விளையாட்டுக்களை நிகழ்த்தியுள்ளீர்கள்.  மொழியின் வலிமையை  நமக்கேற்றபடி வளைக்க முடிகிற சாமர்த்தியம் தானே இது.  ’உச்சத்தினுளரல் உளரலினுச்சம்’ போன்ற நிறைய இடங்கள்.
ஊனமுற்ற ஒருவனுக்கு
தாழ்வெண்ணம் வராமல்
திகட்டத் திகட்டக்கொடு
புணர்ச்சியின் சுவையை
நிறையப் பேசுகிறது, இக்கவிதை.
என் பிரியத்திற்கும், மதிப்பிற்கும் உரிய நண்பரான சாரு, அடுத்த முறை  நான்  அவரைச் சந்திக்க வாய்ப்பு நேரும் போது, எப்போதும் போல் மாறாத அன்பை வழங்கக்  கூடியவர் என்று உறுதியாக நம்புகிறேன். என்னுடைய வெளிப்படையான  கருத்துக்களுக்கு வரவேற்பு அளித்து, உள்ளார்ந்த நன்றியும் சொல்லக்கூடியவர்  சாரு என்பதே சாருவைப் பற்றிய என் புரிதல்.
இன்னும் பகிர்ந்து கொள்ள எனக்கு சங்கதி இருந்தாலும், சோம்பேறித்தனத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
நன்றி
ச.முத்துவேல்
தீபாவளி நல்வாழ்த்துகள்
 
 
 
8 comments:
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
பரத்தையர் கூற்றின் இ-புத்தகம் இருந்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள், நன்றி!!
அன்புடன்,
அருட்புதல்வன்
என் கவிதைத் தளம்: www.aaraamnilam.blogspot.com
ok
நல்ல விமர்சனம் கவிஞர் முத்துவேல் அவர்களே..:))
அருமையான பார்வை நண்பரே.
பரத்தைக் கூற்றின் கவிதைகளைப் பற்றி பாராட்டி எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் எப்படி எழுதுவது என்பது தெரியாததால் எழுதாமலே இருந்துவிட்டேன். இப்போது இதன்மூலம் CSK அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி யாதவன்
நன்றி அருட்புதல்வன் (மின் நூலாக வேண்டுமெனில் பதிப்பாசிரியர் அல்லது ஆசிரியர் ஆகியோரை அணுகுங்கள்)
நன்றி ராம்ஜியாஹூ
நன்றி, பிரபல பதிவர், இயக்குனர், நடிகர், பாடகர்,தொழிலதிபர்.......கேபிள் சங்கர் அவர்களே..
நன்றி லதாமகன்
நன்றி உழவன்
Post a Comment