Thursday, June 11, 2009

மீண்டும் குங்குமத்தில் என் வலைப்பூ

குங்குமம் 04/06/2009 இதழில் என் வலைப்பூ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(குங்குமத்துல போட்ட பின்னும் hit counter தான் ஓடவே மாட்டேங்குது). மாறும் முகங்கள் என்கிற தலைப்பில் எழுதியிருந்த இரண்டு கவிதைகளில் இரண்டாவதை வெளியிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இணையத்திலேயே பார்க்க இங்கே சொடுக்கவும்.
 நன்றி -குங்குமம்

Saturday, June 6, 2009

கடவு -கூடல் சங்கமம்-2009




தமிழின் இலக்கிய வெளியில் முக்கிய நிகழ்வான கடவு அமைப்பு நடத்தும் "கூடல் சங்கமம் "மதுரையில் ஜூன்27,28 நடைபெறுகிறது கவிதை,சிறுகதை குறித்த கருத்தரங்குகள் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழின் முக்கிய படைப்பாளிகள் , எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு இது .அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிக்கு கேட்டு கொள்ளப்படுகிறது.அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

இலக்கிய நண்பர்கள் இத்தகவலை அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் அனுப்பிவைக்கும்படிக்கும் ,இந்நிகழ்வை பற்றி நேரிலும் ,தொலை பேசி, மின் அஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாகவும் ,இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எந்த வித வேறுபாடுமின்றி தெரியப்படுத்துங்கள் .

"தங்குதடையின்றி இலக்கியம் செழிக்கட்டும் "




கடவு


இலக்கிய அமைப்பு நடத்தும்


கூடல் சங்கமம் -2009


கவிதை ,சிறுகதை குறித்த கருத்தரங்கு


நாள் :27,28-06-2009


இடம் :பாஸ்கர சேதுபதி அரங்கு,ஓயாசிஸ் உணவகம் ,அழகர் கோயில் ரோடு ,மதுரை
நிகழ்வு குறித்த தொடர்புக்கு .
9659016277,9360282812,9366669469 /
koodalsangamam@gmail.com


Tuesday, May 26, 2009

“ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”- மகாதேவன்

நண்பர் அகநாழிகை பொன். வாசுதேவன் என்னை நீயூ புக் லேண்ட்ஸ் அழைத்துச் சென்றார். அங்குபோவது எனக்கு இதுதான் முதன்முறை. அவர் நிறைய புத்தகங்கள் வாங்கினார். என்னிடம் படித்துமுடிக்கப்படாத புத்தகங்களே நிறைய இருப்பதாலும், அவற்றிலேயே சிலவற்றை மீள் வாசிப்பு செய்து புரிந்துகொள்ள வேண்டிய வகையில் இருப்பதாலும் புத்தகங்கள் வாங்கிவிடக்கூடாது என்கிற தீர்மானமான முன்முடிவோடு சென்றிருந்தேன். ஆர்வக்கோளாறில், புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, வாசு சொன்னாரென இரண்டு கவிதைத் தொகுப்பு புத்தகங்கள் , சிறிய அளவிலானது மட்டும் வாங்கினேன். அவற்றில் ஒன்றுதான் மகாதேவனின் “ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”. இவரை நான் இதற்குமுன்பு கேள்விப்பட்டதில்லை.

எல்லாமே நல்ல கவிதைகள்.ஒரு அனுபத்தை மட்டும் பகிர்வதாக நிறைய கவிதைகள் சிறுகதைத் தன்மையோடு அமைந்திருந்தது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான, பகிரப்படவேண்டிய அனுபவங்கள், நிகழ்வுகள். சிறுகதைத் தன்மையோடானவை.சுயம் பற்றிய பிம்பம் குறித்து கவலையில்லாமல் வெளிப்படையாக, நேர்மையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.எல்லாமே எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருப்பதும், மொழி நன்றாக கூடி வந்திருப்பதும் இக் கவிதைகளின் சிறப்பு.

எல்லாமே பெரிய நீண்ட கவிதைகள். எனவே தட்டச்ச எளிதாக இல்லாதபடியாலும், நீங்களும் பார்த்ததும் பயந்து ஓடிவிடக்கூடாது என்பதாலும் ஒரே ஒரு கவிதையை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.இக் கவிதைகூட தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல.எதேச்சையாக எடுத்த ஒன்றுதான்.

வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்

வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை

இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக

வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்

குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்

உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.



தமிழினி வெளியீடு
ரூ.20.
முதல் பதிப்பு டிசம்பர் 2000

Thursday, May 14, 2009

தேவதேவனின் கவிதை

”வார்த்தை” என்கிற மாத இதழ் பலரும் அறிந்ததே. ஆனால், இவ் விதழ் இணையத்தில் படிக்கக்கிடைக்கவில்லை என்றே நம்புகிறேன். எனவே, இம்மாத இதழில் இடம்பெற்றுள்ள தேவதேவன் அவர்களின் சில கவிதைகளிலிருந்து எனக்குப் பிடித்த மற்றும் எளிய கவிதை ஒன்றை,இணையத்தில் அல்லாது படிக்கமுடியாதவர்களுடன் பகிரலாம் என்ற நினைப்பில் இப்பதிவு.( வேற ஒன்னும் சொந்தமா எழுதறதுக்கு இல்லன்னு சொல்றதுக்கு, எப்படில்லாம் மூச்சப் பிடிச்சு சமாளிக்க வேண்டியதாயிருக்குது)


தந்தையரும் குழந்தைகளும்

அவன் தன் தச்சுப்பட்டறையில்
உண்மையாகவே அவைகளைச் செய்தாக வேண்டும்
அவன் குழந்தைகள் அவனைச் சுற்றி அங்கே
பொம்மைகளாக அவைகளைச் செய்து விளையாடி மகிழ.

-தேவதேவன்

Monday, May 4, 2009

குங்குமம்... இந்த வாரம்..என் வலைப்பூஊஊ

இந்த வார குங்குமம்  இதழில் என்னுடைய வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய முதல் கவிதை வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமம் வார இதழில்தான் வெளியானது.(ஆகஸ்ட்-2007).அப்போதும் அட்டையில் ஷ்ரேயாதான் முறுவலித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.இப்போதும் அப்படியே. நமக்கும்(அதாவது எனக்கும்) ஷ்ரேயாவுக்கும் என்னமோ இருக்குதுபோல.வடகரைவேலன் அண்ணாச்சியோட வலைப்பூகூட முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.ஆனால், அவர் இதையெல்லாம் ஒரு பதிவாப் போடல. இப்போதைக்கு பதிவிட சொந்த சரக்கு எதுவுமில்லாததாலும்,அவற்றுக்காக உழைக்க நேரமின்மையாலும், மற்றும் இந்தத் தகவல் அறியாத  நண்பர்கள் பலரோடும் (வெளி மாநிலம், வெளி நாடு) பகிர்ந்துகொள்வதற்காகவும் இந்த இடுகை. தகவல் அளித்த நண்பர் கே. ரவிஷங்கருக்கு நன்றி. குங்குமத்திற்கும் நன்றி.அறிமுகப்படுத்தப்பட்ட இடுகை

Saturday, April 4, 2009

இரவுக்கு முன்பு வருவது மாலை (தொடர்ச்சி)


இயலாத, எளிய ஒருவனுக்கு ஏற்படும் ஆத்திரம், நிர்ப்பந்தங்கள், இன்னல்கள், உணர்வுகள் ஆகியவற்றைப் பகிரும் கதை இது. பிரதிபலன்எதிர்பார்த்து காட்டப்படும் அன்பும் அதிலுள்ள போலித்தனமும் கணபதிக்குஅயர்ச்சியை,வெறுப்பையே ஏற்படுத்துகிறது.பின் இவற்றையெல்லாம் வேறுவழியில்லை என எண்ணியவனாய், தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களாய், தன்னுடைய நிழலாய், மனம் ஒட்டாமல் ஏற்றுக்கொள்கிறான். வேறுஎன்னதான் செய்துவிட முடியும் கணபதி என்கிற ஒரு கீழ் மட்டத்துஊழியனால்?
இசக்கிபிள்ளை, காந்திமதியை பால்யகாலத்திலிருந்தே நேசிக்கிறார். காந்திமதிக்குப் பிடிக்கும்படியாக, அவளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவே தன் போக்குகளை மாற்றிக்கொள்கிறார். பெரியவர்களாகும்போது, காந்திமதிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்துவிடுகிறது.இசக்கிப் பிள்ளைக்கு வாழ்வே வெறுத்துப்போகிறது. ஆனாலும், காந்திமதியின் மேல் அவருக்கிருக்கும் அன்பு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்கிற பாணியில் மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வைத் தொடர்கிறார்.தானும் மணம் முடித்துக்கொள்கிறார்.மனைவியையும் பரிவோடு கவனித்துக்கொள்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு இசக்கிப் பிள்ளையின் மனைவி இறந்துவிடுகிறாள். இருந்தபோதிலும், காந்திமதியை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவளிடம், இன்னமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற அதே சிறு பிள்ளைக் காலந்தொட்ட எண்ணத்தோடு, நல்ல காரியங்களில் ஈடுபட்டுக்கொடும், மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவ்வாறான ஒரு நாளில்தான், தன் அன்புக்குரிய காந்திமதி வாழாவெட்டியாக வாழ்கிறாள் என்று அவருக்கு அறிய நேருகிறது.குழந்தை இல்லை என்கிற காரணத்தால், காந்திமதியை அவளின் கணவன் தள்ளி வைக்கிறான்.வேறு திருமணமும் செய்துகொள்கிறான்.இச்சங்கதிகளை அவரிடம் சொன்னவனே இன்னொரு தகவலையும் சொல்லிவிட்டுப் போகிறான். அது,இசக்கியாப் பிள்ளையை , காந்திமதி சந்திக்க விரும்புகிறாள் என்பது.இசக்கியாப் பிள்ளைக்கு என்னவென்றே அறியமுடியாத உணர்வுகள் ஏற்படுகிறது.தன்னை மலை என்றும் , காந்திமதியை நதி என்றும் உருவகித்து எண்ணங்களை சிந்திக்கிறார். கடைசி பத்தி இப்படி முடிகிறது.
“மலை நதியிடம் போகிறதா” என்று பிள்ளை நினைத்தார். அவருக்கு சிரிப்பு வந்தது. நான் மலையல்ல. வெறும் மனிதன். ஆதரவு தருவதற்காக அல்ல. ஆதரவு பெறுவதற்காகச் செல்கிறேன்.” என்று அவர் நினைத்தார்.
கொஞ்சம் பூ படக் கதாநாயகியை நினைவுப்படுத்தும் அன்பு இவருடையது.
லல்லி வேலை கிடைத்து வேலைக்குச் செல்கிறாள்.அங்கு வேலை செய்யும் சக ஊழியனான செல்வராஜ் என்பவனை நேசிக்கிறாள்.ஒரு கட்டத்தில் தொழிற்சங்கத் தலைவியாகிறாள். காதல் விலகிப்போகிறது. கதையின் கடைசி வரைப் படித்து முடித்தபிறகே, தலைப்பு புரியத் துவங்குகிறது.மிக இனிமையாக நகரத் தொடங்கும் காதல், முறிந்துபோவது வாசகர்களுக்கே வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இந்தக்கதை என் வாழ்வனுபத்திற்கு சற்றுப் பொருந்தி வருவதாலோ என்னவோ, மிகவும் பிடித்திருந்தது. மிக இயல்பான நடை என்பதைக் குறிப்பிட வேண்டும். அலுவலகங்களுக்குள் இருக்கும் அரசியல், அதாவது மனிதர்களுக்குள் இருக்கும் அரசியல் நன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைக்கு செல்லத் துவங்கிய காலக்கட்டத்து (சற்று பிறகு) கதை எனலாம்.ஒருதலை ராகம் திரைப்படம் வந்த காலக்கட்டம் என்பது கதைக்குள்ளாகவே வரும்.1982 ல் கதைக்கதிரில் வெளியானதாம்.அவ்வாறு ஒரு பெண் வேலைக்குச் செல்வதால், அவளை மற்றவர் எப்படிப் பார்க்கின்றனர், குடும்பத்தார் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நன்றாகவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இக்கதையும் ஒரு பெண்ணையே மையப்படுத்தி, அவளின் மனவோட்டங்களைச் சித்தரிப்பதாகவே நகர்கிறது. இது மேற்சொன்ன காரணங்களினாலேயே எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நேர்மையானவனாக காட்டப்படுகிற செல்வராஜ் சங்க வேலைகளில், சந்தர்ப்ப சூழலால் செயல்பட நேர்கிறது.ஆனால், சில வருடங்களுக்குப் பின், அதிலிருந்து விடுபட விரும்புகிறான். இத்தனைக்கும் ஒரு நல்ல தலைவனாகவே, நிறைவுடன் பணியாற்றியவன்தான். ஆனாலும் இதுபோன்ற சாகசங்களில் விருப்பமில்லாததாலும், யாருக்காக உழைக்கிறோமோ, அவர்களிடமே நல்ல பெயரும், திருப்தியான உறவுமுறையும் இல்லை என்கிற வருத்தத்தில், இது நமக்கான பாதை அல்ல என்று விலகுகிறான். இச்சமயத்தில்தான், லல்லி தலைவியாக்கப்படுகிறாள். செல்வராஜுக்கு இதில், உடன்பாடான எண்ணம் இல்லையென்றாலும், அவளின் சுதந்திரத்தில் தலையிட விரும்பாதவனாய், திணிக்க விரும்பாதவனாய், அவளின் எண்ணத்தை, போக்கை வரவேற்கிறான்.கொஞ்சம் ஒதுங்கவும் செய்கிறான்.லல்லி இப்படி நினைக்கிறாள்.” அவளுடைய புதிய உருவத்தைக் கண்டு அவன் பயப்படுகிறான்.அவன் வேண்டுவது காவியங்களில் வரும் தலைவனே உயிரென வாழும் தலைவி. அவளைப் போன்று மேடையில் பேச விரும்பும் தலைவி அல்ல”
ஆனால், செல்வராஜின் தரப்பு விளக்கப்படாததும்,பிறகான நாட்களில், தலைவியான லல்லி, தலைவியானதற்காக வருத்தப்பட்டாளா அல்லது பெருமை பெற்றாளா என்பதெல்லாம் சொல்லப்படாமலேயே கதை முடிகிறது.
எல்லாமே நல்ல கதைகள் என்கிற ஒரு நிறைவு ஏற்படுகிறது.


Thursday, April 2, 2009

இரவுக்கு முன்பு வருவது மாலை


1

எழுத்தாளர் ஆதவன் அவர்களின் எழுத்துக்களை இதற்கு முன் நான் படித்திருக்கிறேனென்றால், அவர் எழுதிய நூல்களின் சில தலைப்புக்களை மட்டும்தான் சொல்லலாம். இப்படியொரு சூழ்நிலையில் நான் படித்ததுதான், இரவுக்கு முன்பு வருவது மாலை என்கிற அவரின் குறு நாவல் தொகுப்பு. மொத்தம் ஆறு குறு நாவல்கள்.

1. இரவுக்கு முன்பு வருவது மாலை

2. சிறகுகள்

3. மீட்சியைத் தேடி

4. கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்

5. நதியும் மலையும்

6. பெண், தோழி, தலைவி.

இவற்றில், ”பெண், தோழி, தலைவி” என்கிற கதை வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாதது.கிட்டத்தட்ட 1960 களுக்குப் பிறகான காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை இவை அனைத்தும் என்று அறிய நேருகிறபோது சற்று ஆச்சரியமாகத்தானிருக்கிறது. காரணம், புதுமையும், இளமையான எழுத்து நடையும் தான். லேசான நகைச்சுவை உணர்வும் விரவிக் கிடக்கிறது.

ஒரு கலங்கிய குட்டை, பிறகு தெளிவடைவதைப்போல, கிட்டத்தட்ட எல்லாக்கதைகளிலுமே, கதை மாந்தர்கள் தெளிவு பெறுகிறார்கள். அவ்வகையில், இக்கதைகள் அர்த்தமுள்ளவை.

ஆசிரியர் புதுதில்லியில் இருந்திருக்கிறார் என்பதால், இவரின் இந்த குறு நாவல்களில் எந்த வகையிலாவது புது தில்லி இடம் பெறுகிறது. (பாலசந்தர் படங்களில் பாரதியார் வருவது போல) நடுத்தர, அலுவலக ஊழியர்களின், வாழ்வை அனுபவித்துச் சித்தரிக்கிறார்.


சிறகுகள்

ஒரு இளம்பெண்ணின் கடைசிக் கல்லூரி நாளோடுத் துவங்கும் இக்கதை, அவளின் திருமண நாளுக்கான முந்தின இரவு வரை நடைபெறும் காலக்கட்டத்தைச் சித்தரிக்கிறது.இக்கதையைப் படிக்கும்போது, எனக்கு கண்மணிகுணசேகரனின் அஞ்சலை படித்த நினைவு லேசாய் வந்து போனது. காரணம் இரண்டு அம்சங்கள்.

1.ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை நுட்பமாகச் சித்தரித்திருப்பது.

2.கதை நகர்வுக்கு ஒட்டிய தத்ரூபமான காட்சி விவரணைகள்.

நான் நிறையப் படித்தது இல்லை என்பதால் எனக்கு இப்படி மட்டுமே ஒப்பீடு எழுகிறது. ஒரு வகையில் இக்கதை பெண்ணிய எழுத்து என்றால், மறுக்கமுடியாது. ”அம்மா என்பவள் வீட்டுவேலைகளுக்கெல்லாம் மேலே, வீட்டைக் காவல் உத்தியோகம் வேறு செய்கிறாள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. பெண்களேக்கூட என்ன செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டால், ”வீட்டில்தான் இருக்கிறேன், சும்மாதான் இருக்கிறேன்” என்று சொல்கிறார்கள். ஆனால், வீட்டு வேலைகளையும், வீட்டைக் காவல் காப்பதையும் பெண்கள் செய்யும் உத்தியோகம் என்கிறார் ஆசிரியர்.சிறகுகள் என்கிறத் தலைப்பு ,ஒரு பெண், பிறந்த வீட்டிலிருந்து, புக்ககம் செல்வதற்கானக் காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டும் வகையில், சொல்லப்பட்டிருக்கிறது.அதே சமயம் பெண் விடுதலைக்கான காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைகிறது. வளர்ந்துவிட்டப் பையனுக்கும், தந்தைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட மகள்- தாய் நெருக்கம் அன்னியோன்யமானதும், கூடுதல் அந்தரங்க நெருக்கம் கொண்டதாகவும் இருக்கும் என்கிற யதார்த்தத்தை, இக்கதையில் இயல்பாகக் காணமுடியும். அதேபோல், ஒரு பதின் வயதுப் பெண்ணின் மன ஓட்டங்கள், திருமணம், காதல் குறித்த ஏக்கங்கள், கனவுகள், அச்சங்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் காட்சிகள், அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு, மிக இயல்பாக கதை நகர்த்தப்பட்டுள்ளது.ஒரு காட்சியில், கதையின் நாயகியை எதிர் வீட்டு இளைஞன் பார்ப்பான். அவள் நேராக வீட்டிற்குள் சென்று கண்ணாடியைப் பார்த்துக்கொள்வாள். உடனேயே,” எதற்காக நான் இப்படிப் பார்த்துக்கொள்கிறேன்?அவன் என்னைப் பார்த்தபோது நான் எப்படி இருந்தேன் என்று தெரிந்துகொள்ளவா?”

இதுபோல், ரசனைக்குரிய, உளவியல் உண்மை சார்ந்த காட்சிகள் பரவலாகத் தென்படுகிறது. வேலைக்குச் செல்வது அலுப்பான செயல் என்றும், அதற்குக் காரணம் நிர்ப்பந்தம்தான் எனும் விவரணையும் அப்பாக் கதாபாத்திரத்திலன் மூலம் சொல்லப்பட்டிருக்கும்.


இரவுக்கு முன்பு வருவது மாலை

இக்கதை படித்து முடித்தது பாலசந்தர் அவர்களின் படம் ஒன்று பார்த்ததுபோல் இருந்தது.அவரின் நவீனமான மனிதர்கள், பழக்கங்கள், புதுமை, என்று பல அம்சங்கள் இவ்வாறு நான் எண்ணிக்கொள்ள காரணமாகலாம்.

தனித்தன்மையான, ரசனையான ஒரு ஆணும், பெண்ணும் விளையாட்டாக(விதியின் ?) சந்தித்துக்கொள்கிறார்கள்.அவர்கள் புதிதாகச் சந்தித்துக்கொள்வதால், ஒருவருக்கொருவர் கதையினூடே அறிமுகமாகும்போது, வாசகர்களுக்கு சேர்ந்து அறிமுகம் ஆகிறார்கள். இரு intelectuals சந்தித்துக்கொண்டதும் நெருங்கிப் பழகுகிறார்கள். புகைப் பிடிக்கிறார்கள்.கட்டிப் பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள். நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்துகிறார்கள்.எனவே, படிப்பதற்கு விறு விறுப்பாகயிருக்கிறது.கடைசியில், எதுவரைப் போகிறார்கள், போனார்களா இல்லையா என்கிற ஆவலே படித்துமுடிக்க வைத்துவிடும். இருவரின் மனவோட்டங்களும் மாறி மாறி விவரிக்கப்பட்டும்,கதைக்குள் கதைகளாகவும்,கற்பனைகளாகவும் நீள்கிறது. இருவருமே சற்று அசாதாராணமானவர்களாக இருப்பதால், இவர்களின் உரையாடலில் பல சுவாரசியமான தெறிப்புகள்.கதை சட்டென்று முடிந்துவிடும்.

அசாதாராணமான நிகழ்வுகள், மனிதர்கள் என்பதாலேயே இக்கதை ஒரு தனி அனுபவம். நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.


மீட்சியைத் தேடி

புது தில்லியிலிருந்து தன் சித்தப்பா வீட்டிற்கு வருகிறான், சங்கர்.மாநகர சூழலிலேயே

வளர்ந்த அவனுக்கு ஏனோ அந்த நவ நாகரிக வாழ்க்கையும்,அது தரும் போலியான வேடங்களும், நிர்ப்பந்தங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தஞ்சாவூர் வந்திறங்கி, பேருந்தில் பயணிக்கும்போது, கருப்பான நிறமுடையவளாய், காவியேறிய பற்களுடனிருக்கும் இளந்தாய் ஒருத்தியிடம் கூட ஏதோ ஒரு அழகு இருப்பதாய்க் கருதும், உணர்வெழுச்சிப் பெற்ற நிலையில் இருக்கிறான்.

இவ்வாறான, மனவெழுச்சிப் பெற்ற சுழலில், சித்தப்பா வீடிருக்கும் திருவையாறும், சித்தப்பாக் குடும்பத்தினரின் எளிய வாழ்க்கை முறையும்,கிராமம் சார் நிலங்களும், காவிரியும்

அவனுக்கு மிகவும் பிடித்துப்போகிறது.அக் கிராம வாழ்வை அவன் நேசிக்கத்தொடங்குவதோடு, அதற்காக ஏங்கவும், வருந்தவும் செய்கிறான். பின் ஊருக்குப் புறப்படும்போது தெளிவு பெற்றவனாய், உற்சாகமாய் திரும்புகிறான்.திருவையாற்றில் அவனுக்கு ஏற்படும் நிகழ்வுகளும், சித்தப்பாவுடனான கலந்துரையாடலும் என ஒட்டுமொத்தமாய் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்தி, ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்கிறது.

நல்ல கதை. எளிய வாசகனுக்கும், பிடிக்கக்கூடிய வகையில், திருப்புமுனையோடு அமைந்த கதை.

(தொடரும்…)




Monday, March 30, 2009

யாத்ராவை தெரிந்துகொள்ளுங்கள்



அய்யப்ப மாதவனின் நிசி அகவல் விமர்சனக்கூட்டத்திற்குப் போயிருந்தபோது,அங்கு சந்தித்துக்கொண்ட படைப்பாளிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டதைப் பார்த்தபோது,”இதென்ன? கொஞ்சம் அதிகப்படியா இருக்குதே! அப்படியே மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இதுலயும் கடைபிடிக்கறாங்களே?” அப்படின்னு நினைச்சேன்.ஆனா,இப்பதான் புரியுது,அதிலுள்ள அர்த்தம்.(இது மாதிரி நான் புரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது). யாத்ராவை நான் இப்போது நேரில் சந்தித்தால் நானும் அப்படித்தான் ஆரத் தழுவுவேன்.இப்போதைக்கு மானசீகமாய்.

குரு சுந்தர்ஜி கூட இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தபோது, ‘நாமெல்லாம் இவர் கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டேங்கறோம்னு’ சின்னப்புள்ளத்தனமா யோசித்துப் பொறாமைப் பட்டேன்.ஆனா, அதுதான் குரு. சரியான கண்டுபிடிப்பு.

வலையுலகம் பக்கம் இப்போதுதான் வந்திருக்கும் இவர் வருகைக்கு நாமெல்லாம் மகிழவேண்டும். களிப்பு ஏற்படுத்தும் படைப்புகளை எழுதுபவர்கள் ஒரு ரகம்.மெல்லிய உணர்வுகள், தக்கையாய் மனதை மிதக்கவைக்கும் ரசனையான படைப்புகளை எழுதுபவர்கள்.

வலியை, அதிர்வுகளை, நிலைகுலைவை ஏற்படுத்தும் படைப்பாளிகள் ஒரு ரகம்.வலிகள்தான் நிறைய படைப்பாளிகளுக்கான பொதுவான அம்சமாக, அவர்களை எழுதவைக்கும் காரணியாக அமைந்திருப்பதை நான் பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்.இதுவே, அவர்களின் காத்திரமான படைப்புகளுக்கு அடித்தளம்.யாத்ராவின் கவிதைகளும் வலி மிகுந்ததாய்,அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இது பொதுவான ஒரு பார்வைதான். ரசனையான மற்றும் பலவிதமான கவிதகளையும் இவர் எழுதியுள்ளார்.
நிறைய படித்திருக்கிறார். வாசிப்பில்மிகத் தேர்ச்சி பெற்றவராயிருக்கிறார். ஒரு படைப்பாளியாய் இருப்பதினும் பெரியது, தேர்ந்த ஒரு வாசகனாய் இருப்பது. இதன் அருமையும், ஏக்கமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

இயற்பெயர் செந்தில்வேல். என் பெயரிலும் வேல் இருக்கிறது என்றெல்லாம் ,இவரோடு ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்ந்துகொள்கிறேன்.

இவரை இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பச் சொன்ன புண்ணியவான்களில் நானுமொருவன்.இதை இவர் மிகவும் சிலாகிக்கிறார். ஆனால், உண்மையில் இப்படியொரு பெருமையை, மகிழ்ச்சியை யாத்ரா எனக்கு அளித்ததற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.(இந்த இடத்தில் வடகரை வேலன் அண்ணாச்சியை நினைக்கிறேன். இவர், இதுபோல், எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பவர்)இவரின் படைப்பு வேகம், ஆற்றல் மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இத்தனையையும் இவர்,ஏற்கனவே எழுதியது இல்லையாம். இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகிறாராராம்.ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம். எவ்வளவு பெரிய இழப்பு என்று மனம் துடிக்கிறது.

தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.

இது என்னைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க ஒரு சுய நலமானப் பதிவு.இவருக்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் வெளிச்சத்தை என் பக்கம் திருப்பிக்கொள்ளும் சுய நலம்.(எனவே,யாத்ரா,இப்பதிவுக்காக நன்றியையோ, நெகிழ்ச்சியையோ தெரிவித்து என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்திவிடவேண்டாம் என்று, அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.)

கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.

Wednesday, March 25, 2009

அப்பாஸ் அவர்களின் கவிதை.

துப்பாக்கி

துப்பாகி என்றால்
என் மகள் கேட்கிறாள்
சுடுவதற்கு
யாரை
விரோதிகளை
விரோதிகளை என்றால்
உனக்கு பிடிக்காதவற்றைச் செய்பவர்களை
அப்படியென்றால்
எல்லோரையுமா
நானுமா
இல்லை
தேசத்தை அபகரிப்பவர்களை
தேசம் என்றால்
அபகரிப்பவர்கள் என்றால்
திருடர்களை
திருடர்கள் என்றால்
உனது பொருளை
உன் அனுமதியின்றி
எடுத்துச் செல்பவரை
அனுமதி என்றால்
சுதந்திரம்
ஓ அதுதான் துப்பாக்கியா.

-ஆறாவது பகல் தொகுப்பிலிருந்து .

அப்பாஸ் அவர்களைப் படித்ததில்லை. அவரின் மரணம் அவரை வாசிக்கத் தூண்டியதோ என்னவோ? இப்போதுதான் ஆறாவது பகல் தொகுப்பைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.உயிர் எழுத்துப் பதிப்பகத்தின் அப்பாஸ் கவிதைத் தொகுப்பு”முதலில் இறந்தவன்” என்கிற தொகுப்புக்காக பணம் அனுப்பிக் காத்திருக்கிறேன். ஆனால், புத்தகம் வரும் முன்னமே, அவர் இறந்து விட்டார் என்கிறச் செய்தி வந்துசேர்ந்துவிட்டது.

அவருக்கு அஞ்சலியாக இப்பதிவு.

Monday, March 16, 2009

அய்யப்ப மாதவனின் நிசி அகவல்-விமர்சனக்கூட்டம்


கவிஞர் அய்யப்பமாதவனின் ஆறாவது தொகுப்பான நிசி அகவல் விமரிசனக் கூட்டம் 15-03-09 அன்று, சென்னையில் நடைபெற்றிருந்தது. கவிஞர் அ.மா.(முடியல..கை வலிக்குது) என்னையும் அன்போடு அழைத்து இருந்தமையால் சென்றேன். சொல்லப்போனால், நான் கலந்துகொள்ளும் நவீன இலக்கியவாதிகள் சார்ந்த முதல் நிகழ்ச்சி என்பதே என் நிலையைச் சொல்லிவிடும். ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில் நாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாக(விமரிசனத்திற்கு) வந்திருந்தவர்கள்

1.ஞானக்கூத்தன்
2.ஸ்ரீநேசன்
3.தேவேந்திரபூபதி
4.பா.வெங்கடேசன்
5.யவனிகா ஸ்ரீராம்
6.தாராகணேசன்
7.அஜயன்பாலா

கூட்டத்திற்கு முதல் ஆளாகச் சென்றவன் நான்தான். ஸ்ரீ நேசனை ஏற்கனவே தெரியும் என்பதால்,முன்கூட்டியே சென்றால், சந்தித்து ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே என்பதால் அப்படி. நான் நுழையும்போதுதான் அ.மா உள்ளெ யாரோ ஒருவரோடு வந்தார். பேசியிருக்கிறேனே தவிர, நேரில் பார்த்ததில்லை. புகைப்படத்தில் பார்த்ததை வைத்துக் கண்டுகொண்டேன்.(இதுலல்லாம் நம்மள அடிச்சுக்க முடியாது.ஆனா,என்ன ,அந்தக் கூட்டத்துல வந்த பலரும் புகைப்படத்துக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லாம, வயசானவாங்களா இருந்தாங்க.). அ.மா ஏற்பாடுகளையெல்லாம் பாக்கப்போயிட்டாரு. கூட வந்தவரு மட்டும் நின்னுட்டிருந்தாரு.இவரைப் பாத்திருக்கோமே ன்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஆங். (நாம யாரு), இவரு கண்டராதித்தனாச்சேன்னு யோசனை வரவும், கேட்டேன். அவரேதான்.அவர்கிட்ட ஆரம்பிச்சேன், என் மொக்கையை.


கொஞ்ச நேரத்துல ஆளுங்கள்லாம் வர ஆரம்பிச்சாங்க. நரன் வந்தாரு. அறிமுகப்படுத்தினாங்க. என் பேரைச் சொன்னதும் ச.முத்துவேலா? ன்னு initial ஐ சொல்லிக்கேட்டாரு.( நமக்கு முன்னால நம்ம பேரு போயிருக்குதே. இது ஒன்னுதாங்க இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கிற சுகம்) அட, நம்மளையும் தெரிஞ்சிருக்குதேன்னு நினைச்சுக்கிட்டு, அப்படியே நரனோட ஐக்கியம் ஆயிட்டேன்.உயிரோசைய வச்சுத்தான் நிறையப் பேசினோம்.


படைப்பாளிகள் வரவர கூட்டம் ஆரம்பிச்சது. அப்பப்பா..! நவினத் தமிழிலக்கியப் படைபாளிகள் பெரிய அளவில நிறைய பேரை அங்கப் பாக்க முடிஞ்சதுல எனக்கு சந்தோசம். சும்மா, எனக்கு ஞாபகத்துல வர்றவரையிலும், எனக்குத் தெரிஞ்ச முகங்கள் வரையிலும், நான் பேசித் தெரிஞ்சுக்க முடிஞ்ச முகங்கள் வரையிலுமான பட்டியல்(பெரிசா இருக்கும்..) கீழே.

1.கவிஞர் சுகுமாரன்
2.தேவிபாரதி
3.அழகிய சிங்கர்
4.ரா.ஸ்ரீனிவாசன்
5.கௌதமசித்தார்த்தன்
6.ஜெ. ஃபிரான்சிஸ்கிருபா
7.குமார் அம்பாயிரம்
8.மதுமிதா
9.தமிழ் நதி
10.இளங்கவி
11.தி.முரளி
12.பயணி
13.லக்‌ஷ்மி சரவணகுமார்
14.கண்டராதித்தன்
15. நரன்
16.கடற்கரய்
இன்னும் பலர்…

எனக்குத் தெரிஞ்சது, நினைவு வந்தது அவ்வளவுதான்.

ஒரு விசயம் நல்லாத் தெரிஞ்சது. நவீன இலக்கியம் நானூறுப் பேருக்குள்ளத்தான் விக்கிரமாதித்யன் கவிதை எழுதின மாதிரி, அங்க வெறும் படைப்பாளர்கள் மட்டுந்தான் இருந்திருப்பாங்கன்னுத் தோனுது. வாசகர்ங்கிற அளவில மட்டுமே யாரும் இல்லைன்னு நினைக்கிறென். வேணுமின்னா என்னைச் சொல்ல முடியும். ஆனா, தமிழுக்கு வந்த சோதனை, நானும் கொஞ்சம் கவிதைகள் எழுதிட்டேனே.

வீட்டூக்குக் கிளம்பறப்ப கொஞ்ச தூரம் எனக்கு வழித்துணை, லக்‌ஷ்மி சரவணகுமார்தான்.
இந்த நிகழ்வை வச்சு என்னால, இப்போதைக்கு இதுமட்டும்தான் எழுதமுடியும். மத்தபடி, விமரிசனம்,கருத்து, தொகுப்புரை எல்லாம்..கொஞ்ச நாள்போவட்டும். பார்க்கலாம்.