Saturday, August 30, 2008

காய சண்டிகை-இளங்கோ கிருஷ்ணன்

எதிர்க் கவிதைகள்
உயிர்மை,காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களின் பின் அட்டையில் அந்நூல் பற்றிய அறிமுக,மதிப்புரை காணப்படுகிறது.சில சமயங்களில் ,புத்தகத்தினுள்ளே எழுதப்பட்ட உரையிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்டும்,அதை எழுதியவரின் பெயரும் அச்சாகியிருக்கும்.ஆனால் சில சமயங்களில் அவ்வாறில்லாமல் மதிப்புரை மட்டுமே பின்னட்டையில் காணப்படுகிறது.இவ்வாறு எழுதுபவர்கள் யாரென்ற ஆவல்,அவற்றைப் படிக்கும்போது எழுவது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.அத்தனை துல்லியமாகவும்,செறிவோடும்,எழுதும் திறன் பெற்றவர் தன் பெயரைப் போட்டுக் கொள்ளாததில், ஒரு அசாத்திய முதிர்ச்சி தென்படுகிறது. அதுபோலவே,காயசண்டிகை என்ற கவிதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்டிருக்கும் மதிப்புரையை இங்கு எழுதுவதே சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.இதைவிடப் பெரிதாய் நான் என்ன எழுதிவிடமுடியும்? தவிர,நான் எழுதுவதெல்லாம் வெறும் நூல் அறிமுகம் மட்டுந்தானே!
‘இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.பொதுவாக இவரது கவிதைகளின் மையச்சரடு,ஆட்டத்தின் விதிகளை அறியாத’சூதாட்டத்தின் காய்களை’ப்போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல்.எனினும்,தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல்.காலம்,சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல்.
உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்’
எளிய உரைநடையில் கவித்துவத்தோடு சிறந்த கவிதை எழுதுவது என்பது அறைகூவலானது என்கிறார் மனுஷ்யபுத்திரன்.நவீன கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாற்று நிலவும் சூழலில் இவ்வாறாக எளிய கவிதைகள் வருமானால் வரவேற்கத் தகுந்ததுதான்.முகுந்த் நாகராஜன் போன்ற கவிஞர்கள், நவீன இலக்கிய உலகில் குறிப்பிடத் தகுந்தவர்களாக ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் போன்றோர் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.மிகவும் எளிமையோடு காணப்படும் இவரது கவிதைகள் உள்ளபடியே சிறப்பாகவும் இருக்கிறது.
சமூக விமர்சனத்தை,அங்கதச்சுவையோடு, எதிர்ப் பார்வையில் ,புதிய கண்ணோட்டத்தில் உணர்த்துகிறது பெரும்பாலான கவிதைகள்.குறிப்பாக சமூகத்தில் நிலவும் வன்முறைக் கலாச்சாரத்தை.
ஒரு சமூக விரோதியின் குரலாக, சில கவிதைகள் ஒலிப்பது ஆச்சரியத்தைத் தரலாம்.அவற்றின் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பதே இவற்றின் நோக்கம்.
பத்தி வடிவில் சில கவிதைகள் தென்படுகின்றன.சில கவிதைகள் குறியீட்டுத் தன்மை கொண்டனவாய் இருப்பதாக புரிந்து கொள்கிறேன்.என் அறிவுக்கு எட்டாத, புரியாத சில கவிதைகளும் இருக்கிறது.புரிந்த,பிடித்த கவிதைகளிலிருந்து இரண்டை மட்டும் கீழே தருகிறேன்.முன்முடிவுகள் ஏதுமில்லாமல் புத்தகக் கடைகளிலோ,நூலகங்களிலோ, புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு நாம் ஒரு முடிவுக்கு வருவோமல்லவா?அந்த வகையில்தான் நான் இந்த நூலை ,சில கவிதைகளை உங்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்கிறேன்.

பேனா-1

மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது
*************************
ஒரு சாத்தானின் டைரிக்குறிப்புகள்

இன்று காலை கழிப்பறையில்
ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன்
பின்
பலவீனமான வலுவற்றயென்
கரங்களால்
ஒரு செடியைப் பிடுங்கி எறிந்தேன் காரணமின்றி
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான்
வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வீசுபவர்கள்
பாக்யவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
பொருளும் அதிகாரமுமற்ற
சாமானியன் என்ன செய்ய முடியும்
ஒரு கரப்பானையோ
சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி

$$$$$$$$$$$$$$$
நூல் விபரம்
காயசண்டிகை
(இளங்கோ கிருஷ்ணன்)
காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை,
நாகர்கோயில் 629001
மின்னஞ்சல் kalachuvadu@sancharnet.in

விலை 45 ரூபாய்
72 பக்கங்கள்

Wednesday, August 27, 2008

என்னை உலுக்கிய கவிதை



அண்மையில்தான் படிக்க நேர்ந்தது,பின்வரும் கவிதையை.முதல் நான்கு வரிகளைப் படித்ததுமே ,அதிலுள்ள உண்மையும் ,வேதனையும் பகீரென்று இருந்தது.மிக நேரடியாகவும்,எளிய நடையிலும் எழுதப்பட்ட கவிதை இது.படித்தவுடனே வலைப்பூவில் ஏற்றிவிடவேண்டும் என்று முடிவுசெய்து விட்டேன்.இனிவரும் நாட்களில் அவ்வப்போது இதுமாதிரி எனக்குப் பிடித்த,ரசித்த கவிதைகளை இங்கே மறுபார்வைக்கு வைக்கலாமென இருக்கிறேன்.என்ன சொல்கிறீர்கள்? இதுவரை படிக்கக் கிடைக்காதவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்,நல்ல கவிதைகளை மேலும் பரவலாக்கிய மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்கும்.கவிதாயினி மாலதி மைத்ரிக்கு அடியேனின் மனமார்ந்த பாராட்டுகள்.



தீப்பற்றி எரியும் நிர்வாணம்






நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ

தற்கொலைக்கு முனையும் பெண்கள்

முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை

மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்

சொந்த உறவுகளால் தற்கொலைபோல்

கொல்லப்படும் பெண்கள்

இதில் விதிவிலக்கு



மரணத்திற்குப் பின்னான

தங்கள் நிர்வாணத்தை நினைத்து

அஞ்சும் அவர்களை

ஆடை ஒருபோதும் காப்பதில்லை

ஏனைய உறவுகளைப் போலவே

அவையும் துரோகம் இழைக்கின்றன



பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்

சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை


தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்


- மாலதி மைத்ரி
அணங்கு செப்டம்பர் - டிசம்பர் 2007

Tuesday, August 26, 2008

பொய்யாய் கனவாய்-பாலமுரளிவர்மன்

ஒரு திரைப்படம் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு (ஆட்டோ சங்கர்,சந்தனக்காடு மற்றும் சில)வசனம் எழுதியிருப்பவர்தான் பாலமுரளிவர்மன்.ஏற்கனவே 2500 நாட்கள் (episode) கடந்திருந்த செய்தியை செய்தித்தாளில் படித்திருக்கலாம். இவர் எழுதியிருக்கும் புதினம்தான் பொய்யாய் கனவாய்.
டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லேண்ட்மார்க் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும், தமிழில் முதல் நூல் இது.இதுவரை இந்தி,வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல்வேறு படைப்புகளை வெளியிட்டிருக்கும் தகவல்கள் பதிப்புரையில் காணப்படுகிறது.வடிவமைப்பும் மிக நேர்த்தியாக,படிக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது.இந்நூலுக்கு ஈரோடு தமிழன்பன் அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை மிகப்பொருத்தமானதாகவும்,சிறப்பாகவும் அமைந்துள்ளது.
இப்புதினத்தை(நாவல்) தனது 23 வது வயதில் எழுதியிருக்கிறார்.பல ஆண்டுகள் கழித்து(10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம்) வெளியிட்டிருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்,புதினத்தை தனது இன்றையப் பக்குவத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள விரும்பாமல் அப்படியே வெளியிட்டுள்ளார்.படித்த பலரும் கதையின் நாயகன் கிருஷ்ணமூர்த்தி நீங்கள்தானா என்று தன்னைக் கேட்டதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.இதற்குக் காரணம்,கதையில் உள்ள உயிரோட்டமான நடை.உணர்ந்து எழுதியது போல் உள்ளது.அவ்வாறு கற்பனையும்,உண்மை அனுபவமும் கலந்து உயிரோட்டமாக எழுதுவதற்கு தனித் திறன் வேண்டும்தான்.எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளில் இப்போக்கை நன்கு உணரமுடியும்.இந்தக் கதையைப் பொறுத்தவரையில் இதற்கு உதாரணமாக ஒரு சிறிய காட்சியமைப்பைச் சொல்லலாம்.கிருஷ்ணமூர்த்தியை ஜீப்பில் அழைத்துச் செல்லும்போது,அவன் கண்களில் சாலை வழுக்கிக் கொண்டு நகர்ந்து செல்வதாக எழுதியிருப்பார்.
கிருஷ்ணமூர்த்தி என்கிற இளைஞன் சத்ரியனாகப் பிறந்து,வேதம் ஆன்மீகம் போன்றவற்றில் புலமையும்,ஆர்வமும் உள்ளவனாகவும் அதே சமயத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் சாதிய ஏற்ற இறக்கக் கொடுமைகளை எதிர்ப்பவனாகவும்,புரட்சிகர சிந்தனைகள் உள்ளவனாகவும் விளங்குகிறான்.ஆன்மீகம்,தத்துவம் என்பது வேறு.மதம் என்பது வேறு.தியானம் என்பதும் வழிபாடு என்பதும் ஒன்றல்ல.கதைநாயகன் கிச்சா இதை நன்கு உணர்ந்தவனாகவே தெரிகிறான்.இருந்தபோதிலும் வாழ்க்கைப் பாடத்தை அனுபவித்து உணராத, வேகம் கொண்ட இளம்பருவத்தில் இருக்கிறான்.அதனால் பல இன்னல்களை அனுபவிக்கிறான்.பல்வேறு கட்டங்களில் இவன் நிகழ்த்தும் தர்க்கங்கள் சிந்தனைவீச்சு கொண்டது.சமூகத்தின் மீதான விமர்சனங்களை ஆசிரியர் கிச்சா மூலம் வைக்கிறார்.

கிச்சாவுக்கும்,பார்ப்பனப் பெண் மாலதிக்கும் இடையே அரும்பும் காதல் கதைதான் இது.கதையின் தலைப்பையொட்டியும்,முடிவையொட்டியும் நிறைய எழுதத் தோன்றுகிறது.எனினும்,எழுதப் போவதில்லை.காரணம் கதையின் கமுக்கம் உடைந்து விடக்கூடாது என்பதுதான்.படிக்கிற ஒவ்வொருவரும் அவரவராகவே உணர்ந்து சொந்தக் கருத்துக்களுக்கு,தீர்மானத்திற்கு வரவேண்டும்.இதனாலேயே,நான் சில திரைப்படங்கள்,படைப்புகள் பற்றிய விமர்சனங்களைப் படிப்பதைத் தவிர்த்து விடுவது உண்டு.இந்த அனுபவத்தைத்தான் ‘இல்லாமல் இருப்பது’ என்கிற எனது கவிதையில்(இதே வலைப்பூவில் உள்ளது) அரைகுறையாகப் பதிவு செய்துள்ளேன்.
கதை நகரும் இடம் ஆசிரியரின் சொந்த ஊரான கும்பகோணம்.பிற்பகுதியில் சென்னைக்கு வந்து காதலர்கள் படும் இன்னல்கள் ஒரு பொதுவான ஆவணம்.காதலிக்கும் வரை இனிக்கிற வாழ்க்கை கல்யாணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிப்பது நடைமுறை வாழ்வில் பெரும்பான்மையாக உள்ளது.இதை தக்கப் பின்புலங்களோடு , காட்சியமைப்போடு சொல்லியிருக்கிறார்.கதையின் முதல் அத்தியாயத்தை கால ஓட்டத்தின் வரிசையிலேயே அமைத்திருக்கலாம் என்று படுகிறது.
வர்ணாசிரம அமைப்பை, பார்ப்பனர்களை பல இடங்களில் சாடும் ஆசிரியர்,கிச்சாவை கடவுள் பக்தி உள்ளவனாகவும்,மதங்களின் பெயரால் நிகழும் நல்லவைகளை ஆதரிப்பவனாகவும் காட்டியுள்ளார்.நிறைய தகவல்களை சொல்லியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.சிதம்பரம் கோயில் பற்றி அப்போதே எழுதியுள்ளார்.காதலர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் குறும்பும்,காதல் ரசமும் கொட்டுகிறது.’படிக்கிறது மாதிரி ஒரு சுகம் வேறு எதுவும் கிடையாது தெரியுமா?’ என்று கிச்சா மாலதியிடம் சொல்வான்.கவிதை,இலக்கியம் போன்றவைகளும் கதையினூடே இழையோடுகிறது.
மொத்தத்தில் இப்படி முடிக்கலாம் என நினைக்கிறேன்.
‘சமூக விமர்சனங்களை,சிந்தனை வீச்சு கொண்ட தர்க்கங்களை,சுவாரஸ்யமாகச் சொல்லும் காதல்கதை’
(படித்து முடித்து சில வாரங்கள் ஆகி விட்டபடியால்,இன்னும் சற்று நன்றாகவே ஆய்ந்து எழுதியிருக்க முடியும் என்பது மிஸ்ஸிங்)
இவரின் வலைப்பூ santhanakkadu.blogspot.com

பொய்யாய்...கனவாய்...
(நாவல்)
பாலமுரளிவர்மன்

வெளியீடு
லேண்ட் மார்க் புக்ஸ்
இ42,செக்டர் 18,ரோஹிணி,
தில்லி 110085

விலை ரூ.100