Wednesday, December 30, 2009

படித்ததில் பிடித்த சிறுகதைகள்-2009

2009 ஆம் ஆண்டில் வெளியான சிறுகதைகளில், நான் படித்தவற்றில் மட்டுமேயிருந்து, எனக்குப் பிடித்த சில சிறுகதைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.இது நிச்சயம் ஒரு முழுமையான பட்டியலாகிவிடமுடியாது.இது தரவரிசையின் அடிப்படிடையிலானதுமல்ல. நினைவிலிருந்தே இவற்றை எழுதுவதால் விடுபடல்களும் இருக்கலாம்.

இக் கதைகள் எழுதப்பட்டவிதம் குறித்த என் வியப்பே, இந்தப் பட்டியலின் முதல்காரணியாக இருக்கிறது.பிறகே, அதன் உள்ளடக்கம், சொல்முறை, தளம்,செறிவு, உத்தி, தகவல்கள் ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத்தியிருக்கிறேன்.

1. பொம்மைக்காரி- பாவண்ணன் உயிர் எழுத்து(ஜூன்)
2. வெள்ளம் பாவண்ணன் வார்த்தை(ஆகஸ்ட்)
3. விஷக்கோப்பை யுவன்சந்திரசேகர்- வார்த்தை(ஜூன்)
4. புகைக்கண்ணர்களின் தேசம்- அ.முத்துலிங்கம்-வார்த்தை(ஜூலை)
5. எந்தங்கம் என்னையக் கொல்லுதாமா-வா.மு.கோமு-சுகன்(ஆகஸ்ட்)
6. காட்டின் பெருங்கனவு- சந்திரா-உயிர் எழுத்து(ஆகஸ்ட்)
7. வெளிறிய அந்திமாலை-குமாரநந்தன்- காலச்சுவடு.(டிசம்பர்)
8. ரவிக்கைக்குள் மறையும் வனம்-லக்‌ஷ்மி சரவணக்குமார்-அக நாழிகை,டிசம்பர்
9. அம்மாவின் யுத்தம்- நா.விச்வநாதன் உயிர் எழுத்து
10. வெயில் தோரணம்-ச.குமார்-உயிர் எழுத்து(டிசம்பர்)
11. வேட்டை- கண்மணி குணசேகரன் - மணல்வீடு(டிசம்பர்)


மேலும், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் மூன்று சிறுகதைகளும் பிடித்திருந்தது.மிருகத்தனம், அப்பா புகைக்கிறார், மற்றும் ஒன்று.


இவை தவிர இருள் விலகும் கதைகள் என்கிற சிறுகதைத் தொகுப்பும் இந்த ஆண்டிலேயே வெளியானது. இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் எந்த இதழிலும் வெளியிடப்படாமல், நேரடியாகத் தொகுப்பிலேயே வெளிவந்தவை.அந்த வகையில் இத்தொகுப்பையும் 2009 ஆம் ஆண்டு கணக்கிலேயே எடுத்துக்கொள்கிறேன். நல்ல கதைகளை அடக்கிய சிறுகதைத்தொகுப்பு.





Tuesday, December 29, 2009

தாலிப்பனை(கூந்தப்பனை) படங்கள்









படம் 6 ல் இருப்பது வழக்கமான பனை


படம் 7 ல் இருக்கும் வேட்டிக் கட்டிய பெரியவர் சொன்ன தகவல்கள்.
தாலிப்பனை காய்க்க நூறு வருடங்களாகுமாம். காய்த்தபின் இறந்துவிடுமாம்.கோயில் இருக்கும் இடங்களில்தான் இருக்குமாம்.(மஞ்சள் கட்டிடம் கோயில்தான்).கூந்தப்பனை என்பது படத்திலிருப்பதல்ல,வேறு என்றார்.இப்போது பார்க்கும் இம்மரத்திற்குப்பக்கத்திலேயே, இதற்குமுன் வேறொரு மரம் இருந்ததாகவும், அதை குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்து புகைப்படம் எடுத்து முன்னர் வெளியிட்டிருந்ததாகவும் சொன்னார்.மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொண்டால் நன்றாகயிருக்கும்.
தொடர்புடைய பதிவு-http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

Monday, December 21, 2009

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்-மௌனி

என் பார்வையில் படைப்பாளிகள்
மௌனி-இழந்த காதலின் சஞ்சலங்கள்
mauni

சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் புகழ்ந்துரைக்கப்பட்டவர் மௌனி. நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர்.மணிக்கொடி காலத்திலிருந்தே(1932-38) எழுதத் தொடங்கியவர்.பி.எஸ்.ராமையாவால் எழுதத்தூண்டப்பட்டு அவராலேயே மணி என்கிற இயற்பெயரிலிருந்து மௌனியாக்கப்பட்டவர்.

அச்சில் கிடைக்கும் 24 சிறுகதைகளை மட்டுமே எழுதிய இவரை நவீனத்தமிழிலக்கிய உலகம் இன்றைக்கும் கொண்டாடியும் அதேசமயம் எதிர்மறையான விமர்சனங்களும் எழுப்பிக்கொண்டுமிருக்கிறது. அவர் காலம் முதல் இன்றைக்கும் இந்நிலை தொடர்கிறது. மௌனியின் தனித்துவம் என்பது அவர் எழுதியிருக்கும் விதம்தான். மௌனி எழுதியக் காலக்கட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.


”மௌனி அவர்கள் கணித்ததில் பட்டம் பெற்றவர்.ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர். சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்.தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.மௌனியின் ஆளுமை கணிதத்தில் ஏற்பட்ட அறிவு நுட்பமும், சங்கீதத்தில் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும் இத்தனையும் அடங்கியது” என்கிறார் கி.அ.சச்சிதானந்தம்.


மௌனியின் கதைகளைப் படித்துவிட்டு முதல் வாசிப்பில் புரியவில்லை, பிடிக்கவில்லை என்று புகழ்பெற்ற படைப்பாளிகளே சொல்லியிருக்கிறார்கள். உணர்ந்திருக்கிறார்கள்.அதுதான் மௌனியின் எழுத்து.இவர் கதைகளில் மனம், மனவோட்டங்களே பிரதானமாயிருக்கிறது.பெரும்பாலான கதைகள் உரையாடல்தன்மை மிகச் சொற்பமே கொண்டிருக்கிறது. உரையாடல்களற்ற மனவோட்டங்கள் மிகை உணர்ச்சியில் சஞ்சலத்துடனும், கவித்துவங்களோடும் மனம் போகும் போக்கிலேயே தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கிறது.ஒன்றிப் படிக்கவேண்டியது அவசியம். ஒருமுறைக்கு மேல் படித்தால் புரியும் கதைகள் அதிகம்.இரண்டாவதுமுறை படிக்கும்போது மிக எளிதாகவும், விரைவாகவும் நகரமுடிவது ஆச்சரியமளிக்கும் அனுபவம். 1930 களிலான மொழி இன்று எவ்வளவு மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை இவர் கதைகளைப் படிக்கும்போது நன்கு உணரமுடிகிறது.தண்ணீர் என்றே சொல்லப்படாமல் ஜலம் என்றும் யோசனை என்கிற பதம் யோஜனை என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது இன்றைக்கு ஒருவித சலிப்பைத் தருகிறது. மௌனியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களைப்போலவே, அவர்களது வாழ்வும், சூழலும் ஒரே மாதிரியாகவே இருப்பதால் சில கதைகளில் குழப்பம் ஏற்படுகிறது. மனதில் நிற்கமுடியாமல் போகிறது.தீர்க்கமாய் இன்னதென்று சொல்லிவிடாமல் புதிரானதாகவே எழுதப்பட்டிருப்பது வாசிப்பில் தேர்ச்சியைக் கோருகிறது.

காதலுக்குரியவர்களையும், நெருங்கியவர்களுமான உறவுகளையும் இழந்து தவிக்கும் மனதின் சஞ்சலமும், தனிமையும், அதே சூழலில் நீடித்திருக்க விரும்பும் எண்ணமும் கொண்ட கதாபாத்திரங்கள் அதிகமாய் தென்படுகிறது. பகடி செய்யும் பண்பு இவர் கதைகளில் பரவலாக உண்டு.அழியா சுடர், பிரபஞ்ச கானம், மாறுதல், ஆகிய கதைகள் குறிப்பிடத்தகுந்ததும் புகழ்பெற்றதுமாகும். மேலும் மனக்கோட்டை, கொஞ்ச தூரம் ஆகிய கதைகளும் குறிப்பிடத்தகுந்தவை.முதல் வாசிப்பிலேயே புரியத்தக்க சில எளிய கதைகளும் எழுதியிருக்கிறார்.'இந்நேரம்,இந்நேரம்' என்கிற சிறுகதையில் கதைக்குத் தொடர்பற்றதாகவே வருகிறது மிராசுதாரர்(பிராமணர்) பாத்திரம் . கதையின் நாயகனான செல்லக்கண்ணு படையாச்சி என்கிற பண்ணையாள் இளைஞன், கொஞ்சம் கரடுமுரடான வேலைகளுக்கு பறையர்களை வைத்து வேலை வாங்கவேண்டும் என்று நினைப்பதாக எழுதியிருக்கிறார் மௌனி. கதைக்கு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் சித்தரிப்பு வர்க்கபேதத்தை, சாதிகளின் படி நிலைகளைக் காட்டுவதற்காகவே எழுதபட்டிருப்பதுபோல் தோன்றச்செய்கிறது. ஆனால், அதே நேரத்தில் மிஸ்டேக் என்னும் கதையில் படி நிலையில் வேறுபட்ட மனிதர்களை முன்வைத்து அவர்களுக்குள் இருக்கும் போலியான செய்கைகளையும், பிழைப்புவாதத்தையும் கேலிக்குட்படுத்துவதன் மூலம் இன்னொரு கோணத்தை அளிக்கிறார்.”மாறாட்டம்”, ”சுந்தரி” போன்ற கதைகள் மிகச் சாதாரணமாகவேப் படுகிறது.சலிப்பாகக் கூட இருக்கிறது.”உறவு, பந்தம், பாசம்', ;குடை நிழல்' நினைவுச்சுவடு ஆகிய கதைகள் தாசிகள் கதாபாத்திரங்களாக வரும் கதைகள்.ஆங்கிலத்தில் கடவுளைக் குறிப்பிடும்போது , வாக்கியங்களின் இடையில் வந்தாலும் He என்ற பெரிய எழுத்திலேயே குறிப்பிடுவது மரபு. அதையே பின்பற்றுவதுபோல், மௌனி தன்னுடைய கதைகளில் கடவுளைக் குறிப்பிடும் இடங்களில் 'அவன்' என்று தடிமன் எழுத்துக்களில் எழுதுகிறார்.

மௌனி பற்றிய நிறை, குறை என்று வாதிடுபவர்களின் கூற்றுகளில், இரு தரப்பிலுமே நியாயம் இருக்கமுடியும்.ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றிய அபிப்பிராயங்களையும் சுய வாசிப்பனுவத்தின் மூலமே கண்டடைவது மிகச் சரி.


1907 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்மங்குடி கிராமத்தில் பிறந்தார். 1926 வரையில் கும்பகோணத்தில் படித்த பிறகு 1929 வரையில் திருச்சியில் படித்து, வேலைக்கொன்றும் போகாமல் 1943 வரையில் கும்பகோணத்தில் தன் வீட்டில் வசித்தார். பிறகு தனது பிதுராஜித நிலம் தொழிலை கவனிக்க சிதம்பரம் வந்து, அங்கேயே வாழ்ந்து 1985- ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று காலமானார்.

நன்றி- தடாகம்

Wednesday, December 16, 2009

கூத்தப்பனையும், முத்தூவெல்லும்

                                             மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.ஜெயமோகனின் இணையதளத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாசித்துவருவதின் வழியாக, சு.வேணுகோபால் அவர்கள் பெயரையும், அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த முக்கியமான படைப்பாளி என்று மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், அதுவரை அவரின் ஆக்கங்கள் எதையும் படித்ததில்லையாதலால் அவரோடு என்னால் கலந்துரையாடமுடியாமல் போனது. நண்பர் கும்கி மற்றும் அவரின் நண்பரொருவர் ஆகிய இருவரும் சு.வேணுகோபாலை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர்.திரும்பிவந்த கும்கி, என்னிடம் வேணுகோபால் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவரின் ‘கூந்தப்பனை’ பற்றியும் மற்ற சில ஆக்கங்களை பற்றியும் எனக்குச் சொன்னார். நான் அப்போதுதான் ‘கூந்தப்பனை’ என்கிற சொல்லையே முதன்முதலாக அறிகிறவனாயிருந்தேன். மாநகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட நகரத்தில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நான் , முதன்முதலில் குயிலைப் பார்த்ததே சென்னையில்தான்.கிட்டத்தட்ட இருபது வயதில்தான். நான் பிறந்த நகரத்தை இதற்குக் குற்றம் சொல்ல முடியாது. நான் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.

பிறகான சில நாட்களில் கூந்தப்பனை என்கிற சொல் எப்படியோ கூத்தப்பனை என்றே என் நெஞ்சில் நிலைத்துவிட்டது.இதற்கிடையில் சு.வேணுகோபாலின் சிறுகதைத் தொகுப்பான ‘களவு போகும் புரவிகள்’ லிருந்து இரண்டு கதைகளை மட்டும் படித்திருந்தேன். மிகவும் தாவித்தாவிச் செல்கிறபடியும், வாசிப்பில் பொறுமையையும், தேர்ச்சியையும் கோரும் வகையில் இருந்தமையாலும் அதற்குமேல் அப்போதைக்கு படிக்கமுடியாமல் ஒத்திவைத்தேன்.பிறகு ‘சாயாவனம்’ நாவலைப் படிக்கிறபோது, அதில் கூந்தல்பனை என்கிற சொல்லைக் கண்டபோது, நினைவிலிருந்த கூத்தப்பனையை மீட்டு கூந்தப்பனை என்பதாக சரிசெய்துகொண்டேன். கூத்தப்பனை என்று ஒரு சொல்லே கிடையாது என்று தெரிந்திருந்தால்தானே, அச்சொல்லிலிருக்கும் பிழையை என்னால் மாற்றிக்கொள்ள முடியும். என்னுடன் பணிபுரியும் வட இந்தியர் ஒருவர் என் பெயரை முத்தூ வெல் என்பார். அதுபோல்தான் இருக்கிறது இது.

இதற்குப்பிறகு என்னுடன் பணிபுரியும் என் வயது நண்பர்கள் சிலரிடம், அவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து, நிலப்பகுதிகளிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் கூந்தப்பனை என்பதுபற்றி விசாரித்தேன். கூந்தப்பனை என்று சொல்வதா அல்லது கூந்தல்பனை என்று சொல்வதா என்கிற சிறிய தடுமாற்றம் வேறு. என்னைப்போலவே நண்பர்கள் சிலருக்கும் தெரியவில்லை. ஒரேயொருவன் மட்டும் தாலிப்பனை என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் சொன்னான்.அவன் வடதமிழ் நாட்டுப்பகுதியைச் சேர்ந்தவன்.அதன்பிறகு கிராமவாசியானவரும், வயதில் மூத்தவரும், உள்ளுர்க்காரருமான ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும் ,மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது. வாய்ப்பிருந்தால் பிறகொருமுறை புகைப்படம் எடுத்து இணைக்கிறேன்.
இன்னொரு உள்ளூர்க்காரர் இதன் பெயர் தாலிப்பனை என்றார். வட்டாரம் சார்ந்த சொல்லாடல்போல. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம் படிப்பதன் மூலம் இப்படியாவது ஏதாவது நடந்தால் சரி.
ஜெயமோகன் , அண்மையில் எழுதியிருக்கிற ‘சு. வேணுகோலின் மண்’ என்கிற பதிவில், கூந்தப்பனை பற்றிய படிம பிரயோகத்தை, வெளியிட்டிருந்த இடம் கூந்தப்பனை ஆக்கததை படிக்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியுள்ளது.

Tuesday, December 15, 2009

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா

Manalveedu

 

அழைப்பிதழ்


மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்
மக்கள் கலை இலக்கிய விழா


நாள் :26 டிசம்பர் 2009
சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி
இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம். 636453
தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214


பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்
பஸ் நிறுத்தம்: பொட்டனேரி


தெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள
முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.
நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.
இப்படிக்கு,
மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர், மணல்வீடு


தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)
முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.
நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்
அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை
களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.
வரவேற்புரை: தக்கை.வே.பாபு
துவக்கவுரை: பிரபஞ்சன்


அமர்வு.2 மாலை 4-6மணி வரை


கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்
தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்
வாழ்த்துவோர்:
முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி
அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்
சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்
நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்
நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்
வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.
மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை


அமர்வு3: மாலை7மணி


நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)
நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.
மிருதங்கம்:திருமதி.லதா
முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)


அமர்வு4- இரவு 10 மணி


மதுரை வீரன் (தெருக்கூத்து)
நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.
கோமாளி: மாதேஸ்
காசி ராஜன் :சண்முகம்
செண்பகவள்ளி:பழனிச்சாமி
சின்னான்:செல்லமுத்து
செல்லி:பிரகாஷ்
வீரன்:சதாசிவம்
பொம்மண்ண ராஜன்:வீராசாமி
வீர பொம்மன்:பெரிய ராஜு
பொம்மி:வடிவேல்
முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.
மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்
அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.
(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)
பார்வையாளர் நன்கொடை:ரூ.50


சான்றிதழ் மற்றும் விருது பெறுவோர்.
1.அமரர் மகாலிங்கம்
எலிமேடு, எலச்சிப்பாளையம்
கலைச்சேவை : 60 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : வீரன், கூத்து : மதுரை வீரன்
2. துரைசாமி
எலிமேடு, எலச்சிப்பாளையம்
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சின்னான், கூத்து : மதுரை வீரன்
3. மட்டம்பட்டி பழனி, சங¢ககிரி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : நாக கன்னி. கூத்து : அரவான் கடப்பலி
4. துரைசாமி
நல்லம்பள்ளி,
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : இரண்யன். கூத்து : இரண்ய சம்ஹாரம்
5. சின்னத்தம்பி
பென்னாகரம்
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பத்மா சூரன். கூத்து : பத்மா சூர வதம்
6. மனோன்மணி
எலிமேடு
கலைச்சேவை : 45 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பொம்மி, கூத்து : மதுரை வீரன்
7. முத்துலட்சுமி
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 45 ஆண்டுகள், கட்ட பொம்மலாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்
8. செ.சரோஜா
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 45 ஆண்டுகள், கட்ட பொம்மலாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.
9. கருப்பண்ணன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், கட்ட பொம்ம லாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.
10. ராமநாதன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்
11. சித்தன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.
12. சின்னக்கண்ணு
நால்கால்பாலம்
கலைச்சேவை : 45 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பொன்னுருவி கூத்து : கர்ணமோட்சம்
13. வீராசாமி
எலிமேடு
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பீமன், கூத்து : ஆரவல்லி சண்டை
14. மெய்வேல்
சீரகாபாடி
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பீமன் கூத்து : பதினெட்டாம் நாள் யுத்தம்
15. பெரியராஜ்
துத்திபாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : கிருஷ்ணன், கூத்து : அல்லி அர்ஜூனா
16. சின்ராசு
துத்திபாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : யசோதரை, கூத்து : கிருஷ்ணன் பிறப்பு
17. பச்சமுத்து
கன்னந்தேரி
கலைச்சேவை : 35 ஆண்டுகள்,முகவீணைக்கலைஞர்- தெருக்கூத்து
18. குஞ்சு கண்ணு
கன்னந்தேரி
கலைச்சேவை : 35 ஆண்டுகள், முகவீணைக் கலைஞர் - தெருக்கூத்து
19. செல்லமுத்து
மோர்பாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் :அல்லி முத்து கூத்து. : ஆரவல்லி பந்தயம்
20. ஹரிதாஸ்
எலிமேடு
கலைச்சேவை : 45 ஆண்டுகள், மிருதங்க கலைஞர்- தெருக்கூத்து
21. தங¢கவேல்
எலிமேடு
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அர்ச்சுனன் கூத்து : அர்ச்சுனன் தேவப்பட்டம்
22. சுப்பன்
நகுலூர்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், மிருதங்கக் கலைஞர் - தெருக்கூத்து
23. சுப்ரமணி
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அபிமன்யு கூத்து : ஆரவல்லி அல்லி முத்து பந்தயம்
24. ஐயந்துரை
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : தருமர், கூத்து : படுகளம்
25. சத்தியவதி
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சுபத்திரை : பவளக்கொடி
26. செல்வம்
கரட்டூர்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : உத்திர குமாரன் கூத்து : விலாடபருவம்
27. மாதேஸ்
எலிமேடு
கலைச்சேவை : 30 ஆண்டுகள், கட்டியங்காரன் தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம்
28. கணேசன்
கொம்பாடிப்பட்டி
கலைச்சேவை : 25 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : மண்டோதரி கூத்து : சூர்ப்பனகை கர்வபங்கம்
29. லதா
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 25 ஆண்டுகள், மிருதங்கக் கலைஞர் தெருக்கூத்து
30. செட்டி
சேடப்பட்டி
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : குறத்தி. கூத்து : குறவஞ்சி
31. சேட்டு
நல்லூர்
கலைச்சேவை : 25 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : துரியோதனன் கூத்து : மகுடவர்த்தகன் அரவான் சண்டை
32. ஆறுமுகம்
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சனீசுவரன், கூத்து : சனிவிரதம்
33. மணி
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பார்வதி கூத்து : துருவாசர் கர்வபங்கம்
34. அங்கமுத்து
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அலர்மேல் மங்கை, கூத்து : வெங்கடேசப் பெருமாள் கல்யாணம்
35. வேம்பன்
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அர்ச்சுனன் கூத்து : பவளக்கொடி
36. துரையன்
கன்னந்தேரி
கலைச்சேவை : 30 ஆண்டுகள், பின்னணி இசை- தெருக்கூத்து

கலைச்சுடர்


1. காளிதாஸ்
2. ராசேந்திரன்
3. பழனிசாமி
4. ராஜமாணிக்கம்
5. ராஜேஷ்
6. சென்னகிருஷ்ணன்
7. சங்கர்
8. கலைஞன்
9. சகத்தி


பங்கு பெறுவோர்
ஷாஜகான்,உதயசங்கர்,அனுராதா,கு.ரா,தபசி,கே.வி.ஆர்,சந்தியூர் கோவிந்தன்,பாலமுருகன்,செல்வப்பெருமாள்,க.சீ.சிவக்குமார்,வசு மித்ர,பேய்க்காமன்,ஞா .கோபி,சௌந்தரசுகன்,இசை, இளங்கோகிருஷ்ணன்,ந.பெரியசாமி,ஜீவன் பென்னி,கலை இலக்கியா, ச.முத்துவேல்,சூர்யநிலா, பொன்.குமார், சக்தி அருளானந்தம்,அதிரதன்,முபாரக், மண்குதிரை,ச்விசயலட்சுமி,பாரதி நிவேதன்,இனிது இனிது காத்திகேயன்,எழில் வரதன், ரத்திகா, ரந்தீர்,இளஞ்சேரல்,சொ.பிரபாகர், யாத்ரா,சேரல்,நந்தா,தூரன்குணா,நக்கீரன்,ஆதிரன்,போப்பு,விவேகானந்தன்,தமிழ்நதி, ஞானதிரவியம்
மற்றும் எங்கள் பெருமைக்குரிய வாத்தியார்கள்: மாயவன்,குருநாதன்,செல்லப்பன்,ஜெயா,கனகராஜன்,அம்மாபேட்டை கணேசன்,கோவிந்தசாமி,எலிமேடு வடிவேல்,ரெட்டியார்(எ)ராசேந்திரன்,கொம்பாடிப்பட்டி ராஜு,கூலிப்பட்டி சுப்ரமணி,மாணிக்கம்பட்டி கணேசன்,பெரிய மாது,சித்தன்,வீரப்பன்,லட்சுமி அம்மாள் செட்டிப்பட்டி சின்னவர்.
-----------------------------------------------
நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,
ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,
611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

Saturday, December 12, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்
ilango
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
காலச்சுவடு வெளியீடான காயசண்டிகை என்கிற கவிதைத்தொகுப்பின் மூலம் அறிமுகமாகியிருக்கும் கவிஞர் இளங்கோகிருஷ்ணன் , இன்றைய இளம் கவிஞர்களுள் மிகவும் குறிப்பிடத்தகுந்த சிறந்த கவிஞர். இவர் தம் கவிதைகளைப் புனைவிலேற்றி, படிமமாக்கி எழுதுகிறார். புனைவு என்பது ஒரு படைப்புக்கு எந்தளவுக்கு இயல்பாகப் பொருந்தமுடியுமோ அந்தளவுக்கு எழுதுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், கூடுதல் சுவையையும் அளிக்கிறது.அந்த வகையில் இளங்கோகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளில் காணப்படும் புனைவு இயல்பானதாகவும், பொருத்தமாகவும் , பன்முகத்தமைக்கு இட்டுச்செல்லும் வகையிலும் அமைந்துள்ளது.நேரடியான உரை நடைத்தன்மை கொண்ட எளிய கவிதைகளும் எழுதுகிறார்.தனித்த நுண்கதைகளைப் போலிருக்கும் இவரின் கவிதைகள் வாசித்து உள்வாங்கியதும் பன்முகத்தன்மையோடு பல்கிப்பெருகக்கூடியதாக உள்ளது. வாழ்தலின் சலிப்பை,துயரை, இயலாமைகளை எழுதுகிறார்.சுய விருப்பங்களை தொலைத்த நிர்ப்பந்த வாழ்வில் ,ஆட்டத்தின் விதிகளை அறியாத சூதாட்டக்காய்களைப் போன்ற நிலையை எழுதுகிறார்.அவலங்களுக்கு எதிராக பிரச்சார தொனியில் எழுதிக்கொண்டிராமல் , சீறிப்பாயாமல், நைச்சியமாக கேலி பண்ணும் புத்திசாலித்தனம் கொண்டவை இவர் கவிதைகள்.எதிர்த்தன்மையைக் கொண்டதுபோல் எழுதப்படும் இவர்தம் கவிதைகளில் கவிஞரின் குரல் கவிதைக்குள்ளாக ஒளிந்துகொண்டிருப்பது. காலங்காலமாக நிலவிவரும் சமூக அவலம் முதல் இன்றைய சமூக,அரசியல் அவலங்கள், நிகழ்வுகள் வரைக்கும் மறைமுகமாகக் குறிப்புணர்த்துகிறது இவர்தம் சில கவிதைகள்.

ஒரு தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் நன்றாக அமைந்து இருந்தாலே போதும், அத்தொகுப்பு வெற்றிபெற்றதாக எண்ணலாம் என்றொரு கருத்து உண்டு. ஆனால், இவரின் தொகுப்பான காயசண்டிகையில் நம்மால் ஐந்தாறு கவிதைகளைக்கூட ஒதுக்கித்தள்ளிவிட முடியாத அளவுக்கு அத்தனைக் கவிதைகளும் சிறப்பானது.முதல்தொகுப்பான காயசண்டிகையிலேயே முதிர்ந்த மொழிவளமும், கச்சிதமான வடிவமைப்பும், புதிய உத்திகளும் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். உரை நடை வடிலும், பத்தி வடிவிலும் சில கவிதைகளும் எழுதியிருக்கும் இவர், சிறுகதைகள் மற்றும் நுண்கதைகள் , மொழிபெயர்ப்புகள் ஆகியனவும் எழுதிவருகிறார்

காயசண்டிகை தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மதிப்புரை:

‘இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.பொதுவாக இவரது கவிதைகளின் மையச்சரடு,ஆட்டத்தின் விதிகளை அறியாத’சூதாட்டத்தின் காய்களை’ப்போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல்.எனினும்,தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல்.காலம்,சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல். உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்’

இயற்பெயர் பா.இளங்கோவன். வரி ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.கோவையைச் சார்ந்தவர். இவரின் வலைப்பூ.

காயசண்டிகத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

ஒரு சாத்தானின் டைரிக்குறிப்புகள்


இன்று காலை கழிப்பறையில்
ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன்
பின்
பலவீனமான வலுவற்றயென்
கரங்களால்
ஒரு செடியைப் பிடுங்கி எறிந்தேன் காரணமின்றி
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான்
வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வீசுபவர்கள்
பாக்யவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
பொருளும் அதிகாரமுமற்ற
சாமானியன் என்ன செய்ய முடியும்
ஒரு கரப்பானையோ
சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி

பேனா-1

மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது

ஊழியம் கம்பெனி (பி) லிமிடெட்


நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.

கதவு

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்

நன்றி - தடாகம்
Thadagam_Logo_Eng