Tuesday, May 6, 2014

ஒட்டகச்சிவிங்கியை பாடிய கவிஞன்





அண்மையில் ஒரு வனவிலங்குகள் பூங்காவைச் சுற்றி வந்தபோது, ஷங்கரராம சுப்ரமணியனின் கவிதைகள்  நினைவில் வந்துகொண்டேயிருந்தன. வீடு திரும்பியதும் நினவில் வந்த கவிதைகளை மீண்டும் வாசித்துவிடும் ஆர்வம் துடித்தது. தமிழ் இந்து நாளிதழில் சிறுவர்களுக்கான இணைப்புகள் வெளியாகும் நாட்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விலங்கு பற்றிய தகவல்கள் ஷங்கர் தொகுப்பில் வெளிவருகிறது. பணியாற்றுவதன் நிமித்தம் தன் பங்களிப்பாக செய்யக்கூடியவைகளில் இவற்றையும் செய்கிறாரோ என்று முன்பெல்லாம் நினைத்ததுண்டு. தமிழின் ஒரு சிறந்த கவிஞன் பிழைப்புக்காக இப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கவேண்டியுள்ளதே என்றுகூட எண்ணி வருந்தியதுண்டு. ஆனால், விலங்குகளின் மேல் ஷங்கருக்கு உள்ள ஈடுபாட்டை இப்போது  உணரமுடிகிறது.ஒட்டகச் சிவிங்கி, மர நாய், சிங்கத்துக்கு பல் துலக்குதல், திரும்பத் திரும்ப இடம்பெறும் காகங்கள், நாய்கள், என்று அவருடைய கவிதைகளில் விலங்குகள்  நிறையவே இடம் பெறுகின்றன.  நானறிந்து ஒட்டகச் சிவிங்கியை கவிதைக்குள் கொண்டுவந்த கவிஞர் ஷங்கர்தான். ஆனால், அவை கவிதைகளில் பெறும் வெவ்வேறு பரிமாணமங்கள் துள்ளலையும், ஆச்சர்யத்தையும் எழுப்பக்கூடியன. அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் என்ற தலைப்பிலேயே விலங்குகளைக் கொண்ட தொகுப்பில்  நான் குறிப்பிடும் நிறைய கவிதைகள் உள்ளன. சந்தோசத்தின் பெயர் தலைபிரட்டை, காகங்கள் வந்த வெயில் போன்றவை மற்ற தொகுப்புகளின்  பெயர்கள். இவருடைய வலைப்பூவின் பெயர் ‘ யானை’.

இதேபோல், ஒருமுறை தக்ஷிணசித்ரா சென்றிருந்தபோது அங்கே மகாபாரதக் கதைகளின் ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி  நடைபெற்றது, நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற கண்காட்சியை பற்றியும், அவற்றில் இடம் பெற்ற ஷங்கரின் கவிதைகள் சிலவற்றையும்  இணையதளங்களில் படித்து அறிந்திருந்தேன். எல்லாவற்றையும் பார்க்கவும், படிக்கவும்  நேர்ந்தபோது  நான் மிகவும் உணர்ச்சிகரமான நிலைக்கு ஆளானேன். ஆர்வத்தில் அங்கிருந்துகொண்டே ஷங்கருக்கு தொலைபேசி என் மகிழ்ச்சியைச் சொன்னேன். ஒரு கோளரங்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, தொடர்போடோ அல்லது தொடர்பில்லாமலோ ஷங்கரின் நீலமுட்டை அரங்கு கவிதை நினைவில் தலை நீட்டியது.
ஷங்கரின் கவிதைகள் பலவும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கும்போதே, நான் அவருடைய புத்தகங்களையும், அவருடைய தொலைபேசி எண்ணையும் வாங்கிவைத்துக்கொண்டேன். மிதக்கும் இருக்கைகளின் நகரம் என்ற தொகுப்பு இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அவரின் கவிதைகள் பிடிபடக்கூடும் என்ற என் நம்பிக்கை இப்போது நனவாகியிருக்கிறது என்பதிலும் எனக்கு ஒரு தன்னம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கிறது.