Tuesday, November 26, 2013

வளர்ச்சியின் வீழ்ச்சி




போக்கிடம் நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்….
சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ள டேனிஷ்பேட்டை ( புனைப்பெயர்தான்) கிராமத்தில், மாக்னஸைட் கிடைப்பதால், அந்த ஊரையே அரசு கையகப்படுத்திக்கொள்கிறது. ஊர் மக்களுக்கு இழப்பீடாக பணமும், வேறு ஊரில் நிலமும் அளிக்கிறது. சிற்றூர்  நகரியமாக மாறுகிறது. அதன் தாக்கங்களை பேசுகிறது  நாவல்.
Unique: Writer Vittal Rao with his award –winning book.Photo:K. Gopinathan

விட்டல்ராவின் புனைவு எழுத்தில் நான் படிக்கும் முதல் நூல் இதுதான். எந்தவித அறிமுகமும், எதிர்பார்ப்புமில்லாமல் படித்தேன். இந்தளவுக்கு என்னைக் கவரும் என்று எதிர்பார்க்கவில்லை. 1977 ல் முதற்பதிப்பு வந்திருக்கிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 2013 ல் படிக்கிறேன். ஆனாலும், சமகால வாசிப்புச் சுவையோடு உள்ளது. இந்த நாவலின் சிறப்பாக முதன்மையாக நான் வலியுறுத்துவது, அது கையாண்டிருக்கும் நிலமும், மனிதர்களும்தான். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத பகுதி. இன்றைக்கு ஆதவன்தீட்சண்யா, மு,ஹரிகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இன்றளவும் இடம்பெறவில்லை எனலாம். அம் மக்களின் வட்டார வழக்கு சொல்லாடல்கள் இலக்கியத்திலோ, சினிமாவிலோ பதிவாகவில்லை.

எனக்குத் தெரிந்த  கிராமம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். என் தாய்வழி உறவுகள் இன்றும் வசித்துவரும் கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையிலும், தர்மபுரி மாவட்டத்தின் எல்லையிலும் அமைந்த ஒரு கிராமம். அங்கும்கூட நான் நிறைய காலம் வாழ்ந்ததில்லை. ஒரு விளையாட்டுப் பையனாக, என் பதின்வயதில் பள்ளி விடுமுறைகளில் சென்று தங்கி முழு நாட்களையும் கழித்திருக்கிறேன்.  ஆண்டின் இரண்டு பருவங்களில் வாழ்ந்திருக்கிறேன். அவை, கோடைக்காலம் மற்றும் அரையாண்டு பரீட்சை விடுமுறை வரும் காலம். அரையாண்டு விடுமுறையின்போது கிணறுகள் நிரம்பிவழியும். கோடையில் தண்ணீர் குறைவாகவே இருக்கும். அங்குதான் நீச்சல் கற்றேன். அந்த ஊரின் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் முகம் அறிவேன். பெயர்கள் தெரியும். சிறுவர்கள் எல்லோரும் நண்பர்களாயிருந்தனர். அந்த வயதில் நான் பார்த்த ரஜினி, கமல் படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் வரிக்குவரி இன்றளவும் எவ்வளவு ஆழமாக நினைவில் இருக்கிறதோ அதேபோல் அந்த வாழ்க்கையும் நினைவில் இருக்கிறது. பேசிப்பேசி , நினைவுகூர்ந்து ஆழமாகப் பதிந்துபோனவை அவை. பருவராகம் படம் ரிலீசான காலகட்டத்தில், அந்தப் படத்தை வீடியோவில் கருப்பு வெள்ளை டிவி யில் அங்கேதான் பார்த்தேன். சந்தை, நுங்குவண்டி, இரவில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், கிராமபோன் ஆகியவை அப்போதுதான் அறிமுகம். பகல்தூக்கமும் அங்கேதான் அறிமுகம். எதுவும் வேலையில்லாமல் ஒருமுறை பகலில் தூங்கி, எழுந்து பொழுது விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு பல்துலக்கும்போது பரிகாசத்திற்கு ஆளானேன். தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியேவந்த மானின் கறியை மனதில் கழிவிரக்கத்தோடு ஓரிரு துண்டுகள் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். சிறுவர்கள்கூட சுதந்திரமாக கெட்டக்கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். நானும் உற்சாகமாகி பேசுவேன். அந்தச் சிறுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள். படிப்பில் மட்டும்தான் என்னைவிட அல்லது நகரத்து மனிதர்களை விட பின் தங்கியிருப்பார்கள்.ஆனால், பெரிய மனிதர்களுக்கு இணையாக முதிர்ச்சியும், ஈடுபாடுகளும் கொண்டவர்கள். கட்டற்றவர்கள். என்னைவிட நல்ல பணப்புழக்கம் கொண்டவர்கள். வரப்பில் சுமையோடு சைக்கிள் ஓட்டும் தீரர்கள்.  நான் அங்கே பார்த்த துவக்கப் பள்ளிக்கூடத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கும்.பிள்ளைகள் தன்னிசையாக எழுந்து வெளியில் ஓடுவார்கள். திரும்ப வருவார்கள்.

அப்படி நான் வாழ்ந்து பார்த்த என் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு நாளாக, அனுபவங்களாக நினைவுகளைக் கிளறும்  வகையில் அமைந்திருக்கிறது விட்டல்ராவின் எழுத்து. மீண்டும் அதே ஊருக்கு  நான் சென்றால் மட்டுமே அந்தளவுக்கு நினைவுகள் பெருக்கெடுக்கும். ஏதாவது ஒரு கிராமத்திலோ அல்லது அதே கிராமத்திலோ மீண்டும் இப்போது கொஞ்ச நாட்கள் வாழ்ந்துபார்க்க வேண்டும் என்ற ஆசை குன்றாமலிருக்கிறது. ஆனால், நான் மீண்டும் அங்கே செல்வதையோ, சென்று தங்கி வாழ்வதையோ இப்போது விரும்பவில்லை. ஏனெனில், பொதுவாக வெள்ளந்தியாக கருதப்படும் கிராமத்தார்கள் எல்லோருமே வெள்ளந்திகள் இல்லை. எனக்கு இப்போது அவர்களில் பலரும் வெறுப்புக்கு ஆளானவர்கள். வேறு ஏதாவது கிராமங்களில் வாய்ப்பு கிடைக்குபோது பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

நாவலில் வரும் பையப்பன் காலத்தையும்விட வயதில் சிறியவன் என்பதால், நான் பார்த்த கிராமம் , விட்டல்ராவ் எழுதியிருக்கும் காலத்திற்கும் பிந்தைய கிராமம். நாவலில் வரும் காலம் ,  ரேடியோ அறிமுகமாகும் காலம்  . நான் பார்த்தது டேப்ரெக்கார்டர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம்.

வெறும் தகவல்களாக அல்லாமல் கதையோடு சேர்ந்த காட்சிகளாக காட்டையும், சந்தையையும் , வயல்களையும் கலாபூர்வமாக மாற்றி சுற்றிக் காட்டுகிறார் விட்டல்ராவ். எவத்த, இவத்த, பொறைக்கி, எருமுட்டை போன்ற சொற்கள் நான் கேட்டு அறிந்தவை. பொறைக்கி என்பதற்கு இரவு என்று குறிப்பு கொடுத்திருக்கிறார். பிறகு என்பதே பொறைக்கி என்று சொல்லப்பட்டது என்பது என் அனுமானம். ஆனால், பெரும்பாலும் பகல் வேளைகளில் மட்டுமே சொல்லப்படும் பொறைக்கிக்கு , பிறகான வேளையான இரவு என்ற அர்த்தமும் வந்துவிடும். புங்க மரத்தைப் பற்றி சொல்லும்போது புன்னை என்றும் சொல்கிறார். நானறிந்தவரையில் இரண்டும் வெவ்வெறு மரங்கள்.

சில நூறு குடும்பங்கள் கொண்ட கிராமம். அந்தக் குடும்பங்கள் அனைவருமே பொதுவாக உறவினர்களாகவே இருப்பார்கள். உறவினர்களாகாத,  மற்ற சாதியினரும் தொழில் தேவைகளின் அடிப்படையில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். ஊரைத்தாண்டினால், விரிந்துகிடக்கும் வயல்கள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் உரியதாக நீண்டுகொண்டே போகும். சிலர் வயல்வெளிகளிலேயே வீடு கட்டிக்கொண்டு  தங்கிவிடுவது உண்டு.கொல்லி அல்லது கொல்லை என்பார்கள். என்னைவிட வயதில் மூத்தவர்களான கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்களுடனும் சுற்றியிருக்கிறேன். அப்போதுதான் நான் நிறையக் கெட்டுப்போனேன் அல்லது கற்றுக்கொண்டேன். காமம் பொதுவாக, கட்டற்றதாகவே இருக்கும். அதற்கான வாய்ப்புகள் நகரச்சூழலைக் காட்டிலும் கிராமங்களில் மிக அதிகம். எண்ணங்களை வேறுவகைகளில் மடைமாற்றிக்கொள்ளும் ஈடுபாடுகள் அவர்களுக்கு கிடையாது. பேச்சியின் வாழ்வு அப்படியான ஒன்றுதான்.

வெள்ளாள கவுண்டர்களில்தான் விதவைகள் வெள்ளைப் புடவை கட்டிக்கொள்வார்கள் . நாங்கள் அப்படியில்லை என்று பேச்சி ஓரிடத்தில் சொல்வாள். வெள்ளைப் புடவை கட்டிய வெள்ளாளர் வீட்டுக் கிழவிகளை பார்த்து, வெள்ளைப்புடவை கட்டியிருப்பதால்தான் வெள்ளாளர்கள் என்கிறார்களோ என்று அப்போது நினைத்திருக்கிறேன். எனில், இந்தக் கவுண்டர்கள் வன்னியர்கள். வன்னியர்களும், கொங்கு வெள்ளாளர்களும் கலந்துவாழும் தர்மபுரி போன்ற பகுதிகளில் வித்தியாசம் தெரிவதற்காக, வன்னியக் கவுண்டர்கள், வெள்ளாளக் கவுண்டர்கள் என்றே சொல்லிக்கொள்வார்கள். சந்தை நாட்களில் இலம்பாடிகள் எனப்படுவோர் எங்கிருந்தோ வந்துபோவார்கள். பழங்குடியினர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டேயிருக்கும். வண்ணவண்ண ஆடைகளில் கண்ணாடிகள் வட்ட வட்டமாகப் பதிந்திருக்கும். விட்டல்ராவ் எழுதிய கதையில் ஊரில் மற்ற சாதியினர்கள் இருப்பதாக எழுதவில்லை. ஊர்த்தலைவர் முதல் உழைக்கும் அடிமட்டத் தொழிலாளர்வரை ஒரே சாதிக்காரர்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்க்கைப் படி நிலையை காட்டும் சரியான அளவுகோல்தான் இது. ஆனால், நான் பார்த்த கிராமத்தில் தலித்துகள் உண்டு. அவர்களே பொதுவாக விவசாயக்கூலிகள். ஊர் குடியானவர்களும் விவசாயக்கூலி வேலைகள் செய்வதுண்டு.

ஊருக்குள் ரோடு ரோலர் நுழைவதன் அதிர்வை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். சுகவனம் வாத்தியாரின் மேசை கடகட வென ஆடும். அதேபோல், இன்னும் சில காட்சிப்படுத்தல்களை, கதைக்குப் பொருத்தமாக குறியீடாக அமைத்த விதம் நுட்பமானதும் கலாபூர்வமானதுமாகும். பேச்சியை மிரட்டி வற்புறுத்தி சுப்புரு உடலுறவு கொள்ளும்போது, ஆடு கட்டுப்படுத்துவாரின்றி, அத்துமீறி சுதந்திரமாக பேச்சியின் வயலில் மேயத்தொடங்கும். வயதான ஊர்த்தலைவர் மாரியப்ப கவுண்டருக்கு தொடுப்பாக வாழும் பேச்சி, தன் விருப்பம்போல் பீர் முகம்மதுவோடு ஓடிப்போகவிருக்கும் சூழலில், பையப்பனால் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்ட பொன்வண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியைத் திறந்துகொண்டு வெளியேறும். இதுபோல் அழகான குறியீட்டுத்தன்மையிலான காட்சிப்படுத்தல்கள். தான் ஆசிரியராக வேலைபார்த்த நிலப்பகுதியை எழுத்தில் பதியவேண்டுமென்ற வேட்கையுடனே எழுதியிருக்கிறார். அதற்காக, மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்கி சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். சேலம் ஜில்லா என் ஜில்லா என்கிறார் விட்டல்ராவ். மகிழ்ச்சியாயிருந்தது.

நாவலைப் படித்துமுடித்துவிட்டு இணையத்தில் கொஞ்சம் தேடியபோதுதான் தெரிந்தது, போக்கிடம்  நாவல் என் கருத்துக்கிணங்கவே, சிறந்த நாவலாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்பது. ஆனால்,  நாவல் பற்றிய வாசிப்பு அனுபவமோ, மதிப்புரைகளோ எனக்குத் தென்படவில்லை. எனவேதான், நான் இங்கே எழுதி பதிவிடுகிறேன். அளவில் சிறியதான நாவல் என்பதால் விரைவில் படித்துவிடலாம். ஆனால் கனமான நாவல்.