Showing posts with label புதினம். Show all posts
Showing posts with label புதினம். Show all posts

Tuesday, July 5, 2016

வேள்வித்தீ-பிறன் இல் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
1

சற்று முன்னர்தான் ஒரு தகவல் படித்து முடித்தேன். ஆப்ரிக்க  நாடுகளின் கலாச்சாரத்தை பற்றிய பதிவு அது. அங்கு கற்பு போன்றதொரு விழுமியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதான சாரம் கொண்டது.மேலும் சில வெளி நாடுகளுக்கும் இது பொருந்தலாம். பசி, தாகம், காமம் போன்ற அடிப்படை உணர்வுகளாலும், உடலமைப்பாலும் மனிதர்கள் உலகம் முழுவதும் பொதுவானவர்களே. ஆனால், இந்தியாவில் கற்பு என்ற ஒன்று போற்றப்படுகின்றது.இது மனிதர்கள் செய்துகொண்ட ஒரு சமூக ஏற்பாடு. மாறாக, ஆப்ரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு கௌசலைக்கும், அவள் குழந்தைக்கும் இப்படியொரு பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது என்று  பார்க்கும்போது இந்தியாவின் கலாச்சாரம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா, சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறோமா என்று தோன்றுகிறது.


வேள்வித் தீ நாவலின் மையம் பிறன் இல் விழையாமைதான்.பிறன் இல் விழையாமை என்ற குறளதிகாரம் சொல்வது ஆணுக்கு மட்டும்  என்பதாகவே தோற்றம் தந்தாலும், (தன் கட்டுப்பாட்டோடு இருப்பது பேராண்மை என்று வள்ளுவர் வர்ணித்தாலும்,ன் விகுதி ,ள் விகுதி குறிப்புகள் இருந்தாலும்) இருபாலருக்கும் பொதுவாகவே சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

ஒரு சராசரி தனிமனிதனின் வாழ்வில் உறவுகளும், நட்பும், அரசியல் சமூகமும் தவிர்க்க இயலாதைவையாகவும்,எப்படியெப்படியெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்ற ஒரு பார்வையையும் நாவல் அளிக்கிறது.இவைகளோடு சேர்ந்து தமிழகத்தில் சௌராஷ்டிரர்கள் பற்றிய ஆவணப் பதிவாகவும் நாவல் விளங்குகிறது.

கௌசலையின் தற்கொலையோடு நாவல் நின்றிருக்கலாம் என்று தோன்றியது. அதன்பிறகும் கண்ணனும், ஹேமாவும் சேர்ந்து வாழ்வதாக   நீட்டித்திருப்பது தேவைதானா, யதார்த்தம் என்று ஏற்றுக்கொள்வதா? என்று யோசிக்கவைக்கிறது.


கள்ள உறவு தெரிந்ததும், கௌசலை ஒரு புதிய பெண்ணாக , ராட்சசியாக மாறுவது கண்ணனுக்கும், ஹேமாவுக்குமே நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிக்கிறது. அப்போது அவள் பேசும் குத்தல் பேச்சுக்களும், கண்ணனின் நிலையும் சொல்லப்பட்ட பகுதி நாவலில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

2.
எம்வி வெங்கட்ராம் அவர்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் படைப்பே வேள்வித்தீதான்.

நாவல் வாசித்துக்கொண்டிருந்தபோதும், வாசித்துமுடித்த பின்னும்கூட நாவலின் தலைப்பு குறிப்பு யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், நேரடியாக எங்கும் எம் வி வி விளக்கிவிடவில்லை. சுந்தரராமசாமியிடம் ஒரு ஆய்வு மாணவி வேள்வித் தீ பற்றி எடுத்த நேர்காணல் ஒன்றும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மாண்வி: ‘வேள்வித்தீ என்ற தலைப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சுரா: மொத்த வாழ்க்கை பிரச்னைகள்,சிக்கல்கள்,மேடுபள்ளங்கள் இவற்றை பற்றிய ஒரு படிவமாக வேள்வித் தீ என்ற படிமத்தை அவர் பயன்படுத்துகிறார்.வாழ்க்கையே ஒரு வேள்விதான்.அதை வேள்வியாகக் கொள்ளாமல்,பதற்றம் அடையாமல் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையைச் சார்ந்தவர் அவர்.ஆனால் நடைமுறையில் நாம் உணர்வுபூர்வமாகவும்,ஆபாசங்களுக்கு உட்படும் கோபதாபங்களுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்வதால் பல்வேறுபட்ட சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறோம்.அந்த அளவில் அது ஒரு தீ போன்றதுதான்.மனிதனை வந்து பொசுக்கக்கூடிய ஒரு அம்சமும் அதில் இருக்கிறது என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நல்ல படிமத்தை,அவருடைய பார்வை சார்ந்த ஒரு படிமத்தை, பயன்படுத்தியிருக்கிறார்

இந்த விளக்கம் எனக்கு ஒரு பிடி கிடைத்தாற்போன்றுதான் இருந்தது. ஆனால், கொழுகொம்பின் நிறைவில்லை. என்னுடைய பார்வையில் கௌசலைதான் வேள்வித்தீ. கண்ணனும், ஹேமாவும் சாக்கடை. கௌசலை தீ. அதிலும் புனிதமான தீ. சாக்கடைக்கு எதிரான படிமம். சாக்கடையோடு சேர்ந்தால் அணைந்துவிடும்.

சாக்கடையோடு சாக்கடை சேர்வதாகத்தான் ஹேமா, கண்ணன் உறவை அவர் வார்த்தைகளில் எழுதுகிறார் எம்விவி.

’’ஒரு தப்புமில்லே.உனக்கும் எனக்கும் இதுதான் சரி.அப்படிச் சொல்றதும் தப்பு. நமக்கு இதுதான் வழி. சாக்கடையும் நாத்தமும்தான் நமக்குப் பிடிக்கும்.கௌசலைக்குச் சாக்கடை சாக்கடைதான். நாத்தம்  நாத்தாம்தான்.அவளுக்கு அசிங்கத்தைச் சகிக்க முடியல்லே.போயிட்டா’’ என்று ஹேமாவிடம் கண்ணன் சொல்கிறான்.

கௌசலையை தாண்டி ஹேமாவைத் தொட்டதால் கண்ண்ன் சாக்கடை. அதுமட்டுமல்ல கௌசலை தொட்ட ஒரு ஆணான கண்ணன்தான் ஹேமாவுக்கு. கற்பிழந்தவன். வேறுசிலர் தொட்ட ஹேமாதான் கண்ணனுக்கு.ஹேமாவுக்கு வேறுசில தொடர்புகள் முன்பாகவே இருந்ததாக குறிப்புகள் இடம்பெறுகிறது. கண்ணனும் ஹேமாவும் சேரும்போதுகூட இருவரும் கற்றவர்கள்என்கிறார்.

கௌசலை நெருப்பு. நெருப்பாகவே சாக்கடையும், நாத்தமும் தொடவிடாமலேயே தன்னை அழித்துக்கொண்ட புனித நெருப்பு.
இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைமிகு மாதிரி அவள். சமூகத்திற்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக  அற உலகம் வலியுறுத்துகிற ஒரு கதாபாத்திரம்.
வேள்வித் தீ ( நாவல்)
எம்.வி.வெங்கட்ராம்
காலச்சுவடு பதிப்பகம் (4ஆம் பதிப்பு)
ரூ.150

Tuesday, November 26, 2013

வளர்ச்சியின் வீழ்ச்சி




போக்கிடம் நாவலின் கதைச்சுருக்கம் இதுதான்….
சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ள டேனிஷ்பேட்டை ( புனைப்பெயர்தான்) கிராமத்தில், மாக்னஸைட் கிடைப்பதால், அந்த ஊரையே அரசு கையகப்படுத்திக்கொள்கிறது. ஊர் மக்களுக்கு இழப்பீடாக பணமும், வேறு ஊரில் நிலமும் அளிக்கிறது. சிற்றூர்  நகரியமாக மாறுகிறது. அதன் தாக்கங்களை பேசுகிறது  நாவல்.
Unique: Writer Vittal Rao with his award –winning book.Photo:K. Gopinathan

விட்டல்ராவின் புனைவு எழுத்தில் நான் படிக்கும் முதல் நூல் இதுதான். எந்தவித அறிமுகமும், எதிர்பார்ப்புமில்லாமல் படித்தேன். இந்தளவுக்கு என்னைக் கவரும் என்று எதிர்பார்க்கவில்லை. 1977 ல் முதற்பதிப்பு வந்திருக்கிறது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் 2013 ல் படிக்கிறேன். ஆனாலும், சமகால வாசிப்புச் சுவையோடு உள்ளது. இந்த நாவலின் சிறப்பாக முதன்மையாக நான் வலியுறுத்துவது, அது கையாண்டிருக்கும் நிலமும், மனிதர்களும்தான். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் இலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத பகுதி. இன்றைக்கு ஆதவன்தீட்சண்யா, மு,ஹரிகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இன்றளவும் இடம்பெறவில்லை எனலாம். அம் மக்களின் வட்டார வழக்கு சொல்லாடல்கள் இலக்கியத்திலோ, சினிமாவிலோ பதிவாகவில்லை.

எனக்குத் தெரிந்த  கிராமம் என்றால் அது ஒன்றே ஒன்றுதான். என் தாய்வழி உறவுகள் இன்றும் வசித்துவரும் கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையிலும், தர்மபுரி மாவட்டத்தின் எல்லையிலும் அமைந்த ஒரு கிராமம். அங்கும்கூட நான் நிறைய காலம் வாழ்ந்ததில்லை. ஒரு விளையாட்டுப் பையனாக, என் பதின்வயதில் பள்ளி விடுமுறைகளில் சென்று தங்கி முழு நாட்களையும் கழித்திருக்கிறேன்.  ஆண்டின் இரண்டு பருவங்களில் வாழ்ந்திருக்கிறேன். அவை, கோடைக்காலம் மற்றும் அரையாண்டு பரீட்சை விடுமுறை வரும் காலம். அரையாண்டு விடுமுறையின்போது கிணறுகள் நிரம்பிவழியும். கோடையில் தண்ணீர் குறைவாகவே இருக்கும். அங்குதான் நீச்சல் கற்றேன். அந்த ஊரின் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் முகம் அறிவேன். பெயர்கள் தெரியும். சிறுவர்கள் எல்லோரும் நண்பர்களாயிருந்தனர். அந்த வயதில் நான் பார்த்த ரஜினி, கமல் படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் வரிக்குவரி இன்றளவும் எவ்வளவு ஆழமாக நினைவில் இருக்கிறதோ அதேபோல் அந்த வாழ்க்கையும் நினைவில் இருக்கிறது. பேசிப்பேசி , நினைவுகூர்ந்து ஆழமாகப் பதிந்துபோனவை அவை. பருவராகம் படம் ரிலீசான காலகட்டத்தில், அந்தப் படத்தை வீடியோவில் கருப்பு வெள்ளை டிவி யில் அங்கேதான் பார்த்தேன். சந்தை, நுங்குவண்டி, இரவில் தெருக்கூத்து, பொம்மலாட்டம், கிராமபோன் ஆகியவை அப்போதுதான் அறிமுகம். பகல்தூக்கமும் அங்கேதான் அறிமுகம். எதுவும் வேலையில்லாமல் ஒருமுறை பகலில் தூங்கி, எழுந்து பொழுது விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு பல்துலக்கும்போது பரிகாசத்திற்கு ஆளானேன். தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியேவந்த மானின் கறியை மனதில் கழிவிரக்கத்தோடு ஓரிரு துண்டுகள் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். சிறுவர்கள்கூட சுதந்திரமாக கெட்டக்கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள். நானும் உற்சாகமாகி பேசுவேன். அந்தச் சிறுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியவர்கள். படிப்பில் மட்டும்தான் என்னைவிட அல்லது நகரத்து மனிதர்களை விட பின் தங்கியிருப்பார்கள்.ஆனால், பெரிய மனிதர்களுக்கு இணையாக முதிர்ச்சியும், ஈடுபாடுகளும் கொண்டவர்கள். கட்டற்றவர்கள். என்னைவிட நல்ல பணப்புழக்கம் கொண்டவர்கள். வரப்பில் சுமையோடு சைக்கிள் ஓட்டும் தீரர்கள்.  நான் அங்கே பார்த்த துவக்கப் பள்ளிக்கூடத்தில் பாடம் நடந்துகொண்டிருக்கும்.பிள்ளைகள் தன்னிசையாக எழுந்து வெளியில் ஓடுவார்கள். திரும்ப வருவார்கள்.

அப்படி நான் வாழ்ந்து பார்த்த என் கிராமத்து வாழ்க்கை அனுபவங்களை ஒவ்வொரு நாளாக, அனுபவங்களாக நினைவுகளைக் கிளறும்  வகையில் அமைந்திருக்கிறது விட்டல்ராவின் எழுத்து. மீண்டும் அதே ஊருக்கு  நான் சென்றால் மட்டுமே அந்தளவுக்கு நினைவுகள் பெருக்கெடுக்கும். ஏதாவது ஒரு கிராமத்திலோ அல்லது அதே கிராமத்திலோ மீண்டும் இப்போது கொஞ்ச நாட்கள் வாழ்ந்துபார்க்க வேண்டும் என்ற ஆசை குன்றாமலிருக்கிறது. ஆனால், நான் மீண்டும் அங்கே செல்வதையோ, சென்று தங்கி வாழ்வதையோ இப்போது விரும்பவில்லை. ஏனெனில், பொதுவாக வெள்ளந்தியாக கருதப்படும் கிராமத்தார்கள் எல்லோருமே வெள்ளந்திகள் இல்லை. எனக்கு இப்போது அவர்களில் பலரும் வெறுப்புக்கு ஆளானவர்கள். வேறு ஏதாவது கிராமங்களில் வாய்ப்பு கிடைக்குபோது பார்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

நாவலில் வரும் பையப்பன் காலத்தையும்விட வயதில் சிறியவன் என்பதால், நான் பார்த்த கிராமம் , விட்டல்ராவ் எழுதியிருக்கும் காலத்திற்கும் பிந்தைய கிராமம். நாவலில் வரும் காலம் ,  ரேடியோ அறிமுகமாகும் காலம்  . நான் பார்த்தது டேப்ரெக்கார்டர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்ட காலம்.

வெறும் தகவல்களாக அல்லாமல் கதையோடு சேர்ந்த காட்சிகளாக காட்டையும், சந்தையையும் , வயல்களையும் கலாபூர்வமாக மாற்றி சுற்றிக் காட்டுகிறார் விட்டல்ராவ். எவத்த, இவத்த, பொறைக்கி, எருமுட்டை போன்ற சொற்கள் நான் கேட்டு அறிந்தவை. பொறைக்கி என்பதற்கு இரவு என்று குறிப்பு கொடுத்திருக்கிறார். பிறகு என்பதே பொறைக்கி என்று சொல்லப்பட்டது என்பது என் அனுமானம். ஆனால், பெரும்பாலும் பகல் வேளைகளில் மட்டுமே சொல்லப்படும் பொறைக்கிக்கு , பிறகான வேளையான இரவு என்ற அர்த்தமும் வந்துவிடும். புங்க மரத்தைப் பற்றி சொல்லும்போது புன்னை என்றும் சொல்கிறார். நானறிந்தவரையில் இரண்டும் வெவ்வெறு மரங்கள்.

சில நூறு குடும்பங்கள் கொண்ட கிராமம். அந்தக் குடும்பங்கள் அனைவருமே பொதுவாக உறவினர்களாகவே இருப்பார்கள். உறவினர்களாகாத,  மற்ற சாதியினரும் தொழில் தேவைகளின் அடிப்படையில் கொஞ்சம் பேர் இருப்பார்கள். ஊரைத்தாண்டினால், விரிந்துகிடக்கும் வயல்கள் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் உரியதாக நீண்டுகொண்டே போகும். சிலர் வயல்வெளிகளிலேயே வீடு கட்டிக்கொண்டு  தங்கிவிடுவது உண்டு.கொல்லி அல்லது கொல்லை என்பார்கள். என்னைவிட வயதில் மூத்தவர்களான கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்களுடனும் சுற்றியிருக்கிறேன். அப்போதுதான் நான் நிறையக் கெட்டுப்போனேன் அல்லது கற்றுக்கொண்டேன். காமம் பொதுவாக, கட்டற்றதாகவே இருக்கும். அதற்கான வாய்ப்புகள் நகரச்சூழலைக் காட்டிலும் கிராமங்களில் மிக அதிகம். எண்ணங்களை வேறுவகைகளில் மடைமாற்றிக்கொள்ளும் ஈடுபாடுகள் அவர்களுக்கு கிடையாது. பேச்சியின் வாழ்வு அப்படியான ஒன்றுதான்.

வெள்ளாள கவுண்டர்களில்தான் விதவைகள் வெள்ளைப் புடவை கட்டிக்கொள்வார்கள் . நாங்கள் அப்படியில்லை என்று பேச்சி ஓரிடத்தில் சொல்வாள். வெள்ளைப் புடவை கட்டிய வெள்ளாளர் வீட்டுக் கிழவிகளை பார்த்து, வெள்ளைப்புடவை கட்டியிருப்பதால்தான் வெள்ளாளர்கள் என்கிறார்களோ என்று அப்போது நினைத்திருக்கிறேன். எனில், இந்தக் கவுண்டர்கள் வன்னியர்கள். வன்னியர்களும், கொங்கு வெள்ளாளர்களும் கலந்துவாழும் தர்மபுரி போன்ற பகுதிகளில் வித்தியாசம் தெரிவதற்காக, வன்னியக் கவுண்டர்கள், வெள்ளாளக் கவுண்டர்கள் என்றே சொல்லிக்கொள்வார்கள். சந்தை நாட்களில் இலம்பாடிகள் எனப்படுவோர் எங்கிருந்தோ வந்துபோவார்கள். பழங்குடியினர்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குரைத்துக்கொண்டேயிருக்கும். வண்ணவண்ண ஆடைகளில் கண்ணாடிகள் வட்ட வட்டமாகப் பதிந்திருக்கும். விட்டல்ராவ் எழுதிய கதையில் ஊரில் மற்ற சாதியினர்கள் இருப்பதாக எழுதவில்லை. ஊர்த்தலைவர் முதல் உழைக்கும் அடிமட்டத் தொழிலாளர்வரை ஒரே சாதிக்காரர்கள் என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்க்கைப் படி நிலையை காட்டும் சரியான அளவுகோல்தான் இது. ஆனால், நான் பார்த்த கிராமத்தில் தலித்துகள் உண்டு. அவர்களே பொதுவாக விவசாயக்கூலிகள். ஊர் குடியானவர்களும் விவசாயக்கூலி வேலைகள் செய்வதுண்டு.

ஊருக்குள் ரோடு ரோலர் நுழைவதன் அதிர்வை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். சுகவனம் வாத்தியாரின் மேசை கடகட வென ஆடும். அதேபோல், இன்னும் சில காட்சிப்படுத்தல்களை, கதைக்குப் பொருத்தமாக குறியீடாக அமைத்த விதம் நுட்பமானதும் கலாபூர்வமானதுமாகும். பேச்சியை மிரட்டி வற்புறுத்தி சுப்புரு உடலுறவு கொள்ளும்போது, ஆடு கட்டுப்படுத்துவாரின்றி, அத்துமீறி சுதந்திரமாக பேச்சியின் வயலில் மேயத்தொடங்கும். வயதான ஊர்த்தலைவர் மாரியப்ப கவுண்டருக்கு தொடுப்பாக வாழும் பேச்சி, தன் விருப்பம்போல் பீர் முகம்மதுவோடு ஓடிப்போகவிருக்கும் சூழலில், பையப்பனால் பெட்டிக்குள் சிறைப்படுத்தப்பட்ட பொன்வண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியைத் திறந்துகொண்டு வெளியேறும். இதுபோல் அழகான குறியீட்டுத்தன்மையிலான காட்சிப்படுத்தல்கள். தான் ஆசிரியராக வேலைபார்த்த நிலப்பகுதியை எழுத்தில் பதியவேண்டுமென்ற வேட்கையுடனே எழுதியிருக்கிறார். அதற்காக, மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்று தங்கி சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். சேலம் ஜில்லா என் ஜில்லா என்கிறார் விட்டல்ராவ். மகிழ்ச்சியாயிருந்தது.

நாவலைப் படித்துமுடித்துவிட்டு இணையத்தில் கொஞ்சம் தேடியபோதுதான் தெரிந்தது, போக்கிடம்  நாவல் என் கருத்துக்கிணங்கவே, சிறந்த நாவலாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்பது. ஆனால்,  நாவல் பற்றிய வாசிப்பு அனுபவமோ, மதிப்புரைகளோ எனக்குத் தென்படவில்லை. எனவேதான், நான் இங்கே எழுதி பதிவிடுகிறேன். அளவில் சிறியதான நாவல் என்பதால் விரைவில் படித்துவிடலாம். ஆனால் கனமான நாவல்.




Sunday, February 20, 2011

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலுக்கான விமர்சனம். - ச .முத்துவேல்


24 x 7 மனிதர்களின் இயலா நிலை 


அனைவருக்கும் வணக்கம்,

துப்பறியும் நாவல்கள், தோராயமாக 50 பாலகுமாரன் நாவல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்

கண்மணி குணசேகரன் நவீனத் தமிழிலக்கிய உலகம் நன்கறிந்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி. நடு நாட்டைக் களமாகவும், நடு நாட்டு வட்டாரமொழியிலும் எழுதும் இயல்புவாதப் படைப்பாளி. அடிப்படையில் விவசாயி. இதுவரையிலும் அவர் எழுதியுள்ளவற்றில் ஒரு விவசாயியே தென்படுகிறார். ஆனால், அவர் தொழில்முறையாக கம்மியர். அதாவது மோட்டார் மெக்கானிக். அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றும் தொழிலாளி. நான்கூட நினைத்ததுண்டு. வேளாண் சார்ந்தே எழுதும் கண்மணி, ஏன் தன் துறைசார்ந்து எழுதுவதில்லையென்று? நானறிந்தவகையில் வெள்ளெருக்குத் தொகுப்பில் இடம்பெற்ற கொடிபாதை சிறுகதை மட்டுமே சற்று போக்குவரத்துத் துறைக்கு நெருங்கிவருவதாக நினைவுகூர்கிறேன். இவ்வாறான சூழலில் தன் தொழில், துறை சார்ந்து எழுதியிருக்கும் நாவல்தான் நெடுஞ்சாலை. போக்குவரத்துத் துறை, ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் ஆகியவர்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது.

துறை சார்ந்த அனுபவங்களை படைப்புகளாக்குவதன்மூலம் அறியப்படாத பக்கங்களை நுட்பமாகவும், வாழ்வனுபவமாகவும் உணரமுடிகிறது. ஓர் இன்னலின் அல்லது அவலத்தின் தீவிரத்தை தொடர்பற்றவர்களும் நன்கு உணரச்செய்யும் வகையில் உணர்வுபூர்வமாக சம்பவங்களாகவும், தகவல்களாகவும், வாழ்வனுபவங்களாகவும் நீட்டிக்கச் செய்து வாசிக்கக் கிடைக்கும்போது அத்தீவிரத்தை நன்கு உணரமுடிகிறது. போக்குவரத்துத் துறை சார்ந்த இந்த நாவல் அந்தத் துறையைப் பற்றியும், அங்கு பணியாற்றும் மனிதர்களின் கொண்டாட்டங்கள், அவலங்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கிறது. கண்மணி இந்த நாவலின் மூலம் சொல்லவிரும்புவதும் இவைகளாகத்தான் இருக்கமுடியும். பணிமனை, தொழிற்சாலை சார்ந்தவை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் விரிவாகப் பதிவாகியிருக்கிறது. அந்தவகையில் இதைப் புதுமையான களம் என்று எண்ணுகிறேன்.இலக்கியமும் வாழ்வாதாரமும் ஒன்றாகவே அமைந்தவர்கள், அல்லது நெருக்கமாக அமையப் பெற்றவர்களைக் காட்டிலும், இயந்திரங்களோடு வாழும் அடிப்படையான தொழிலாளர்கள் இலக்கியத்தில் ஈடுபடுவது ஒப்பீட்டளவில் கூடுதல் பாராட்டுக்குரியதுதான். அந்தவகையில் கண்மணி குணசேகரன், மு.ஹரிகிருஷ்ணன் போன்றவர்களின்மீது வியப்பும் , மதிப்பும் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலை நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பணிமனை, தொழிற்சாலை , ஆட்டோமொபைல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட ஒரு தொழிலாளியாகவே நானும் இருப்பதால் இந்த நாவலில் எனக்குப் பெரிய அளவில் புதியதொரு வாழ்பனுபவம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். இது நிச்சயம் என்வரையிலானது.

நான் இங்கு கதையைச் சொல்லிவிடப்போவதில்லை. கதையென்று சொன்னால் ஓரிரு வரிகளில் சொல்லிவிடமுடியும்.எனவே, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலின் மூலம் எழுப்பப்பட்டுள்ள சமூக விமர்சனங்கள், நுட்பங்கள் ஆகியவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

ESSENTIAL SERVICE எனப்படும் இன்றி அமையாதவைகளான மின்சாரம், போக்குவரத்து, பால், காவல், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கடிகாரச் சுற்றுப்பணி எனப்படும் round the clock shift duty ல் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவேண்டியவர்கள். பரபரப்பாக ஓடி சூடுபறக்க பணிமனைக்கு வந்து நிற்கும் வண்டியில் அந்தச் சூட்டிலும் பராமரிப்புப் பணீசெய்யவேண்டியவர்கள் இவர்கள். சாணி, மலம் ஆகியவை ஒட்டியிருக்கும் ஈரம் காயாத பகுதிகளைத் தொட்டு வேலை செய்யவேண்டிவர்கள்.பயணிகள் எடுக்கும் வாந்தியைக் கழுவித்தள்ள வேண்டிய வர்கள்..இவர்களூக்கு பண்டிகை நாட்கள், ஞாயிறு விடுமுறை, இரவுத்தூக்கம், நேரத்திற்கு உணவு என்பதெல்லாம் மற்றவர்களைப் போன்று அமையப்பெறாதவர்கள். எல்லோரும் உறங்கப்போகையில் இவன் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பான். செய்தித்தாள் போடுபவனுக்கு விடிகாலைத்தூக்கம் என்பது வெறும் கனவு. அரிதாகக் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் உடலென்னும் இயந்திரம் வழக்கம்போல் விழித்துக்கொண்டுவிடும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க ஓட்டுனர் விழிப்புணர்வோடு வண்டியோட்டிக்கொண்டிருப்பார். இதுபோன்ற, இன்றி அமையாத பணிபுரிபவர்களை அரசாங்கம் எப்படி நடத்துகின்றது? என்ன சிறப்புச் சலுகைகள், மரியாதைகள் அளிக்கிறது என்று பார்த்தோமானால் கசப்பே மிஞ்சும். தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பையளிக்க வேண்டிய அரசாங்கம் அவர்களைத் தற்காலிகத் தொழிலாளர்களாக நியமித்து, அத்துக்கூலிகளாக பயன்படுத்தி சுரண்டல் செய்கிறது. இந்த நிலையிலேயே பணி நாள் முழுதும் கழித்துவிட்டு ஓய்வுபெறவேண்டியவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சுரண்டல் செய்வதோடல்லாமல் பணியில் நிகழக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் தண்டனையாக இவர்களின் கூலியையேப் பறித்துக்கொள்ளும் அவல நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.டீசல் சிக்கனம் செய்யாதவர்களிடமிருந்து அதற்குரிய தொகையாக தண்டனைப்பணம் கூலியில், சம்பளத்தில் பிடிக்கப்படுவது போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.

இந்த நாவலின் மையமாக இருப்பது பேருந்தா? ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் எனப்படும் தொழிலாலிகளா? போக்குவரத்துத் துறையா? தனியார் வாகனங்களா? இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் நெடுஞ்சாலைதான். பொருத்தமான தலைப்பை இட்டிருக்கிறார் ஆசிரியர்

380 பக்கங்களைக் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். முதல் 300 பக்கங்களை வீடு என்றும், எஞ்சியவற்றை நாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இவ்விரண்டு பாகங்களும் தனித்து நின்றாலும் முழுமையுடையதாகக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. நேரடியாக இரண்டாம் பாகத்தைப் படித்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. முதல் பாகம் கதையில் வரும் மூன்று முதன்மையான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, அவர்களோடு ஆழ்ந்த நெருக்கத்தை அளிக்கிறது. இதேபோன்று முதல் பாகத்தில் வரும் அத்தியாயங்கள் 15 மற்றும் 16 ஆகியவை மட்டுமேகூட தனித்தனியாக நின்று இரண்டு சிறந்த சிறுகதைகளாகவும் விளங்குகிறது. முதல் பாகம் அழுத்தமானதாகவும் ,உணர்வுபூர்வமாகவும் அமைந்துள்ளது.

நாவல் என்பது விரிவான களம் கொண்டது. எவ்வளவு சொன்னாலும் தீராத விரிவும், இன்னும் சொல்ல நிறைய இருக்கும் அளவிற்கும் அனுபவங்களைக் கோருவது. இன்னும் விரிவாக கண்மணி அவர்களால் எழுதிவிடமுடியும். ஆனால் அந்த விரிவு நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் நெருக்கமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும். நெடுஞ்சாலையில் ஆசிரியர் கையாண்டுள்ள சில பகுதிகள் நாவலின் விரிவுக்கும், மையத்திற்கும் சற்று இடைவெளி கொண்டுள்ளது. உதாரணமாக கம்மியர் பணிக்கு எழுத்துத் தேர்வுக்குச் செல்பவனிடம் வைக்கப்படும் கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள கேள்விகளையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பது என்பன போன்று சிலவற்றைச் சொல்லலாம். கதாபத்திரங்கள் நிகழ்த்தும் அவர்களுக்கிடையிலான உரையாடல்களின் வழியாக துணைக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது, நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மாறாக இவற்றிற்குப் பதிலாக, essential service செய்யக்கூடியவர்களின் நிலையை, இன்னல்களை , பணிச்சூழலில் மனிதர்களுக்குள் விளங்கும் அரசியலை இன்னும் ஆழமாகவும் , நுட்பமாகவும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நன்றாகவே இதைச் செய்திருக்கிறார் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.அதேசமயம் ஆசிரியர் நிகழ்த்தும் நுட்பம் கவனத்தை ஈர்க்கிறது. உதாரணமாக சென்னையிலிருந்து வயர்லெஸ் வழியாக தகவல் சொல்லப்படுவது முதலில் திண்டிவனத்திலுள்ள பணிமனைக்குத் தெரிவிக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து தகவல் போக வேண்டிய இடமான விருத்தாச்சலத்திற்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் பயன்படுத்தக்கூடிய VHF SET வயர்லெஸ்ஸின் சக்தியின் நுட்பம் இயல்பாக பதிவாகியிருக்கிறது. இதை ஆசிரியர் உணர்ந்து பதிவு செய்திருந்தாரோ,இல்லையா என்று தெரியவில்லை.

இந்நாவல் நடைபெறும் காலக்கட்டம், நாவல் வெளியாகியிருக்கும் 2010லிருந்து குறைந்தது 10 ஆண்டுகள் பின்னோக்கிய காலக்கட்டம் என்று அறியமுடிகிறது. எனில் இந்த நாவலை ஆசிரியர் எப்போது எழுதத்துவங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்பேசிகள் இல்லாத காலக்கட்டம். தீரன், பெரியார், நேசமணி JJTC என்று போக்குவரத்து வட்டாரங்கள் நிலவிய காலக்கட்டம். ஹீரா, தேவயானி, ரம்பா ஆகியோர்களுக்கு நட்சத்திரத்தகுதி உச்சத்திலிருந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்த காலக்கட்டம். இந்த நாவலில் கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் நையாண்டி செய்யும் கட்டங்கள் பதிவாகியிருக்கிறது.பொதுவாகவே இலக்கியம் அவலங்களை, சோகங்களைப் பற்றியே பேசுபவை. கொண்டாட்டம், நகைச்சுவை என்பவை திரைப்படங்களில் பெற்றிருக்கும் வரவேற்பைப்போல் இலக்கியத்தில் பெறவில்லை. நெடுஞ்சாலை நாவல் முழுக்கவே நகைச்சுவை உணர்வு மிளிர எழுதப்பட்டுள்ளது. மேலோட்டமாக சிரிப்பை வரவைத்தாலும், அடியாழத்தில் மிஞ்சும் சோகமே நம் மனதில் எஞ்சி நிற்கும். அந்தவகையில்தான் ஆசிரியரும் எழுதியிருக்கிறார்.மேலும் ஆளுங்கட்சியினரின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், சேவற்பண்ணை போன்று ஆண்களீன் ஓய்வறையில் சுதந்திரமாக ஒருவர் நிர்வாணமாகக் குளித்துவிட்டு ஆடை மாற்றுவது, தன் கணவன் ஓட்டுனராக இயங்கும் வேளையில் அதே வண்டியில் பயணம் செய்யத்துடிக்கும் மனைவி போன்ற பல துல்லியமான பதிவுகள். முதன்மையான கதாபாத்திரங்களான மூவரும் சேர்ந்து மதுவிடுதியில் மதுவருந்தும் கட்டம் மிகுந்த நகைச்சுவையை அளிக்கிறவகையில் அமைந்துள்ளதைப்போல் நாவல் முழுக்கவே அமைந்திருக்கிறது. நவீன இலக்கியம் என்கிற பெயரில் காமம் வெளிப்படும் தருணங்களை ,உடலுறவுக் காட்சிகளை, விலாவாரியாக எழுதித் தள்ளாமல் ,ஆசிரியர் நாசூக்காகவும், படிமங்களாகவும் எப்போதும் எழுதுபவர். அய்யனாருக்கும், சித்தாளுக்கும் இடையிலான காமம் கலந்த காதல் வாசகர்களின் நெஞ்சில் கனமாக உறைந்து நிற்கக் கூடியது.

அஞ்சலை நாவலைவிட அதிகப் பக்கங்கள் கொண்டிருந்தாலும் அஞ்சலையளவுக்கு கனம் இல்லையென்று கருதுகிறேன்.

(08-05-10 அன்று சொற்கப்பல் விமர்சனதளம் மற்றும் தக்கைச் சிற்றிதழ் ஆகியவை இணைந்து நடத்திய நாவல் விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை) 
நன்றி‍ -தடாகம்

Saturday, June 26, 2010

புதிய வெளிகளைத் தேடி..- சு.தமிழ்ச்செல்வி


அண்மையில் நான் படித்தவற்றுள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அனுபவமாய், மிகவும் குறிப்பிடத்தகுந்ததாய் அமைந்த நாவல் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய ’மாணிக்கம்’. இதற்குமுன் இவரது ஒரேயொரு சிறுகதையை மட்டும் படித்திருந்தேன்.


தனது முதல் படைப்பாகவே ஒரு நாவலை எழுதியிருப்பது, அந்த நாவலும் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது ஆகியவற்றினால் ஏற்படும் பிரமிப்பு சு.தமிழ்ச்செல்வி அவர்களின் மாணிக்கம் நாவலைப் படித்தபோதும் எழுந்தது. எந்த மேதமைத்தனத்தையும் வெளிக்காட்டாமல் எதார்த்தமான அசலான எழுத்து இவருடையது.



இலக்கியத்தில் அறியப்படாத, பதிவாகாத பகுதியான பழைய கீழைத்தஞ்சை பகுதியான , திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கற்பக நாதர் குளத்தைச் சார்ந்தவர் இவர். இப்பகுதி கடலோர கிராம மக்களின் வாழ்வை அவர்களது வட்டார மொழியிலேயே பதிவு செய்து ஒரு புதிய வெளியை தமிழுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார்.


மீன் பிடிக்க தெற்கேச் செல்லும் மனிதர்களின் கதை. தமிழகம் முழுவதற்கும் கிழக்கில்தானே கடல்? என்கின்ற வினாவோடு வரைபடத்தில் தேடியதில், மாணிக்கம் நாவலில் வரும் கடலோர கிராமங்கள் நாகப்பட்டணம் பகுதியில் மூக்குப் போன்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் அமைந்துள்ளவை. அங்கிருப்பவர்களுக்கு தெற்கில்தான் கடல். இந்த நாவலில் வருபவர்களும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களல்ல. விவசாயம் பொய்த்துப்போய், வறுமையின் காரணமாக மீன் பிடிக்க நேர்ந்தவர்கள். முத்தரையர் சமூகத்தினர் என்பதாக அறியமுடிகிறது. தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு நான் அறிந்திராத ஒரு பகுதியை, நிலத்தை, மக்களை , அவர்களின் வாழ்க்கைமுறையை, சம்பிரதாயங்களை, வட்டாரமொழியை, வாழ்வனுபமாகவே பெறுகிற வகையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.


விரிவான கதைசொல்லலும், தகவல்களின் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது நாவல்.

ஒரு படைப்புக்கு செவ்வியல் தகுதி எவ்வாறு கிடைக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், செவ்விலக்கியம் என்ற அடையாளப்படுத்தப்பட்ட, நான் படித்திருக்கிற சில நாவல்களோடு ஒப்பிட்டுக் கொள்கையில் மாணிக்கம் நாவலை செவ்வியல் என்றே சொல்வேன்.
அவருடைய படைப்புகளைப் பற்றி அவரே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுவது நான் சொல்வதைவிட பலமடங்கு சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் அக நாழிகை 2 வது இதழில் வெளியான கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையை அளித்துதவிய அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

புதிய வெளிகளைத் தேடி..
சு.தமிழ்ச் செல்வி

தமிழ் படைப்புகளில் புதி களங்களைத் தேடும் முயற்சியில் உத்வேகத்தை ஏற்படுத்திய போக்குகள் இந்திய/தமிழக அளவிலான அரசியல், கலாச்சார நிகழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அடையாளம் காண இயலும், அம்பேத்கர் மற்றும் பெரியார் எனும் இரு பெரும் அரசியல்/சமூக சக்திகளின் இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களுக்கு வழிவகுத்தன என்பதை நாம் மறந்து விட முடியாது. இந்தியச் சமுதாயத்தில் கல்வி பெறும் வாய்ப்பு சாதி மற்றும் பால் அடிப்படையில் மறுக்கப்பட்ட நிலையில் தங்களது அயராத போராட்டங்களின் மூலம் அந்நிலையை மாற்றி அமைத்தவர்கள் இவர்கள்.

இவ்விரு ஆளுமைகளின் நூற்றாண்டு விழாக்களும் இந்திய அளவில், பண்பாட்டுத் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நிகழ்த்தின. கல்லி சனநாயகப்படுத்தப்பட்டதின் வாயிலாகவும், சமூக நீதி அடிப்படையில் வழங்கப்பட்டதன் வாயிலாகவும், நிகழ்ந்த மாற்றம் இது. குறிப்பாக, தலித்துகள்,பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்கள் இவர்களது கலாச்சார வழிபாடுகள் ஒரு பெருவெள்ளமாகப் பொங்கி எழுகின்ற நிலைமை நாம் காண்கிறோம்.

இந்தியா எனும் பெரும் தேசியம் உள்ளடக்கியுள்ள பல்வேறு தேசிய இனங்களிலும் உள்ள வெளிச்சத்துக்கு வராத பல இனக்குழுக்களிலிருந்து இன்று பலர் எழுத வருகின்ற அற்புதம் நேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் என்னதான் ஒற்றைக் கலாச்சாரத்தை கட்ட முனைந்தாலும் அவ்வாதிக்கத் தளைகளைத் தகர்த்து உயிர்த்துடிப்புள்ள தன்னுணர்வு பெற்ற இச்சமூகக் குழுக்களின் உயிரோட்டமுள்ள இயக்கம் தம்முடைய இருப்பை, தம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்தவே முனையும் என்பது இலக்கியக் களத்தில் இன்று நிரூபணம் ஆகியுள்ளது.

சாதிய மேலாண்மை மற்றும் ஆணாதிக்கச் சொல்லாடல்கள் நிரம்பிய கதையாடல் பரபரப்பாக விளங்கிய தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகள் இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த படைப்பாளிகளால் விரிவு படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம், இப்படி தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கு வலுச்சேர்த்த வகையில் பெண் எழுத்துக்கள் முக்கியமானவை. கதையாடும் உரிமையை இன்று பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை சமூகத்தினர் கைப்பற்றியிருப்பது நம் செந்தமிழ்த் தமிழுக்கு மேலும் அழகும், வலிமையும் சேர்க்கக்கூடியது.

தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில இனக்குழுச் சங்கங்களின், பண்பாட்டு அரசியல் வெளியை, அச்சமூகத்து உழைக்கும் பெண்களின் அகவெளியை, உடல் உழைப்பைக் கோரி நிற்கும் நில வெளியை, இக்குழுவில் புழங்கும் மொழி வெளியை எனது புதினங்களின் வழி கவனப்படுத்தியிருப்பதை குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதுகிறேன்.

- 2


மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை கண்ணகி என இதுவரை ஆறு புதினங்களை தமிழ்ப்புனைவிலக்கியத்திற்கு அளித்துள்ளேன். இவற்றில் மாணிக்கம், அளம், கற்றாழை ஆகிய மூன்று புதினங்களும் தமிழக இலக்கிய/அரசியல் வெளியில் அதிக அளவில் பிரதிநிதித்துவம்பெறாத முத்தரையர் சமூகத்தின் வாழ்நிலையை, பண்பாட்டை விவரிப்பவை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் இவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவாக அடையாளம் காணப்படுவார்கள். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அடைந்துள்ள அரசியல், சமூக, பொருளாதா உயர்வுகளை இவர்கள் இன்னும் எட்டவில்லை.

தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளிலோ, பிற கட்சிகளிலோ இவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. வியாபாரம், கல்வி போன்ற துறைகளிலும் இவர்கள் பின்தங்கியே உள்ளார். ஏழ்மையும், உழைப்பும் நிரம்பிய இவர்ளகது நிறை வாழ்வு தமிழ் இலக்கியத்தில் உரிய வகையில் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இதுபோலவே, இராமநாதபுறம் பகுதிகளிலிருந்து தஞ்சை, திருச்சி, கடலூர் என தமது ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடி இடம் பெயர்ந்து நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் யாதவர் (அ) கோனார்களது வாழ்வியல் பதிவுதான் கீதாரி. 21 ம் நூற்றாண்டு அடைந்துள்ள அபார வளர்ச்சியின் சிறு இழையும் இவர்களை தீண்டிப்பார்க்கவில்லை. தமது நிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட அகத வாழ்வும், பிறரது நிலங்களையும், அரசு காடுகளையும் மேய்ச்சல் நிலங்களாகக் கொண்ட சார்பு வாழ்க்கை உண்டாக்கும் மனப் பதற்றமும் இவர்களிடம் ஒருவித அடிமை மனநிலையை கட்டமைத்திருக்கிறது. புற உலகில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியோ, நகர மயமாக்கலோ இவர்களது வாழ்வில் எவ்விதத்திலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. கி.ராவின் ‘கிடை‘ க்குப் பிறகு கீதாரியில் விரிவான அளவில் இவர்களது வாழ்க்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறுகாட்டுத்துறை வேதாரண்யம் அருகிலுள்ள ஒரு நெய்தல் கிராமம். இங்கு மீன்பிடித்து வாழும் வன்னியர்கள் பிற பகுதியில் வசிக்கும் வன்னியர்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளனர். கவிஞர். பழமலய் இப்புதினத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தில் இவர்களை மீன் பள்ளிகள் என்றழைக்கிறார். இவர்களிடம் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ பிற வன்னியர்கள் வருவதில்லை. இக்குழுக்களுக்குள் அகமண முறைதான் வழக்கிலிருந்தது வருகிறது. இத்தகையதொரு குறுங்குழு வாழ்வும் தமிழ் இலக்கிய வெளிக்கு புதியதாகவே கருதப்பட வேண்டும்.

வடமாவட்டங்களில் தலித் மற்றும் வன்னியச் சமூக பிண்ணனியில் உருவானது. கண்ணகி புதினம், சாதி/பால் ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்ணின் ரௌத்ர வெளிப்பாடுதான் இப்புதிய கண்ணகி.

இப்படைப்புகளில் இச்சமூகத்தினரின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலைகள் புதின அழகியலையொட்டி, விவரணத் தன்மையற்று கலைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இல்லச் சடங்குகள், பொது விழாக்கள், வழிபாட்டு முறைகள், ஏராளமான சொலவடைகள், தொன்ம நம்பிக்கைகள், என இப்புதினப் பரப்பில் நிரம்பியிருக்கும் தரவுகள் தமிழ் வாழ்வின் பன்முனத் தன்மையை அதன் செழித்த கூறுகளை உள்ளடக்கியிருப்பவை.

- 3

எனது புதினங்கள் யதார்த்த வாத வகைமைக்குள் அமைந்திருந்தாலும் அவை தூலமாக நாம் காணும் யதார்த்தங்கள் மட்டுமன்று. அனுபவத்தின் வாயிலாக கல்வியின் வாயிலாக எனக்குக் கிட்டியுள்ள சமூக அரசியல் பார்வைகளின் வழியே சில புதிய யாதார்த்தங்களை இப்புதினங்களில் உருவாக்கியுள்ளேன். இதன் மூலமே ஒரு கதை சொல்லி எனும் நிலையிலிருந்து ஒரு புதினப் படைப்பாளியாய் நான் மலர்ந்திருப்பதாக நம்புகிறேன்.

கதை சொல்வதில் பாரம்பரியமும், தொடர்ச்சியும் உள்ள தமிழ் மொழி எனக்கு மிகவும் ஒத்துழைப்பை வழங்குகிறது. நமது மரபான கதை சொல்லும் முறை இன்று பரிட்சார்த்தமான கதை கூறும் முறையின் சாத்தானக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. புனைவும், மாயா வினோதங்களும், மர்மங்களும் நிரம்பிய நமது கதையாடும் முறைக்கு இணையானது. இத்தகையதொரு கதையாடல் முறையில் புனைவை வளர்க்கும் போது மனித குலத்தை முன்னெடுத்துச் செல்லும் புதிய மதிப்பீடுகளை ஊடுபாவாக புனைவு வழி நெய்கிறேன்.

உதாரணமாக, பெண்கள் ஒரு கம்யூனாக வாழ முடியும் எனும் ஒரு இலட்சியத்தை கற்றாழையில் நிலவும் யதார்த்தமாக கட்டமைத்திருக்கிறேன். ஒரு கணவன் இரு மனைவி என்பதை இயல்பாகக் கருதும்போது ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லியின் நிலைபாடும் கண்ணகி புதினத்தில் வரும் கண்ணகியின் முடிவுகளும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மனப் பழக்கத்தை ஏற்படுத்தும் விழைவோடு கதைப் பின்னலை உருவாக்கியுள்ளேன்.

யதார்த்த வாத படைப்பில் ஒரு புனை கதையாளருக்கு இத்தகைய இலட்சிய வகை யதார்த்தங்களை கட்டுவது சிக்கலானதும், சவாலானதும் ஆகும். இது கத்தி முனையில் நடப்பதைப் போன்றது. புது வகை எழுத்தில் இப்புதிய மதிப்பீடுகளை குறியீடாகக் கூறி விட முடியும். ஆனால், யதார்த்த வகைமையில் நடைமுறைக்கு இந்நிகழ்வு ஒத்துவருமா எனும் கேள்வி வாசக மனதில் எழாத வண்ணம் இப்புதிய யதார்த்தை கட்டமைப்பது ஒரு புதின ஆசிரியருக்கு எழக்கூடிய சவால். இந்தச் சவாலை கற்றாழையிலும், ஆறுகாட்டுத்துறையிலும் வெற்றிகரமாகக் கடந்து வந்திருப்பதாகவே நம்புகிறேன். பரிட்சார்த்தமான புதிய வடிவங்களுக்கு மத்தியில் யதார்த்த வகை படைப்புகள் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு இவை முதன்மையான காரணங்களாக அமைகின்றன.

புதிய உள்ளடக்கங்கள், புதிய மதிப்பீடுகள் இலட்சிய வாத யதார்த்தங்களை நடைமுறை யதார்த்தங்களை சித்தரிப்பது போன்ற காரணிகள் யதார்த்த வகைமைக்கு புதிய அழகியலை அளிக்கின்றன.

- 4 -



இயற்கையை முன் எப்போதையும் விட நாம் வாழும் காலத்தில் மூர்க்கமான முறையில் அழித்து வருகிறோம். வெட்டவெளியினை மெய்யெனக் கொண்டாடியது நம் தமிழ் மரபு. ஆனால், அவ்வெயிளில் இயற்கையின் கருணையை அபகரித்துக் கொண்டு செயற்கையின் நஞ்சை பரப்பி வருகிறோம். இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து இன்று இயற்கைக்கு திரும்புவது பற்றி விவாதித்து வருகிறோம். மலைகள், காடுகளை அழித்து தார்ச்சாலைகள், இருப்புப் பாதைகள், கனிச் சுரங்கங்கள் என முன்னேறிக்கொண்டிருக்கிறோம். விளை நிலங்களெல்லாம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது. நகரமயமாக்கல். பூச்சிக் கொல்லி மருந்துகளும், செயற்கைக் கோளின் மின் காந்த அலைகளும் போட்டி போட்டுக் கொண்டு சிற்றுயிரிகளை பலிவாங்கி வருகின்றன.

உயிர்ச் சமநிலை, தட்ப வெட்பச் சமநிலை குலைந்து பிரபஞ்சத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இத்தகையதொரு சூழலில் தான் இயற்கையின் அருமையை, அது தரும் கொடைகளை, நம் நோய் தீர்க்கும் மூலிகைகளை, விவசாய வாழ்வின் மகத்துவத்தை, விவசாயத்தோடு இணைந்த கால்நடை வளர்ப்பின் அவசியத்தை, கடல் சார் வெல்வங்களை எனது படைப்புகள் கலை அழகுகளாய் மிளிரச் செய்திருக்கின்றன.

இயற்கை நமக்குத் தாய் போன்றவள். அவள் தன் குழந்தைகளுக்கு ஒரு போதும் தீங்கு செய்வதில்லை. அவளது தொப்பூள் கொடிச் சொந்தங்கள் நாம். அளம் புதினத்தில் மிகக் கொடிய பஞ்சகாலம் வருகிறது. பசியும், பட்டினியும் தலைவிரித்தாடும் கோரச் சூழலில் இயற்கையின் கடைசி கருணையாக அதன் வறண்ட நிலத்தில் இன்னும் சில உணவுப் பொருட்கள் மிச்சமிருக்கவே செய்கின்றன. கொட்டிக் கிழங்கு, பனங்கிழங்கு, சாரணக் கீரை, தொம்மட்டிப் பழம், பலாப்பழம் என அப்பஞ்சத்திற்கு தன் பிள்ளைகளுக்குத் தர நிலத்தாய் தன்னிடம் கீதங்களை வைத்திருக்கவே செய்கிறாள்.

நாமோ அமுதசுரபிகளையும் பிச்சைப்பாத்திரங்களாக்குபவர்கள். நமது ஆறுகளில் கானல் அலையடிக்கிறது. இருப்புப் பாதைகளால் பிளவு பட்ட காடுகளிலிருந்து விலகுகின்றன யானைகள். வழி குழம்பி அலையும் அவை புகை வண்டிகளால் மோதப்பட்டு உயிர்விடுவதைக் காண்கிறோம். பச்சையத்தை இழந்து பிளாஸ்டிக் பந்தாகி விட்ட இப்பூவுலகை அதன் தொப்பூள் கொடி நிணத்தோடும், தாய்ப்பாலின் கவுச்சி வாடையோடும் என் புதினங்களில் நிறைத்திருக்கிறேன். இயற்கையின் ரகசியத்தை, அதன் ஆற்றலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஒரு தாய்க்குரிய பரிவோடு இயற்கைக்கும், மனிதர்க்குமான நெருக்கத்தை, உறவை தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறேன். இயற்கைச் சமநிலை குலைந்து அதன் பேரிடர்களால் மனித குலம் சந்திக்கும் அழிவுகளிலிருந்து மீள இயற்கையுடனான நேசத்தை வலுப்படுத்துவது அவசியம். இதற்கு எனது படைப்புகள் உதவும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பாலை நீங்கலாக குறிஞ்சி, மருதம், நெய்தல் இந்நால்வகை நிலக்காட்சி படிமங்கள் விரவிக் கிடக்கும் எனது ஐந்து புதினங்கள் புவி வெப்பமடைதல் எனும் நவீன நெருக்கடியை விவாதிப்பதற்கான களங்களாகத் திகழ்வதை வாசகர்களும், விமர்சகர்களும் உணர முடியும்.

விவசாய நிலம், உப்பளம், மீன் பிடி கடல், மேய்ச்சல் நிலம், எனும் உழைப்புக் களங்களில் விரிகிறது. பெருமளவில் என் புதினப்பரப்பு. உழைப்புக் களங்களும், அதில் நிகழும் வேர்வைப் பாடுகளும், களப்பயணத்தின் மூலம் சேகரித்தத் தகவல்கள் அன்று. இயற்கையோடு இயைந்து பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண்யின் வாழ்வியல் படிப்பிணைகள் இவை. கடலோரச் சிற்றூரின் உப்புக் காற்றைச் சுவாசித்து வளர்ந்தது என் உயிர். அதன் குளிர்ச்சியும், வெம்மையும், என் எழுத்தெங்கும் நிறைந்திருக்கின்றது. ஓரிரு நாட்களில் களப்பயண நேர்காணல்களினால் கிடைக்கும் தரவுகளிலிருந்து கூட ஒரு படைப்பை உருவாக்கி விட முடியும். ஆனால், ஒரு படைப்பு மேலெழும்பி வளர்ந்து பிரகாரம் கொள்வது அதற்குள்ளிருக்கும் விவரணைகளில் மட்டும் அன்று. அதற்குள் இயங்கும் உயிர்த்துடிப்பில் தான். நிலமும், நீரும், காற்றும், வெப்பமும், ஆகாயமும் இணையாது புதினத்தில் செயல்படும் மனித வாழ்வு தட்டையானது. இப்பிரபஞ்சம் அதன் சிறு அலகான மனித உடலும் இந்த ஐம்பூதங்களாலானது. எனது புதினங்களில் இந்த ஐம்பூதங்களும் பாத்திரங்களாக இயங்குகின்றன. இவ்வகையில் இயற்கை முடிவுறாத படைப்பு வெளியாக எனது படைப்புகளின் ஊடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

- 5
வாழ்க்கை துக்கமானது என்கிறார் பகவான் புத்தர். பெண்ணின் பேசித் தீராத பெருந்துயர் என்று புனைவுகளில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. துக்கமும் என் வெளிதான். இது எழுதியெழுதி கடக்கப்பட வேண்டிய வெளி. பெண்களுக்கு இவ்வாழ்க்கை வழங்கியிருக்கும் கவித்துவமான பரிசு துக்கம் தான். ஆறாத ரணங்களையும், தழும்புகளையும், அணிகலன்களாக மாற்றிக் கொண்டவர்கள் நமது பெண்கள்.

‘கண்ணீரை சிந்த வைக்கும் எழுத்துக்கள்‘ எனும் மேட்டிமை விமர்சனங்களை நிறையவே எதிர்கொண்டிருக்கிறேன். இங்கே பெண்ணின் கொண்டாட்டங்கள் தற்காலிகமானவை. குறுகிய ஆயுள் கொண்டவை. குடும்ப அமைப்பில் பெண்ணின் சுதந்திரம் என்பது நமது ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கியுள்ள அதிகார மதிப்பீடுகளின் இரக்கத்தலிருந்து கசிவதாகவே இருக்கிறது. மாணிக்கம் புதினத்தில் வரும் சொல்லாயி தமிழ்ப் பெண்களின் ஓர் ஒற்றை அலகு. அவளிடம் இவ் அவலம் மிக வாழ்வை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால், தன் குடும்பத்தின் நலன், கௌரம் பொருட்டு அவள் எல்லா இழிவுகளையும் சகித்துக் கொள்கிறாள். இத்தகைய போராட்ட குணமும், சகிப்புத் தன்மையும் அளம் புதினத்தில் சுந்தராம்பாளிடம் இருக்கிறது. ஆனால் இந்த சகிப்பு மனோபாவம் அடுத்தடுத்த வளரும் தலைமுறைகளில் குறைந்து வருகிறது.

கணவர்கள் இல்லற அறத்தை மீறும் போது குடும்பத்திலிருந்து வெளியேறுபவர்களாக அளம் புதினத்தில் ராசாம்பாளும் கற்றாழையில் மணிமேகலையும், சத்யாவும் விளங்குகிறார்கள். இனியும் பெண்ணுக்கு பூவும் பொட்டுமே மற்றும் போதுமானதன்று. சுதந்திரமும், மரியாதையும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் யாரும் பெண்ணிய வாதிகள் அல்லர். சாதாரண கிராமத்துச் சகோதரிகள். கல்வி கற்காதவர்கள். வாழ்வின் வெம்மையிலிருந்து உளொளி பெருக்கியவர்கள்.

அடுத்தாக, பெண் அனுபவிக்கும் முக்கியமான துயர்களுள் ஒன்று பாலியல் வன்முறைகள். கீதாரியில் வளர்ப்பு மகளையே சிதைக்கும் கொடூரமான ஆண் வக்கிரத்தை நீங்கள் சந்திக்க முடியும். பெண்ணின் துயரை எழுதுவது இரக்கத்தை யாசித்துப் பெற வேண்டி அன்று. அது நிதர்சனத்தின் காயத்திலிருந்து பெருகுகிற குருதி ஊற்று. அதற்குத் தேவை கண்ணீர் அல்ல, மருந்து.

பெண்ணின் பெருந்துயர் எனது புனைவின் ஒரு வெளி. அது சமூகத்திலிருந்து எழுவது. அத்துயருக்கான மாற்று வெளியை சமூகத்திலிருந்தும் உருவாக்குகிறேன். செல்லாயி, சுந்தராம்பாள் போன்றவர்கள் இத்தகைய துயரில் மூழ்கியவர்கள்.

ராசம்பாள், மணிமேகலை போன்றவர்களோ துயரிலிருந்து மீண்டெழுந்து வருபவர்கள். சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க இப்பேருலகையே தம் குடும்பமாக கருதுபவர்கள். மிகவும் எளிய பிண்ணனி கொண்ட இவர்களை தம் ஆதர்சமாக ஏற்றுக் கொள்வதில் எனது சக பெண்களுக்கு மன ரீதியான எவ்விற தடைகளும் ஏற்படப்போவதில்லை.
- 6
உழைக்கும் பெண்களை மையமாக வைத்து எழுதும் எனது புதினங்களில் பாலியல் வெளிப்பாடு என விமர்சகர்கள் கருதுகின்றனர். பாலியல் ஒரு இயற்கைத் தூண்டல். அதனால் விளையும் துலங்கலும் இயல்பானதே. கிராமத்து உழைக்கும் பெண்ணின் பாலியல் மீறலை நீக்கு போக்கத்தான் கூறமுடியும். படைப்பில் அவற்றை வெளிப்படையாக பேசியாக வேண்டும் என்பது கட்டாயமொன்றுமில்லை. நாம் எடுத்துக் கொள்கிற உள்ளடக்கத்திற்கு எது தேவையோ அதைச் சொன்னால் போதுமென எண்ணுகிறேன். எனது பாத்திரங்கள், என்னுடைய சகோதரிகளாக, எனது தாய்களாக, தோழிகளாக இயங்குபவர்கள். அவர்களுக்கும் பாலியல் அபிலாஷைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட இல்லற நெறிகளுக்குள் இயங்குகிறார்கள். இவ்வில்லற நெறியை கற்பு எனும் வகைபாட்டிற்குள் அடக்கிவிட முடியாது. கற்றாழை பழநியம்மாளும் ஆறுகாட்டுத்துறையில் சமுத்திர வல்லியும், கண்ணகியும், இத்தகைய புதிய இல்லற நெறியை உருவாக்குபவர்கள்தான். பெண் தன் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவள். சுதந்திரத்தின் பொருட்டு அவள் சுயமரியாதையை இழப்பவள் அல்லள். இவை இரண்டும் இரு விழிகள் அவளுக்கு.


பெண் தன் உடலின் தேவையை அறிந்தவள். தன் உடலின் மீது
சமூகமும், அது உருவாக்கியுள்ள பண்பாட்டு மதிப்பீடுகளும், விதித்துள்ள தலைகளை அவள் மீறுவதென்பது ஒரு ஆற்றை கடலை நோக்கி இட்டுச் செல்லும் இயற்கையின் விதியை ஒத்தது. இம்மீறலை அதன் இயல்பான தொனியல் படைப்புகளில் சொல்லி வந்திருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் இன்னும் உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

பெண் தன் ஆன்மாவை நேசிப்பது போல் தன் உடலையும் நேசிக்கிறாள். அதே சமயம் உடலுக்காக அவள் ஆன்மாவை மீறுவதில்லை. இங்கே ஆன்மா என்பது சமூகம் உருவாக்கியுள்ள ஒழுக்க மதிப்பீடுகள் எனும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. பெண்ணினுடைய மனசாட்சி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். என் படைப்புகளில் இயங்கும் பாலியல் வெளி அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பெண்ணியத் தோற்றத்திற்காகவோ செயல்படுவதன்று. அது பெண்ணின் விழைவுகளிலிருந்தே உருவாக்கப்படுவது. நமது மரபு வழி அமைந்த பண்பாட்டுக் கூறுகளில் உள்ள பெண்ணடித் தனங்களை நீக்கி புதிய பெண்ணிய அறங்களை, இல்லற அறங்களை உருவாக்கக்கூடியதாக அப்பாலியல் வெளி இருக்கிறது. கீழைத் தேய சமூகத்திற்கான பெண்ணியத் தத்துவங்களை உருவாக்கும் வகையில் வலிமையான மூலாதாரங்களாக இப்படைப்புகள் எங்ஞனம் திகழ்கின்றன என்பதை இலக்கிய விமர்சகர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.
- 7
எனது படைப்புகளின் பலமாகக் கருதப்படுவது அதன் உரையாடல்கள். அவ்உரையாடல்களை மேற்கொள்பவர்கள் எத்தகைய இனக் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களது வழக்குகளிலேயே எழுதி வந்திருக்கிறேன். மொழி என்பது கருத்தைக் கடத்தும் வெறும் ஊடகமட்டுமன்று. அது தன்னுள் தான் புழங்கப்படும் சமூகத்தின் பண்பாட்டை, அரசியலை, அறிவியலை, சூழலியலை உள்ளடக்கி வைத்திருக்கிறது. நாட்டார் வழக்காற்றில் புழங்கப்படுகின்ற தொன்மக் கதைகள், பாடல்கள், விடுகதைகள், சொலவடைகள் போன்றவை ஒரு பண்பட்ட சமூகத்தின் பழமையை, கலாச்சார வளங்களை, அனுபவத்தின் கொடைகளை கொண்டிருக்கின்றன. இத்தகைய நாட்டார் வழக்காறு இன்றி ஒரு தொன்மச் சமூகத்தின் கதையாடல் முழுயடையாது.

ஒரு மொழியின் செம்மொழித் தகுதி என்பது அது எந்த அளவிற்கு பல்வேறு வட்டார வழக்குகளை உள்ளடக்குகிறது என்பதைப் பொருத்தே அமைகிறது. தேசியப் பேரினவாதம் எவ்வாறு தனக்குள் கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்துத் தனது ஒற்றை அடையாளத்தை நிறுத்த முயலுகிறதோ, அது போலவே ஒரு தேசிய இனத்திலிருக்கும் ஆதிக்கச் சமூகம் தனது மொழியையும், பண்பாட்டையும் அத்தேசிய இனத்தின் அடையாளமாக கட்டமைக்க முயல்வது நாம் அறிந்ததே. இத்தகைய அதிகாரப்போக்கிற்கு மாற்றாக தமிழ்த் தேசியத்திற்குள் அடங்கியிருக்கும் பல்வேறு விளிம்பு நிலை குழுக்களின் குரல்களைப் பதிவு செய்வது என்பது அதிகாரத்திற்கு எதிரான ஒரு நவீன செயல்பாடாக் கருதப்பட வேண்டும்.
0
(அகநாழிகை )

Tuesday, January 13, 2009

கண்மணி குணசேகரனின் அஞ்சலை

அசலான , துல்லியமான எழுத்து


கண்மணி குணசேகரன் ,2007 ஆம் ஆண்டில், 40 வயதிற்கும் குறைந்த இளம்படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.

கண்மணி குணசேகரனின் அஞ்சலை என்கிற புதினம் தமிழினி பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

கண்மணி குணசேகரன் ஒரு சாதாரண ITI படித்த தொழிலாளி. அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணிபுரிகிறார். சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.

அஞ்சலையின் சிறப்புகளாக நான் கருதும் சிலவற்றை (ஒழுங்கற்ற முறையில் ) பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக, ஒரு பெண்ணை மையமாக வைத்த புதினத்தை ஒரு ஆண் எழுதியிருப்பது வரவேற்கத் தகுந்தது. நடுநாடு என்று சொல்லப்படும் முந்திரிக்காட்டுப் பகுதியின் செம்மண் புழுதி, படிக்கிறவர்களின் கால்களிலும் ஒட்டிக் கொண்டுவிடும் அளவுக்கு இவரின் விவரிப்புகள் ,ஒரு திரைக்கதை போல எழுதப்பட்டுள்ளது. ஒரு கதையை 4 வரிகளிலும் சொல்லிவிடமுடியும்.400 பக்கங்களுக்கும் எழுதலாம். 400 பக்கங்கள் எழுத ஏதோ ஒரு திறன் தேவைப்படுகிறது.அது கண்மணிக்கு மிக நன்றாக வாய்த்திருக்கிறது.


ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு குழுவினரின் உழைப்பு. ஆனால், ஒரு திரைப்படைத்தை பார்ப்பதுபோல் நம் கண்முன் காட்சிகளை துல்லியமாக விவரிக்கிறார்.


பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பார்களே அதுபோல அமைந்ததுதான் அஞ்சலையின் வாழ்வு. அஞ்சலை என்கிற தலித் பெண்ணின்
வாழ்வில் மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்கிற பச்சாதாபம் நமக்கே ஏற்படுகிறது.முதல் கணவன், ஆளே மாறிப்போய் ஏமாற்றுகிறார்கள் என்றால், இரண்டாவது கணவனின் பெயர்கூடத் தெரியாமல் திருமணம் நடக்கிறது.

”நேற்று மணக்கொல்லையில் விடிந்தபோது, இன்று தொளாரில் விடிந்தது”என்று ஒரு இடத்தில் சித்தரிப்பு வரும். இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.

அஞ்சலை வரப்பில் நடந்துபோகிறாள் என்றால், அங்கிருப்பது வரப்பும், அவளும் மட்டும்தானா? அணில் இருக்கிறது.அது பழம் தின்னுகிறது. முந்திரி மரங்கள் இருக்கிறது. அந்த முந்திரி மரங்களைப் பற்றிய குறிப்புகளை விளக்குகிறார்.

தேங்காய் எண்ணெய் பனிக்காலத்தில் உறைந்துபோய் இருப்பதை ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்.

அவளின் கெட்ட நேரம் ஒரு கணவன் என்பது இல்லாமல் இருவருக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. எனினும், சோரம் போவளாக இல்லை.

ஒரு கிழவன்/கிழவிக்கிருக்கும் அனுபவப் பக்குவத்தோடு எழுதியுள்ளார். அதிலும் பெண் வாழ்வை, வலியை, உணர்வை, பழக்க வழக்கங்களை எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.

”கையெடுத்துக் கும்பிட்டாள் பால் சுறாக்காரனையும்,தன் அக்கா வீட்டுக்காரனையும் மானசீகமாய்.,” என்று ஒரு இடத்தில் வரும். நெகிழவைக்கும் தருணங்கள் அவை.

”தண்ணீர் பட்டு நனைந்த தரை புழுதியடங்கிப் போயிருந்தது” என்று ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு சித்தரிப்பு வரும். ஆனால், இது நுணுக்கமான, குறியீட்டு சித்தரிப்பு என்றே நான் கருதுகிறேன்.

ஒரு கட்டத்தில்,அஞ்சலை மற்றும் அவளின் நடு அக்காவும் உரையாடும்காட்சிகள் நெகிழ்ந்து கண்ணில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது.

”இல்லாதவளின் கதை” என்கிற தலைப்போடு இரண்டாவது பதிப்புக்கு கண்மணி முன்னுரை எழுதியுள்ளார். இதுதான் இக்கதையின் மையமோ என்று நான் யோசிக்கிறேன். இருக்கப்பட்டவளாக அவளது பெரிய அக்காவே இக்கதையில், இம்மையத்துக்கு வலு சேர்க்கும் உதாரணமாக வந்து போகிறாள்.

“அவசரத்துல அண்டாக்குள்ள கை நுழையலயாம்” போன்ற கிராமத்து சொலவடைகளும், உருவகங்களும் நிறைந்து காணப்படுகிறது.

இன்னும் நிறைய எழுதலாம். எனக்குத்தான் தெரியவில்லை.

நூல் விபரம்

அஞ்சலை ( புதினம்)
ஆசிரியர்-கண்மணி குணசேகரன்

யுனைடெட் ரைட்டர்ஸ் (தமிழினி)
63, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை, 14.
விலை .ரூ.160
பக்கங்கள் 320