எல்லாமே நல்ல கவிதைகள்.ஒரு அனுபத்தை மட்டும் பகிர்வதாக நிறைய கவிதைகள் சிறுகதைத் தன்மையோடு அமைந்திருந்தது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான, பகிரப்படவேண்டிய அனுபவங்கள், நிகழ்வுகள். சிறுகதைத் தன்மையோடானவை.சுயம் பற்றிய பிம்பம் குறித்து கவலையில்லாமல் வெளிப்படையாக, நேர்மையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.எல்
எல்லாமே பெரிய நீண்ட கவிதைகள். எனவே தட்டச்ச எளிதாக இல்லாதபடியாலும், நீங்களும் பார்த்ததும் பயந்து ஓடிவிடக்கூடாது என்பதாலும் ஒரே ஒரு கவிதையை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.இக் கவிதைகூட தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல.எதேச்சையாக எடுத்த ஒன்றுதான்.
வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்
வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை
இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக
வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்
குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்
உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.
தமிழினி வெளியீடு
ரூ.20.
முதல் பதிப்பு டிசம்பர் 2000