Showing posts with label அரட்டை. Show all posts
Showing posts with label அரட்டை. Show all posts

Thursday, November 8, 2012

இறுதி மூச்சில் தாலிப்பனை

இந்த வலைப்பூவில் எப்போதுமே அதிகளவில்  பார்க்கப்படும் பதிவாக இருப்பது தாலிப்பனை படங்கள் கொண்ட இந்தப் பதிவுகள்

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

http://thooralkavithai.blogspot.in/2009/12/blog-post_29.html

மேற்கண்ட பதிவுகளில் இடம்பெற்ற தாலிப்பனை தன் ஆயுளின் இறுதிக்காலத்தில் பூப்   பூத்து நிற்கிறது. அதன் தற்போதைய படங்கள்

 நன்றிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சுட்டி http://www.jeyamohan.in/?p=6063


Friday, January 20, 2012

இது என்ன தலைப்பு?




மரங்கொத்திச் சிரிப்பு என்கிற என் கவிதைகள் தொகுப்பு நூலின் தலைப்பைப் படித்த சில நண்பர்கள் ‘அப்படின்னா என்ன? என்று கேட்டனர். நண்பன் இசை கூட கேட்டார். இசைக்கு நான் சொன்னேன்.மரங்கொத்திப் பறவை போடுற சத்தம் எக்காளமா சிரிக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அதை சிரிக்கிறதுன்னு சொல்லலாமான்னு எனக்கு  சந்தேகம் இருந்துட்டே இருந்தது.
தகவல் பிழையாக ஆகிவிடக்கூடாதேன்னு  யோசிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம், தி.ஜானகிராமனோட மோகமுள் நாவலை நான் இப்போதான் படிச்சு முடிச்சேன். அதுல ஒரு இடத்துல மரங்கொத்தி சிரிப்புன்னு வரும். இப்போ உன்னோட உறுமீன்களற்ற நதியாகட்டும், இளங்கோகிருஷ்ணனோட காயசண்டிகை தலைப்பாகட்டும். எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும்? உறு ங்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்னன்னு உன்னோட கவிதைத் தொகுப்பை படிச்சதுக்கப்புறந்தான், தேடிப்படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அதுபோல இதுவும் இருக்கட்டும்


எப்படி ஒரு கவிதைக்குள் பொருத்தமாக குழந்தைகள் இடம்பெறும்போது, அந்தக் கவிதைக்கு ஒரு நெகிழ்ச்சி வந்துவிடுகிறதோ அதேபோல் பொருத்தமாக  பறவைகள் வந்துவிட்டாலும், அந்தக் கவிதைக்கு சிறகுகள் முளைத்துவிடுகிறது என்பேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரி என்னுடைய ஒரு கவிதையில், நான் செம்மையாக்கம் செய்யும்போதுதான் இடம்பெற்றது.அகநாழிகை இதழில் வெளியாகியிருந்த கவிதையில் திருத்தம் மேற்கொள்வதற்குமுன் பின்வருமாறு இருந்தது. (ஓரளவு, நல்ல வரவேற்பைப் பெற்ற கவிதை இது. கீழே கவிதை முழுமையாக இல்லை)

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

அச்சமற்ற குழந்தையின்
முகத்தில் மகிழ்ச்சியலை
................................
................................

இவ்வரிகளை இவ்வளவு தட்டையாகச் சொல்லாமல் வேறெதாவது செய்யவேண்டும் என்று யோசனையிலிருந்தேன்.
அலுவலகத்தில் மழை சற்று பெய்து ஓய்ந்திருந்த ஒரு தேனீர் நேரத்தில்  தனியாக அமர்ந்திருந்தபோது அசரீரி போல் மரங்கொத்திப் பறவையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. குதூகலமாகிவிட்டேன்.திருத்திய பிறகு வந்த வரிகள் இப்படி

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

முதல் பறத்தலை ருசித்த
மழலைப்பறவையின்
அச்சம் விலக்கியிருந்த கெக்களிப்பில்
மரங்கொத்திச் சிரிப்பலை
...

பொதுவாக என்னுடைய கவிதைகளில் உவமைகள், அலங்காரங்கள் இருப்பதில்லை. நேரடியாகவும், எளிமையாகவுமே இருக்கும். அந்த வகையில் நான் உவமையாய்ச் சொன்ன அரிதான ஒன்றாக இவ்வரி இருக்கிறது. தனித்துவமான தலைப்பாகவும் இருக்கும் என்று மரங்கொத்திச் சிரிப்பு என்று பெயர் தேர்ந்தெடுத்தேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரியை கூகிளில் தட்டச்சி தேடினால் ஒரு வலைப்பக்கம்கூட விடையாகக் கிடைக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் இதே அர்த்தம் கொண்ட வரியைத் தேடியபோது,இவ்வரி  மிகவும் புகழ்பெற்றதாக தெரிகிறது. இப்போது தமிழிலும் இந்தக் குறை நீங்கும் என்று உங்களையெல்லாம் நம்பிச் சொல்கிறேன்.

2 நாட்களுக்கு முன், காலையில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாட்டின் வரிகளை கவனித்தபோது ஆச்சரியமாகிவிட்டது. என் தனித்துவமான தலைப்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள். ராஜாதி ராஜா படத்தில் வருகிற பாடல்.

சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள்
மனம் விட்டுச் சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம்..

கூகிளில் நான் தேடியவரை இப்பாடலை எழுதியவர் பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, பாடலை எழுதியவர்  கவிஞர் வாலி என்ற தகவலை கவிஞர் மகுடேஸ்வரனிடம் கேட்டு அறிந்தேன்

                                 

Saturday, January 16, 2010

மக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.


மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஏர்வாடி என்கிற கிராமத்தில் நடைபெற்றது. மணல்வீடு ஆசிரியரும், சிறுகதையாசிரிருமான மு.ஹரிகிருஷ்ணன் மிகவும் ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் நடத்துகிற நிகழ்ச்சி இது. கூத்துக்கலைகளுக்கும்,கூத்துக்கலைஞர்களுக்குமான அங்கீகாரத்திற்கும், மேன்மைக்காகவும் உரிமைக்குரல் எழுப்பிவருவதோடு நின்றுவிடாமல் , தாமாகவே முன் வந்து நிதி திரட்டி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இது.டிசம்பர் 26 மாலை துவங்கி 27 காலைவரை விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சி.

நான் , அகநாழிகை இதழாசிரியர் பொன். வாசுதேவன் மற்றும் யாத்ரா மூவரும் சென்னையில் உயிர்மை புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கமித்து பிறகு சேலம் செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.25-12-09 அன்று நடந்த உயிர்மை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட முடியும்வரை கலந்துகொண்டுவிட்டு இரவு தொடர்வண்டியில் புறப்பட்டோம்.

மறுநாள் காலையில் சேலத்தில் இறங்கி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து , புதிய பேருந்து நிலையம் செல்ல நகரப் பேருந்து பிடித்தோம்.பேருந்தினுள்ளே பார்த்தால் குரங்குத் தொப்பியோடு நண்பர் சுவாமி நாதன்(மயில்ராவணன்) அமர்ந்துகொண்டிருந்தார் .புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகிலேயே உள்ள ஒரு விடுதியாகப் பார்த்து அறை எடுத்து,காலைக்கடன்களை முடித்து அறையில் உற்சாகமாக கொண்டாட்டம், பாடல் என்று நேரம் கடத்தினோம். நண்பகல் உணவை முடித்துக்கொண்டு பேருந்து பிடித்து,சேலம்-மேட்டூர் பேருந்தில் ஏறி பொட்டனேரி என்கிற கிராமத்தில் இறங்கினோம்.அங்கு ஆயத்தமாக ஒரு வண்டி நின்றுகொண்டிருந்தது. அந்த 4 சக்கர வண்டி, எங்களைப் போன்றவர்களை பொட்டனேரியிலிருந்து , ஏர்வாடிக்கு அழைத்துச் செல்வதற்கானது எனபதை அந்த வண்டியைப் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது. வண்டியின் முகப்பில், விழா விளம்பர தட்டி கட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதிலேறி, சில கிலோமீட்டர்களே தள்ளி அமைந்துள்ள ஏர்வாடி கிராமத்தில் இறங்கும்போது சரியாக மணி பகல் 3.30. முதல் நிகழ்வு தொடங்குவதாக அழைப்பிதழில் இருந்த நேரமும் அதுவே.

image image image image image image

எங்களுக்கு முன் அங்கே சிலர் மட்டுமே வந்திருந்தனர் அதுவரை.க.சி.சிவகுமார்& இயக்குனர் பி.லெனின் அமர்ந்திருந்தனர். நல்ல இருக்கைகளுடனும், பந்தலுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நிகழ்ச்சி துவங்க நேரமிருப்பதால் மெல்ல விழா நடக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவுவரை ஊர் சுற்ற கிளம்பினோம். கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட தீனியை, கட்டிப்போடப்பட்டிருந்த ஆடு மேய்ந்துகொண்டிருந்த காட்சியை அதிசயமாகப் பார்த்துக்கொண்டே நடந்தோம்.image image image image ஒரு கிணற்றுக்குச் சென்று அமர்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நண்பர் சுவாமிநாதன் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம் எடுக்கிறேன் என்று முயன்றுகொண்டேயிருந்தார். அவர் புகைப்படக்கருவியில் எடுத்த ஆகச்சிறந்த புகைப்படம் நிச்சயம் அவரெடுத்ததாக இருக்காது என்று நம்புகிறேன்.கிணற்றில் ஒரு பாம்பின் தோல் உரித்துப்போடப்பட்டிருந்தது, நீளமாக. கிணற்றுத் தண்ணீரிலும், கரையிலும் கோகோ கோலா போத்தல்களும், பாலிதீன் தாள்களும், சரக்கு போத்தல்களும் கிடந்தன. கிராமம் வரை ஆட்சி செய்துகொண்டிருந்த நவீனத்தின் கொடுமையை எண்ணிக்கொண்டேன்.இரண்டு சிறுவர்கள் மூங்கில் குச்சியை வெட்டி, சீராக்கி எடுத்துக்கொண்டு நடந்துவந்தார்கள். மீன் பிடிக்கவாம். மூங்கில் குச்சிகளின் பச்சை இன்னும் என் கண்ணில் பளீரென உறைந்து நிற்கிறது.அவர்களை அருகிலிருந்த சமாதியின் மேல் உட்காரச் சொல்லி, புகைப்படம் எடுக்கக் கேட்டோம். 'சவுனி மேல உட்காரக்கூடாது' என்றார்கள். சற்று நேரத்திற்குமுன் நாங்கள் அதன் மீதுதான் உட்கார்ந்திருந்தோம்.சமாதியைத்தான் சவுனி என்பார்கள் என்பது ஹரிகிருஷ்ணனின் மயில்ராவணன் தொகுப்புப் படித்திருந்தபோதே தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை. பின், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தோம்.

நண்பர் இலக்குவண் மடக்கி மடக்கிப் புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். சேரல் வந்து சேர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த லக்‌ஷ்மி சரவணகுமார் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி தொடங்கியது. நாங்கள் எதிர்பாராதவிதமாக பாவண்ணன் வந்திருந்தார். கூத்துப்பார்க்கும் ஆர்வத்திலேயே வந்திருந்ததாக தன்னுரையில் சொன்னார்.கூத்துக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது.ஒவ்வொருவரையும் ஹரி அறிமுகப்படுத்தி, (மூன்று வருடங்களாக தேடி அலைந்து கண்டுபிடித்திருக்கிறார்.சிலர் இறந்தேபோய்விட்டிருக்கிறார்கள்.)அவர்களின் கூத்துப்பாத்திரங்களையும், சிறப்புகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். நினைவுப்பரிசும், சான்றிதழும் ஒவ்வொருவராகப் பெற்றுக்கொண்டு , தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய அளவில் நிகழ்த்துக்கலைகளைச் செய்தனர். ஒலிப்பெருக்கியே இல்லாமல் உரத்தக்குரலில் பாடும் திறன்பெற்றிருந்தனர்.வெள்ளந்தியான அந்தக் கலைஞர்கள் தயக்கத்துடனும், நெகிழ்ச்சியுடனும் பாராட்டும் பரிசும் பெறும்போது எனக்கும் நெகிழ்ச்சியாகி கண்களில் நீர் திரண்டது.இதை நான் வெட்கத்துடன் மறைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்படியும் நண்பர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு சிரித்தனர். பெண்கலைஞர்களும் பாராட்டுப் பெறும்போதுதான் தெரிந்தது, பெண்களூம் இதில் கலந்துகொள்வார்கள் என்ற உண்மையே.சுமார் 35 கிலோ எடைகொண்ட பொம்மைகளை தூக்கி, அசைத்து பொம்மல்லாட்ட நிகழ்ச்சி நடத்தும் வயதான பெண்மணி மேடையில் மிகவும் அமைதியாகவும், தயக்கத்துடனும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.பெண்கள் மேளம் அடிக்கவும் செய்வார்களாம்.

image image image image

பொதுவாகவே தெருக்கூத்து என்கிற நிகழ்த்துக்கலை வடிவம் தமிழ் நாட்டில் வட பகுதிகளில் மிகுதியாகவும், மேற்குப்பகுதியிலுமே உள்ளது. தென் தமிழ் நாட்டில் நானறிந்தவரை இல்லையென்றே அறிந்திருக்கிறேன்.மாலை தேனீர், இரவு உணவு எல்லாம் நடந்தேறியது. இரவு பொம்மலாட்ட நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் மதுரை வீரன் கூத்தும் நடைபெற்றது. நான் நிகழ்ச்சியைப் பார்க்காமல் சற்றுத்தள்ளியிருந்த ஒரு மரத்தடியில் நண்பர்களுடன் 'கூத்து'ம், கும்மாளமுமாக இருந்தோம். சேரல்தான் வழக்கம்போல் நிகழ்ச்சிகளை முழுக்க பொறுப்பாகப் பார்த்து ரசித்தவர். வா.மு.கோமு வந்து சேர்ந்தார் தாமதமாக.தலைக்கவசம் அணியாததால்,வழியில் காவலர்களின் கடமையுணர்வுக்குக் கட்டுப்பட்டு நிறைய இடங்களில் சிக்கிக்கொண்டு , வந்து சேர்ந்த கதையைச் சொன்னார்.(அடுத்து இதை வைத்து ஒரு கதை இருக்குமோ?). வா.மு.கோமுவுடன் பழக நேர்ந்த இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. மனிதர் நேரிலும் கவர்ந்துவிட்டார். இரவு, அவருடன் ஒரு சிறிய நேரகாணல் நடத்தினேன். பொறுமையிழக்கச் செய்யும் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலுரைத்துக்கொண்டிருந்த பக்குவம் பாராட்டுக்குரியது.

image image image

ஓரளவு கொங்குவட்டார படைப்பாளிகள் முழுக்கவே வந்திருந்தனர் என்று சொல்லும் அளவுக்கு இருந்தனர். படைப்பாளிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களை பட்டியலிடுகிறேன்.
இசை,இளவேனில், இளஞ்சேரல்(மூவரும் ஒரே ஊர்க்காரர்கள்), நரன்,தூரன்குணா,ஆதிரன்,ஜெகன்னாதன்(வலைப்பதிவர்),ஊர்சுளா ராகவ்(யவனிகா ஸ்ரீராமின் மகன்),மணிவண்ணன், மயூரா ரத்தினசாமி, ந.பெரியசாமி, அகச்சேரன், சாஹிப்கிரான்,வே.பாபு, ஸ்னேகிதன் மற்றும் சில நண்பர்கள். கவிதாயினி சக்திஅருளானந்தம் மற்றும் சில பெண்கள் இருந்தனர். அவர்களில் வலைப்பதிவர்களோ, படைப்பாளிகளோ நிச்சயம் இருக்கக்கூடும்.

விழாவின் சிறப்பு விருந்தினர்கள் பாவண்ணன்,நாஞ்சில் நாடன், இயக்குனர் லெனின், க.சீ.சிவக்குமார், கே.ஏ.குணசேகரன் மற்றும் ஒரு உயரதிகாரி.( நாட்டுப்புறக்கலைஞர்களூக்கான துறைபோன்றது)

 

பின்னிரவில் மதுரைவீரன், நிகழ்ச்சி நடந்த மேடைக்கு சற்றுத்தள்ளீயிருந்த இடத்திலிருந்து , முதுகில் கட்டப்பட்டு கொளுத்தப்பட்ட நெருப்புப் பந்தங்களுடன் ஆவேசமாக ஆடிக்கொண்டும், உரக்கக் கத்திக்கொண்டும் கம்பீரமாக வந்துகொண்டிருந்த காட்சி நிகழ்ச்சியில் தலையாயது.மக்கள் மிகுந்த பக்தியோடும், பரவசத்தோடும், அச்சத்தோடும் கைகூப்பி வணங்கினர்.சிறுவர்கள் விலகி ஓடினர். மதுரைவீரன் ஒரு சேவலை உயிரோடு தலையைக் கடித்துத் துப்பினார். மேளச்சத்தமும் ஆரவாரமும் உச்சத்தில் ஒலித்தது. கலைஞர் எலிமேடு மகாலிங்கம்தான் வழக்கமாக இதைச்செய்வாராம்.அவர் அண்மையில் மறைந்துபோனார் என்பதால் இப்போது அவரின் தம்பியே மதுரைவீரன் வேடமிட்டிருந்தார்.

மதுரைவீரனின் தீப்பந்த வெளிச்சத்தை விழுங்குவதுபோல் மின்விளக்குகள் இருந்த இந்த நவீன காலத்தை நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, கம்பீரமான மதுரைவீரன் ஒரு இடத்தில் குனிந்து செல்லவேண்டியதாகயிருந்தது. அது மின்சார கேபிள். இன்றைய நவீன வாழ்வு கூத்துக்கலைஞர்களை வைத்திருக்கும் நிலை இதுதான் என்ற படிமம்போல் அமைந்திருந்தது அது.

(புகைப்படங்களை எடுத்தனுப்பிய ஆகச்சிறந்த புகைப்படக்கலைஞர் சுவாமினாதனுக்கு நன்றி.)

Wednesday, December 16, 2009

கூத்தப்பனையும், முத்தூவெல்லும்

                                             மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.ஜெயமோகனின் இணையதளத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாசித்துவருவதின் வழியாக, சு.வேணுகோபால் அவர்கள் பெயரையும், அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த முக்கியமான படைப்பாளி என்று மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், அதுவரை அவரின் ஆக்கங்கள் எதையும் படித்ததில்லையாதலால் அவரோடு என்னால் கலந்துரையாடமுடியாமல் போனது. நண்பர் கும்கி மற்றும் அவரின் நண்பரொருவர் ஆகிய இருவரும் சு.வேணுகோபாலை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர்.திரும்பிவந்த கும்கி, என்னிடம் வேணுகோபால் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவரின் ‘கூந்தப்பனை’ பற்றியும் மற்ற சில ஆக்கங்களை பற்றியும் எனக்குச் சொன்னார். நான் அப்போதுதான் ‘கூந்தப்பனை’ என்கிற சொல்லையே முதன்முதலாக அறிகிறவனாயிருந்தேன். மாநகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட நகரத்தில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நான் , முதன்முதலில் குயிலைப் பார்த்ததே சென்னையில்தான்.கிட்டத்தட்ட இருபது வயதில்தான். நான் பிறந்த நகரத்தை இதற்குக் குற்றம் சொல்ல முடியாது. நான் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.

பிறகான சில நாட்களில் கூந்தப்பனை என்கிற சொல் எப்படியோ கூத்தப்பனை என்றே என் நெஞ்சில் நிலைத்துவிட்டது.இதற்கிடையில் சு.வேணுகோபாலின் சிறுகதைத் தொகுப்பான ‘களவு போகும் புரவிகள்’ லிருந்து இரண்டு கதைகளை மட்டும் படித்திருந்தேன். மிகவும் தாவித்தாவிச் செல்கிறபடியும், வாசிப்பில் பொறுமையையும், தேர்ச்சியையும் கோரும் வகையில் இருந்தமையாலும் அதற்குமேல் அப்போதைக்கு படிக்கமுடியாமல் ஒத்திவைத்தேன்.பிறகு ‘சாயாவனம்’ நாவலைப் படிக்கிறபோது, அதில் கூந்தல்பனை என்கிற சொல்லைக் கண்டபோது, நினைவிலிருந்த கூத்தப்பனையை மீட்டு கூந்தப்பனை என்பதாக சரிசெய்துகொண்டேன். கூத்தப்பனை என்று ஒரு சொல்லே கிடையாது என்று தெரிந்திருந்தால்தானே, அச்சொல்லிலிருக்கும் பிழையை என்னால் மாற்றிக்கொள்ள முடியும். என்னுடன் பணிபுரியும் வட இந்தியர் ஒருவர் என் பெயரை முத்தூ வெல் என்பார். அதுபோல்தான் இருக்கிறது இது.

இதற்குப்பிறகு என்னுடன் பணிபுரியும் என் வயது நண்பர்கள் சிலரிடம், அவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து, நிலப்பகுதிகளிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் கூந்தப்பனை என்பதுபற்றி விசாரித்தேன். கூந்தப்பனை என்று சொல்வதா அல்லது கூந்தல்பனை என்று சொல்வதா என்கிற சிறிய தடுமாற்றம் வேறு. என்னைப்போலவே நண்பர்கள் சிலருக்கும் தெரியவில்லை. ஒரேயொருவன் மட்டும் தாலிப்பனை என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் சொன்னான்.அவன் வடதமிழ் நாட்டுப்பகுதியைச் சேர்ந்தவன்.அதன்பிறகு கிராமவாசியானவரும், வயதில் மூத்தவரும், உள்ளுர்க்காரருமான ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும் ,மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது. வாய்ப்பிருந்தால் பிறகொருமுறை புகைப்படம் எடுத்து இணைக்கிறேன்.
இன்னொரு உள்ளூர்க்காரர் இதன் பெயர் தாலிப்பனை என்றார். வட்டாரம் சார்ந்த சொல்லாடல்போல. இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும். இலக்கியம் படிப்பதன் மூலம் இப்படியாவது ஏதாவது நடந்தால் சரி.
ஜெயமோகன் , அண்மையில் எழுதியிருக்கிற ‘சு. வேணுகோலின் மண்’ என்கிற பதிவில், கூந்தப்பனை பற்றிய படிம பிரயோகத்தை, வெளியிட்டிருந்த இடம் கூந்தப்பனை ஆக்கததை படிக்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியுள்ளது.