Thursday, March 18, 2010

ஜே.பி.சாணக்யாவும் என் ஆதங்கங்களும்

ஜே.பி.சாணக்யாவும் என் ஆதங்கங்களும்

1.எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களின் முதல்வரிசையில் வைக்கத்தகுந்த ஜே.பி.சாணக்யாவை நான் ஏன் இவ்வளவு நாட்கள் அறியாமல்போனேன்?

2.எனக்கு படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும், பகிரும் நண்பர்கள் ஜே.பி.சாணக்யாவை ஏன் என்னிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் பரிந்துரைக்கவில்லை?

3.ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் அளவுக்கு ஜே.பி.சாணக்யா ஏன் பிரபலமானவராயில்லை?

4.எனக்குத் தெரிந்த இதழாசிரியர் ஒருவர் ஜே.பி.சாணக்யாவிடம் கதை கேட்டபோது,' நான் பொருளாதார நிலையில் மிகவும் நலிந்துள்ளேன். எனக்குப் பணம் கொடுத்தால் (சில நூறுகள்)மட்டுமே எழுதமுடியும். பணம் பெற்ற பிறகுதான் எழுதவேத் துவங்குவேன்' என்றாராம்.அற்புதமான கதைகளை எழுதியிருக்கிற ஜே.பி.சாணக்யா என்கிற கலைஞனிடமிருந்து மேலும் கதைகள் வருவதைத் தடுப்பதும், தீர்மானிப்பதும் சில நூறு ரூபாய்கள்தான் என்கிற நிலை தமிழ் இலக்கியத்திற்கு நல்ல சூழல்தானா?

5.என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்கள் கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால் ( அவ்வப்போது மற்றும் பலர்)ஆகியோரை தொடர்ந்து முன்னிறுத்துவதைப்போல் ஏன் ஜே.பி.சாணக்யா பற்றி எழுதவில்லை?

6.ஓடோடிப்போய் ஜே.பி.சாணக்யாவைச் சந்திக்கும் ஆர்வம் எழுந்தாலும் சந்திப்பது சரியாகுமா? ஏற்கனவே சந்தித்த சில படைப்பாளிகள் பற்றிய என் மனப்பிம்பம் நேரில் சிதைந்துபோனதைப்போல் ஜே.பி.சாணக்யா விசயத்திலும் ஏற்பட்டுவிட்டால், அதனால் நட்டம் எனக்குத்தானே?

7.அவருக்கு இதுவரை கதா விருது என்ற ஒன்றைத் தவிர ஏன் மேலும் கிடைக்கப்பெறவில்லை?

8.திரைத்துறையில் ஆண்டுகள் கணக்கில் முயற்சி செய்துகொண்டும் இப்படியொரு ஆளுமை ஏன் இன்னும் அடையாளம் பெறவில்லை?

9. தடாகம் வலைத்தள கட்டுரையில் ‘ கனவுப் புத்தகம்' தொகுப்பை படிப்பதற்கு முன்பாகவே அவசர அவசரமாக எழுதிவிட்டோமே.அதையும் படித்துவிட்டு எழுதியிருப்பதுதானே இன்னும் நன்றாக இருந்திருக்கும்?( இப்போது முடித்துவிட்டேன்)

10. இலக்கிய வாசிப்பு இல்லாத நண்பர்களிடம்கூட ஜே.பி.சாணக்யாவைப் படித்துப்பாருங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் என் வேலை வீணானதோ?


பின்குறிப்பு
இவையெல்லாம் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள். அறிவுப்பூர்வமாக அலசினால் தக்க விடைகளும், விவாதங்களும் கிடைக்கப் பெறலாம். ஆனால், ஜே.பி.சாணக்யாவை அறிமுகப்படுத்த நான் கையாண்டிருக்கும் வெளிப்பாட்டு உத்தி மட்டுமே இது.

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் -ஜே.பி.சாணக்யா

படைப்பாளிகள் அறிமுகம் - .முத்துவேல்

ஜே.பி.சாணக்யா

கவிதை எழுதுவது என்பதே முதலாளித்துவம்தான் என்று அண்மையில் எங்கோ படித்திருந்தேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத்தெரியவில்லை.அதற்குள் செல்ல விரும்பவுமில்லை. ஆனால், வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மனிதர்கள்தான் என்றே நான் கருதுகிறேன்.இதனால்தானோ என்னவோ, இதுவரையிலும் பதிவாகியுள்ள இலக்கியப் பதிவுகளில் அதிகமும் நடுத்தர மக்கள் வாழ்வே பதிவாகியுள்ளது. கீழ் நிலை என்று நாம் எண்ணத்தக்க மனிதர்களுக்கும் கீழான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களின் இருண்ட வாழ்வை, நிழல் உலகத்தை நாம் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.

நம் கண்களில் பட்டாலும், நம்மால் கவனம் குவிக்கப்படாத, அசட்டை செய்யப்படுகிற மனிதர்களே ஜே.பி.சாணக்யாவின் பெரும்பாலான கதைகளின் மாந்தர்கள்.சமூகத்தின் பார்வையில் கீழ் நிலையில் உள்ளவர்கள், குற்றவாளிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதாக உள்ள மனிதர்களை சுற்றிச் சுற்றி வந்து கதைகள் பின்னப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஈர்ப்பும்,ஒருவிதப் பரபரப்பும் ,அதிர்ச்சியும் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.இவரின் ஒவ்வொரு கதையுமே உலுக்கிவிடும் அதிர்வுகளையும், பிரமாண்டத்தையும் வெகுவாக ஏற்படுத்தக்கூடியவை. அதனாலேயே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, நெஞ்சில் உறைந்து நின்றுவிடக் கூடியவை.இவர் கதைகளில் உள்ள சம்பவங்களும், மனிதர்களும் கற்பனையாகவே இருந்துவிடக்கூடாதா என்ற இரக்கத்தையும்,பதற்றத்தையும் உண்டாக்கக்கூடியவை.

ஒரு சிறுகதையை பொருத்தமுள்ள வகையில் நீளமாகவும், ஒலி, ஒளிக் காட்சிகளோடு பார்த்து அனுபவித்த வகையில் உணரச் செய்யும் துல்லியத்தோடும், விவரணைகளோடும் எழுதுபவர் இவர். துல்லியமாக எழுதும் அதேசமயத்தில் நவீன இலக்கியத்திற்கேயுரிய ஒரு அம்சமான புதிர்த்தன்மையோடு எழுதுவதும் வாசகருக்குக் கூடுதல் பரிமாணத்தை அளிப்பவை. பிரமாண்டமும்,வசீகரமும், கவித்துவமும் கொண்டுள்ள மொழி நடை இவருடையது. ஒழுக்கம், காமம் ஆகியவற்றின் மீதான சமூக மதிப்பீடுகளை தன் கதைகளின் வழியாகக் கேள்விக்குட்படுத்துபவர்.

ஜே.பி.சாணக்யா 1973ல் கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் எம்.அப்பாத்துரை,எம்.கே. தெய்வக்கன்னி. இருவருமே ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.சிதம்பரம் நடராஜர் சன்னதியில் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப் பயிற்சியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டும் பயின்ற இவர் ஓவியரும்கூட.

தற்போது, சென்னையில் தங்கி தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரின் சிறுகதைத்தொகுப்புகள்

1. என் வீட்டின் வரைபடம் ( காலச்சுவடு)
2. கனவுப்புத்தகம் ( காலச்சுவடு)


தொடர்ந்து சிறுகதைத் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.கதா விருது பெற்றவர்.


இணையத்தில் வாசிக்க

1. ‘சித்திரச் சாலைகள்'- சிறுகதை

2. பூதக்கண்ணாடி- சிறுகதை



(என் வீட்டின் வரைபடம் தொகுப்பு மற்றும் சில கதைகளை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டது)

நன்றி - தடாகம்

Tuesday, March 16, 2010

அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது


அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது.

இடம் பெற்றுள்ள படைப்புகள் :

நேர்காணல்

“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்” – மனுஷ்யபுத்திரன்

நேர்காணல் : பொன்.வாசுதேவன்

சிறுகதைகள்

  1. ரெஜியின் பூனை – ரௌத்ரன்

  2. கோழை – சாந்தன்

  3. சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே (தமிழில் : நதியலை)

  4. பிண ஆய்வாளன் – கமலாதாஸ் (தமிழில் தி.சு.சதாசிவம்)

  5. முதல் வேளை – மா ஃபெங் (தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன்)

கட்டுரைகள்

  1. இடம் பெயர்ந்த மனிதர்கள் : எட்வர்ட் செய்த்தும் ஓரியண்டலிசமும் – எச்.பீர்முகமது

  2. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? – வா.மணிகண்டன்

  3. மத்தியக்கிழக்கின் வாழ்வும் திரையும் – அய்யனார் விஸ்வநாத்

  4. கைந்நிலை சில பாடல்களும், கனிமொழியின் அகத்திணையும் – லாவண்யா சுந்தரராஜன்

  5. பின்நவீனத்துவத்தின் மறைவும் அதற்கு அப்பாலும் – ஆலன் கிர்பி (தமிழில் : மோகன ரவிச்சந்திரன்)

வாழ்க்கைத் தொடர்

  1. சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா – ரா.கிரிதரன்

நூல் அறிமுகம்

  1. எட்றா வண்டியெ – வா.மு.கோமு

  2. தாய்ச்சொல் – தொல்.திருமாவளவன்

  3. குதூகலப் புங்காவின் சித்திரம் – மொழி

கவிதைகள்

  1. யாத்ரா

  2. கார்த்திகா வாசுதேவன்

  3. என்.விநாயகமுருகன்

  4. தாராகணேசன்

  5. ராமலஷ்மி

  6. கதிர்பாரதி

  7. சேரல்

  8. விதூஷ்

  9. அஜயன்பாலா சித்தார்த்

  10. யாழினி

  11. நேசமித்ரன்

  12. ஹேமி கிருஷ்

  13. தர்ஷாயணி

  14. பா.ராஜாராம்

  15. ராகவன் ஸாம்ஏல்

  16. அனுஜன்யா

  17. கௌரிப்ரியா

  18. அனிதா

  19. பாரதி வசந்தன்

  20. வெய்யில்

  21. ஒழவெட்டி பாரதிப்ரியன்

  22. மணி ஜி (தண்டோரா)

  23. எம்.கார்த்திகைப்பாண்டியன்

  24. ஆதவா

  25. நந்தாகுமாரன்

  26. மதன்

  27. கென்

…………………………………………………………………………………………………………………………….….

தமிழ்ப் படைப்புலகின் தனித்துவக்குரலான ‘அகநாழிகை‘ இதழ் சிற்றிதழ்களுக்கே உரித்தான பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டு வருவதால் வினியோகம் முதலிய விஷயங்களில் முழுமையாக செயல்படுவதற்கான முயற்சிகள் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு சந்தாதாரர்களே முக்கிய ஊக்கமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அகநாழிகை இதழ் தற்போதைக்கு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் பரவலான வினியோகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே இதழ் வேண்டுவோர் நேரடியாக கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

அகநாழிகையின் ஆண்டு சந்தா ரூ.200 இரண்டாண்டு சந்தா ரூ.350 ஆயுள் சந்தா 3000 புரவலர் நன்கொடை ரூ.2000

சந்தா மற்றும் அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை

ICICI வங்கிக்கணக்கு எண். 155501500097 – P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH என்ற கணக்கில் செலுத்தி பெறலாம்.

ONLINE வழியே புத்தகங்களை பெற :

http://www.ezeebookshop.com மற்றும் http://www.udumalai.com

அகநாழிகை விற்பனைக்கு கிடைக்கும் புத்தக கடைகள்

நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.

டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை.

பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம், மதுரை.

அகநாழிகை இதழை கமிஷன் அடிப்படையில் வினியோகிக்க முகவர்கள் தேவை. தொடர்பு கொள்க.

படைப்புகள் அனுப்ப சந்தா, விளம்பரம் மற்றும்

அனைத்து தொடர்புகளுக்கும் :

பொன்.வாசுதேவன் – 9994541010

ஆசிரியர் – அகநாழிகை

aganazhigai@gmail.com

Tuesday, March 2, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் - கவிஞர் கரிகாலன்

படைப்பாளிகள் அறிமுகம்
கவிஞர் கரிகாலன்

எல்லோருக்கும் காணக்கிடைக்கும் சராசரிக் காட்சிகளிலிருந்துகூட கவிஞன் சில கண்டறிதல்களை அடைகிறான்.அந்த மாற்றுக் கோணத்தை, சிந்தனையை கற்பனையும், கவித்துவமும் கலந்து தருகிறான். கவிஞர் கரிகாலன் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.அதிகாரத்தின் முன் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம்,வஞ்சிக்கப்படும் எளிய மனிதர்களுக்கான அக்கறை,அரசியல்,காமம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகடி, அலாதியான கற்பனை, காட்சிகளை முன்வைத்துவிட்டு ஒதுங்கி நின்றுகொள்ளுதல், தொன்மையையும் நவீனத்தையும் இணைத்து ஒரு மாயக்காலத்தை உருவாக்குதல் , சிதையும் தொன்மம் பற்றிய கவலை, குழந்தைகள் உலகம் என இவரின் கவிதைகளின் தன்மைகள் பலதரப்பட்டது. 90 களுக்குப் பின் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் என்கிற இவரின் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல் இவரின், திறனாய்வு ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் சிறந்தவொரு நூல்.கவிதைகளோடு நின்றுவிடாமல் திறனாய்வு, கட்டுரைகள், நாவல் எழுதுவது, சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடு என இயங்குகிறார்.மேலும் களம் புதிது என்கிற சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் இதழைத் தொடர இருப்பதாக அறிய நேர்ந்தது.

தொன்னூறுகளிலிருந்து இலக்கியவெளியில் இயங்கிவரும் கரிகாலன் 1965ல் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணுபுரிகிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புனை
விலக்கியத்திற்காக கதா விருதும், கவிதைக்காக ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முன்னணிப் புதின எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது தம்பி இரத்தின.புகழேந்தி அவர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் எனும் 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது. அதன் பின்னைட்டையில் காணப்படும் வரிகளே, இவரைப் பற்றின செறிவான, ஆழ்ந்த திறனாய்வுக்கு சான்றாக அமைந்துள்ளது. அது பின்வருமாறு

தொன்னுறுகளில் உருவான தனித்துவம் மிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை.தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.ஐவகை நில அடையாளங்கள் திரிந்து உருவாகிக்கொண்டிருக்கும் ஆறாவது நிலத்தையும், அபத்தங்களின் கூட்டிசையாக மலர்ந்திருக்கும் நம் நலவாழ்வையும் கேலிசெய்யும் இத்தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரது தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது'

இவரின் படைப்புகளாவன

1.அப்போதிருந்த இடைவெளியில்- கவிதைகள்
2.புலன்வேட்டை- கவிதைகள்
3.தேவதூதர்களின் காலடிச்சத்தம்- கவிதைகள்
4.இழப்பில் அறிவது- கவிதைகள்
5.ஆறாவது நிலம்- கவிதைகள்
6.அபத்தங்களின் சிம்பொனி- கவிதைகள்
7.கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
8.நவீனத்தமிழ்க் கவிதையின் போக்குகள்- கவிதைத் திறனாய்வுக் கட்டுரைகள்
9. நிலாவை வரைபவன் - நாவல்

தொடர்ந்து இதழ்களிலும், இணைய இதழ்களிலும் இயங்கிக்கொண்டு வருகிறார்.இவர் பற்றி எழுத எனக்கு ஏற்பட்ட அளவுக்கு, சொற்களும் சிந்தனையும் பக்குவமும் ஏற்படவில்லை என்றே உணர்கிறேன்.எனவே, அது குறித்துப் பேச இவரின் கவிதைகளையே கூடுதலாகத் தருகிறேன்.

கரிகாலன் கவிதைகள்

டயானா மரணமும்
கிளிண்டன் காதல் லீலைகளும்
பஞ்சாயத்து தொலைக்காட்சியில்
பார்த்தபின் விவாதமாயிற்று
டீக்கடை பெஞ்சுகளில்

முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா
நிலுவை கிடைக்குமா
இருள் சூழ் மர்மமாயிற்று

கழிப்பறைக்கு வழியற்று
ஒழுங்கிகளில் புதர் தேடும் பெண்கள்
பிரியங்கா அப்படியே பாட்டி ஜாடை
துணிமழித்து உட்கார்ந்தபடி
பேசிக்கொண்டார்கள்

வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி
லட்சியமானபோது
மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்
உலகத்துக்குத்தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி
***

ஹிட்லர் முசோலினியென கலிங்கத்திற்கு முந்தைய
அசோகர்களைக் கடந்து வரும் வரலாற்றின்
உருளும் பாதங்கள் சமகாலத்தில் வந்து நிற்கிறது
வாஷிங்டன் நகரின் பிரதான வீதியில்
வெள்ளை மாளிகையினுள் அமைதியிழந்து
திரியும் மன நோயாளி
பாவம் புத்தனால் கைவிடப்பட்டவன்
விதம்விதமான ரத்தக் குழம்புகள் கொண்டு
அவன் உலகப்படத்தை
அமெரிக்காவாய் வரைந்து பழகுகிறான்

நிலா

கிணற்றுக்குள்
விழுந்த நிலவை
சிறுவர்கள்
வாளியால் இழுத்தார்கள்
கனம் தாங்காது
கயிறறுந்து
நிலா மீண்டும்
கிணற்றுக்குள் விழுந்தது
பாதிக்கிணறுவரைத் தூக்கியதை
பெருமையோடு
பார்ப்பவர்களீடமெல்லாம்
சொன்னார்கள்
அச்சிறுவர்கள்

விடுதலை

பள்ளிக்கூடம் போக
அவசியமற்ற பூனைமீது
பொறமை சிறுவன் கார்க்கிக்கு
ஒரு நாள் ஒப்பந்தமாக
பூனைவால் அவனுக்கும்
புத்தகப்பை பூனைக்கும் மாறியது
சீருடை அணிந்து பூனை பள்ளிக்குப்போக
நாள்முழுதும்
கொய்யாமரத்தில் ஏறித்தாவினான்
சன்னல் கிராதிகளைப் பற்றி
வீட்டைக் குறுக்குவாட்டில் சுற்றினான்
கரப்பான் பூச்சிகளையும்
எலிக்குட்டிகளையும் துரத்தித் திரிந்தான்
கடிகாரத்தில் பள்ளி முடியும் நேரத்தைப்
பார்த்த பூனைக்கார்க்கி
விசனம் கொண்டான்
கார்க்கியாய்த் திரும்புவதற்கு விருப்பமற்று
தான்தான் பூனையென்று
வீட்டைத் துறந்து வெளியேறினான்
பள்ளீக்கூடத்திலிருந்து திரும்பிய பூனை
கார்க்கியைக் காணாமல் திடுக்கிட்டது
பின் அழுதுகொண்டே ஹோம் வொர்க்
செய்யவும் ஆரம்பித்தது.

மயக்கம்

ஆடுகளத்து நியான் சூரியன்
பெருவிரலின் முனைவழியே
எல்லா வீடுகளுக்குள்ளும்
பகலை அழைத்துவரும்
சோடியம் மினுங்கலை
நட்சத்திரமென மயங்கும்
அயல்தேசப் பறவை திசைகுழம்ப
உயிர்விடும் சுவர்மோதி
அசல்சூரியன் தலைகாட்டும்போது
மின்னொளியென நம்பி
அசட்டு ஆமைக்குட்டி
கடற்கரைப் பரப்பெங்கும்
பாதம்வேக அலையும்
இரண்டும் கெட்டான் பொழுதில்
மருத்துவமனையொன்றில்
தேவையில்லாத விசயங்களில்
நுழைத்துவிடுவதுபோல்
துருத்திக்கொண்டிருக்குமென் மூக்கை
கொஞ்சமாய் வெட்டிக்கொண்டு
வெளியேறுகையில்
வரவேற்க வாசலில் வளர்ந்து நிற்கிறது
பறவைகளின் புழக்கமற்ற சிறுகுன்று
அதனின்றும் வீழுகின்ற அருவியுடன்
***

இசைவற்று
அசைகிறது
சிறகுகள்
பறவை உடலின்
வலி தெரியாமல்
***

தென்னங் குருத்துகளை
அழிக்கும் ஆனைக்கொம்பு
வண்டுகள் பற்றி அறியாத கவிஞனுக்கு
இளநீரையருந்தும்
உரிமை இருப்பதுபோலவே
குடும்பம் நடத்தத் தெரியாத அவன்
சம்சாரியாகவுமிருக்கிறான்
***
சாகச விரும்பிகளின்
கரவொலிக்கிடையில்
காற்றில் அலைந்து
புறா கொண்டுவரும்
மேஜிக் நிபுணர்
அடுத்த காட்சி துவங்குமுன்
வேர்வை நெடிவீசும்
கருப்பு அங்கியை அகற்றி
அரங்கின் பின்புறம் செல்கிறார்
சாதாரண மனிதராக
நின்று கொண்டிருக்கும்போது
சுதந்திரமாக உண்ர்கிறார்
அவ்வெண்ணத்தின் குறியீடாகவொரு
சிகரெட் பற்றவைத்து
புகைவளையங்களைக்
காற்றில் செலுத்துகிறார்
***
குளிருக்கு இதமாக
வயிற்றை
எரியும் இண்டிகேட்டரில்
வைத்திருக்கும்
கருவுற்ற பல்லி.
***

நாயும் பிழைக்கும்

கறக்கும் பசுவை விற்று
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிவருகிறான் குடியானவன்
தொழு நோயாளியின் பிச்சைப்
பாத்திரத்தில் சில்லறைகளை
திருடிக் கொண்டிருக்கிறான் போலீஸ்காரன்
துப்பாக்கியை அடகுவைத்து
மதுப்போத்தல்களைப் பெறுபவன்
ராணுவவீரன்
சாதகமான தீர்ப்பொன்றிற்காக
வேசியை இனாம் பெறுகிறான்
அறங்கூறுபவன்
தனது கழிப்பறையை நவீனப்படுத்த
தேசத்தின் ஒரு பகுதியை உலகவங்கியில்
அடகுவைக்கிறாள் அரசி
முச்சந்தியில் எழுந்தருளியிருக்கும்
தெய்வத்தின் முகத்தில்
சிறு நீரைப் பெய்துவிட்டு ஓடுகிறது
தெரு நாயொன்று.
***
ஒரு வார்த்தையை
வீசியெறியுங்கள்
உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ
அது ஒரு வேலையை
செய்துகொண்டிருக்கும்.