Wednesday, September 12, 2012

வாடாத மலரன்னன்,கவிஞன்



அண்மையில் கவனத்தை இழுத்த, ரசித்த கவிதை...
(தேவதேவன்)


வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது,
அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(
பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!
என்றாள் அவர் மகள்.

நெஞ்சுக்கூடு லேசாகிவிட்டதை உணரமுடிகிறது. இனி, கவிதை குறித்த என் சிறு பகிர்வு. இக் கவிதையில் கவிஞனும், தற்செயல் நேர்ச்சியும் ஒன்றுகலந்து ஒரு அருமையான கவிதை கிடைத்துவிட்டது. நவீன கவீதைகளுக்கு உள்ள சிறப்பிடமே இந்தக் காத்திருத்தல்தான்.ஒரு சூழலுக்கோ, தலைப்புக்கோ தானாகவே முயன்று எழுதுகிற கவிதைகள் ஒருவகைஇவை திட்டமிட்டு எழுதப்படுவன. அவ்வகைக் கவிதைகளை நீட்டித்துக்கொண்டே போகமுடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வகைக் கவிதைகளில் வெளிப்படும் திறமை வேறுவகையானது.ஆனால், கவிதையுணர்வால் எப்போதும் விழிப்புணர்வோடு காத்திருக்கும் கவிஞனுக்கு காண்கின்ற எத்தனையோ காட்சிகள் கவிதைகளாகும்.கண்ணால் கண்ட காட்சிகள், நிகழ்வுகள் போனறவற்றால் தூண்டப்பட்டு கூடவே கற்பனையையும் கலந்து எழுதப்படுகின்றன, நவீனக் கவிதைகள். மேற்சொன்ன கவிதை திட்டமிட்டு எழுதியதல்ல என்பது திடமாகிறது.இந்தக் கவிதை தேவதேவன் மூலமாக நிகழ்ந்தேறியிருக்கிறது, அவ்வளவுதான்.

அன்று அந்த அதிகாலைத்
தோட்டத்துள் ஒரு மலர் முன்
கூடுதலாய்ச் சில கணங்கள்
நின்றுகொண்டிருந்தபோது...

கூடுதலாய்ச் சில கணங்கள் என்கிற வரி, கூடுதல் கவனத்திற்குரியது. இப்படி நிற்கிறவன்தான் கவிஞன். கவிஞனல்லாதவர்களும் ரசனையால் இப்படி நிற்கமுடியும். ஒருவகையில் இவர்கள் கவிஞனைவிட நற்பேறு பெற்றவர்கள் எனலாம். தன் மனவெழுச்சிகளை சொற்களில் பரிமாற்றும் இன்னல்  இவர்களுக்கில்லை, என்கிற வகையில்.
இதோ, இப்போது இந்தக் கவிதையை ருசித்ததோடு நின்றுவிடாமல் ,முன்வைத்து நான் எழுதிக்கொண்டிருப்பது போல்தான்.

கவிஞன் மலரின் முன் நின்றுகொண்டிருக்கும்போது மனதில் கவிதை வரிகள் பின்வருமாறு பிறக்கிறது...

வாடா மலரொன்று
எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது
தன் காதலன் வரவெண்ணி…’

எப்போதும் என்கிற இடம் சிறப்பானது. இம் மூன்று வரிகளை கவிதையில் முதலில் வைத்ததும் சிறப்பு. இவ் வரிகள் மட்டுமேகூட தனித்த கவிதையாய் நிற்கும் வல்லமையோடிருக்கிறது.இப்படி ஓயாமல் மனதிற்குள் எழுதியெழுதி அழித்துக்கொண்டேயிருப்பதுதான் கவிஞனின் வேலை, மற்றும் காத்திருத்தல். அவற்றுள் தேர்ச்சி பெறுகிற வரிகளே மற்றவர்களுக்குப்  பகிர்ந்துகொள்ளும்படி கிடைக்கிறது.
கவிஞனும் வாடாத மலர்தான். கவிதைகளுக்காக காதலோடு காத்திருப்பவன்தான்.

அவர் பின்னொரு அரவம் கேட்டது:
”(
பெண்களுக்கான)
அழகுக் குறிப்புகளில் அது ஒன்று, அப்பா!
என்றாள் அவர் மகள்.

மகளின் தற்செயலான பேச்சு எத்தனைப் பொருத்தம் கொண்டு அமைந்துவிட்டது ! கவிதையை எங்கெங்கோ கூட்டிச் சென்றுவிடுகின்றன மேற்காணும் வரிகள்.ஒருவேளை தற்செயல் நிகழ்வாய் அல்லாமல் கவிஞரின் கற்பனையாகவும் இருக்கக்கூடும்.எனினும் வாய்ப்பு மிகக் குறைவென்றே எண்ணுகிறேன்.

நெகிழ்ச்சியாலும், பரவசத்தாலும் மேலெழுகிற கவிதை.

அழகுக் குறிப்புதான் இந்தக் கவிதை!