Thursday, April 14, 2011

நீ-யும்


கேரம் போர்டில்
இப்போது உன்முறை
நீ
வெற்றிகளை அடுக்கவில்லை
வெற்றியை நோக்கி முன் நகரவில்லை
எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை
துணை போகவில்லை
ஒருமுறை சுண்டிவிட்டாய்
எதிலும் தொட்டுக்கொள்ளாமல்
சென்றுவந்தது
இம்முறை
விளையாடிவிட்டாய்
நீயும்

Sunday, April 10, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த சுகுமாரன் கவிதைகள்


கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

உன் பெயர்

உன் பெயர்‍-

கபாலத்தின் உட்கூரையில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணை வரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணி நிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச்சொல்லும் வினோதக் கோரிக்கை*
கொய்யப்பட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம்,அலைச்சலில் ஆசுவாசம்,குதூகலம்
நீயே என் துக்கம்,பிரிவின் வலி

காலம் அறியும்:
உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு

நீயே அறிபவள்
நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரோ உனக்கு?

உன் பெயர்-
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
*தனது காதலின் பரிசாகக் காதை அறுத்துத் தந்த வான்கா என்ற ஓவியன்
**யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்
தனிமை இரக்கம்

வந்து போகின்றன பருவங்கள் தடம் புரண்டு
வசந்தம் நாட்கணக்கில்
எனினும்
வருடம் முழுதும் இலைகள் உதிர்கின்றன‌
வெற்றுக் கிளைகளாய் நிமிர்ந்து
கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை

திசைகளில் விழித்து நிராதரவாய் வெறிக்கின்றன‌
உனது நீர்த்திரைக் கண்கள்
அலைகளின் இடைவேளைகளில் உயிர்த்துத் ததும்புகிறது
உனது சோக முகம்
காலடி மணலின் துகள்கள் பிளந்து அலைகிறது
உனது பெயரின் தொனி

வேட்டை நாய் விரட்டல்,
இளைப்பாறுதலின் சங்கீதம் என
அகல்கிறது நாட்களின் நடை

வெளியில் போகிற எப்போதும்
காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை
இதோ உன்னிடமிருந்தும்
ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்

இசை தரும் படிமங்கள்
1.
விரல்களில் அவிழ்ந்தது தாளம்
புறங்களில் வீசிக் கசிந்தது குரல்

கொடித் துணிகளும்
சுவர்களும் விறைத்துக்கொண்டன‌

ஈரம் சுருங்கிய பிடிமணலாய்ப்
பிளந்தேன்
தொலைவானின் அடியில்
நூலறுந்த பலூன்

யாரோ தட்டக் -' கதவைத் திற'
வெளிக்காற்றில்
மழையும் ஒரு புன்னகையும்
(ஹரிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும்)
2.
புல்லாங்குழல்
சகல மனிதர்களின் சோகங்களையும்
துளைகளில் மோதிற்று

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்
ரத்தமாய்ப் பெய்தன‌
அறையெங்கும் இரும்பின் வாசனை

மறு நிமிஷம்
என் உப்புக் கரைந்து எழுந்தது
மல்லிகை மணம்
(ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கு)
3.
மழை தேக்கிய இலைகள்
அசைந்தது
சொட்டும் ஒளி

கூரையடியில் கொடியில் அமர‌
அலைக்கழியும் குருவி

காலம்-‍ ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன‌
கண்ணீரும் சிறகுகளும்
(யேசுதாஸுக்கு)
4.
குழம்பியிருந்தது சூரியன் அதுவரை
கரை மீறிய கடல்
என் சுவடுகளைக் கரைத்தது
இசை திரவமாகப் படர்ந்து உருக்க‌
செவியில் மிஞ்சியது உயிர்
திசைகளில் துடித்த தாபம்
சகலத்தையும் பொதிந்துகொள்ள விரிந்தது

அண்ணாந்தால்
கழுவின கதிர்களுடன் வெளியில் சூரியன்
(ஸாப்ரிகானுக்கு)

முதல் பெண்ணுக்குச் சில வரிகள்
இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்
அல்லது
இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என‌
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதி காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப் பொருட்களுடன் குதூகலமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ, காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்து வைக்கும் கதவுகளில்
வெறுமையின் தாள ஒலி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச் சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப் பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப் பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்க‌ள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப் போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலைந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக மிஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்
இன்னும் நான் நேசிக்கும் முதல் பெண் நீ...



நதியின் பெயர் பூர்ணா

முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறௌக்குத் தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில்
தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்

போதைக்கும்
கனவுக்கும் இடைப்பட்ட‌
காலமற்ற பொழுதில் வந்தாய் நீ

கருவறை விட்டெழுந்த அவ்சரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை

கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள்
துளியாய் விழுந்தேன்

'யாதுமாகி நின்றாய் காளி
என்கும் நிறைந்தாய்'
2.
பூர்ணா நதியின் மடிப்புகளில்
ஒடுங்க மறுத்தது
அலைகிறது சூரிய வெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத‌
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நொடியில்
பூமி மயங்கி
மீண்டும் விழித்தது

கற்படியின் குழியில் தேங்கிய நீர்
வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில் குளிர்.
நதியும் அத்வைதிதான்‍
போதையும் கனவும் போல‌

கடவுளைப் புணர்ந்த ஆனத்தம் கொண்டாட‌
நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய‌
நீயும்
மூழ்கிக்கொண்டிருக்கிறோம் தேவி
ஒரே நதியில்