Friday, February 27, 2015

சிறுவூடல் திருவிழா


மாநகரப் பேருந்து நிலையம் என்பதால்
பழக்கூடைக்காரியும்
அவள்மீது பட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவனும்
’டிப்டாப்’பாகவே இருந்தார்கள்
பழக்கூடைக்காரி கையில்
கிண்ணத்திலிருந்து உருட்டி எடுத்த
சோற்றுக்கவளத்தை நீட்டிக்கொண்டிருந்தாள்
அவன் வாய் மென்றுகொண்டும்
வலது கை கவளம் ஏந்திக்கொண்டும்
இடது கை போதும் எனச் சைகைக்
காட்டிக்கொண்டும் இருந்தன
பார்வையாலாயே கடிந்துகொண்ட
பழக்கூடைக்காரி
கொஞ்சூண்டு உருண்டையை
கிண்ணத்தில் சிந்தினாள்
அவன் மீண்டும் ’போதும்’ என
மீண்டும் கொஞ்சம் கிண்ணம் திரும்பியது
அவன் கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தான்
அவள் பார்வையாலேயே மிரட்டிக்கொண்டிருந்தாள்
நான் நகர்ந்துவிட்டேன்
எனக்கு நிறைந்துவிட்டது
- நன்றி : ஆனந்தவிகடன்(4.3.15)