Tuesday, July 26, 2011

ஜெமோ பரிந்துரைத்த முகுந்த் நாகராஜன் கவிதைகள்


அகி

என்ன விளையாட்டு பிடிக்கும் என்று
கண் நிறைய மை தடவிக்கொண்டு வந்த
U.K.G பெண்ணிடம் கேட்டாள்
குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தியவள்.
யோசித்து மெதுவாக,
‘’ஓடிப் பிடிச்சி’ என்றாள்.
யாருடன் விளையாடுவாளாம்?
‘அகி கூட’ என்றாள்.
‘அகி’ என்றால் அகிலாவா?
தலை ஆட்டினாள்,
ஆமாம் என்றோ இல்லை என்றோ.
யாராம் அந்த அகி?
ஸ்கூல் ஃப்ரண்டா? இல்லையா?
அப்போ அக்காவா?அதுவும் இல்லையா?
பக்கத்து வீட்டுப் பெண்ணோ?
பின்னே யாராம்?
‘தெரியாது’ என்றாள் மெதுவாக.
முதலில் சிரித்தாலும்
அப்புறம் புரிந்துகொண்டேன்.

ரயில் பூக்கள்

பெட்டியில் இருந்த பெண்களை எல்லாம்
‘அக்கா’ என்று அழைத்தபடி
பூ விற்றுக் கொண்டிருந்தாள்,
சின்ன கைகளால் முழம் போட்டபடி.
முழம் சின்னதாக இருப்பதாக
முணுமுணுத்தவளுக்கு
தன் கை ரொம்ப பெரியது என்று
சொல்லிச் ச்மாதான செய்தாள்.
ஒரு சில அக்காக்களுக்கு அவளே
தலையில் வைத்துவிட்டாள்.
கைக்குழந்தைக்கு ஒன்றிரண்டு உதிரிப்
பூக்களைக் கொடுத்துக் கொஞ்சினாள்.
வியாபாரம் முடித்ததும்
கூடையை காலி சீட்-ட்ல் வைத்துவிட்டு
பெட்டியின் வாசலில் வந்து நின்றாள்;,
வேகக் காற்று கூந்தல் கலைக்க.
பாவாடையைக் கையில் பிடித்துகொண்டு
‘லா-லா’ என்று பாடிக்கொண்டு
மயில் போல முன்னும் பின்னும் மெதுவாக
ஆடிக்கொண்டிருந்தாள்,
அடுத்த ஸ்டேஷனில் நிற்கும் முன்னே
பூக்கூடையுடன் குதித்து இறங்கி
அடுத்த பெட்டிக்குப் போகும் வரை.

விளையாட்டுப் பிள்ளைகள்

இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்.
ஒன்று
ஊஞ்சலில் நின்றும்,உட்கார்ந்தும்,
ஒற்றைக்காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக்கொண்டும்
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?

அம்மாவின் தோழி

நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில்
எங்கள் அம்மாவின் பழைய தோழி விசாரித்து
வந்தாள் அம்மாவின் பழைய தோழி ஒருத்தி,
அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து.
உட்காரச் சொன்னதைக் கேட்காமல்
வீட்டை சுற்றிச் சுற்றி வந்து பார்த்தாள்.
‘இங்கே ஒரு ரூம் இருந்ததே’ என்று கேட்டால்
என்ன சொல்லமுடியும்?
வீடு மட்டுமா?ஊரே மாறிப்போயிற்றாம்.
ஸ்டேஷனில் இருந்து பார்த்தாலே
வீடு தெரியுமாம் அப்போது.
ஒரே கடைகளாய் இருக்கிறதாம் இப்போது.
‘ நீதான் பெரியவனா, நீ சின்னவனா?’
என்று கேட்டாள்.
அப்போதெல்லாம் நாங்கள்
சின்னச் சின்ந்தாக இருப்போமாம்.
‘ஒரு விதத்தில் உங்களுக்கு உறவுகூட’
என்று சொல்லி
நிறைய உறவுகளின் வழியாக அதை நிறுவினாள்.
அந்த மாதிரி எங்கள் அம்மாவின் பெயரை
சுருக்கிக் கூப்பிட்டது அவள் மட்டும்தானாம்.
அதேமாதிரி, அம்மாவும் அவள் பெயரை
ஒரு தனி மாதிரியாகக் கூப்பிடுவாளாம்.
அது என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
நல்லவேளையாக அம்மாவே வந்துவிட்டாள்.
தோழியை அடையாளம் கண்டுகொண்டு
கூப்பிட்டாள் ஒரு பெயர் சொல்லி.
அதை எங்களால் யூகித்திருக்கவே முடியாது.

காயத்ரி

லதா எப்படி இருப்பாள் என்று
எனக்குத் தெரியும்.
ப்ரியாவை கூட்டத்திலும்
கண்டுகொள்வேன்.
ரயிலில் பக்கத்திலோ, எதிரிலோ
வரும் விதயாவை எப்போதும்
அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன்.
கோவில் கர்ப்பூர வெளிச்சத்தில்
சட்டென்று தெரிந்துவிடுவாள் கல்பனா.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்,
நந்தினியையோ, நளினியையோ,
விஜயாவையோ,உஷாவையோ
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்
கண்டுபிடித்துவிடுவேன்.
அன்றொரு நாள்
குறும்பு மின்ன வந்த ஒரு காயத்ரி
தன்னை வசந்தி என்று
அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
‘ நீ வசந்தி அல்ல: காயத்ரி.
கொஞ்சம் யோசித்துப் பார்’ என்றேன்.
யோசித்துப் பார்த்தாள்.

தோசை தெய்வம்

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.

Monday, July 18, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த ராஜசுந்தரராஜன் கவிதைகள்


வறட்சி
வானுக்கு இல்லை இரக்கம்.பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடைசொல்லி
துக்கித்து இருக்கிறது வீடு
அடி உறைகளும், கிணற்றுக்குள்
வாய்வறண்டு
சுருண்டுவிட்டன.
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?

கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும்பாறை.
காயம்

பூத்தபோது அடடா
அழகு என்றேன்.
காய்த்தபோது
காலில் குத்தியது நெருஞ்சி.

மேகங்கள் பொங்கி வெளுத்தது.
காற்றும் திசைமாறி மேல்கீழாய்ப் பாய்கிறது.
என்ன தந்தாய் நீ எனக்கு,
சில நரைமுடிகளைத் தவிர?

நம் அம்மணம்:
திரை என்று கொண்ட
ஆற்றோட  நாணல்ப் புதர்;
நீ அள்ளிப் பருகிய வாய்க்கால்-
இருக்கிறதா இன்னும்
உன் நினைவுகளில் ஈரம்?

நான் போகிறேன்.
வானம் கருக்கொண்டு மீண்டும் மழை வரலாம்
பூமி பூச்சூடி மேலும் பொலிவுறலாம்
மறப்பதற்கில்லை
நெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்
சிலுவை
ஒடுங்கிவிட்டது ஊர்.

விளக்குகள் தலைகவிழ்ந்து நிற்கிற
தெருப்பாலையில்,
தனிமையில் மெனக்கெடும் மனித ஓர் உரு
அலைகிறேன்.

தாலிபட்டறியாத கழுத்தில் இவளைக்
கைம்மை கவிந்த முகம் வரித்துக் காணவா
விலகி மீண்டது என் பாதை?

அரையிருள் அந்தி அந்நாள்
இவள் அவன் மிதிவண்டிச் சுமைதூக்கி தொட்டு
இணங்கி அவனோடு குணுங்கியதாகக்
கண்கள் எனது கண்டதென்ன மாயை!

கெக்கலிக்கிறது ஆந்தைப் பெருங்குரல்.

நான் பற்றிக் கொணர்ந்த கை இந்நேரம்
மார்போடு மகவு அணைத்து
உறங்கிக்கொண்டிருக்கும்.

லாமா சபத்கானி? லாமா சபத்கானி?
இவள் விழிக்குரல் ஓல உருக்கம்
என் உளச்செவி சிலம்பச் சிலம்ப

அலைகிறேன்.

தகுதி

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.



ஆரோகணம்

சுவர் தன் ஒருபகுதியைக்
கதவு என நெகிழ்க்கிறது

சுதை கறுத்த கோபுரம்
விடிவெயில் மொண்டு குளிக்கிறது

வெளி-
வெளியெங்கும் செறிகிறது ஒலி.

விசும்புக்கு நினிர்கிறது
ஒரு விமானத்தின் கதி.
எல்லை
அலை வறண்டது கடல்.
ஒளி வறண்டது வான்.
உயிர் வறண்டது காற்று.

நிலமெங்கும் சருகுகள்.
நெய்தவனே பிணமாகித் தொங்கக்
கிழிந்துபட்டது சிலந்திக்கூடு.

தெரிகிறது சாவின் பாசறை.
திரும்பாது இனி என் படை.

அம்மா
வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்.
கொதிகலன் நாள்ப்பட நாள்ப்பட இற்றுப்போகும்.

வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்,
செடிகளுக்கு,
விதையிலைகள் வேண்டாதவையாகிவிடும்.

குஞ்சுகள்
கோழியாகும்.
சேவல்கள் கூட வரும்.
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்து விழும்.

காற்றோடுபோய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்.

சாவிலும் கூடத்
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்.


துண்டிப்பு

மழெ இல்லெ தண்ணி இல்லெ.

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ.

அடைக்கலாங் குருவிக்குக்
கூடு கட்ட
என் வீடு சரிப்படலெ.

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்.
             -ராஜசுந்தரராஜன்