Tuesday, December 16, 2008

சொப்புக்கடை

அவ்வளவாக இதுவரை கண்டுகொள்ளப்படாத குழந்தைகளின் உலகை மிக அழகாகப் பதிவு செய்த கவிஞர் முகுந்த் நாகராஜன் அளவுக்குப் பிரபலமானவராக இல்லாதவராயினும் ‘செஞ்சி தமிழினியன்’ அவர்களும் குழந்தைகளின் உலகை மிக அழகாகவே ,அனுபவித்து எழுதியுள்ளார்.இது இவரின் 2 வதுத் தொகுப்பு.எழுத்தாளர் பெருமாள் முருகன் அணிந்துரை எழுதியுள்ளார்.அதில்,’இலக்கியம் கவனம் கொள்ள வேண்டிய ஒரு பகுதியை தமிழினியன் இத்தொகுப்பில் கவிதைகளாக ஆக்கியுள்ளார்.குழந்தைகள் கொடுக்கும் மகிழ்வையும் அவர்கள் உலகத்திற்குள் நிலவும் அற்புதக் கற்பனைகளையும் பார்வையாளராகவும், உள்ளே நுழைய முயல்பவராகவும் இருந்து கவிதைக்குள் கொண்டு வருகிறார்’ என்கிறார். எளிமையும் நேரடித்தன்மையும் ,மண்மணக்கும் வாசமும் நிறைந்த நல்ல கவிதைகள் நிறைந்து இருந்தபோதிலும் தட்டச்ச எளிதான கவிதைகள் மட்டும் மாதிரிக்கு சில.
1.
வெறும் கையில்
பப்புக் கடைந்து
அம்மாவுக்குக் கொஞ்சம்
அப்பாவுக்குக் கொஞ்சம்
தாத்தாவுக்குக் கொஞ்சம்
ஆயாவுக்குக் கொஞ்சம்
அத்தைக்குக் கொஞ்சம்
அக்காவுக்குக் கொஞ்சம் என
கொடுத்துவிட்டு
வெளியே போகிறாள்
காக்காவுக்கு வைக்க.

2.
பொம்மையைக்
கால்மேல் போட்டு
பால் ஊற்றுகிறாள்
வேண்டாம் என்றாலும்
‘பாப்பா’ என முத்தம் கொடுக்கிறாள்

தூங்கும்போது
கண்டிப்பாய்
பொம்மைக்கும்
தனித் தலையணை போட்டு
போர்த்தி விடுகிறாள்

பாப்பாவாக இருப்பதை விடவும்
அக்கா என்பதே
அவளுக்குப் பெருமிதம்.

3.
ஒவ்வொரு இரவும்
சொல்லும் கதைகளால்
மகிழ்ச்சியுற்றுத் தூங்கிடுவாள்

முன்பு சொன்ன கதைகளை
இப்போது மாற்றிச் சொல்ல
இப்படி இல்லப்பா
அப்படி இல்லப்பா என்று
அவள் கதை சொல்ல
நான் தூங்கிப் போகிறேன்
4.
அடிவாங்கி
அழுதபடியே உறங்குகிறாள்
தலையணை
தனியே கிடக்கிறது

போர்த்திவிடுகிற துணியைத்
தள்ளி விடுகிறாள்

எப்படியும் நடு இரவாகும்
கை கால்களை
என் மேல் போட்டுக்கொண்டு
தூங்க…
5.
கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்

பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.
6.
”தொனத் தொனன்னு பேசாதே
போயி படி” என விரட்டப்பட்ட பெரியமகள்
முழுதும் மூடாத கதவு வழியே
படிப்பதுபோல பாவனை செய்கிறாள்.

எச்சில் நனைந்த
ஓரிரு சொற்களைச்
சின்ன மகள் சொல்லும்போது
மகிழ்ந்து
ஆளுக்கு ஆள் புகழ்ந்து
முத்தம் கொடுக்கிறோம்.

உள்ளேயிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாள்
பெரிய மகள்.
7.
நிலா கேட்டு
அடம் பிடிக்கும் குழந்தை
பசியாறியது நாய்க்குட்டி.
8.
கூடத்தில்
விளையாடிக் கொண்டிருக்க
புதிதாய் நுழைந்தவர்கள்
இங்க வா
உன் பெயர் என்ன?
சாப்பிட்டையா? எனக்
கேள்விகளை அடுக்க
அழுது
அவசரத்தில் ஓடுகையில்
அவளைப் போலவே
சில பொம்மைகளும்
உடைந்து போகின்றன.

ஆசிரியர்; செஞ்சி தமிழினியன்
(9443877641)

பக்கம்-80
விலை-ரூ.50.00

வெளியீடு
நறுமுகை(ஜெ. ராதாகிருஷ்ணன்)
29 35, தேசூர்பாட்டை,
செஞ்சி-604202
விழுப்புரம் மாவட்டம்.
(9486150013)

Monday, October 13, 2008

இனியாவது ஒரு விதி செய்வோம்.










முடிவே தெரியாத நீளமான குகைக்குள் பயணம் செய்ய நேர்வதாக கனவுவரும்போது,எப்பேர்ப்பட்ட தூக்கமாக இருந்தாலும் ,கலைந்து எனக்கு விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது.மூச்சுத்திணறலாகவும்,நெஞ்சு முழுக்க ஏதோ பாரம் அழுத்தி வலிப்பது போலவும் உணர்கிறேன்.மீண்டு(ம்) தூக்கம் வர நெடுநேரம் ஆகிவிடும்.ஒருமுறை,திரைப்படம் பார்க்க நண்பர்களோடு ஒரு சுமாரான,பழைய திரையரங்குக்குச் சென்றிருந்தபோது, நுழைவுச்சீட்டு தரும் இடம் மிக நீண்ட,ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய அளவு அகலத்தோடும்,எங்கோ தொலைவில் ஒரேயொரு சிறிய ஜன்னல் மட்டுமே வைக்கப்பட்டதுமாக,மூடப்பட்டுக் குகைபோல இருப்பதைக் கண்டநான், பயந்துபோனவனாக,படம்பார்க்கவே வரவில்லை என்று சொல்லியிருக்கிறேன்.இன்னொருமுறை சிறுபிள்ளையாய் இருக்கும்போது,மற்ற பிள்ளைகள் என்னை கொசுவலைக்குள் அடைத்து,நான் வெளியேற முடியாதவாறு பிடித்துக்கொண்டபோது,நான் அலறிக் கூச்சல்போட்டது இன்னமும் என்னாலேயே நம்ப முடியாததாகவும்,ஆச்சரியமாகவும், நன்றாக நினைவில் உள்ளது.கேளிக்கைவிளையாட்டு மையங்களில்(THEME PARK)நீண்ட குழாய்களின் வழியே சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு மிகப்பரிய சவாலாகப்பட்டது.பாதிவழியில் சிக்கிக்கொண்டால்..?நினைக்கும்போதே மூச்சுத்திணறுகிறது.(ஆனாலும் BLACK THUNDER சென்றிருந்தபோது சவாலில் வென்றுவிட்டேன்.சில சமயம் உண்மையைவிட ,கற்பனை அதீதமான உணர்வுகளை ஏற்படுத்திவிடுகிறது) அதாவது,இதுபோன்ற நேரங்களில் நானே நினைத்தாலும்,நினைத்தமாத்திரத்தில் என்னால் வெளியேவரமுடியாது.இப்போது ,நான் எதுகுறித்து எழுதவிருக்குறேன் என்று உங்களால் ஊகித்திருக்கமுடியும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவுமே மனித உயிர்களைப் பலிவாங்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல.ஆனால் அறிவியல் வளர,வளர ஆபத்துக்களும் ,விபத்துக்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது.சாலைப் போக்குவரத்தில்,தொடர்வண்டிகளில்,மின்சாரத்தால் என உயிர்ப்பலி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.இவ்வாறு உயிர்ப்பலி வாங்கும் கண்டுபிடிப்புகள் எப்போது முழுமையடைகின்றன என்றால்,அந்த அறிவியலால் விபத்துக்கள் இல்லாத ஒரு நிலையை எட்டும்போதுதான்.இந்நிலையையும் உள்ளடக்கியதாகவே கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும்.பாதுகாப்பு விதிமுறைகளும்,உறுதியான பின்பற்றலும் நடந்தேற வேண்டும்.
ஆழ்துளைக்குழாய்கள் அமைத்துத் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும்பொருட்டு வளர்ந்த விஞ்ஞானம்,அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவும் செய்யவேண்டும்.இதுவரை எத்தனையோ அப்பாவி சிறுவர்களை நாம் இழந்துவிட்டபோதிலும்,இன்றளவும் தொடர்கதையாகவே இருக்கிறது என்பது நாமனைவரும் வருந்தவேண்டிய,வெட்கப்படவேண்டிய ஒரு செயல்.குழந்தைகள் ஒன்றும் குடிபோதையில் குழிக்குள் விழுவதில்லை.சென்றவாரம்கூட 2 வயதேயான சிறுவன் 150 அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டான்.இதில், அச்சிறுவனின்-சிறுவன்கூட அல்ல,குழந்தை-தவறு என்னவாக இருந்துவிடமுடியும்.150 அடி ஆழத்திற்குக் குழிதோண்டத் தெரிந்த விஞ்ஞானத்திற்கு அதிலிருந்துக் குழந்தைகளைக் காப்பாற்றத் தெரியவில்லை. ஏற்கனவேயுள்ள குழிக்கு இணையாக மற்றொரு குழி வெட்டுவதும்,ராட்சத இயந்திரங்களை வரவைப்பதும் ,ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்களைவைத்தே மண்அள்ளுவதும்,சிறுவன் மூச்சுவாங்கும்பொருட்டு ,குழாய்கள் வழியாக காற்றுசெலுத்துவதும் என்று மணிக்கணக்கில்,நாள்கணக்கில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதுவரை, ஏதுமறியா அப்பிஞ்சுக் குழந்தையின் நிலையை,தவிப்பை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.போதாக்குறைக்கு குழிக்குள் நீர்மட்டம் வேறு உயரந்து கொண்டேயிருக்கிறது.நீங்கள் கற்பனைக்கு ஒதுக்கும் ஒரு வினாடி, இறந்த சிறுவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பிரார்த்தனைக்கான நேரமாக இருக்கட்டும்.என்னதான் சூரரராகவே,வயதில் பெரியவர்களாக இருந்தாலுமேகூட,அந்த நிலையில் அவரால் என்ன செய்துவிடமுடியும்? இந்த மாதிரியான சூழலில் அக்குழந்தையின் நிலையை,தவிப்பை நான் விளக்கிக்கொண்டிருக்கப் போவதில்லை.அதை வெறும் சொற்களால் விளக்கிவிடமுடியாது.அவரவர் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூட இத்தொடர் நிகழ்வுகளுக்கு வருத்தமும் ,கண்டனமும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது.
செய்ய வேண்டியது.
வேலையை முடித்ததும் குழியை மேலே மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.
சிறு பிள்ளைகள் அப்பகுதிக்கு வரமுடியாத அளவுக்குச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இம்மாதிரி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாதவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.அப்போதாவது பயந்து செய்வார்கள் அல்லவா.

வந்தபின் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்று இவ்விசயத்தில் மிகவும் பொருந்தும்.

  வெளியிட்டு மேன்மைப்படுத்தமைக்கு நன்றி-கீற்று.காம்
 15-10-08

Monday, October 6, 2008

என் வீடு எங்கே?



அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.மணிமாறனுக்கும் விடுமுறை நாள்.
அதிசயமாய் மணிமாறன் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியால் அவன் மனைவிக்கும் மகிழ்ச்சியாயிருந்தது.ஓய்வாகப் படுத்துக் கொண்டு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘குப்’பென்று வலது பக்க மார்பு ,தோள்பட்டை வலி எடுத்தது.தன் மனைவியை அழைத்து தைலம் தேய்த்துவிடச் சொன்னான்.அவளும் பதறிப்போனவளாக தைலம் தேய்த்துவிட்டாள்.இது என்ன புதுத் தொல்லையாக இருக்கிறதே என்று யோசித்தபோது, அன்று காலையில் கிரைண்டரை நகர்த்தி வைத்தது நினைவுக்கு வந்தது.அதன் விளைவுதான் என்று நம்பினான். கொஞ்ச நேரம் முன்பே லேசான வலி ஏற்பட்டிருந்தது என்றாலும் அலட்சியம் செய்துவிட்டான்.ஆனால் இப்போது வலி மிகவும் கடுமையாக இருக்கவே மருத்துவமனை செல்வதென தீர்மானித்தான்.’ஏதாவது ஒத்தடம் கொடுக்க ஏற்பாடு செய்’ என்று மனைவியிடம் சொன்னான்.அவளும் தெருவிலிருந்து கொஞ்சம் மணலை எடுத்து வந்து வாணலியில் இட்டு சூடுபடுத்தி துண்டில் சுற்றி எடுத்துவந்து ஒத்தடம் கொடுத்தாள்.சற்று ஆசுவாசமாகயிருந்தது.பிறகு,தன் இரு சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு தனியாகவே மருத்துவமனைக்குப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால்,துறைவாரியான சிறப்பு மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.ஒரேயொரு பொது மருத்துவர் மட்டுந்தான்.மருத்துவமனை வளாகத்தில் தன் வண்டியை நிறுத்தியபோது ,வழக்கத்திற்கும் மாறாக,மருத்துவமனையே வெறிச்சோடிப் போயிருந்தது,ஞாயிற்றுக் கிழமை என்பதால்.யாரோ பின்னாலிருந்து அழைப்பதுபோல் உணர்ந்தான்.திரும்பிப் பார்த்தபோது,கூப்பிடு தொலைவில் ஒரு இளைஞன்,ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தான்.’இவன்தான் அழைத்திருப்பானா?’ என்ற சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது ,அம்மூவரும் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தபடியால்,சற்று நம்பிக்கையோடு அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.இப்போது சற்று தொலைவிலேயே அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.’இவள் முருகனின் மனைவியாயிற்றே! அப்படியென்றால்,அவள் பக்கத்தில்..அவன்..அவன்...முருகன்தானே? ஆமாம்.முருகனேதான்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டான்.முருகன்,மருத்துவமனையில் கொடுக்கப்படும் உள்நோயாளிகளுக்கான ஆடைகள் அணிந்திருந்தான்.சக்கரம் வைத்த கம்பிக்கூடு போன்ற ஒரு நடைபழகும் சாதனத்தை கையில் பிடித்துக் கொண்டு,அதன் உதவியோடு நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.அந்த இடம் மருத்துவமனை நோயாளிகள் இளைப்பாறும் தோட்டம்.அவர்களை நெருங்குவதற்கு முன்னால் மணிமாறனுக்கு,முருகன் பற்றிய கடந்த கால நினைவுகள் மின்னல் வேகத்தில் சரசரவென வந்தது.

மணிமாறனும்,முருகனும் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிபவர்கள்.சமவயதுக்கார இளைஞர்கள்.நெருங்கிய நணபர்கள் இல்லையென்றபோதிலும்,நல்ல அறிமுகம் உள்ளவர்கள்.ஒருமுறை நிறுவனத்தில் நடத்தப்பட்ட நடனப்போட்டிக்கு,மணிமாறன்,முருகன் மற்றும் சில நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பயிற்சி எடுத்து,மேடையில் ஆடி,முதல் பரிசையும் பெற்றார்கள்.இதுபோன்ற சமயங்களில் பழகுவதுதான்.மற்றபடி,அவ்வப்போது வழியில் எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்,கொஞ்சம் பேசிக்கொள்வதும்,கையசைப்புமாக சென்றுவிடுவார்கள்.அப்போதெல்ல்லாம் பரபரப்பாகவே தென்படுவான் முருகன்.வண்டியில் சீறிக் கொண்டு வேகமாய்த்தான் போவான்.நடனப்போட்டி முடிந்த அன்று வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் எல்லோரும் குடிக்கச் சென்றார்கள்.இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மணிமாறன் இதுபோன்ற சமயங்களில் மட்டுமே குடிப்பவன்.அதுவும் அளவோடுதான்.ஆனால்,முருகனோ நாள்தோறும் குடிப்பவன்.அதுவும் அளவில்லாமல்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திறகும் மேலாகவே இருக்கும் முருகனுக்கு விபத்து நடந்து.ஒருநாள் இரவில், ஆளரவமற்ற ஒரு சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தபோது பேருந்து இடித்துவிட்டதாம்.பிறகு நீண்ட நேரம் கழித்தே நள்ளிரவில் சில கிராமத்து மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள்.பலத்த அடியென்றும்,பிழைப்பதே கடினம் என்றும் பேசிக்கொண்டார்கள்.’குடிச்சி அழிஞ்சிப் போகுதுங்க.இதுங்களுக்கெல்லாம் வேணும்’என்று விஷயம் கேள்விப்பட்டபோது உடன்பணிபுரியும் ஒருவர் ஈவிரக்கம் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை இப்போது நினைத்தாலும் மணிமாறனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்திருந்ததாகவும்,சுயநினைவே இல்லாமலும்,கண்ணைத் திறக்காமலும் நெடு நாட்கள் இருந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தான்.ஆறேழு மாதங்களுக்குப்பிறகே கொஞ்சம் தேறி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்ததையும் கேள்விப்பட்டிருந்தான்.உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டப் பிறகாவது போய்ப்பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துக்கொண்டிருந்தவன்,நண்பர்கள் சொன்னதைக் கேட்டு அந்த எண்ணத்தையே கொஞ்ச நாளைக்குத் தள்ளி வைத்து விட்டான்.’ஆளே அடையாளம் தெரியலப்பா.நாமப்போனா அவனால நம்மை யாரையும் அடையாளங்கண்டுபுடிக்க முடியல.நிக்கவே முடியல அவனால.ஒடஞ்சி ஒடஞ்சி விழறான்.பேச்சே வரல.ழே..ழே.. ழ்ழ..ழ்ழங்கிறான்.ரொம்பக் கொடுமை.ஏந்தான் போனோமோன்னு ஆயிடுச்சி.அவன் பொண்டாட்டியை கண்டிப்பாப் பாராட்டணும்ப்பா.இந்தச் சின்ன வயசிலேயே எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொறுப்பாப் பாத்துக்குது.நம்ம வீட்டுப் பொம்பளைங்கக் கூட இப்படியெல்லாம் பாத்துக்குவாங்களான்றது சந்தேகந்தான்.அப்பப்பா.ரொம்பக் கொடுமை’

இவையெல்லாம் நடந்துமுடிந்து சில மாதங்களுக்குப் பிறகு இன்றுதான்,கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இதோ இப்போதுதான் மீண்டும் பார்க்கிறான்.இபோது அவர்கள் மூவரையும் நெருங்கிவிட்டிருந்தான்.
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் எடுத்த எடுப்பிலேயே.முருகனைப் பார்க்கவே கொடுமையாக இருந்தது.உருக்குலைந்து என்று சொல்வோமே அது இதுதான் என்று உணர்ந்தான்.ஆளே அடையாளம் தெரியாத அளவு சிதைந்து போயிருந்தான்.மொட்டையடித்து முடி முளைத்திருந்தது.காயம்பட்ட சுவடுகள் நிறைய, ஆடைகள் மூடப்படாத பாகங்களிலேயே தெரிந்தது.கழுத்துப் பகுதியில் தெரிந்த ஒரு குழி மணிமாறனை என்னவோ செய்வது போலிருந்தது.பலூனை ஊதிவிட்டு உள்ளுக்குள் இழுத்து ஒரு முடிச்சுப் போட்டால் அந்த இடத்தில் ஒரு குழி தெரியுமே அதுபோல இருந்தது.’இவனாலதான் இவன் மனைவியே நமக்குத் தெரியும்.ஆனா இப்ப என்னன்னா இவன் மனைவியை வச்சிதான் இவனை அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி ஆயிடுச்சே’என நினைத்துக்கொண்டான். அண்ணா என்று தன்னை அழைத்ததும் மணிமாறனுக்கு சங்கடமாயிருந்தது.பரவாயில்லையே அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு, பேசுகிற அளவுக்கு தேறியிருக்கிறானே என்று நினைத்து சந்தோசப்பட்டவனுக்கு வா போ என உரிமையாய் பேசியவன் அண்ணா என்கிறானே.அவனின்நிலை மேல் கொண்ட கழிவிரக்கமா அல்லது இன்னமும் தன்னை சரியாக அடையாளம் காணவில்லையா? சுதாரித்துக் கொண்டு பேசத்துவங்கினான்.’என்ன முருகா.எப்படி இருக்க?’
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் மறுபடியும்.
என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றவன்,’இன்னுங்கொஞ்ச நாள்லே வீட்டுக்குப் போயிடலாம் முருகா’என்று சொல்லிக்கொண்டே அவன் மனைவியைப் பார்த்தான்
.’உங்க பேரு என்னா’ என்றாள்.’
மணிமாறன்’
’அதான் மணின்னுக் கூப்பிட்டாங்களா?’ என்றாள்.அப்படின்னா ஆளை நல்லாத் தெரியுது என்று உணர்ந்தான்.அவன் முதுகில் ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை லேசாக சட்டைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவனை அந்தப் பெண் கைத்தாங்கலாக்ப் பிடித்து,பிளாஸ்டிக் பையை வெளியே உருவி,அவனை ஒரு பெஞ்சில் உட்கார வைத்தாள்.மூத்திரப்பை போலும். இப்போது அவன் மனைவி,’ஆமா, வீட்டுக்குப் போலாம்னு சொல்றியே.வீடு எங்க இருக்குது?’என்றாள்.
’ஸ்கூல் பக்கத்தில’
‘எந்த ஸ்கூல், உன் பையன் படிக்கிறானே அந்த ஸ்கூலா? அந்த ஸ்கூல் பேரு என்னா?’
‘லாலிபாக்’ .லால்பாக் என்பதைத்தான் அவன் அப்படிச் சொன்னான்.
‘சரியாச் சொல்றாரா’ என்றான் மணிமாறன்.
‘இல்ல. அது நந்தவனம்.’
‘சரி,வீட்டுக்குப் போகணும்னு சொல்றியே.வீட்டுக்கு எப்டிப் போகணும்?’ அவன் மனைவி அவனை சோதித்துக் கொண்டிருந்தாள்.வைத்தியமும் கூடத்தான்.
‘லெப்டில போகணும்’ சாலையைக் காட்டியபடியே சொன்னான். அந்நேரம் ஒரு வடமாநிலத்து முதியவர் அவர்களை வேடிக்கைப் பார்த்தவாறு கடந்து சென்றார்.முருகன் அவரிடமும்,’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ அழாத குறையாக கெஞ்சினான்.
முதியவர் மொழி தெரியாமல் திருதிரு வென விழித்தபடியே கடந்துசென்றார்.மணிமாறன் மீண்டும் முதுகுவலி நினைவுக்கு வந்தவனாக முருகனின் மனைவியிடம் சொல்லிவிட்டு அரை மனதோடு உள்ளே போனான்.சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் வந்து மறுபடியும் தன் வண்டியை நகர்த்திக்கொண்டே அவர்களிடம் வந்தான்.இப்போதும் முருகன்,’ ’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ என்றான்.வண்டியை நிறுத்திவிட்டு அவன் தோளை ஆதரவாகத் தொட்டுக்கொண்டு இந்த முறை,’நான் நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன் முருகா.இப்போ வேற ஒரு இடத்துக்குப் போறேன்.சரியா?’ குழந்தையிடம் பேசுவதுபோல் பேசினான்.முருகனும் இப்போது ஒரு குழந்தை மாதிரிதானே என எண்ணினான்.அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகனுக்கு வணக்கம் சொல்லியவாறே வந்துகொண்டிருந்தார்.யார்யாரெல்லாம் புதுப்பது நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.மணிமாறன் தயக்கத்தோடும்,கனத்த இதயத்தோடும் செய்வதறியா ஒரு மனநிலையில் வண்டியை எடுத்துப் புறப்பட ஆரம்பித்தான்.முருகனின் மகன் இதுவெதுவும் அறியாதவனாக சற்றுத் தள்ளி மணலில் விளையாடிக் கொண்டிருந்தான்.மணிமாறனின் முதுகுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டுக்கொண்டிருந்தது.ஆம்புலன்ஸ் டிரைவரிடம் முருகன் சொல்லிக்கொண்டிருந்தான்.’அண்ணா,வண்டிய எடுத்துனு வாண்ணா.என்னக் கொண்டுபோய் வீட்டுல விட்டுடுண்ணா’


பின்குறிப்பு ; இந்த முருகனை ஒன்றரை வருடங்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு நாள் நீங்கள்கூடப் புகைப்படத்தோடுப் பார்த்திருக்கலாம்.மாநில அளவில் கராத்தேப்போட்டியில் பரிசு வாங்கியப் புகைப் படம்தான் அது.



Tuesday, September 2, 2008

கவிதை,நான் & வைரமுத்து

கடந்த 03-11-2007 அன்று கவிப்பேரரசு அவர்களுக்கு சொந்தமான பொன்மணி மாளிகையில் நடந்த இளம் கவிஞர்களின் பாராட்டுவிழாவில் கவிப்பேரரசு அவர்கள் ஆற்றிய உரையின் சில துளிகளை உங்களோடு பகிரந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.


குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவிற்கு வைரமுத்து அவர்கள் நடுவராக இருந்து 10 வாரங்கள்,தலா 10 கவிதைகள் தேர்ந்தெடுத்து மொத்தம் 100 கவிதைகள் இடம் பெற்றிருந்ததை, அனைவரும் அறிந்திருக்கலாம்.இவற்றில் வாரம் ஒரு கவிதை சிறப்புப் பரிசு பெற்றது.சிலர் மீண்டும் மீண்டும் இடம் பெற்றமையால் மொத்தம் 85 கவிஞர்கள் தேர்வாகியிருந்தனர்.அவர்களில் அடியேனும் ஒருவன்.என்னுடைய கவிதை ‘திரை’ என்பதாகும்.(இதே வலைப்பூ வில் இடம்பெற்றுள்ளது) 2 வது வாரத்தில் இடம்பெற்றது.அதற்குப் பிறகு முயன்றும் தேறவில்லை.குங்குமம் அறிவித்திருந்த பரிசுகள் அல்லாது வைரமுத்து அவர்களும் பரிசும் விருந்தும் தந்து நேரில் வாழ்த்தியது மிக நல்ல அனுபவமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை புதிதாக வாசிக்கத் தொடங்கி எழுதவும் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் அச்சில் ஏறிய என் முதல் கவிதை இது.பலருக்கும் இது முதல் கவிதையாக இல்லாதிருந்தபோது நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தேன்.இத்தனைக்கும் எப்படி அனுப்ப வேண்டும் என்ற வழிமுறைகள்கூட ஏதும் அறியாமல் அஞ்சல் அட்டையில் அனுப்பி இருந்தேன்.தேர்வானதே பெருமகிழ்ச்சியாக இருந்தபோது,வைரமுத்து அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெறும் அறிவிப்பு வந்தபோது,அந்த நாளுக்காகக் காத்துக் கிடந்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.உணவு வேளையின்போது கவிஞரிடம் பலரும் அளவளாவியும்,தன்னுடைய படைப்புகளை அவரிடம் காண்பித்தும் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.நான் அன்புத் தொல்லை அதிகமாகி விட வேண்டாமே என்ற நோக்கில் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.தமிழகம் முழுவதிலுமிருந்து நிறைய பேர் வந்திருந்தனர்.ஒரு பையன் மட்டும் கவிப்பேரரசுவை மிகவும் தொல்லை செய்து கொண்டிருந்தான்.இதை நன்றாக கவனித்த கவிஞர், மிகப் பொறுமையோடும் அன்போடும் எல்லோருடனும் பேச வாய்ப்பளித்துக் கொண்டு வந்தவர் ,இந்தப் பையனை ஒரு கட்டத்தில் எப்படி சமாளிப்பதென யோசித்து லேசான,காட்டமான ஒரு பார்வை பார்த்து வைத்தார்.ம்ஹூம்.அதற்கெல்லாம் அவன் அசருவதாகவே தெரியவில்லை.இப்படிப்பட்ட தேர்வாகும் கவிதைகளை எழுதியவர்களும் எப்படி இதுபோல் இங்கிதம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர் என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.சற்று ஓய்வான ஒரு இடைவேளையில் நான் கொஞ்சம் பேசினேன்.’அஞ்சலட்டையில் வந்த கவிதையென்றும் பாராமல் தேர்வு செய்த்தற்கு நன்றி’யைச் சொன்னேன்.’நல்ல கவிதைகள் ஓலைச்சுவடியில் வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்’ என்றார்.’அனுபவித்து எழுதும் கவிதைகள் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்கிறீர்களே?அப்படியென்றால் நிறைய எழுதுவது சாத்தியமா?’ என்று கேட்டேன்.அவர்,’ஆமாம் அனுபவித்து எழுதும்போது சிறப்பாக இருக்கும்.ஆனால் அனுபவம் என்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?ஒரு தாயின் பிரசவ வலியை உங்களால் எப்படி அனுபவிக்க முடியும்? ஒரு மரணத்தை உங்களால் எப்படி அனுபவிக்க முடியும்? மற்றவர்களின் அனுபவர்களிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்’ என்று உடனடியாக பதில் சொன்னார்.வியப்பாக இருந்தது.

அந்நாள் வரை அவர் எழுதிய ஒரு புத்தகத்தையும் நான் படித்தவனில்லை.நிகழச்சியில் எல்லா கவிஞர்களுக்கும் ஒரு parker pen மற்றும் அவருடைய நூல் ஒன்றும் பரிசளித்தும்,புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.நிறையப் படித்தலின் மூலம் நிறையப் படைக்க முடியும் என்று வலியுறுத்தினார்.அதன் அடையாளமாகவே படிக்க புத்தகம்,படைக்க பேனா தந்தார்.மேடையில் கவிதை பற்றி அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை சுருக்கமாக எழுதுகிறேன்.

1.கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை

1.வட்டாரக் கவிதைகள்

2.சமகாலக் கவிதைகள்(contemporary poetry)

3.Universal poems(எல்லாப் பகுதிகளுக்கும் ,முக்காலங்களுக்கும் பொருந்தும் தன்மை கொண்டவை)

இவை எல்லாவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளிலிருந்தே உதாரணங்களை எடுத்து விளக்கினார்.(என்னுடையது எந்த ரகம்?)

2’.கவிதை எங்கும் இருக்கிறது.இங்கே இங்கே’ என்று தலையை மேலே கீழே இடது வலது என எல்லாப் பக்கத்திலும் திருப்பியபடியே சொன்னார்.

3.அடைமொழி,உவமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு எளிய தரமான கவிதைகள் எல்லோரும் எழுதியிருப்பதைப் பாராட்டினார்.

4.’உரைநடையை எவ்வளவு வேண்டுமானாலும் இழுக்க முடியும்.ஆனால் கவிதை அசைக்க முடியாதது.’

5.’கவிஞர்களுக்குத் திமிர் வேண்டும்’.(நாளிதழ்களில் வந்த செய்திகளில் இதுதான் தலைப்பு)

6.’கவிதைகளை எழுதிவிட்டு சுடச்சுட இதழ்களுக்கு அனுப்ப வேண்டாம்.எங்காவது எடுத்து வைத்துவிடுங்கள்.ஒரு ஆறு மாதம் கழித்து எடுத்துப் பார்க்கும்போது அது மீண்டும் கவிதையாகத் தெரிந்தால் அனுப்புங்கள்.’

7’.தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களில் ஒரு பத்துப் பேராவது ஒரு வைரமுத்துவாக,ஒரு தமிழன்பனாக,ஒரு அப்துல் ரகுமானாக,ஒரு மேத்தாவாக வருவீர்கள் என்பது உறுதி’.(இது எனக்குப் பொருந்துமா?)

8.’போதையின் பின்னால் போய்விடாதீர்கள்.தமிழ் தரும் போதையைவிட வேறெது வேண்டும் நமக்கு.’

அவரைச் சந்தித்துவிட்டு வந்த அப்போதே ,அதே உத்வேகத்தில்,அனுபவித்து ஒரு கவிதை எழுதினேன்.பிரசுரமும் ஆனது.அது ‘நாணயம்’ என்ற கவிதையாகும்.என் வலைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.கவிதை எங்கும் இருக்கிறது என்பது எத்தனை உண்மை!கண்ணோட்டம்தான் தேவை.கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல் அவருடனான சந்திப்பு எனக்கொரு கவிதையை உடனேயே தந்துள்ளது.என் முதல் கவிதை அச்சில் ஏறி மிகச் சரியாக ஒரு வருடம் ஆகிறது.மெல்லத் திரும்பிப் பார்க்கும்போது இன்று வரை 13 கவிதைகள்,2 கதைகள் சிறியதும்,பெரியதுமாய் இதழ்களில் இடம்பெற்றுள்ளதைப் பார்க்கிறேன்.மெல்ல என் கவிதைகளின் போக்கும் வாசிப்பின் போக்கும் மாறிக்கொண்டு வருவதாக உணர்கிறேன்.தமிழன்னையின் ஆசிக்காக தலைதாழ்ந்து வணங்கும் மகன் நான். தமிழன்னை என்னை வளர்த்தெடுப்பாள்.உங்களையுந்தான்.

Saturday, August 30, 2008

காய சண்டிகை-இளங்கோ கிருஷ்ணன்

எதிர்க் கவிதைகள்
உயிர்மை,காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களின் பின் அட்டையில் அந்நூல் பற்றிய அறிமுக,மதிப்புரை காணப்படுகிறது.சில சமயங்களில் ,புத்தகத்தினுள்ளே எழுதப்பட்ட உரையிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்டும்,அதை எழுதியவரின் பெயரும் அச்சாகியிருக்கும்.ஆனால் சில சமயங்களில் அவ்வாறில்லாமல் மதிப்புரை மட்டுமே பின்னட்டையில் காணப்படுகிறது.இவ்வாறு எழுதுபவர்கள் யாரென்ற ஆவல்,அவற்றைப் படிக்கும்போது எழுவது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.அத்தனை துல்லியமாகவும்,செறிவோடும்,எழுதும் திறன் பெற்றவர் தன் பெயரைப் போட்டுக் கொள்ளாததில், ஒரு அசாத்திய முதிர்ச்சி தென்படுகிறது. அதுபோலவே,காயசண்டிகை என்ற கவிதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்டிருக்கும் மதிப்புரையை இங்கு எழுதுவதே சரியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.இதைவிடப் பெரிதாய் நான் என்ன எழுதிவிடமுடியும்? தவிர,நான் எழுதுவதெல்லாம் வெறும் நூல் அறிமுகம் மட்டுந்தானே!
‘இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.பொதுவாக இவரது கவிதைகளின் மையச்சரடு,ஆட்டத்தின் விதிகளை அறியாத’சூதாட்டத்தின் காய்களை’ப்போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல்.எனினும்,தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல்.காலம்,சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல்.
உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்’
எளிய உரைநடையில் கவித்துவத்தோடு சிறந்த கவிதை எழுதுவது என்பது அறைகூவலானது என்கிறார் மனுஷ்யபுத்திரன்.நவீன கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாற்று நிலவும் சூழலில் இவ்வாறாக எளிய கவிதைகள் வருமானால் வரவேற்கத் தகுந்ததுதான்.முகுந்த் நாகராஜன் போன்ற கவிஞர்கள், நவீன இலக்கிய உலகில் குறிப்பிடத் தகுந்தவர்களாக ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் போன்றோர் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.மிகவும் எளிமையோடு காணப்படும் இவரது கவிதைகள் உள்ளபடியே சிறப்பாகவும் இருக்கிறது.
சமூக விமர்சனத்தை,அங்கதச்சுவையோடு, எதிர்ப் பார்வையில் ,புதிய கண்ணோட்டத்தில் உணர்த்துகிறது பெரும்பாலான கவிதைகள்.குறிப்பாக சமூகத்தில் நிலவும் வன்முறைக் கலாச்சாரத்தை.
ஒரு சமூக விரோதியின் குரலாக, சில கவிதைகள் ஒலிப்பது ஆச்சரியத்தைத் தரலாம்.அவற்றின் மூலம் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பதே இவற்றின் நோக்கம்.
பத்தி வடிவில் சில கவிதைகள் தென்படுகின்றன.சில கவிதைகள் குறியீட்டுத் தன்மை கொண்டனவாய் இருப்பதாக புரிந்து கொள்கிறேன்.என் அறிவுக்கு எட்டாத, புரியாத சில கவிதைகளும் இருக்கிறது.புரிந்த,பிடித்த கவிதைகளிலிருந்து இரண்டை மட்டும் கீழே தருகிறேன்.முன்முடிவுகள் ஏதுமில்லாமல் புத்தகக் கடைகளிலோ,நூலகங்களிலோ, புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு நாம் ஒரு முடிவுக்கு வருவோமல்லவா?அந்த வகையில்தான் நான் இந்த நூலை ,சில கவிதைகளை உங்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்கிறேன்.

பேனா-1

மேசையில் இருந்து தவறி விழுந்த நாளொன்றில்
தலையில் பலத்த அடிபட்டுப்
பைத்தியம் பிடித்துவிட்டது என் பேனாவுக்கு
அதைக்கொண்டு
காதலிக்குக் கடிதம் ஒன்று எழுத முயன்றபோது
அது பசியின் கொடூரத்தையும்
வறியவன் இயலாமையையும் எழுதியது
வசந்தத்தின் கொண்டாட்டத்தை எழுதப் பார்த்தபோது
கலவரங்களின் பீதியையும் உயிரின் வலிமையையும் எழுதியது
கடவுளர்களின் மகிமையை எழுதப் பணித்தபோது
மதங்களின் குரோதத்தையும் படுகொலைகளையும் எழுதியது
கலைகளின் மேன்மையை எழுதப் பார்த்தபோது
தேசங்களின் பகைமையையும் ஆயுதங்களின் மூர்க்கத்தையும் எழுதியது
மிகுந்த திகைப்பும் அதிர்ச்சியுமாய் நான் இவைகளுக்கான
தீர்வுகளை எழுத முயன்றபோது
அது எனக்கொரு கொலை மிரட்டல் கடிதத்தை எழுதியது
*************************
ஒரு சாத்தானின் டைரிக்குறிப்புகள்

இன்று காலை கழிப்பறையில்
ஒரு கரப்பானுக்கு ஜலசமாதி தந்தேன்
பின்
பலவீனமான வலுவற்றயென்
கரங்களால்
ஒரு செடியைப் பிடுங்கி எறிந்தேன் காரணமின்றி
ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவுதான்
வழிபாட்டுத் தலங்களில் வெடிகுண்டு வீசுபவர்கள்
பாக்யவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
பொருளும் அதிகாரமுமற்ற
சாமானியன் என்ன செய்ய முடியும்
ஒரு கரப்பானையோ
சிறு செடியொன்றையோ இம்சிப்பதன்றி

$$$$$$$$$$$$$$$
நூல் விபரம்
காயசண்டிகை
(இளங்கோ கிருஷ்ணன்)
காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை,
நாகர்கோயில் 629001
மின்னஞ்சல் kalachuvadu@sancharnet.in

விலை 45 ரூபாய்
72 பக்கங்கள்

Wednesday, August 27, 2008

என்னை உலுக்கிய கவிதை



அண்மையில்தான் படிக்க நேர்ந்தது,பின்வரும் கவிதையை.முதல் நான்கு வரிகளைப் படித்ததுமே ,அதிலுள்ள உண்மையும் ,வேதனையும் பகீரென்று இருந்தது.மிக நேரடியாகவும்,எளிய நடையிலும் எழுதப்பட்ட கவிதை இது.படித்தவுடனே வலைப்பூவில் ஏற்றிவிடவேண்டும் என்று முடிவுசெய்து விட்டேன்.இனிவரும் நாட்களில் அவ்வப்போது இதுமாதிரி எனக்குப் பிடித்த,ரசித்த கவிதைகளை இங்கே மறுபார்வைக்கு வைக்கலாமென இருக்கிறேன்.என்ன சொல்கிறீர்கள்? இதுவரை படிக்கக் கிடைக்காதவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்,நல்ல கவிதைகளை மேலும் பரவலாக்கிய மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்கும்.கவிதாயினி மாலதி மைத்ரிக்கு அடியேனின் மனமார்ந்த பாராட்டுகள்.



தீப்பற்றி எரியும் நிர்வாணம்






நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ

தற்கொலைக்கு முனையும் பெண்கள்

முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை

மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்

சொந்த உறவுகளால் தற்கொலைபோல்

கொல்லப்படும் பெண்கள்

இதில் விதிவிலக்கு



மரணத்திற்குப் பின்னான

தங்கள் நிர்வாணத்தை நினைத்து

அஞ்சும் அவர்களை

ஆடை ஒருபோதும் காப்பதில்லை

ஏனைய உறவுகளைப் போலவே

அவையும் துரோகம் இழைக்கின்றன



பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்

சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை


தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்


- மாலதி மைத்ரி
அணங்கு செப்டம்பர் - டிசம்பர் 2007

Tuesday, August 26, 2008

பொய்யாய் கனவாய்-பாலமுரளிவர்மன்

ஒரு திரைப்படம் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு (ஆட்டோ சங்கர்,சந்தனக்காடு மற்றும் சில)வசனம் எழுதியிருப்பவர்தான் பாலமுரளிவர்மன்.ஏற்கனவே 2500 நாட்கள் (episode) கடந்திருந்த செய்தியை செய்தித்தாளில் படித்திருக்கலாம். இவர் எழுதியிருக்கும் புதினம்தான் பொய்யாய் கனவாய்.
டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லேண்ட்மார்க் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும், தமிழில் முதல் நூல் இது.இதுவரை இந்தி,வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல்வேறு படைப்புகளை வெளியிட்டிருக்கும் தகவல்கள் பதிப்புரையில் காணப்படுகிறது.வடிவமைப்பும் மிக நேர்த்தியாக,படிக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது.இந்நூலுக்கு ஈரோடு தமிழன்பன் அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை மிகப்பொருத்தமானதாகவும்,சிறப்பாகவும் அமைந்துள்ளது.
இப்புதினத்தை(நாவல்) தனது 23 வது வயதில் எழுதியிருக்கிறார்.பல ஆண்டுகள் கழித்து(10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம்) வெளியிட்டிருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்,புதினத்தை தனது இன்றையப் பக்குவத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ள விரும்பாமல் அப்படியே வெளியிட்டுள்ளார்.படித்த பலரும் கதையின் நாயகன் கிருஷ்ணமூர்த்தி நீங்கள்தானா என்று தன்னைக் கேட்டதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.இதற்குக் காரணம்,கதையில் உள்ள உயிரோட்டமான நடை.உணர்ந்து எழுதியது போல் உள்ளது.அவ்வாறு கற்பனையும்,உண்மை அனுபவமும் கலந்து உயிரோட்டமாக எழுதுவதற்கு தனித் திறன் வேண்டும்தான்.எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளில் இப்போக்கை நன்கு உணரமுடியும்.இந்தக் கதையைப் பொறுத்தவரையில் இதற்கு உதாரணமாக ஒரு சிறிய காட்சியமைப்பைச் சொல்லலாம்.கிருஷ்ணமூர்த்தியை ஜீப்பில் அழைத்துச் செல்லும்போது,அவன் கண்களில் சாலை வழுக்கிக் கொண்டு நகர்ந்து செல்வதாக எழுதியிருப்பார்.
கிருஷ்ணமூர்த்தி என்கிற இளைஞன் சத்ரியனாகப் பிறந்து,வேதம் ஆன்மீகம் போன்றவற்றில் புலமையும்,ஆர்வமும் உள்ளவனாகவும் அதே சமயத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் சாதிய ஏற்ற இறக்கக் கொடுமைகளை எதிர்ப்பவனாகவும்,புரட்சிகர சிந்தனைகள் உள்ளவனாகவும் விளங்குகிறான்.ஆன்மீகம்,தத்துவம் என்பது வேறு.மதம் என்பது வேறு.தியானம் என்பதும் வழிபாடு என்பதும் ஒன்றல்ல.கதைநாயகன் கிச்சா இதை நன்கு உணர்ந்தவனாகவே தெரிகிறான்.இருந்தபோதிலும் வாழ்க்கைப் பாடத்தை அனுபவித்து உணராத, வேகம் கொண்ட இளம்பருவத்தில் இருக்கிறான்.அதனால் பல இன்னல்களை அனுபவிக்கிறான்.பல்வேறு கட்டங்களில் இவன் நிகழ்த்தும் தர்க்கங்கள் சிந்தனைவீச்சு கொண்டது.சமூகத்தின் மீதான விமர்சனங்களை ஆசிரியர் கிச்சா மூலம் வைக்கிறார்.

கிச்சாவுக்கும்,பார்ப்பனப் பெண் மாலதிக்கும் இடையே அரும்பும் காதல் கதைதான் இது.கதையின் தலைப்பையொட்டியும்,முடிவையொட்டியும் நிறைய எழுதத் தோன்றுகிறது.எனினும்,எழுதப் போவதில்லை.காரணம் கதையின் கமுக்கம் உடைந்து விடக்கூடாது என்பதுதான்.படிக்கிற ஒவ்வொருவரும் அவரவராகவே உணர்ந்து சொந்தக் கருத்துக்களுக்கு,தீர்மானத்திற்கு வரவேண்டும்.இதனாலேயே,நான் சில திரைப்படங்கள்,படைப்புகள் பற்றிய விமர்சனங்களைப் படிப்பதைத் தவிர்த்து விடுவது உண்டு.இந்த அனுபவத்தைத்தான் ‘இல்லாமல் இருப்பது’ என்கிற எனது கவிதையில்(இதே வலைப்பூவில் உள்ளது) அரைகுறையாகப் பதிவு செய்துள்ளேன்.
கதை நகரும் இடம் ஆசிரியரின் சொந்த ஊரான கும்பகோணம்.பிற்பகுதியில் சென்னைக்கு வந்து காதலர்கள் படும் இன்னல்கள் ஒரு பொதுவான ஆவணம்.காதலிக்கும் வரை இனிக்கிற வாழ்க்கை கல்யாணத்திற்குப் பிறகு கசக்க ஆரம்பிப்பது நடைமுறை வாழ்வில் பெரும்பான்மையாக உள்ளது.இதை தக்கப் பின்புலங்களோடு , காட்சியமைப்போடு சொல்லியிருக்கிறார்.கதையின் முதல் அத்தியாயத்தை கால ஓட்டத்தின் வரிசையிலேயே அமைத்திருக்கலாம் என்று படுகிறது.
வர்ணாசிரம அமைப்பை, பார்ப்பனர்களை பல இடங்களில் சாடும் ஆசிரியர்,கிச்சாவை கடவுள் பக்தி உள்ளவனாகவும்,மதங்களின் பெயரால் நிகழும் நல்லவைகளை ஆதரிப்பவனாகவும் காட்டியுள்ளார்.நிறைய தகவல்களை சொல்லியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.சிதம்பரம் கோயில் பற்றி அப்போதே எழுதியுள்ளார்.காதலர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் குறும்பும்,காதல் ரசமும் கொட்டுகிறது.’படிக்கிறது மாதிரி ஒரு சுகம் வேறு எதுவும் கிடையாது தெரியுமா?’ என்று கிச்சா மாலதியிடம் சொல்வான்.கவிதை,இலக்கியம் போன்றவைகளும் கதையினூடே இழையோடுகிறது.
மொத்தத்தில் இப்படி முடிக்கலாம் என நினைக்கிறேன்.
‘சமூக விமர்சனங்களை,சிந்தனை வீச்சு கொண்ட தர்க்கங்களை,சுவாரஸ்யமாகச் சொல்லும் காதல்கதை’
(படித்து முடித்து சில வாரங்கள் ஆகி விட்டபடியால்,இன்னும் சற்று நன்றாகவே ஆய்ந்து எழுதியிருக்க முடியும் என்பது மிஸ்ஸிங்)
இவரின் வலைப்பூ santhanakkadu.blogspot.com

பொய்யாய்...கனவாய்...
(நாவல்)
பாலமுரளிவர்மன்

வெளியீடு
லேண்ட் மார்க் புக்ஸ்
இ42,செக்டர் 18,ரோஹிணி,
தில்லி 110085

விலை ரூ.100

Tuesday, July 1, 2008

கண்மணி குணசேகரன் கவிதைகள்


மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் ஜெயமோகன்,நாஞ்சில் நாடன் போன்றோர் பாராட்டிப் பரிந்துரைக்கும் எழுத்தாளரான கண்மணி குணசேகரன் ஆணா? பெண்ணா? என்கிற அளவில் அவர் பற்றி அறியாதவர்களுக்கு ,அவரைப் பற்றிய ஒரு அறிமுகம். கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.இயற்பெயர் அ.குணசேகர்.1971 ல் பிறந்த இவர் ,கடந்த 2007ம் ஆண்டுக்கான,சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(I T I), இயந்திர வாகனப் பராமளிப்பாளராகப் பயிற்சி பெற்று,தற்போது,அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்,பணி புரிகிறார்.திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம்,இளநிலை வணிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.
வட்டார மொழியிலும்,யதார்த்தவாத நடையிலும் எழுதி வருகின்ற இவர்,அசலான கிராமத்து இளைஞர்.பன்முக எழுத்தாற்றல் கொண்டவர்.சிறுகதை,புதினம்,கவிதை மற்றும் நிகழ்த்துக் கலைகள் போன்றவற்றில் சாதித்து வரும் இவர்,நடுநாட்டு சொல்லகராதி என்ற ஒரு நூலையும்,தனி மனிதராக,எழுதி முடித்திருப்பது,பெரிய சாதனை.ஒரு தொழிலாளியாக இருந்துகொண்டு இவரால் இத்தனை நூல்களை எழுத முடிந்திருப்பது, வியப்பளிக்கிறது.இவரின் ‘அஞ்சலை’ என்கிற புதினம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

இவரின் படைப்புகளாவன;

1.தலைமுறைக் கோபம்- கவிதைகள்
2.காட்டின் பாடல் கவிதைகள்
3.கண்மணி குணசேகரனின் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(காலடியில் குவியும் நிழல் வேளை)
4.வெள்ளெருக்கு சிறுகதைகள்
5.ஆதண்டார் கோயில் குதிரை சிறுகதைகள்
6.உயிர்த் தண்ணீர் சிறுகதைகள்
7.அஞ்சலை புதினம்
8.கோரை புதினம்
9.நடு நாட்டு சொல்லகராதி

மேலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கண்மணி குணசேகரனின் கவிதைகள்-கிராம வாழ்வின் ஆவணங்கள்

இவரின் கவிதைகள் எளிமையாகவும்,வட்டார மொழியிலும், பெரும்பாலும் அமைந்துள்ளன.குறுங்கவிதைகள்,மற்றும் பத்தி வடிவிலும் நிறைய எழுதியுள்ளார்.கோடை விடுமுறைக்குக் கூட கிராமங்களுக்குச் சென்றிராதவர்களுக்கு இவரின் கவிதைகளின் அருமை ஒருவேளை புரியாமல் போகலாம்.கிராம வாழ்வை தொலைத்துவிட்டு, மாநகரங்களில் குடியேறிவிட்ட தலைமுறையினருக்கு ,இக் கவிதைகள் நிச்சயம் நினைவலைகளின் மூலம் சலனம் ஏற்படுத்தும்.காட்சிப்படுத்தும் தன்மையுள்ள நிறைய கவிதைகள் காணமுடிகிறது.சிற்றூர்கள், மெல்ல மாறிக்கொண்டு வருகிறது.படிப்பறிவில்லாத கிழவியின் பேச்சில் கூட ஆங்கிலச் சொற்கள் இரண்டறக் கலந்துவிட்டது.செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் வரவு கிராமங்களில் வலுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கண்விழித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் பார்க்கின்றனர்.இளைஞர்களின் விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் கிரிக்கெட் ஆக்கிரமித்துக்கொள்கிறது.மாட்டு வண்டிகளும்,ஏர்க்கலப்பைகளும் மெல்ல தன் பயன்பாடுகளை நவீன வாழ்முறையிடம் இழந்து வரும் இவ்வாறான சூழலில் இக் கவிதைகள் சிற்றூர் வாழ்வின் ஆவணங்களாகின்றன.
மாதிரிக்கு, தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதைகள் மட்டும் பார்ப்போம்.
பாம்புச் சுவடு மீது
பதிந்து கிடக்கிறது
அழகாய்
பிஞ்சுப் பாதம்.

சிற்றூர் வாழ்விலிருக்கும் ஆபத்தை இதன் மூலம் எவருமே எளிதில் உணரமுடியும் அல்லவா?

பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.

பால் என்ற சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள் இருக்கிறதோ அவை அத்தனையும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது,இக் கவதையின் சிறப்பு.இதுபோல மேலும் சில கவிதைகளும் உள்ளன.

உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.

இதுபோல அழகியல் தன்மை கொண்ட கவிதைகளும் பரவலாக உள்ளன.

ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்


கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.
எத்தனை கவிநயம் வாய்ந்த கண்ணோட்டம் ! ஏமாற்றம் அளிக்காத நிறைய கவிதைகள் நறைந்துள்ளது.
நூல் விபரம்
கண்மணி குணசேகரன் கவிதைகள்
யுனைட்டெட் ரைட்டர்ஸ்
63,பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14
மின்னஞ்சல் unitedwriterss@yahoo.co.in

பக்கங்கள் 160
விலை ரூ.75.





Thursday, June 19, 2008

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள்

ஆங்கிலத்தில் a என்ற ஒரு எழுத்து, ஒரு என்ற பொருள்பட அமைந்துள்ளது.அது தவிர I என்ற ஓரெழுத்து நான் என்ற பொருள்பட அமைந்துள்ளது.இவை தவிர ஓரெழுத்துச் சொற்கள் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் தமிழில் நிறைய சொற்கள் உள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் (தனித்தே நின்று பொருள் தருபவை)

ஆ - பசு (ஆ-வின் பால் )
ஈ - உயிரி
ஏ - விளிச்சொல்
ஓ - விளிச்சொல்
கோ - (மன்னர்)
கை - கரம்
மை - எழுது பொருள்
வை - கட்டளைச் சொல்(கீழே வை...)
பா - பாடல்
தா - கொடு
நா - நாக்கு,நான்கு...
தீ - நெருப்பு
தை -(மாதம்)
நீ - முன்னிலை சுட்டும் சொல்
பூ - மலர்
பை - கைப்பை
போ -கட்டளைச் சொல்
மா - பெரிய, மாங்கனி தொடர்பான ...
வா - கட்டளைச் சொல்

நினைவிலிருந்து கூர்ந்து எழுதப்பட்டவை மட்டுமே இவை.மேலும் பல சொற்கள் இருக்கும்.அவற்றை தெரிந்தவர்கள் ,கொடுத்து உதவலாம். மின்னஞ்சல் முகவரி-muthuvelsa@gmail.com.

‘’ம் ‘’-பற்றி ஒரு பார்வை

*குறுகிய மாத்திரையில் ஒலிக்கும்போது ஆம் என்ற பொருள்படும்.
*சற்று நீட்டி ஒலித்து, தொக்கி நிற்கும்போது கேள்வியாகிறது.
*நன்றாக நீட்டி ராகம் போட்டு ஒலிக்கும்போது,ஆச்சரியச் சொல்
*ஷோபா சக்தி அவர்களின் ஒரு புதினத்தின் பெயர் ‘ம்’ தான்.

Wednesday, May 28, 2008

குப்பை

"ஏன்டீ! வூட்டுக்காரன் வர்ற நேரம் தெரியாதா ஒனக்கு? அப்பத்தான் பக்கத்து வீட்டுப் பொம்பளகிட்ட பேசறதுக்குப் போயிடுவியா?வூடு தங்கணுமின்னாலே உனக்கேன்டீ அப்டி கசக்குது?" என்று வீட்டுக்குள் நுழைந்த அஞ்சலையைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் மாணிக்கம்."இல்ல...தே!இப்பத்தான் கொஞ்சம் முன்னால போனேன்.அவுங்க வூட்டு ரேசன் கர்ட வாங்கினுப் போயிருந்தேன்.அத்தக் குடுத்துட்டு வரலாமின்னுதான் போனேன்.அப்டியே கொஞ்ச நேரம் பேசினு இருந்திட்டோம்" என்று சமாதானம் சொல்லியபடியே கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தத் துவங்கினாள்."ஆங்...வூட்டப்பாரு,எம்மாங் குப்பைனு . பெருக்கறதுக்குக்கூட முடியலியா உனக்கு?வூடு வூடு மாதிரியாடி இருக்குது?இதுக்கெல்லாம் உனுக்கு எப்டீடி நேரமிருக்கும்?அதான், உனுக்கு ஊருகதை பேசறதுக்கே நேரம் பத்தலையே" என்றான் ஆவேசமாக."அதில்ல...இன்னிக்கு ரேசன் கடை,பஜாருன்னு கொஞ்சம் வெளியிலயே வேலயா இருந்திட்டேன்.நீ வர்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாலதான் நானும் வூட்டுக்கே வந்தேன்",என்றாள். "ஏய்...நிறுத்துடீ...ஏதாவது சாக்கு சொல்லினு..." என்றான் மாணிக்கம்.
"என்னாய்யா ஒரேடியா குதிக்கிறே? இன்னிக்கு ஒரு நா தானே, இப்படி ஆயிடுச்சு.இதுக்குப்போயி...!நான் வூட்டு வேலைக்குப் போறேனே ஆபிசர் வூடு...அவ்ளோ பெரிய ஆபீசர்கூட யாரையும் எதிர்பார்க்காம சமயத்துல அவரே பெருக்கிக்குவாரு. இன்னிக்கு ஒரு நாள் நான் இல்லன்னா,நீயே பெருக்கக்கூடாதா?" என்று சொல்லியபடி குனிந்து பெருக்கிக்கொண்டே வந்தவள், எதேச்சையாக நிமிர்வதற்கும் அவள் சற்றும் எதிர்பாராத வகையில் அவள் கன்னத்தில் பளாரென்று மாணிக்கம் அறைவதற்கும் சரியாக இருந்தது.அடிவாங்கி உறைந்துபோய் நின்றுகொண்டிருந்தாள் அஞ்சலை."அடிங்...!யாரப் பாத்து பெருக்ககூடாதான்னுக் கேக்கற? உனுக்கு அவ்ளோ கொழுப்பயிடுச்சா?என்னை என்ன பொட்டைன்னு நெனச்சியா?இருடி...உன்னை வந்து வச்சிக்கிறேன்"என்று ஆவேசத்தோடு திட்டிக்கொண்டே ,வாசலில் கிடந்த ரப்பர் செருப்புகளை மாட்டிக்கொண்டு ,காதில் செருகியிருந்த ஒற்றை பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியேறினான்.
மறுநாள் காலை.வழியில் சைக்கிள் பஞ்சராகிப்போனதால் தாமதமாகிவிடவே ,பதற்றத்தோடு அவசர அவசரமாக அலுவலகத்துள் நுழைந்தான்."என்ன.. மாணிக்கம்!இப்பத்தான் விடிஞ்சுதா? ம்..ஆஃபிஸ் எப்படியிருக்குதுன்னுப் பார்த்தீங்களா?ஒன்னு,காலைல சீக்கிரம் வேலையை முடிக்கணும்.இல்லன்னா,அட்லீஸ்ட் சாயந்தரமேயாவது வீட்டுக்குப் போறதுக்கு முன்னால க்ளீன் பண்ணிட்டுப் போகணும்.ரெண்டுங்கிடையாது...பார்த்தீங்களா...எவ்வளவு மோசமயிருக்குதுன்னு!ம்...மசமசன்னு நிக்காதீங்க.சீக்கிரம் என் ரூமை க்ளீன் பண்ணுங்க" என்று கத்திவிட்டு வெளியே வந்தாள் மேனேஜர் விசாலாட்சி ."சரிங்கம்மா" என்று அவசரமாக துடைப்பத்தை எடுக்கப் போனான் மாணிக்கம்.
நன்றி-கல்கி(01-06-08)

Tuesday, March 18, 2008

"நீ ஏன் பாடறே?"

"நீ ஏன் பாடறே?"

என்று கேட்டான்,என்னோடு தங்கியிருந்த சண்முகசுந்தரம்.25 வயதிலிருந்த என்னைப் பார்த்துக் கேட்கப்பட்ட

இந்தக் கேள்வி எனக்கு மிகப்புதியது.அதிர்ச்சியாகவும் இருந்தது.என்னால் பதில் சொல்ல முடியவில்லை.பதில்

தெரிந்திருந்தால்தானே?என்னை நானே கேட்டுப் பார்த்துக்கொண்டேன்.மேலோட்டமாய்ப் பார்த்தபோது,"தோனிச்சி

பாடினேன்,இந்தப்பாட்டுப் புடிச்சிருந்திருந்தது,பாடினேன்" என்பது போன்ற பதில்களே முதலில் உதித்தது.சற்று

யோசித்துப் பார்த்தபோது வேறு சில பதில்களும் கிடைத்தன.பொதுவாகவே எல்லாவற்றிற்கும் ஒரு ஏன்,எதற்கு,எப்படி,எங்கே என்று அணுகுவதற்கு நாம் கற்பிக்கப்பட்டிருந்தாலும்,அதை செய்துப் பார்க்கும்போது

ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது.பல தெளிவுகளைக் கொண்டுவருகிறது.ஊறிப்போன ஒரு விஷயத்தில்,

காலங்காலமாக செய்துகொண்டு வரும் காரியங்க்களில் நாம் இப்படிக் கேள்விகளைக் கேட்டுப்பார்ப்பதில்லை.

"அது அப்படித்தான்' என்று நமக்கு நாமே சமாதானமாகிப்போகிறோம்.நகர்ப்புறத்திலேயே வளர்ந்த எனக்கு ,எங்கள்

ஊரில் எப்போதாவது வந்து போகும் டிரெயின் எந்த ஊரிலிருந்து வருகிறது.எந்த ஊருக்குச் செல்கிறது என்ற கேள்வி

தோன்றவேயில்லை.சூரியன் கிழக்கில் உதிப்பதுப்போல் அது ஒரு வழக்கமான நிகழ்வாகியிருந்தது.மரத்திலிருந்து

ஆப்பிள் விழும்போது,அது ஏன் மேலிருந்து விழுகிறது? என்று புதுமையாய் யோசித்து விடையும் கண்டவர்,

ஐன்ஸ்டீன்.இதே கேள்வி பலருக்கும் அவருக்கும் முன்னமே தோன்றியிருந்தாலும்,அதற்கு விடை காணும் பக்குவம் அவரிடம் மட்டுமே அன்று இருந்தது.மீண்டும் டிரெயின் விவகாரத்திற்கு வருவோம்.என்னுடைய 17 வயதில் ,என்னோடு படிப்பதற்காக, கிராமத்திலிருந்து வந்திருந்த நண்பன்,"இந்த டிரெயின் எங்கயிருந்து வருது?

எங்க போவுது? "என்று உள்ளூர்க்காரன் என்ற முறையில் என்னிடம் கேட்டான்.அதுநாள் வரை அப்படியொரு

கேள்வி எனக்குத் தோன்றவேயில்லை.அதற்கு பதில் தெரியாமலிருந்தபோது, அவன் என்னை அற்பமாய்

பார்த்தது வேறு கதை.நான், உள்ளூரைத் தாண்டாதவன் என்பதாலும்,அப்படி இருந்திருக்கலாம்.அவன் கிராமத்தில்

இருந்து வந்தவன்.அவனுக்கு,இந்த டிரெயின் தனது ஊருக்குப் போகுமா? என்ற தேடல் இருந்திருக்கலாம்.சரி மீண்டும் பாட்டு விஷயத்திற்கு வருகிறேன்.பொதுவாகவே நன்றாகப் பாடும் திறமை உள்ளவர்கள்,நன்றாகப்

படிக்கவும் செய்வார்களாமே! அதனாலேயோ என்னவோ ,நான்தான் எங்கள் வகுப்பில், முதல் ரேங்க்.(நம்புங்க,

அதெல்லாம் அந்தக்காலம்)இந்த சூட்சுமமும்,எனக்கு வேறு ஒரு நண்பண் உணர்த்தியதுதான்.20 வயதில் ,அவன்

என்னிடம் வந்து "நீ நல்லாப்படிப்பல்ல? நல்லப்பாடறவங்க , பொதுவா,நல்லாப் படிப்பாங்க.நான் ஏற்கனவே

வேலை செஞ்ச கம்பெனியிலகூட ஒரு பையன் இருந்தான்.இப்படித்தான்..." என்று சொன்னபோதுதான் நான்

இதைப்பற்றி யோசித்தேன்.உண்மைதான் என்று உணர்ந்துகொண்டேன்.சின்ன வயதிலேயே எல்லாப் பாடல்களையும்,புதுப்படங்க்களிலிருந்து,தெரிந்து வைத்துக்கொண்டுப் பாடுவேன்.இத்தனைக்கும் எங்க்கள் வீட்டில்

அப்போது ஒரு வானொலிப் பெட்டி கூட இருந்ததில்லை.படங்களும் பார்க்கமுடிவதில்லை.ஆனால்,பாடல்கள்

தெரிந்திருத்தப்பதோடு,அதைப்பற்றிய புள்ளி விவரங்களோடும் தெரியும். இதையும் பள்ளிக்கூடத்தில் ஒரு பையன் தான் எனக்கு உணர்த்திணான்."உங்க வீட்ல ரேடியோ இல்ல,டேப் இல்ல.ஆனா,எப்படி எல்லாப் பாட்டும் உனக்குத்

தெரியுது?" என்று கேட்டபோதுதான்,எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது! அதானே? அதேபோல்தான்

படிப்பிலும்.இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்கே ஆச்சரியமாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது.நான் ஏன்

நன்றாகப் படித்தேன்? எப்படி முடிந்தது?இத்தனைக்கும் நோட்ஸ் வாங்கும் வசதியில்லை.டியூஷன் போனது இல்லை.ஒரு சில வருடங்கள் மண்ணெண்ணெய் விளக்கில் கூடப் படித்திருக்கிறேன்.ஆனால்,நான்தான் என்

வகுப்பில் முதல் ரேங்க்.இத்தனைக்கும் சிரத்தை எடித்துப் படிப்பதுக்கூட இல்லை.எப்படிப் பாட்டோ அது போலவே

படிப்பும்.9ம் வகுப்பில் என் வகுப்பு ஆசிரியை என்னிடம் செல்லமாய் திட்டியது நன்றாக நினைவில் உள்ளது.

"டேய் வாலு,அவனுங்கள படிக்கவிடு.உனக்கென்ன?அரட்டை அடிச்சுட்டு, நல்ல மார்க் எடுத்துடுவே. அவனுங்கள

கெடுக்காதே(!)",என்றபோதுகூட எனக்கு அது ஆச்சரியமாகத் தெரியவில்லை.23 வயதிலிருக்கும்போதுதான்

இப்படி ஒருசின்னக் கொடுப்பினை இருப்பதே என் மர மண்டைக்குத் தெரிந்தது.இதுவும் நண்பர்கள் கண்டு வியந்து

சொன்னபோதுதான்.அதேபோல்தான் பாட்டும்.நான் நன்றாகப் பாடுகிறேன் என்பது எனக்கு மற்றவர்கள் சொன்னபோதுதான் தெரிந்தது.9வது படிக்கும்போது ,எனக்குத் தெரியாமலேயே,பாட்டுப் போட்டியில் என் பெயரைக்

கொடுத்துவிட்டிருந்தார்கள் என் நண்பர்கள்.அப்போதெல்லாம் நான் இருக்கும் இடமே எனக்கேத் தெரியாது.எதிலும் ஈடுபடும் அளவுக்கு தன்னம்பிக்கையும்,குடும்பப் பின்புலமும் இல்லாதிருந்தது.ஒரு வித தாழ்வுமனப்

பான்மையோடு உழன்று கொண்டிருந்த காலம் அது.பெயரைக் கொடுத்த நண்பர்களே எனக்குப் பாடலையும் தேர்வு செய்து ,எழுதியும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.ஒரு நண்பணின் வீட்டிற்குச் சென்று,(2கி.மீ.என்பது அப்போது

மிகவும் தூரம்)அவர்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் ஓரிரு முறை கேட்டதுதான்.மற்றபடி, அந்தப் பாட்டும் வரிகளும்

கோயிலில் பண்டிகை நாட்களில் காதில் வந்து தானாய் விழுந்ததுதான்."ஆயர்பாடி மாளிகையில்..." என்பதுதான்

அப்பாடல்.என் வீட்டாருக்கு இதெல்லாம் புதுசு.நான் பாடப்போவது குறித்து என்னை விட அவர்கள் படபடப்போடு

இருந்தார்கள்.பாட்டுப்போட்டி நாளும் வந்தது.நல்ல வேளையாக ஆண்,பெண் தனித்தனிப் போட்டி.(பின்ன அவங்களோட போட்டிப் போட முடியுமா?).போட்டிக்கு முன்னாலேயே பாடுகின்ற பசங்களெல்லாம் ஒன்று கூடி பாடிப் பார்ப்பது என்று முடிவெடுத்தனர்.அதில் ஒரு ப்ராமணப் பையன் ,வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்,

இருந்தது மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.முடிவெடுத்தபடியே,ஒருவருக்கொருவர் பாடிக்காண்பித்தோம்.

எனக்கு என்னவோ எல்லாருமே நன்றாய் பாடுவதாகவே,ஒரேமாதிரியாகவும்தான் இருந்தது.ஆனால் ,எனக்குத்தான்

முதற்பரிசு கிடைக்கும் என்று எல்லோருமே சொல்லிவிட்டார்கள்.அதுவேதான் நடந்தது.என்னை என் வகுப்புத்

தோழர்கள் தோளின்மீது தூக்கிக்கொண்டு ,கூக்குரல் எழுப்பியதும்,கடைக்கு அழைத்துச்சென்று சோடா(!) வாங்கித்

தந்ததும் எனக்குப் புதிய அனுபவம்.பின்னாட்களில், இதுபோன்ற சம்பவங்க்கள் நிறைய நடந்தது.இப்படி வளர்ந்து

வந்த என்னைப்பார்த்து, சண்முகசுந்தரம் ,"நீ ஏன் பாடறே?"ன்னுக் கேட்டா எனக்கு எப்படி இருக்கும்?நீங்களே சொல்லுங்க.அவன் கொஞ்சம் ஞானி.என்னைவிட வயதில் மூத்தவன்.பிறகு இந்தக் கேள்விக்கு பதில்

யோசித்தபோது எனக்கு சில காரணங்கள் பட்டது.

1.நான், நன்றாகப் பாடுகிறேன் என்பதை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்கொள்வதற்காகவும்,அவர்கள் என்னை

வியந்து பாராட்டவேண்டும் என்ற அங்கீகாரத்திற்காக ஏங்குகிற மனவேட்கை.

2.தம்பட்டம் அடித்துக்கொள்ளும்,பெருமைகொள்ளும் ஒரு முயற்சி.

3.சற்றுமுன்பாகவோ, அல்லது அன்றைய தினத்தில் கடைசியாகவோக் கேட்டப்பாடல் மனதிற்குள்ளேயே மௌனமாக உழன்று கொண்டிருப்பதை ,குரலெடுத்துப் பாடிவிடுவது ஒருவகையில், வடிகால்.

4.மேலும் கலை என்பது உணர்வுப் பூர்வமானது.இதில்,தத்துவதிற்கோ,ஆராய்ச்சிக்கோ நான் இடம் கொடுப்பதாக

இல்லாமல் இருக்கலாம்.

5.மனோநிலைக்கு,சூழலுக்கு ஏற்ப ஒரு பாடலை இயல்பாய் நினைவில் வரும்போது அதைப்பாடி ,உணர்ச்சியை

வெளிக்காட்டுவது.உதாரணமாக, என் நேசத்திற்கு உரியவள் என்னைக் கடந்து செல்லும்போது, சிரித்துவிட்டுச்

செல்கிறாள் .உடனே ஒரு பரவசம்.உடனே இதே போன்ற சூழலில் இடம்பெற்ற ஒரு திரைப்படப்பாடலைப் பாடி

மகிழ்தல்.(அச்சச்சோப் புன்னகை...)

இப்படியெல்லாம், ஆராய்ந்து,தெளிவு பெறுவதில் ஒரு சிக்கல் இருக்கவே செய்கிறது.என்னவென்றால்,அதன் சுவாரஸ்யம் குறைந்துபோதல்.ஏதோ ஒரு வெறுமை தோன்றுதல்.திரைப்படத்தைப் பார்த்து சிரிக்கிறோம்,அழுகிறோம்,கோபப்படுகிறோம்,பதற்றப்படுகிறோம்.ஆனால், அது வெறும் பிம்பம்தான்,என்று யோசிக்கும்போது அதன் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறதல்லவா?இதனாலேயோ என்னவோ

நான் இப்போதெல்லாம் முன்போலப் பாடிக்கொண்டிருப்பதில்லை.நீங்களே கூடப் பார்க்கலாம்.வாய்விட்டுப்பாடிக்

கொண்டிருக்கும் பெரியவர்கள் குறைவாகவே இருப்பார்கள் அல்லவா?வயது ஏற ஏற இவை குறைந்துபோகிறது.

எனக்கும் அப்படித்தான் குறைந்துவிட்டது.பாட ஆரம்பிக்கும்போதே, சண்முகசுந்தரதின் கேள்விமனதில் எழும்.

சில வேளைகளில் நிறுத்திவிடுவேன்.சில வேளைகளில் அனுமதித்துவிடுவேன்.