Monday, September 14, 2009

பா.திருச்செந்தாழை

பா.திருச்செந்தாழை என்னும் இளைஞர் மதுரையைச் சார்ந்தவர்.கடவு நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது சந்திக்கமுடிந்தது. பார்த்தவுடன் பிடித்துப்போனது எனக்கு.அதற்குமுன்புவரை (இன்றுவரையும்)அவரின் ஓரிரு கவிதைகளையும், ஒரேயொரு கதையையும் மட்டுமே படித்திருந்தேன்.

‘உங்கள் கதைகளில்environment conciousஅதிகமாக இருக்கிறது.அதை தொடர்ந்து நன்றாகச் செய்யுங்கள்’ என்று பா.வெங்கடேசன் திருச்செந்தாழையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் திருச்செந்தாழை,’ எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து அதைத் தமிழில் சொல்லுங்கள்’ என்று சபையில் கேட்டுக்கொண்டார்.அதுதான் திருச்செந்தாழை. மளிகைக்கடையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி. நிகழ்ச்சியில் உணவுவேளையின்போது அவர் செல்பேசியில்’ கேப்பை இந்தவிலை, அந்த விலை’ என்று பேசிக்கொண்டிருந்தபோதுகூட நண்பர் யாருடனோ நையாண்டி செய்கிறார் என்றுதான் இருந்தேன்.

காலச்சுவடில் சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கிறது.ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் சிறுகதைகளின் இன்றைய நிலைபற்றி எழுதும்போது குறிப்பிட்டுஇள்ள மிகச் சில படைப்பாளிகளுள் திருச்செந்தாழையும் உண்டு.

இம்மாத உயிர் எழுத்து இதழில் இடம்பெற்றுள்ள அவரின் கவிதைகளைப் படித்து நான்...

வேண்டாம். நீங்களே படித்துப்பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

கவிதைகள்

கனத்த உன் முலைத் திரட்சியால்

வெட்கித் திரும்பும் கல் ஸ்திரியே

உள்ளங்கை தீபத்துடன்

உனது புராதனக் காத்திருப்பின்

எத்தனையாவது பயணி நான்

மண்டபத் தனிமையில்

நான் சப்பித் தணிய நீ

தளர்த்தி விடுவிக்கும்

கல் முலையின் குளிர்வில்

துடித்தடங்கும் யென் குறி

*

எழுதிய ‘ ந’ வின் நுனியில்

ஒரு அலகினைச் செருகினாள்

பக்கவாட்டு நெளிவுகளில்

சில சிறகுகளை பொதிந்துவிட்டு

சுழியின் கீழே வாலிலிழுத்தாள்

கொண்டுவந்த கடுகினை

மையத்தில் ஒட்டி முடித்தபொழுது

ஒருமுறை உடல் சிலும்பி

ந பறக்கிறது

பிறகான எனது ந விலெல்லாம்

ஒரு காகம் கரைகிறது

*

பின் திரும்பியே வராத

பிள்ளையின் அம்மாவிற்கு

அவ்வப்போது காணநேரிடும்

பைத்தியக்காரர்களின்

பிளாட்பார மரணங்கள்

பின்னிரவு நெடுங்காய்ச்சலை

பரிசளிக்கின்றன.

*

புகைக்கு பழகிய பருவத்தில்

மிதித்து நசுக்கிய சிகரட்டிற்கு

சற்று தள்ளி அமர்ந்திருந்த நாடோடி

அக்கினி பகவானை மிதிக்காதீங்க

என்றதை சொல்ல விரும்புகிறேன்.

*

ஒரு உதட்டை கடித்துறிஞ்சுவதுபோல

ஒரு துரோகத்தை சிதைத்து பழிதீர்ப்பதுபோல

கடைசி கணத்தில் தற்கொலையின்

ருசியை உணர்வதுபோல

விரும்பி நிகழ்த்துகிற விபத்தைப்போல

ஒரு சிகரட்டை மிதித்தணைப்பது

*

ஒரு

கணத்தின்

எந்த விளிம்பில்

காத்திருக்கிறது

அது

-பா. திருச்செந்தாழை

Wednesday, September 9, 2009

ஹேமா

தபால் பெட்டியில் புத்தகம் இருந்தது. அப்படியென்றால்? நம் கதை வந்திருக்கவேண்டும்! எடுத்துக்கொண்டு கதவு திறந்து உள்ளே போனேன்.ஷூக்களைக் கழட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்து , புத்தகம் பிரித்தேன். என் கதையைத் தேடி, ஒருமுறை அதற்கான ஓவியங்களை ரசித்தேன். கதையின் தலைப்பு ஹேமா. ஆமாம். அதைவிட பொருத்தமான, ரசனையான, சுவாரசியமான, வசீகரமான, இன்னும் ஏராளமான …தலைப்பு எனக்குக்கிடைக்கவில்லை.மனமும் வரவில்லை.பின் கதையை ஒருமுறை மீண்டும் படித்துவிடத் தீர்மானித்து …துவங்கினேன் .
ஒரு கதையை, அதை எழுதினவன் மட்டுமே அதிகபட்ச எண்ணிக்கையில் படிப்பான் போலும்.மனதிற்குள் பலமுறை எழுதிப்பார்த்து, பேப்பரில்-இல்லையில்லை..இப்போதெல்லாம் கணினியில்- பிறகு சரிபார்த்தலுக்கென்று. மீண்டும் பிரசுரமான பிறகென்று.
"எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.."- செல் கொஞ்சியது.
மனைவி.
லேசான எரிச்சலுடன் "ம் .சொல்லு" என்றேன்.
"ம். என்னா பண்றீங்க. வேலையிலருந்து வந்தாச்சா? வீட்டுக்குள்ளேயே சிகரெட் புடிக்கிறீங்களா?.."
"இல்ல"
" ஏன் நானேதான் தினமும் ஃபோன் பண்ணணுமா? நீங்க ஒரு நாளாவது பண்ணியிருக்கீங்களா?.. நாளையிலருந்து நான் பண்ணவேமாட்டேன். எனக்குமட்டும் என்ன வந்துச்சி.."
அப்படித்தான் சொல்வாள். ஆனால், செய்யமாட்டாள்.அதாவது ஃபோன் பண்ணாமலிருக்கமாட்டாள்.
"இப்பத்தானெ வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து இப்படிக் கேட்டிருந்தா , அதில ஒரு நியாயம் இருக்குது.அதுக்கும் முன்னால நீயேதான் தினமும் பண்ணிடறயில்ல"
" சரி, ஊருக்கு இந்த வாரம் வர்..."
டொய்ங். செல் அணைந்துவிட்டது.இப்போதெல்லாம் ஏனோ தகராறு இதனுடன்.ஹேங்க் ஆகிவிடும். மீண்டும் ஆன் ஆவதென்பது பெரிய போராட்டம். கால் லாக்கெல்லாம்(calls log) அழிந்துவிடும். சரி. ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று. அவளிடமிருந்து தப்பித்தோம். பின்ன! ஊருக்குப்போன இரண்டுவாரத்தில், தினமும் இதே பல்லவி. வேறொன்றும் இல்லையா பேச?
சரி,கதையைப் படிப்போம்.
*******
ஹேமா
மேற்குக் கோபுரத்துக்குப் பின்னால் என் வீடு. தெற்குக் கோபுரத்துக்கு அருகே ஹேமா வீடு.அவளைத்தாண்டித்தான் நான் போயாகவேண்டும்.
ஹேமா!
சொல்லும்போதே சிகரெட்டின் முதல் பஃப் இழுப்பதுபோலிருக்கிறது. அழகி. அவளைப்பற்றி அப்படி, இப்படி என்று நான் சொல்வதெல்லாம் வீண். அவள் அவள்தான்.அவளைப்பார்க்க , எங்கோ தொலைவிலிருக்கும் கல்லூரி மாணவர்கள் அதாவது எங்கள் அண்ணன்கள் எல்லாம் தேடி வருவார்கள். அவள் பள்ளி விட்டு வெளியேறும் சமயம் அவளைப்பார்க்கக் காத்திருப்பார்கள்.கல்லூரியில் இல்லாததா! எனக்கும் அன்றைய நாட்களில் கனவுதேவதை அவள்தான்.ஆனால், மனதிற்குள் மட்டுமே இருக்கும். ஊரின் கிழக்குக்கோடியில் இருக்கும் ராபின் சில கிலோமீட்டர் தொலைவையும் பொருட்படுத்தாமல், சைக்கிளை மேட்டில் மிதித்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். என்னிடம் சைக்கிள் இல்லாததால் என்னை அழைத்துப்போக வருவதாகச் சொல்வான். ஆனால், சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. ஹேமா! ஆமாம். அதுதான் காரணம்.ட்யூஷன் போகும்போது அவளைத்தாண்டி, அவளுக்கு இணையாக, அவளுக்கு முன்னால் செல்வதில் அவனுக்கு ஆறுதல். தலைமுடியெல்லாம் முன் மண்டையில் சுரண்டியிருப்பான். ஸ்டைல். அவள் வரும் வரை நேரம் கடத்த ஏதாவதொரு டீக்கடையில் டீ வேறு. உபயம் ராபின். அவன் மட்டும் சிகரெட் பிடிப்பான். நான் அநியாயத்துக்கு நல்லவன். புகைப்பதில்லை.ஆச்சரியமாகவும் பயத்தோடும் பார்த்தேன் ராபினை.அன்று கையில் ஒரு ரோஜா வைத்திருந்தான். எனக்கு உள்ளுக்குள் உதறல்.
மொட்டைமாடியில் கீற்றுக்கொட்டைக்குள் சிலரும் , சிலர் வெளியேயும் தரையில் அமர்ந்து மாதிரித் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. நான், ஹேமா, பாபு, ராபின் ( சொல்லணுமா என்ன?)எல்லோருமே வெளியே
உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம். ராபின், பாபு, சதா என ஒவ்வொருத்தராக எழுந்து ஹேமாவைக் கடந்துபோவதும், வருவதுமாயிருந்தனர். அதே நேரம் மற்ற பையன்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புவேறு. ஹேமா இதையெல்லாம் கவனிக்காமல் பொறுப்பாக எழுதிக்கொண்டிருந்தாள்.
சதா என்னருகில் வந்து, " டேய்! ச்சீனு. அப்படியே நைஸா எழுந்துபோய் தண்ணிக குடிக்கப்போறாமாதிரி ஹேமாவைப்பாரு.ஜட்டி தெரியுது. "
அதற்குமேல் நின்றுபேசமுடியாத காரணத்தால் போய் அமர்ந்து, எழுதத்துவங்கினான். (?!) எனக்கு மனம் கனக்கத்துவங்கிவிட்டது. நிச்சயம் நான் போய்ப் பார்க்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இப்படிப் பார்ப்பதையும், சிரிப்பதையும், அது எதையும் தெரியாமல் ஹேமா எழுதிக்கொண்டிருப்பதையும் எப்படி நிறுத்துவது.வயது வந்த ஒரு பெண்ணுக்கு இந்த உணர்வுகூடவா இல்லாமலிருப்பது! குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு..ச்சே!
கதையைமுடிக்கவிடாமல் (காலிங்) பெல் காலிங்.கதவைத்திறந்தால் நட்டு வந்திருந்தான். கம்பெனியில மோட்டார் என் பிரச்சினைன்னா, பம்ப் அவன் பிரச்சினை. அதனாலதான் நடராஜன், நட்டு. வெளியில் கிளம்பிவிட்டோம். கதையைமுடிக்கவில்லை. இருந்தால் என்ன? நாம் எழுதியதுதானே.
••••
மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டிருந்தாள்.அலுவலகத்தில் சரியாக தேனீர் இடைவேளையில் , "எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.." யாரென்று தெரியவில்லை. புதிய எண்ணாக இருந்தது.
" ஹலோ?"
" மிஸ்டர் சீனுவாசன்?"பெண்குரல்.
" ஆமாங்க. "
" நான் ஹேமா"
"......."
"என்ன ஞாபகம் வரலையா? இல்ல..பல ஹேமாக்கள்ள எந்த ஹேமாங்கிற குழப்பமா? கதை படிச்சேன்"
சொல்லிவிட்டு வேண்டுமென்றே நின்றது குரல்.
எனக்கு கணத்திற்குள் மளமளவென எல்லாம் புரிந்துவிட்டது.என் கனவுக்கன்னியாக இருந்த ஹேமா. கதை படித்திருக்கிறாள். பரவாயில்லையே. இந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் கூட இருக்கா. படிச்சதோட இல்லாம சரியா புரிஞ்சுக்கிட்டு, என்னோட நம்பரை தேடிப்புடிச்சு வாங்கிப்பேசறாளே. எப்படியும் இருபது வருசமிருக்கும் பார்த்து. ஸ்கூல் முடிஞ்சப்பவே அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர். என்ன ஊருன்னுகூட எனக்குத் தெரியல.ச்சே. ஒரிஜினல் பேருங்களப் போட்டது தப்பாப்போச்சு.ஒருவேளை அவ வீட்டுக்காரரும் படிச்சிருந்தா எவ்ளோ கஷ்டப்படுவார்! இல்லயில்ல. நல்லதாப்போச்சு. இதோ ஹேமா பேசறாளே.
அதே நேரம் மனத்தின் வேகத்தை எண்ணி வியந்தது இன்னொரு மனம். ஒருகணத்திற்குள் எவ்வளவு தூரம்! வேகம்!
" என்ன சீனுவாசன். சத்தமேயில்லை. கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? ஆச்சரியமா இருக்குது. சந்தோசமாவும் இருக்குது. உங்க நம்பரத்தேடி, விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்."
" அதெல்லாம் இருக்கட்டும். எப்படியிருக்கீங்க? புவனா, ஹெப்ஸிபா எல்லாம் எப்படி இருக்காங்க. அவங்களோட கான்டாக்ட் இருக்கா?"
"ம்ஹூம். நீங்க அதே ஊர்ல இருந்துக்கிட்டு என்னைக் கேட்டா என்ன அர்த்தம்? "
" இல்லை. நான் இப்ப ஊர்ல இல்ல. ஆனா அவங்க எப்படியிருக்கப்போறாங்க. நல்லா குண்டாகி இரண்டு மூனு பிள்ளைங்களோட.... மாமியாகியிருப்பாங்க. நீங்களும் அப்படித்தான் இருக்கணும்."
" நீங்க மட்டும் என்னவாம். அங்கிள் ஆகியிருப்பீங்க."
"ச்சேச்சே! நான் இன்னும் பாக்க சின்னப்பையன மாதிரிதான் இருக்கேன்னு எல்லாருமே சொல்றாங்க. உண்மைதான் அது."
" ம். இப்படியொரு நினைப்பு வேறயா? சரி , இருக்கட்டும். கதையைப் படிச்சிட்டு அழுதிட்டேன் தெரியுமா? முடிச்சிருந்தவிதம் ரொம்ப நல்லாயிருந்தது. அப்ப ஒருவாட்டி மறுபடி அழுதேன்."
" எனக்கு சங்கடமாயிருக்கு இப்போ. தப்பா நினைச்சுக்காதீங்க. அட்லீஸ்ட் பேரையாவது மாத்தி எழுதியிருக்கலாம் நான். ஸாரி."
" பரவாயில்ல. நான் அழுதது அத நினைச்சு இல்ல. உங்க எல்லார் ஞாபகமும் வந்துடிச்சி."
" அப்புறம் அதுல எனக்கும் உங்கமேல ஒரு இதுன்னு எழுதியிருந்தது வெறும் ஒரு சுவாரசியத்துக்குத்தான். தப்பா நினைச்சுக்காதீங்க. அதெல்லாம் கற்பனை."
" அப்படியா! நான் அதெல்லாம் உண்மைன்னு நம்பித்தான் அழுதது, ரசிச்சது, சந்தோசப்பட்டது எல்லாம்.. நீங்க.."
டொய்ங். பாடாவதி செல்போன்.