Monday, October 13, 2008

இனியாவது ஒரு விதி செய்வோம்.










முடிவே தெரியாத நீளமான குகைக்குள் பயணம் செய்ய நேர்வதாக கனவுவரும்போது,எப்பேர்ப்பட்ட தூக்கமாக இருந்தாலும் ,கலைந்து எனக்கு விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது.மூச்சுத்திணறலாகவும்,நெஞ்சு முழுக்க ஏதோ பாரம் அழுத்தி வலிப்பது போலவும் உணர்கிறேன்.மீண்டு(ம்) தூக்கம் வர நெடுநேரம் ஆகிவிடும்.ஒருமுறை,திரைப்படம் பார்க்க நண்பர்களோடு ஒரு சுமாரான,பழைய திரையரங்குக்குச் சென்றிருந்தபோது, நுழைவுச்சீட்டு தரும் இடம் மிக நீண்ட,ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய அளவு அகலத்தோடும்,எங்கோ தொலைவில் ஒரேயொரு சிறிய ஜன்னல் மட்டுமே வைக்கப்பட்டதுமாக,மூடப்பட்டுக் குகைபோல இருப்பதைக் கண்டநான், பயந்துபோனவனாக,படம்பார்க்கவே வரவில்லை என்று சொல்லியிருக்கிறேன்.இன்னொருமுறை சிறுபிள்ளையாய் இருக்கும்போது,மற்ற பிள்ளைகள் என்னை கொசுவலைக்குள் அடைத்து,நான் வெளியேற முடியாதவாறு பிடித்துக்கொண்டபோது,நான் அலறிக் கூச்சல்போட்டது இன்னமும் என்னாலேயே நம்ப முடியாததாகவும்,ஆச்சரியமாகவும், நன்றாக நினைவில் உள்ளது.கேளிக்கைவிளையாட்டு மையங்களில்(THEME PARK)நீண்ட குழாய்களின் வழியே சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு மிகப்பரிய சவாலாகப்பட்டது.பாதிவழியில் சிக்கிக்கொண்டால்..?நினைக்கும்போதே மூச்சுத்திணறுகிறது.(ஆனாலும் BLACK THUNDER சென்றிருந்தபோது சவாலில் வென்றுவிட்டேன்.சில சமயம் உண்மையைவிட ,கற்பனை அதீதமான உணர்வுகளை ஏற்படுத்திவிடுகிறது) அதாவது,இதுபோன்ற நேரங்களில் நானே நினைத்தாலும்,நினைத்தமாத்திரத்தில் என்னால் வெளியேவரமுடியாது.இப்போது ,நான் எதுகுறித்து எழுதவிருக்குறேன் என்று உங்களால் ஊகித்திருக்கமுடியும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவுமே மனித உயிர்களைப் பலிவாங்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல.ஆனால் அறிவியல் வளர,வளர ஆபத்துக்களும் ,விபத்துக்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது.சாலைப் போக்குவரத்தில்,தொடர்வண்டிகளில்,மின்சாரத்தால் என உயிர்ப்பலி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.இவ்வாறு உயிர்ப்பலி வாங்கும் கண்டுபிடிப்புகள் எப்போது முழுமையடைகின்றன என்றால்,அந்த அறிவியலால் விபத்துக்கள் இல்லாத ஒரு நிலையை எட்டும்போதுதான்.இந்நிலையையும் உள்ளடக்கியதாகவே கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும்.பாதுகாப்பு விதிமுறைகளும்,உறுதியான பின்பற்றலும் நடந்தேற வேண்டும்.
ஆழ்துளைக்குழாய்கள் அமைத்துத் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும்பொருட்டு வளர்ந்த விஞ்ஞானம்,அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவும் செய்யவேண்டும்.இதுவரை எத்தனையோ அப்பாவி சிறுவர்களை நாம் இழந்துவிட்டபோதிலும்,இன்றளவும் தொடர்கதையாகவே இருக்கிறது என்பது நாமனைவரும் வருந்தவேண்டிய,வெட்கப்படவேண்டிய ஒரு செயல்.குழந்தைகள் ஒன்றும் குடிபோதையில் குழிக்குள் விழுவதில்லை.சென்றவாரம்கூட 2 வயதேயான சிறுவன் 150 அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டான்.இதில், அச்சிறுவனின்-சிறுவன்கூட அல்ல,குழந்தை-தவறு என்னவாக இருந்துவிடமுடியும்.150 அடி ஆழத்திற்குக் குழிதோண்டத் தெரிந்த விஞ்ஞானத்திற்கு அதிலிருந்துக் குழந்தைகளைக் காப்பாற்றத் தெரியவில்லை. ஏற்கனவேயுள்ள குழிக்கு இணையாக மற்றொரு குழி வெட்டுவதும்,ராட்சத இயந்திரங்களை வரவைப்பதும் ,ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்களைவைத்தே மண்அள்ளுவதும்,சிறுவன் மூச்சுவாங்கும்பொருட்டு ,குழாய்கள் வழியாக காற்றுசெலுத்துவதும் என்று மணிக்கணக்கில்,நாள்கணக்கில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதுவரை, ஏதுமறியா அப்பிஞ்சுக் குழந்தையின் நிலையை,தவிப்பை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.போதாக்குறைக்கு குழிக்குள் நீர்மட்டம் வேறு உயரந்து கொண்டேயிருக்கிறது.நீங்கள் கற்பனைக்கு ஒதுக்கும் ஒரு வினாடி, இறந்த சிறுவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பிரார்த்தனைக்கான நேரமாக இருக்கட்டும்.என்னதான் சூரரராகவே,வயதில் பெரியவர்களாக இருந்தாலுமேகூட,அந்த நிலையில் அவரால் என்ன செய்துவிடமுடியும்? இந்த மாதிரியான சூழலில் அக்குழந்தையின் நிலையை,தவிப்பை நான் விளக்கிக்கொண்டிருக்கப் போவதில்லை.அதை வெறும் சொற்களால் விளக்கிவிடமுடியாது.அவரவர் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூட இத்தொடர் நிகழ்வுகளுக்கு வருத்தமும் ,கண்டனமும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது.
செய்ய வேண்டியது.
வேலையை முடித்ததும் குழியை மேலே மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.
சிறு பிள்ளைகள் அப்பகுதிக்கு வரமுடியாத அளவுக்குச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இம்மாதிரி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாதவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.அப்போதாவது பயந்து செய்வார்கள் அல்லவா.

வந்தபின் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்று இவ்விசயத்தில் மிகவும் பொருந்தும்.

  வெளியிட்டு மேன்மைப்படுத்தமைக்கு நன்றி-கீற்று.காம்
 15-10-08

Monday, October 6, 2008

என் வீடு எங்கே?



அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.மணிமாறனுக்கும் விடுமுறை நாள்.
அதிசயமாய் மணிமாறன் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியால் அவன் மனைவிக்கும் மகிழ்ச்சியாயிருந்தது.ஓய்வாகப் படுத்துக் கொண்டு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘குப்’பென்று வலது பக்க மார்பு ,தோள்பட்டை வலி எடுத்தது.தன் மனைவியை அழைத்து தைலம் தேய்த்துவிடச் சொன்னான்.அவளும் பதறிப்போனவளாக தைலம் தேய்த்துவிட்டாள்.இது என்ன புதுத் தொல்லையாக இருக்கிறதே என்று யோசித்தபோது, அன்று காலையில் கிரைண்டரை நகர்த்தி வைத்தது நினைவுக்கு வந்தது.அதன் விளைவுதான் என்று நம்பினான். கொஞ்ச நேரம் முன்பே லேசான வலி ஏற்பட்டிருந்தது என்றாலும் அலட்சியம் செய்துவிட்டான்.ஆனால் இப்போது வலி மிகவும் கடுமையாக இருக்கவே மருத்துவமனை செல்வதென தீர்மானித்தான்.’ஏதாவது ஒத்தடம் கொடுக்க ஏற்பாடு செய்’ என்று மனைவியிடம் சொன்னான்.அவளும் தெருவிலிருந்து கொஞ்சம் மணலை எடுத்து வந்து வாணலியில் இட்டு சூடுபடுத்தி துண்டில் சுற்றி எடுத்துவந்து ஒத்தடம் கொடுத்தாள்.சற்று ஆசுவாசமாகயிருந்தது.பிறகு,தன் இரு சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு தனியாகவே மருத்துவமனைக்குப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால்,துறைவாரியான சிறப்பு மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.ஒரேயொரு பொது மருத்துவர் மட்டுந்தான்.மருத்துவமனை வளாகத்தில் தன் வண்டியை நிறுத்தியபோது ,வழக்கத்திற்கும் மாறாக,மருத்துவமனையே வெறிச்சோடிப் போயிருந்தது,ஞாயிற்றுக் கிழமை என்பதால்.யாரோ பின்னாலிருந்து அழைப்பதுபோல் உணர்ந்தான்.திரும்பிப் பார்த்தபோது,கூப்பிடு தொலைவில் ஒரு இளைஞன்,ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தான்.’இவன்தான் அழைத்திருப்பானா?’ என்ற சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது ,அம்மூவரும் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தபடியால்,சற்று நம்பிக்கையோடு அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.இப்போது சற்று தொலைவிலேயே அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.’இவள் முருகனின் மனைவியாயிற்றே! அப்படியென்றால்,அவள் பக்கத்தில்..அவன்..அவன்...முருகன்தானே? ஆமாம்.முருகனேதான்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டான்.முருகன்,மருத்துவமனையில் கொடுக்கப்படும் உள்நோயாளிகளுக்கான ஆடைகள் அணிந்திருந்தான்.சக்கரம் வைத்த கம்பிக்கூடு போன்ற ஒரு நடைபழகும் சாதனத்தை கையில் பிடித்துக் கொண்டு,அதன் உதவியோடு நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.அந்த இடம் மருத்துவமனை நோயாளிகள் இளைப்பாறும் தோட்டம்.அவர்களை நெருங்குவதற்கு முன்னால் மணிமாறனுக்கு,முருகன் பற்றிய கடந்த கால நினைவுகள் மின்னல் வேகத்தில் சரசரவென வந்தது.

மணிமாறனும்,முருகனும் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிபவர்கள்.சமவயதுக்கார இளைஞர்கள்.நெருங்கிய நணபர்கள் இல்லையென்றபோதிலும்,நல்ல அறிமுகம் உள்ளவர்கள்.ஒருமுறை நிறுவனத்தில் நடத்தப்பட்ட நடனப்போட்டிக்கு,மணிமாறன்,முருகன் மற்றும் சில நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பயிற்சி எடுத்து,மேடையில் ஆடி,முதல் பரிசையும் பெற்றார்கள்.இதுபோன்ற சமயங்களில் பழகுவதுதான்.மற்றபடி,அவ்வப்போது வழியில் எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்,கொஞ்சம் பேசிக்கொள்வதும்,கையசைப்புமாக சென்றுவிடுவார்கள்.அப்போதெல்ல்லாம் பரபரப்பாகவே தென்படுவான் முருகன்.வண்டியில் சீறிக் கொண்டு வேகமாய்த்தான் போவான்.நடனப்போட்டி முடிந்த அன்று வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் எல்லோரும் குடிக்கச் சென்றார்கள்.இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மணிமாறன் இதுபோன்ற சமயங்களில் மட்டுமே குடிப்பவன்.அதுவும் அளவோடுதான்.ஆனால்,முருகனோ நாள்தோறும் குடிப்பவன்.அதுவும் அளவில்லாமல்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திறகும் மேலாகவே இருக்கும் முருகனுக்கு விபத்து நடந்து.ஒருநாள் இரவில், ஆளரவமற்ற ஒரு சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தபோது பேருந்து இடித்துவிட்டதாம்.பிறகு நீண்ட நேரம் கழித்தே நள்ளிரவில் சில கிராமத்து மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள்.பலத்த அடியென்றும்,பிழைப்பதே கடினம் என்றும் பேசிக்கொண்டார்கள்.’குடிச்சி அழிஞ்சிப் போகுதுங்க.இதுங்களுக்கெல்லாம் வேணும்’என்று விஷயம் கேள்விப்பட்டபோது உடன்பணிபுரியும் ஒருவர் ஈவிரக்கம் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை இப்போது நினைத்தாலும் மணிமாறனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்திருந்ததாகவும்,சுயநினைவே இல்லாமலும்,கண்ணைத் திறக்காமலும் நெடு நாட்கள் இருந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தான்.ஆறேழு மாதங்களுக்குப்பிறகே கொஞ்சம் தேறி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்ததையும் கேள்விப்பட்டிருந்தான்.உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டப் பிறகாவது போய்ப்பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துக்கொண்டிருந்தவன்,நண்பர்கள் சொன்னதைக் கேட்டு அந்த எண்ணத்தையே கொஞ்ச நாளைக்குத் தள்ளி வைத்து விட்டான்.’ஆளே அடையாளம் தெரியலப்பா.நாமப்போனா அவனால நம்மை யாரையும் அடையாளங்கண்டுபுடிக்க முடியல.நிக்கவே முடியல அவனால.ஒடஞ்சி ஒடஞ்சி விழறான்.பேச்சே வரல.ழே..ழே.. ழ்ழ..ழ்ழங்கிறான்.ரொம்பக் கொடுமை.ஏந்தான் போனோமோன்னு ஆயிடுச்சி.அவன் பொண்டாட்டியை கண்டிப்பாப் பாராட்டணும்ப்பா.இந்தச் சின்ன வயசிலேயே எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொறுப்பாப் பாத்துக்குது.நம்ம வீட்டுப் பொம்பளைங்கக் கூட இப்படியெல்லாம் பாத்துக்குவாங்களான்றது சந்தேகந்தான்.அப்பப்பா.ரொம்பக் கொடுமை’

இவையெல்லாம் நடந்துமுடிந்து சில மாதங்களுக்குப் பிறகு இன்றுதான்,கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இதோ இப்போதுதான் மீண்டும் பார்க்கிறான்.இபோது அவர்கள் மூவரையும் நெருங்கிவிட்டிருந்தான்.
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் எடுத்த எடுப்பிலேயே.முருகனைப் பார்க்கவே கொடுமையாக இருந்தது.உருக்குலைந்து என்று சொல்வோமே அது இதுதான் என்று உணர்ந்தான்.ஆளே அடையாளம் தெரியாத அளவு சிதைந்து போயிருந்தான்.மொட்டையடித்து முடி முளைத்திருந்தது.காயம்பட்ட சுவடுகள் நிறைய, ஆடைகள் மூடப்படாத பாகங்களிலேயே தெரிந்தது.கழுத்துப் பகுதியில் தெரிந்த ஒரு குழி மணிமாறனை என்னவோ செய்வது போலிருந்தது.பலூனை ஊதிவிட்டு உள்ளுக்குள் இழுத்து ஒரு முடிச்சுப் போட்டால் அந்த இடத்தில் ஒரு குழி தெரியுமே அதுபோல இருந்தது.’இவனாலதான் இவன் மனைவியே நமக்குத் தெரியும்.ஆனா இப்ப என்னன்னா இவன் மனைவியை வச்சிதான் இவனை அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி ஆயிடுச்சே’என நினைத்துக்கொண்டான். அண்ணா என்று தன்னை அழைத்ததும் மணிமாறனுக்கு சங்கடமாயிருந்தது.பரவாயில்லையே அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு, பேசுகிற அளவுக்கு தேறியிருக்கிறானே என்று நினைத்து சந்தோசப்பட்டவனுக்கு வா போ என உரிமையாய் பேசியவன் அண்ணா என்கிறானே.அவனின்நிலை மேல் கொண்ட கழிவிரக்கமா அல்லது இன்னமும் தன்னை சரியாக அடையாளம் காணவில்லையா? சுதாரித்துக் கொண்டு பேசத்துவங்கினான்.’என்ன முருகா.எப்படி இருக்க?’
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் மறுபடியும்.
என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றவன்,’இன்னுங்கொஞ்ச நாள்லே வீட்டுக்குப் போயிடலாம் முருகா’என்று சொல்லிக்கொண்டே அவன் மனைவியைப் பார்த்தான்
.’உங்க பேரு என்னா’ என்றாள்.’
மணிமாறன்’
’அதான் மணின்னுக் கூப்பிட்டாங்களா?’ என்றாள்.அப்படின்னா ஆளை நல்லாத் தெரியுது என்று உணர்ந்தான்.அவன் முதுகில் ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை லேசாக சட்டைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவனை அந்தப் பெண் கைத்தாங்கலாக்ப் பிடித்து,பிளாஸ்டிக் பையை வெளியே உருவி,அவனை ஒரு பெஞ்சில் உட்கார வைத்தாள்.மூத்திரப்பை போலும். இப்போது அவன் மனைவி,’ஆமா, வீட்டுக்குப் போலாம்னு சொல்றியே.வீடு எங்க இருக்குது?’என்றாள்.
’ஸ்கூல் பக்கத்தில’
‘எந்த ஸ்கூல், உன் பையன் படிக்கிறானே அந்த ஸ்கூலா? அந்த ஸ்கூல் பேரு என்னா?’
‘லாலிபாக்’ .லால்பாக் என்பதைத்தான் அவன் அப்படிச் சொன்னான்.
‘சரியாச் சொல்றாரா’ என்றான் மணிமாறன்.
‘இல்ல. அது நந்தவனம்.’
‘சரி,வீட்டுக்குப் போகணும்னு சொல்றியே.வீட்டுக்கு எப்டிப் போகணும்?’ அவன் மனைவி அவனை சோதித்துக் கொண்டிருந்தாள்.வைத்தியமும் கூடத்தான்.
‘லெப்டில போகணும்’ சாலையைக் காட்டியபடியே சொன்னான். அந்நேரம் ஒரு வடமாநிலத்து முதியவர் அவர்களை வேடிக்கைப் பார்த்தவாறு கடந்து சென்றார்.முருகன் அவரிடமும்,’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ அழாத குறையாக கெஞ்சினான்.
முதியவர் மொழி தெரியாமல் திருதிரு வென விழித்தபடியே கடந்துசென்றார்.மணிமாறன் மீண்டும் முதுகுவலி நினைவுக்கு வந்தவனாக முருகனின் மனைவியிடம் சொல்லிவிட்டு அரை மனதோடு உள்ளே போனான்.சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் வந்து மறுபடியும் தன் வண்டியை நகர்த்திக்கொண்டே அவர்களிடம் வந்தான்.இப்போதும் முருகன்,’ ’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ என்றான்.வண்டியை நிறுத்திவிட்டு அவன் தோளை ஆதரவாகத் தொட்டுக்கொண்டு இந்த முறை,’நான் நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன் முருகா.இப்போ வேற ஒரு இடத்துக்குப் போறேன்.சரியா?’ குழந்தையிடம் பேசுவதுபோல் பேசினான்.முருகனும் இப்போது ஒரு குழந்தை மாதிரிதானே என எண்ணினான்.அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகனுக்கு வணக்கம் சொல்லியவாறே வந்துகொண்டிருந்தார்.யார்யாரெல்லாம் புதுப்பது நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.மணிமாறன் தயக்கத்தோடும்,கனத்த இதயத்தோடும் செய்வதறியா ஒரு மனநிலையில் வண்டியை எடுத்துப் புறப்பட ஆரம்பித்தான்.முருகனின் மகன் இதுவெதுவும் அறியாதவனாக சற்றுத் தள்ளி மணலில் விளையாடிக் கொண்டிருந்தான்.மணிமாறனின் முதுகுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டுக்கொண்டிருந்தது.ஆம்புலன்ஸ் டிரைவரிடம் முருகன் சொல்லிக்கொண்டிருந்தான்.’அண்ணா,வண்டிய எடுத்துனு வாண்ணா.என்னக் கொண்டுபோய் வீட்டுல விட்டுடுண்ணா’


பின்குறிப்பு ; இந்த முருகனை ஒன்றரை வருடங்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு நாள் நீங்கள்கூடப் புகைப்படத்தோடுப் பார்த்திருக்கலாம்.மாநில அளவில் கராத்தேப்போட்டியில் பரிசு வாங்கியப் புகைப் படம்தான் அது.