Monday, May 10, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் ச.முத்துவேல்


கவிஞர் வே.ராமசாமி
புதுக்கவிதை, நவீன கவிதை என்பதெல்லாம் வகைமை சார்ந்து நாம் பகுத்துக்கொள்வதே. இரண்டிற்கும் பொருள் ஒன்றேயல்லவா. பாடுபொருட்கள், கூறும் முறைகள், வெளிப்பாட்டு உத்தி, தொனி, போன்ற பல்வேறு கவிதைக் கூறுகளின் அடிப்படையில் இவ்வகைப்படுத்துதலை வகுத்துக்கொள்கிறோம். இதழ்களும், படைப்பாளிகளும் அடையாளப்படுத்தப்படுவதுகூட இந்த அடிப்படையில்தான். இந்தப் பிரிவினை அதிக அளவில் இயங்கும் இலக்கிய வடிவம் கவிதையாகவே இருக்கிறது. சிறுகதை, நாவல் ,கட்டுரை போன்ற வடிவங்களில் இயங்கும் பல படைப்பாளிகள் இரண்டுத் தளங்களுக்கும் பொதுவானவராகவே இயங்குவதை, ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. அதுபோல் இவ்விரண்டு வகைமை சார்ந்த தளங்களுக்கும் பொருந்திவரும் வகையிலும், இந்தப் பிரிபினையை தகர்த்துக்காட்டக் கூடியவகையிலும் சில கவிஞர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவராக குறிப்படத்தகுந்த கவிஞர், வே.ராமசாமி.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். குரோட்டன்கள் எனது விரல்களின் நீட்சி என்றார் பழமலய்.(குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், கவிதைத் தொகுப்பு). ‘எனது /நரம்பெல்லாம் /இலைகள் /அரும்பின./ இடையன்/ தன் ஆடுகளுக்கு /என்னை /கட்டுவானாக, என்கிறார் வே.ராமசாமி. கவிதை என்பது பித்து நிலை. உணர்வெழுச்சிகளாலானது. அதனால்தானோ என்னவோ காதலிக்கத்தொடங்குபவர்கள் பெரும்பாலோர் கவிதையெழுதவும் தொடங்கிவிடுகின்றனர். ராமசாமியின் காதல் அவரின் பிறந்த மண்ணான செவக்காட்டின் மீதும், அம்மனிதர்களின் மீதும், உயிரினங்களின் மீதுமாயிருக்கிறது. இந்தக் காதலை நினைத்து வியப்புறாமல் இருந்துவிடமுடியாது. பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு பொருள்தேடி நகரத்திற்கு வந்து போராடும் ஒரு இளைஞனின் சித்திரம் இவரின் கவிதைகள் வழி நமக்குக் கிடைக்கிறது. வறட்சியான தன் சொந்த மண் வாழ்வாதாரத்திற்கு ஏதுவாகயில்லாதபோதும், அதன் மீது உயர்வான எண்ணங்களும், கசிந்துருகும் காதலும் கொண்டிருக்கும் அதேவேளை வாழ்வாதாரம் அளிக்கும் நகரத்தை , அதன் நிர்ப்பந்தங்களை, போலித்தனங்களை, பகட்டை வெறுக்கும் ஒருவராகவே இவர் எழுத்தில் தெரிகிறார். நினைவில் காடுள்ள மிருகமாய் தன் செவக்காட்டைச் சுமந்துகொண்டிருக்கிறார். இக் கவிதைகளின் மூலம் வாழ்வின் அற்புதமான உணர்வுகள், நிகழ்வுகள், தருணங்களை உள்ளடக்கிய கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். வேளாண்மை சார்ந்த தகவல்களும், சொற்களும், அனுபவபூர்வமான, கலைபூர்வமான, தருணங்களும் நுட்பமாக இவர் கவிதைகளில் மிகுந்துள்ளது.

செவக்காட்டுப் பகுதியின் வறட்சியை உக்கிரமாகவும் துல்லியமாகவும் பதிவுசெய்கிறது இவர் கவிதைகள். இலக்கியம் எப்போதும் அவலங்களையே, துயரங்களையே பேசுகிறது. இவரின் பெரும்பாலான கவிதைகளின் உணர்வும் விரக்தி மனப்பான்மையே. சிறுகதை , நாவல் ஆகிய வடிவங்களில் விவசாயம் பற்றியும், விவசாயிகளின் நிலைபற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதுபவர்களைப் போல கவிதைகளின் வழியாக அறியத்தருகிறவர்களுள் வே.ராமசாமி முக்கியமானவர் என்று சொல்லமுடியும்.உவமைகள்கூட விவசாயம் சார்ந்த, கிராம வாழ்வு சார்ந்தவையாகவும், தனித்துவமானதாகவும், அசலானதாகவும்,சிறப்பானவைகளாகவும் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் சம்சாரிகள் என்று அழைக்கப்படுகிற விவசாயிகளின் அவல நிலையையும், சிறப்புக்களையும் கவிதைகளின் வழி அறியத்தருகிற இவர் தன்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பை ‘உலகமெங்குமுள்ள விவசாயிகளுக்கு’ அர்ப்பணித்திருப்பதிலிருந்தே இவரின் பற்றுதல் விளங்கும்.அற்புதமான பல கவிதைகள், அல்லது ஒவ்வொரு கவிதையிலும் குறைந்தபட்சம் அற்புதமான சில வரிகளாவது நிச்சயம் வாசிப்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கவிதைகள். கவிதைகளின் இறுதியில் இவர் ஏற்படுத்தும் திருப்பங்கள், மற்றும் முத்தாய்ப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. உயிரினங்களின் மீதான இவரின் பரிவும், கனிவும் இயற்கையின் மீதான இவரின் நாட்டமும் இவர் கவிதைகள் மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்த வல்லவை. சிறுகதைகள், திறனாய்வுகள் ஆகியவையும் எழுதிவருகிறார். செவக்காட்டுச் சித்திரங்கள் என்ற தலைப்பில் கல்கி வார இதழில் தொடராக எழுதியவை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது.

இவரின் படைப்புகள்

1. ஏலேய் ( கவிதை தொகுப்பு, 2005 மதி நிலையம்)

2. கிணற்றுக்குள் முளைத்த மருதாணி (கவிதைகள் 2007 மதிநிலையம் வெளியீடு)

3. செவக்காட்டுச் சித்திரங்கள் ( விகடன் பிரசுரம்)

4.பூ மாரியும், தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் -( சிறுகதைகள் அச்சில்)

ரெட்டைச்சுழி என்கிற திரைப்படத்தில் ‘பட்டாளம் பாரடா’ என்கிற பாடலின் மூலம், திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார்.

வே.ராமசாமி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் வட்டம் மலையாங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவரது வலைப்பூ http://ramasamyvee.blogspot.com/

ஏலேய், கிணற்றுக்குள் முளைத்த மருதாணி ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள் மற்றும் நீளம் கருதி கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும் கீழே தருகிறேன்.

வழிவந்த ஆட்டுமந்தையின்
கால்தடங்கள்தோறும்
கச்சித முத்திரையாகின
பட்டாம்பூச்சிகளின்

வர்ண றெக்கைகள்

***

பனையைப்
பச்சைக் கண்ணாடியெனச்
சொன்னவன் யாரெனத்
தெரியாது போயினும்…

அவன் பிறந்தது
பூமியிலேயே
மிகச்சின்னஞ்சிறியதாய்
ஈனப்பட்ட
ஐந்துகால் ஆட்டுக்குட்டியை
நெஞ்சணைக்கிற
ஆட்டுக்காரன் மகள்
வாழுமிந்த
முல்லை நகரந்தான்

***

வாழ்வறு நிலை

என்னைப் போலல்லாது
எப்போதும் ஊரிலேயே வாழும்
வேலி மரங்களின் மேலே
பொறாமை நிரப்பினேன்

மனதின் சல்லிவேர்களில்
விழுந்துகொண்டேயிருக்கும்
நிகழ்வு கோடாரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக்கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்

நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு
துயரவெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை
திசைகளெங்கும்
அறைவாங்கி துடித்துவிழும்
உயிர்ப் பறவை
இக்கவிதையே பற்றுக்கோடானால்
கழியுமோ பிறவிப் பெருங்கடல்
முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடைக்கும் வாழ்வு

***

அன்னையிடமும்
உச்சபட்சமாய்
அடிவாங்கிய
குழந்தைபோலானதென்
நிலை

இன்று
பசிய சோள நாற்றில்
வாய் வைத்து
அலகில் அறைவாங்கிய
பசுவின் துயரோடு
பாதையில் போகிறேன்

புறா வாழ்வு

எச்சங்களால் அறியப்படும்
அதன் இருப்பிடம்
சிறுபிள்ளைகளும்
கல்லெறியும்படியானது

பழைய சோற்றை
கிணற்றுள் வீசும்
சிறுசப்தத்திற்கும்
அஞ்சிப் பறக்கும்
அவற்றின் பதற்றம்
எவ்வுயிரும் அறியாதது

முட்டைகளை
நீரில் தவறவிட்டு
மலங்க மலங்க
மின்கம்பத்தில் முழிக்கும்
நாள் முழுவதும்

பொரித்ததானாலும்
கிணற்றின் இடுப்பில்
கிளைத்த மஞ்சணத்திக்கு
தீயிடும்போதோ
உள்விவிழுந்த தென்னையோலைகளை
அகற்றுகையிலோ
அப்பாவின் கண்பட்டு
குழம்புக்கு வரும் குஞ்சுகள்

மறுநாள் தாய்ப்புறாக்களின்
கேவலில் நிறையும்
கிணறு

குயிலோசை

உழுது முடித்த ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு இலைச் சுருட்டில்
பீப்பி எழுப்பும்
அம்மணச் சிறுவனின் இசைக்குப்
பதிலிறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்

செல்லும்
திசைஎல்லாம்
ஊழித்தீ
பிடித்து துரத்தினாலும்
பூத்து வெடிக்கிற
ஒரு பொழுதுவரை
பத்திரமா இரு

என் கனவே நீ

நன்றி - தடாகம்

Monday, May 3, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் (கவிஞர் கே.ஸ்டாலின் )

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்


கவிஞர் கே.ஸ்டாலின்
பயணவழிக்குறிப்புகள் என்கிற முதல் கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு, எட்டாண்டு இடைவெளியில் கே.ஸ்டாலின் அவர்களுடைய இரண்டாவது தொகுப்பான ‘பாழ்மண்டமொன்றின் வரைபடம்' வெளிவந்திருக்கிறது.காட்சிகளின், நிகழ்வுகளின் கவித்துவ சிந்தனைப் பதிவுகளே ஸ்டாலின் கவிதைகள்.மிகுபுனைவு, திருகல்மொழி, அனாவசியமான இறுக்கங்கள் ஆகிவற்றைத் தகர்த்து எளிய வாசகரையும் சென்றடையும் வகையில் வெட்டவெளிச்சமாய் தன்னை முன்னிறுத்துபவை இவரது கவிதைகள். நிராயுதபாணியாய் நின்று வெற்றிவாகை சூடக்கூடியவை.ரசனை மிகுந்தவை.

படித்து முடித்ததும், நன்றாக இருக்கிறது என்ற ஒரு சிறிய தீர்மானத்தை மட்டுமே நிகழ்த்திவிட்டு நெஞ்சைவிட்டு அகன்றுபோகும் கவிதைகளைப்போலல்லாமல் ,

பேருந்தின் மேல்கம்பியை
பிடித்து வந்த
அழகான மருதாணி
விரல்களுக்குரிய
முகம் தேடி
தவிப்பும் துக்கமுமாய்

என்கிற இவரின் கவிதை வரிகளைப்போல் மனதில் நின்று தாக்கம் நிகழ்த்தக்கூடிய வல்லமை பெற்றவை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். ‘டிஷ் ஆண்டனாவின் நிழலில் எங்கள் கிராமம்' என்கிற கவிதைத் தலைப்புக்குள்ளேயே வைத்திருக்கும் பொறியைப் போன்று, காலமாற்றத்தில் ஏற்படும் சீரழிவுகளையும், சிதையும் தொன்மங்களையும், அதே சமயம் எவ்வளவுதான் மாற்றம் கண்டிருந்தாலும் இன்று வரை மாறாத சில அவலங்களையும் சுட்டிக்காட்டும் கவிதைகள் உள்ளன.( கணேஷ் தியேட்டர்..)

இவரது கவித்துவமான கற்பனைவளம் அலாதியானவை.தொகுப்பு முழுதும் விரவிக்கிடந்து ரசிக்கத்தக்கவையாகவும், வியப்பளிக்ககூடியதாகவும் அமைந்துள்ளது.

நீ நடந்து வரும் பாதையில்
முகத்தைச் சந்திக்கும் நேர்க்கோட்டு வெற்றிடங்களெல்லாம்
கனவெளிகளில்
பூச்சொரிகின்றன.., என்கிற வரிகள் மற்றும்

அசைவின்மை நோக்கி
அசைந்தபடியிருக்கிறது
நீ எழுந்துசென்ற பின்னும்
உன்னைச் சுமந்திருந்த ஊஞ்சல் .., என்கிற வரிகள் உதாரணம்.

பிணம் தின்னும் தேவைதைகள்,பட்டுத் துணியிலிருந்து உயிர்த்தெழும் பட்டுப்பூச்சிகள்,’அப்போதுதான் வெட்டியெடுக்கப்பட்ட குழந்தையின் ஓர் உறுப்போ ‘என்பன போன்ற வரிகள் மறக்கமுடியாதவை.

கவிதை அழகிய பொய்களாலானது. நிறுவப்பட்ட கணிதச் சமன்பாடுகளையே, சமனற்றவையாக ஆக்கும் அழகிய பொய் கொண்ட வித்தியாசமானவொரு கவிதைத் தலைப்பு (a+b)2 ...

ஒரு கவிதையின் வீச்சு என்பது, அது வாசகனுக்குள் நிகழ்த்தும் தாக்கத்திற்கு நேர்விகிதத்தில் அமைந்திருக்கும்.இக்கூற்றை ஒரு கவிதையாக விளக்குவதாகவும், அதேசமயம் பொருத்தமான சாட்சியாகவும் விளங்கும் இவரது கவிதை..

வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு.

என்கிற கவிதையைச் சொல்லலாம்.

நகுலனுக்கு சுசீலா போல், இவருக்கு நித்யா.கவிஞரின் அன்புக்குரிய பாத்திரம்.காதலியாகவோ, மகளாகவோ,கற்பனையாகவோ எப்படியும் இருக்கலாம். காதல் கவிதைகள் என்று உணரத்தக்க நிறைய கவிதைகள் உள்ளன.ஆசிரியராகப் பணிபுரிவதாலோ என்னவோ, பரவலாக இவரது கவிதைகளில் குழந்தைகளின் உலகம் காணக்கிடைக்கிறது.

ஒரு தொகுப்பைப் பற்றி எழுத நேர்கிற சந்தர்ப்பத்தில், உண்மையான உற்சாகத்தோடும், தைரியமாகவும் கொண்டாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகிற வகையில் இத்தொகுப்பு இருக்கிறது என்று சுருங்கச் சொல்லலாம். இப்படி எழுத நேரிடுவதில் இருக்கும் சுதந்திரமும், நேர்மறையான சாதகங்களுமே எழுதுகிற எனக்கு உற்சாகமளிக்கிறது. தொகுப்பில் எதன் பொருட்டும்,செய்த கவிதைகளே இல்லாமல் அகத்தூண்டலில் உந்தப்பட்டு படைப்பூக்கத்துடன் எழுதப்பட்ட அசலான கவிதைகள் நிறைந்திருக்கும் தொகுப்பு இது.

கவிஞர் கே.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம்,திருவரங்கம் அஞ்சல் கள்ளிப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாழ்மண்டமொன்றின் வரைபடம்- கவிதைகள்

குழந்தைகளைக் குளிப்பாட்டும் விரல்கள்

குழந்தைகளைக்
குளிப்பாட்டும் விரல்கள்
எப்போதும்
சொர்க்கத்தின் சாவிகளை
சுழற்றியபடியிருக்கின்றன

பூத்தொடுப்பதும்
குழந்தைகளைக்
குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்
இரண்டிற்குப் பின்னரும்
விரல்கள் வாசம் பெறுகின்றன

வன்முறைக்குப் பழகிய
விரல்களை
குழந்தைகளின் மென்தேகம்
மெல்ல மெல்ல
மிருதுவாக்கி விடுகிறது

கூச்சத்தின்
முதல் கீற்று விழும் வேளை
மறுதலிக்கும் குழந்தைகளுக்கு
உங்கள் விரல்கள்
உடைந்த
விளையாட்டு பொம்மைகளாகின்றன

ஆற்றில்
தானே குளீக்கும் குழந்தைகள்
எந்த விரல்களையும் யாசிப்பதில்லை
அவர்களைத் தழுவிச் செல்லும் தண்ணீர்
தூரத்தில் துணீ துவைத்துக்கொண்டிருக்கும்
மலடி ஒருத்தியின் விரல்களை
குளிப்பாட்டிச் செல்கிறது

***

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா

***

தலைக்காயத்திலிருந்து
வழியும் உதிரமென
முகம் நனைக்கின்றன
உன் பிரியங்கள்
பாதுகாப்பெனக் கருதி
விழிகளை மூடிக்கொண்ட பின்னரும்
உதடுகளில் பட்டுக்
கரிக்கிறது
அதன் உதிரச் சுவை

***

அப்பாவின் டெய்லர்

அளவு சட்டையெல்லாம் வேண்டாம்
துணியை மட்டும்
கொடுத்துட்டு வா- என்பார் அப்பா
காதிலிருக்கும் பேனாவால்
புதுத்துணீயின் மூலையொன்றின்
கைகள் தோள்பட்டை
உடலின் அளவுகளை
மனப்பாடமாய் எழுதுவார்
அப்பாவி பிரத்யேக டெய்லர்
ஆயத்த ஆடைகள்
அறிமுகம் ஆகும் முன்னர்
உள் பாக்கெட் வைக்காமல்
இவர் தைத்த ஆடைகளை
சிறுவயதில் அணியாமலேயே
அடம் பிடித்திருக்கிறேன் நான்
விபத்தொன்றில்
உடல் நசுங்கி அப்பா இறக்க
அடையாளம் காட்டியது
காலருக்குப் பின்னிருந்த
எஸ்கே என்ற குறியீடுதான்
பெரிதாக்கப்பட்ட முகத்தையே
சில ஆண்டுகளாய்
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க
இன்னமும்
இவர் நினைவுகளில்
வாழ்ந்துகொண்டிருக்கூடும்
அதே நீள அகலங்களுடன் அப்பா.

***

தனிமை

மரத்தடியில் விளையாடிய சிறுவர்கள்
வீடு திரும்பினர்
வீடு திரும்புதலென்பது
விளையாட்டின்
எந்த விதிகளுக்குட்பட்டதென்ற
விளங்காத குழப்பத்தில்
வெயிலை வெறித்தபடியுள்ளது
நிழல் மட்டும் தனித்து

வளர்ந்த குழந்தைகளை பார்த்தபடியிருக்கும்
உடைந்த பொம்மைகளின்
இமையா விழிகளில்
உறைந்திருக்கும்
உலகத்துத் தனிமையின்
உச்சபட்ச அவஸ்தை
***

பாழ்மண்டமொன்றின் வரைபடம்- கவிதைகள்

கே.ஸ்டாலின்
வம்சி புக்ஸ்,
19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை
9444867023,944322297

விலை ரூ.50.

நன்றி- தடாகம்
அகநாழிகை- சமூக, கலை ,இலக்கிய இதழ்.