Tuesday, February 24, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே


நம் வலைப்பதிவுலக நண்பர்கள் பலரும் தன்னுடைய விருப்பமாக இளையராஜா அவர்களை மட்டுமேக் குறிப்பிட்டு எழுதியிருந்தை பல இடங்களில் படித்திருக்கிறேன். இளையராஜாவின் அபிமானம் பற்றி மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. ஆனால், ரஹ்மானை ஏன் விட்டுவிடுகிறார்கள் என்று நான் வருந்துவதுண்டு. இன்று முதல் ரஹ்மானைப் பற்றி மட்டுமே குறிப்பிடத் துவங்கினால், அதுவும் சரியானதாக இருக்க முடியாது.
10,12 வருடங்களுக்கு முன்பு, என்னிடம் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு நண்பர்கள் கேட்டபோதெல்லாம் அதில் ரஹ்மானின் மெல்லிசைப் பாடல்கள்(MELODY SONGS) ஒரு ஒலிநாடா அளவுக்கு எழுதித் தருவது என் வழக்கம். ஒவ்வோரு படத்திலும் ஒரு பாடலாவது, நல்ல மெல்லிசைப் பாடலாக இருக்கும். என்னுடைய அடுத்தத் தேர்வாக இருப்பது திரையிசையில் வந்த பாரதியார் பாடல்கள்.

ரஹ்மானின் பாடலைக் கேட்கும் மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும், இது ரஹ்மானின் பாடல் என்று. அதற்குக் காரணம் அவர் கையாளும் இசைக் கருவிகளும், இசையமைப்பும் என்பது என் கருத்தாகும். மேற்கத்திய கலாச்சார பாணியில் இசையமைப்பதுபோல் தோற்றமளித்தவர் ஆச்சரியப்படுத்தியது, கிழக்குச் சீமையிலே படத்தில் வந்த நம்ம ஊர் இசையமைப்பில் .அதைத் தொடர்ந்து கருத்தம்மா போன்ற படங்கள்.

தமிழகம், தென்னிந்தியா, வட இந்தியா, பிறகு ஒட்டுமொத்த இந்தியா, அதன் பின் உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்தத் தமிழர் ரஹ்மான்.’வந்தே மாதரம்...சுஜலா.’.என்றெல்லாம் வருமே. அந்தப் பாடல் அவ்வப்பொழுது, தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும். அப்போதே அந்தப் பாடல் என்னை உருக்கிக் குழைத்துவிடும். இப்படி நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.

சுதந்திர தினப் பொன்விழா ஆண்டில், ரஹ்மான் சென்னை மெரினாக் கடற்கரையில் , இசைநிகழ்ச்சி நடத்தியபோது, அதைப் பார்க்கும் நல்வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. மிகக் குறைந்த அளவிலான இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியதைப் பார்த்தபோது, வெறும் ஒரு ரசிகனான எனக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவரின் பாடல்களில் நான் குறிப்பிட விரும்புகிற அம்சம், அவை மிகக் கலவையான ,எளிதானதல்லாத மெட்டுக்கள் என்பது. எடுத்துக்காட்டாக, நியூயார்க் நகரம், முன்பே வா போன்ற பல பாடல்களைச் சொல்லலாம்.இதில், நியூயார்க் நகரம் பாடல் பாடுவதற்கு மிகவும் சிரமமானது என்பது என் கருத்து. ஆனால், அவரைத் தவிர வேறு யாராவது பாடியிருந்தால், ஒருவேளை இப்பாடலின் சுவை மாறுபட்டிருக்கலாம்.இவர் செய்த இன்னொரு நல்ல செயல், பல பாடகர்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததும், இறக்குமதி செய்ததும்.

ஆஸ்கார் விருது விழாவில்,ரஹ்மான் உணரச்சிவயப்பட்டுப் பேசிய உரைப் போற்றுதலுக்குரியது.’எனக்கு எது கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. ஏனெனில் என் தாய் இங்கே இருக்கிறார்’,

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் சொன்னபோது,உற்சாகத்தில் கூக்குரலிட்டேன். ரஹ்மானை சொந்தம் கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழில் பேசியதற்காக, தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு தமிழனின் உலகளாவிய இந்த வெற்றி, ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இன்னும் நம்மிடையே உள்ளப் பல இசையமைப்பாளர்களும் திறன் பெற்றவர்களே. அவர்களும் இதுபோன்ற வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம். சட்டென்று, நினைவுக்கு வருபவர், யுவன். அவரின், முதிர்ச்சியான, பக்குவப்பட்ட, சலனமில்லாத, அடக்கமான, பேச்சை தொலைக்காட்சியில் பார்த்தபோது, வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ரஹ்மானுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

Monday, February 23, 2009

படித்ததில் பிடித்தது

ஜனவரி மாத அம்ருதா இதழில் வெளியாகியிருந்த இக்கவிதையைப் பலரும் படித்திருக்கக் கூடும். இருந்தபோதிலும் இதுவரைப் படிக்காதவர்களுக்காகவும்,படித்தவர்களுக்கு மீள் வாசிப்பாகவும் அமையட்டும் என்று பதிவிடுகிறேன்.
(அம்ருதா வலைத்தளத்திலிருந்து எடுத்து ஒருங்குறிக்கு(UNICODE) மாற்றியுள்ளேன்.மற்றும், வரிகளின் அமைப்பு ஒருவேளை ,கீழே இருப்பதிலிருந்து மாறுபட்டிருக்கலாம்.)













நேரமிருந்தால்
- கணேசகுமாரன்

வீதிகளில் திரியும்
மனநிலை தவறிய ஒருவனின்
கண்களை உற்றுப் பாருங்கள்
அவன் அழுக்கு ஆடைகளை
முகர்ந்து பாருங்கள்
மனநிலை தவறியவர்
பெண்ணெனில்
அவள் நிர்வாண அலட்சியத்தைப் பாருங்கள்;
ரசிக்காதீர்கள்
எவருக்கும் புரியாத மொழியில்
இறைவனை அழைத்து
சுருங்கி காய்ந்து வெடித்த
தன் முலைகளை சுட்டி
முறையிடுபவளை நிதானியுங்கள்
உதிரம் உறைந்த யோனியை
ஒரு கையால் தட்டித் தட்டி
தரை அதிர நடக்கும் அவளின்
புட்டத்தின் மீதிருக்கும்
சூட்டுத் தழும்பினை
கவனித்து அதிருங்கள்
உங்களுக்கு
இந்தக் கவிதை கிடைக்கலாம்

Friday, February 6, 2009

ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு

மது,புகை,மாது போன்ற தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று வரையறை செய்துவிடமுடியுமா? மாறாக,இதுபோன்ற பழக்கங்கள் எதுவுமில்லாமல் பொய், துரோகம்,அடிவருடித்தனம்,கயமை,திருட்டு,பொறாமை,போலியான நடத்தை…. கொண்டிருப்பவர்களை எல்லாரையும் நல்லவர்கள் என்று கூறிவிடமுடியுமா?


கோகுலத்தில் சீதை என்ற திரைப்படம் வெளியான புதிதில் பார்த்தேன். என்னை மிகவும் தொந்தரவு செய்த படம் அது. மிகவும் பிடித்ததும்கூட. ஜி. நாகராஜன் அவர்களின் குறத்திமுடுக்கு என்கிற குறு நாவலை தற்போதுதான் படிக்கவாய்த்தது. 1963 ல் வெளியிடப்பட்ட இக்குறு நாவல்தான் இவரின் முதல் நூலாகும். நானொரு புதிய வாசகன் என்பதால் இப்போதுதான் படித்தேன் என்கிற குறுகுறுப்பு இருந்தாலும் இப்போதாவது படிக்க வாய்த்ததே என்று ஆறுதல் பட்டுக்கொள்கிறேன்.
தன்னுடைய சமூக இருப்பிற்கு அவமரியாதை, குந்தகம் என்று நினையாமல் வெளிப்படையாக, உண்மையாக எழுதிய ஜி. நாகராஜன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்.புகைப்படத்தில் பார்த்தால் ஒரு ராணுவ அதிகாரியைப் போன்ற தோற்றமும், மிடுக்கும், வசீகரமும் கொண்டுள்ள அவரின் இறுதிக்காலம் பற்றி எங்கோ கொஞ்சம் படித்த நினைவு, என் நெஞ்சை அறுக்கிறது. இப்படியெல்லாம் அவருக்கு நேர்ந்திருக்க வேண்டாம்தான்.

இக்குறு நாவலின் முன்னுரையாக ஜி. நாகராஜன் அவர்கள் எழுதியிருப்பது ஒன்றே போதும், அவர் யார் என்பதை நாம் உணர. அது பின் வருமாறு.
என் வருத்தம்
நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.


குறத்தி முடுக்கு என்பது ஒரு பகுதியின் பெயர்.பாலியல் தொழில் பரவலாக நடக்கும் பகுதி. இக்குறு நாவலின் அத்தியாயங்கள் இரண்டு பாதைகளாகப் பயணிக்கிறது. ஒரு அத்தியாயம் இப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்ட, அடுத்த அத்தியாயம் கதையின் நாயகனின் அனுபவங்களை விவரித்துக்கொண்டுபோகிறது. இவ்வாறாக மாறிமாறி சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே பாலியல் தொழில் புரியும் பெண்களின் மேல் நமக்கு ஒரு கழிவிரக்கத்தை ஆசிரியர் தன் எழுத்தின் மூலம் கொண்டுவந்துவிடுகிறார். தங்கம் என்பவள் கதை நாயகனை மணக்காமல், தன் தகுதிக்கு ஏற்றவன் என்று நம்புவதாலோ என்னவோ, நடராஜனையேத் திருமணம்(!) செய்துகொண்டு, கதை நாயகனை ஏமாற்றிவிடுகிறாள்.(!) ஆனால் இது விவரித்துச் சொல்லப்படாமல் அவரவர் ஊகத்திற்கு விடப்பட்டிருப்பது சிறப்பு. குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் ஒரு விபச்சாரியின் கருவோ சிதைவுக்குள்ளாகிறது. தூக்கில் தொங்க விரும்பும் ஒரு விபச்சாரி, அதுகூட நிறைவேறாத நிலையில் நடைபிணம்தானே அவள் வாழ்வு. மது, மாது போன்றவை எப்படி ஒரு உன்னதமான மனிதனைக்கூட சீரழித்துவிடும் என்பதற்கும் உதாரணமாகவே ஜி. நாகராஜன் அவர்கள் வாழ்ந்துவிட்டுப்போய்விட்டார் என்பது வருத்தமானதுதான் , எனினும் எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.