Tuesday, February 24, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே


நம் வலைப்பதிவுலக நண்பர்கள் பலரும் தன்னுடைய விருப்பமாக இளையராஜா அவர்களை மட்டுமேக் குறிப்பிட்டு எழுதியிருந்தை பல இடங்களில் படித்திருக்கிறேன். இளையராஜாவின் அபிமானம் பற்றி மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. ஆனால், ரஹ்மானை ஏன் விட்டுவிடுகிறார்கள் என்று நான் வருந்துவதுண்டு. இன்று முதல் ரஹ்மானைப் பற்றி மட்டுமே குறிப்பிடத் துவங்கினால், அதுவும் சரியானதாக இருக்க முடியாது.
10,12 வருடங்களுக்கு முன்பு, என்னிடம் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு நண்பர்கள் கேட்டபோதெல்லாம் அதில் ரஹ்மானின் மெல்லிசைப் பாடல்கள்(MELODY SONGS) ஒரு ஒலிநாடா அளவுக்கு எழுதித் தருவது என் வழக்கம். ஒவ்வோரு படத்திலும் ஒரு பாடலாவது, நல்ல மெல்லிசைப் பாடலாக இருக்கும். என்னுடைய அடுத்தத் தேர்வாக இருப்பது திரையிசையில் வந்த பாரதியார் பாடல்கள்.

ரஹ்மானின் பாடலைக் கேட்கும் மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும், இது ரஹ்மானின் பாடல் என்று. அதற்குக் காரணம் அவர் கையாளும் இசைக் கருவிகளும், இசையமைப்பும் என்பது என் கருத்தாகும். மேற்கத்திய கலாச்சார பாணியில் இசையமைப்பதுபோல் தோற்றமளித்தவர் ஆச்சரியப்படுத்தியது, கிழக்குச் சீமையிலே படத்தில் வந்த நம்ம ஊர் இசையமைப்பில் .அதைத் தொடர்ந்து கருத்தம்மா போன்ற படங்கள்.

தமிழகம், தென்னிந்தியா, வட இந்தியா, பிறகு ஒட்டுமொத்த இந்தியா, அதன் பின் உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்தத் தமிழர் ரஹ்மான்.’வந்தே மாதரம்...சுஜலா.’.என்றெல்லாம் வருமே. அந்தப் பாடல் அவ்வப்பொழுது, தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும். அப்போதே அந்தப் பாடல் என்னை உருக்கிக் குழைத்துவிடும். இப்படி நிறையப் பாடல்களைச் சொல்லலாம்.

சுதந்திர தினப் பொன்விழா ஆண்டில், ரஹ்மான் சென்னை மெரினாக் கடற்கரையில் , இசைநிகழ்ச்சி நடத்தியபோது, அதைப் பார்க்கும் நல்வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. மிகக் குறைந்த அளவிலான இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியதைப் பார்த்தபோது, வெறும் ஒரு ரசிகனான எனக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவரின் பாடல்களில் நான் குறிப்பிட விரும்புகிற அம்சம், அவை மிகக் கலவையான ,எளிதானதல்லாத மெட்டுக்கள் என்பது. எடுத்துக்காட்டாக, நியூயார்க் நகரம், முன்பே வா போன்ற பல பாடல்களைச் சொல்லலாம்.இதில், நியூயார்க் நகரம் பாடல் பாடுவதற்கு மிகவும் சிரமமானது என்பது என் கருத்து. ஆனால், அவரைத் தவிர வேறு யாராவது பாடியிருந்தால், ஒருவேளை இப்பாடலின் சுவை மாறுபட்டிருக்கலாம்.இவர் செய்த இன்னொரு நல்ல செயல், பல பாடகர்களை தமிழுக்கு அறிமுகம் செய்ததும், இறக்குமதி செய்ததும்.

ஆஸ்கார் விருது விழாவில்,ரஹ்மான் உணரச்சிவயப்பட்டுப் பேசிய உரைப் போற்றுதலுக்குரியது.’எனக்கு எது கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. ஏனெனில் என் தாய் இங்கே இருக்கிறார்’,

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் சொன்னபோது,உற்சாகத்தில் கூக்குரலிட்டேன். ரஹ்மானை சொந்தம் கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழில் பேசியதற்காக, தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு தமிழனின் உலகளாவிய இந்த வெற்றி, ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இன்னும் நம்மிடையே உள்ளப் பல இசையமைப்பாளர்களும் திறன் பெற்றவர்களே. அவர்களும் இதுபோன்ற வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம். சட்டென்று, நினைவுக்கு வருபவர், யுவன். அவரின், முதிர்ச்சியான, பக்குவப்பட்ட, சலனமில்லாத, அடக்கமான, பேச்சை தொலைக்காட்சியில் பார்த்தபோது, வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ரஹ்மானுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்.

2 comments:

புருனோ Bruno said...

//இளையராஜாவின் அபிமானம் பற்றி மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. ஆனால், ரஹ்மானை ஏன் விட்டுவிடுகிறார்கள் என்று நான் வருந்துவதுண்டு. இன்று முதல் ரஹ்மானைப் பற்றி மட்டுமே குறிப்பிடத் துவங்கினால், அதுவும் சரியானதாக இருக்க முடியாது.//
வழிமொழிகிறேன்

ச.முத்துவேல் said...

நல்வரவுபுரூனோ.
வருகைக்கும்,வழிமொழிதலுக்கும்
நன்றி !