Thursday, September 30, 2021

அழிந்த படங்கள் : அழியாத தடங்கள் #1

 

 


இரு சகோதர்கள் (1936)

அழிந்து போன படங்களை நினைத்தால் எனக்கேனோ அளவுக்கதிகமாகவே வருத்தம் ஏற்படுகிறது. இது சரியா,இல்லையா என்று தெரியவில்லை. தற்போதும் ஆவணங்கள் தனியுடைமை மனப்பான்மையால் வீணாகி அழிவது இன்னும் தவிப்பை உண்டாக்குகிறது.

இன்று கிடைக்காத சில படங்களை,கிடைக்கும் ஆவணங்களை வைத்து படம் பார்ப்பதற்கு நிகரான ஒரு வாய்ப்பை அளிக்க விரும்பி இப்படியொரு முயற்சி.வரவேற்பைப் பொறுத்து தொடர எண்ணம்.



கே பி கேசவன்

இவருதான் இரு சகோதரர்கள் படத்தோட ஹீரோ.இளைய சகோதரர்தான் என்றாலும் ஹீரோ என்பதால் முதலில் இவரைச் சொல்லிவிட்டுத்தான் பிறகு அண்ணனைப் பார்க்கப் போகிறோம். இந்த ஹீரோ எப்படிப்பட்டவரென்றால், ஜாலியானவர்.படிக்காதவர்.குடும்பத்தில் அக்கறையில்லாதவர். வேலையெதுவும் செய்யாதவர். ஆனால், நன்றாகப் பாடக்கூடியவர். நாடகங்களில் ஆர்வத்துடன்  நடிப்பவர்.

இவருடைய மனைவி மிகவும் நல்லவர்.பொறுமைசாலி.இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள்.ஒரு பெண்.ஒரு பையன்.



சரி, இப்போது அண்ணனைப் பார்க்கலாம்.

கே கே பெருமாள்


இவர்தான் அவர். அறிவுள்ளவர். வேலையில் உள்ளவர். ஆனால், மனைவி சொல்வதை அப்படியே கேட்பவர். சரி, இவர் மனைவி யார்? அவர் எப்படி?


S.N.விஜயலக்‌ஷ்மி

 

இவர்தான் மூத்தவரின் மனைவி. பொறாமையும், அகம்பாவமும் பிடித்தவர். நம்முடைய ஹீரோவைப் பற்றியும், அவருடைய குடும்பத்தாரையும் பற்றி வெறுப்பு வரும் வகையில் எப்போதும் தன் கணவரிடம் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டேயிருப்பவர். ஹீரோவின் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துபவர். இந்தம்மாவுக்கு ஒரு தம்பி.அவர் வேற எப்படியிருப்பார்? இவர்தான் இந்தப் படத்தோட வில்லன்.

T.S.பாலையா


அண்ணனும், தம்பியும் எப்பவும் ஒன்னாவேயிருக்கணும் அதுதான் நல்லதுன்னு சொல்லிட்டு இவங்க ரெண்டுபேரோட அப்பா, வயசான காலத்திலே போய்ச் சேர்ந்துடறார்.




 நம்ம ஹீரோ ரொம்ப ஆசைப்பட்டு நடிச்சிக்கிட்டிருந்த நாடகக் கம்பெனிக்காக கடன் வாங்கியிருந்தாரு.அந்தக் கடன் தவணை தள்ளிப்போகவே, கடன் கொடுத்த மார்வாடி நேரா வீட்டுக்கு வர்றார்.அங்கேயிருந்த ஹீரோவோட அண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போயிடறாரு. ஏற்கனவே வெறுப்பாயிருந்த அண்ணன் இன்னும் கடுப்பாகி தம்பிக்கிட்டே சண்டைபோட்டு வாக்குவாதம் வளர்ந்து கடைசியிலே பாகப் பிரிவினை வரைக்கும் ஆகிடுச்சு.ஒரே வீட்டிலயிருந்தாலும் கொடுமைகள் அதிகமாகிடுச்சு.

ராதாபாய்


 

 

இவங்கதான், ஹீரோ குடும்பத்துக்கு உதவியா வேலைக்காரியா அந்த வீட்டுக்கு வர்றாங்க. சிக்கனமா செலவு பண்ணிக்கிட்டு, ஆறுதல் சொல்லிக்கிட்டு தன்னால் ஆன உதவிகளை செய்றாங்க. இவங்க ஆலோசனைப்படிதான், ஹீரோ சென்னைக்கு வேலை தேடிப் போறார்.

 

கே பி கேசவன்

சென்னையில கொண்டுபோன பறிகொடுத்திட்டு ஆண்டியாத் திரியறாரு.அப்போ அங்கே நடக்கிற ஒரு திருட்டுல பழி ஹீரோ மேல வந்திடுது.  நல்லா அடிச்சுடறாங்க. அப்புறமா உண்மை தெரியுது.திருட்டு கொடுத்தவர் நம்ம ஹீரோ மேல மனமிரங்குறாரு. அவர் பெரிய வேலையில இருக்கிறவரு. ஹீரோதான் நல்லாப் பாடுவாரே. உடனே, ரேடியோவில பாடுறதுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்தாரு.அவ்வளவுதான் ஹீரோ எங்கியோ பொயிடறாரு. அதுமட்டுமில்லாம நாடகத்துலயும் சேர்ந்து நல்லா பேரும் பணமும் சம்பாதிக்கிறாரு. தவிச்சுக்கிட்டிருக்கிற மனைவி மக்களுக்கும் பணம் அனுப்பறாரு.



 

ஆனா, அப்படி வர்ற பணத்தையெல்லாம் அண்ணன் மனைவி ஏமாத்தி வாங்கிக்கிடறாங்க.வில்லன்தான் ஐடியா கொடுத்தவரு.

 


இப்படியே தொடர்ந்து நடந்துக் கிட்டிருக்குது. அப்போதான், அந்த ஊர் ப்ளேபாய் ஜமீன்தார், நம்ம ஹீரோ மனைவிய ஒரு நாள் பாக்கிறார். அடையத் துடிக்கிறார். இதுக்கு வில்லன் ஒத்துழைக்கிறார். வில்லன்,தன்னுடைய மனைவிதான்னு சொல்லி ஒரு நல்ல தொகை வாங்க்கிட்டு வித்துடறாரு.

ஒரு நாள், கதா நாயகிய தந்திரமா மயக்கம் கொடுத்து ஜமீன் வீட்டுல கொண்டுபோய் விட்டுடறாரு.அதோட விடாம, நம்ம ஹீரோவுக்கும் தந்தி கொடுத்து மனைவி ஓடிப் போயிட்டான்னு நம்ப வச்சுடறார்.அக்காவும் தம்பியுமா சேர்ந்து ஊரையே நம்ப வச்சுடறாங்க.

 

 

மனைவி இப்படி பண்ணிட்டாளேன்னு அவமானமடைந்த ஹீரோ தற்கொலை பண்ணிக்க முயற்சி செய்யும்போது ஒரு சன்னியாசி வந்து காப்பாத்துறாரு.அப்புறம்,ரெண்டு பேருமா சேர்ந்து உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க ஊருக்கு வர்றாங்க.



இதுக்கிடையிலே, ஏற்கனவே ஜமீன் வீட்டோடயிருந்த தாசி வெளியே போய் வேலைக்காரியிடம் சொல்லிவிடுகிறார்.

கே. நாகராஜன் ( ஜமீன்தார்)



வேலைக்காரி போலீசிடம் தெரிவித்து கதாநாயகியை மீட்கிறார். ஜமீந்தாரும், வில்லனும் தண்டிக்கப்படுகிறார்கள்.



 

ஹீரோவின் அண்ணனுக்கு ஒரு சூழலால் வேலை போகிறது.அவரின் மனைவியையும் ஹீரோ குடும்பம் மன்னித்துவிடுகிறது. அனைவரும் உண்மைகளை அறிந்து ஒன்று சேர்கின்றனர்.

 


 

புராண, இதிகாச நாடகங்களை அப்படியே ஒரே கோணத்தில் படம்பிடித்து திரையிடப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், புதுமையான சமூகக் கதைகளை புரியும்படியும் ரசிக்கும்படியும் எடுப்பது ஒரு அறைகூவலாகவே இருந்தது. ஹாலிவு இஅயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் வந்த இரு சகோதரர்கள் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வழியமைத்த படங்களில் ஒன்றாகும்.







50 பாடல்கள் என்றிருந்த நாட்களில், 14 பாடல்கள் மட்டுமே அவையும் சிறிய பாடல்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. கதை வசனம் பாடல்கள் ச.து.சுப்ரமண்ய யோகி என்று



S.N.கண்ணாமணி



S.N.விஜயலக்‌ஷ்மி



M.கண்ணன்

 

 

 

 

No comments: