Monday, May 30, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த வி.அமலன் ஸ்டேன்லி கவிதைகள்

ரகசியக்காதல்
தன்னந்தனியனாய்
தவறவிட்ட உன்னைத்தேடி

பதற்றப்பட்டு பரபரக்க
உரத்து உன் பெயர் கூவியழைக்க
திராணி இம்மியுமில்லை
கானுயிர்கள் விழிப்புறும் பட்சத்தில்

சருகுகளின் சப்தத்தைத் தவிர்க்க
நுனிக்காலில் நகர்கிறேன்

பட்சிகளின் பொந்துகளிலும்
பட்டைகளின் இடுக்குகளிலும்
சொல்லிவைக்கிறேன் உன்னைப்பற்றி
எங்ஙேனும் கண்டால்
தகவல் அனுப்பவென்று

சளைக்காமல் தொடர்வேன்
அதுவரையில்
கானகத்தைத்
தீண்டாதிருக்க வேண்டும் தீ.

நிஜம்
எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்தது

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்தது

கயலிதழி
தேவதை மீன்களுக்கு
கீழுதடு அகழ்ந்தெடுக்கும்
ஈருதடுகளும் ஒருங்கிணைந்து
சீராகக் குவிந்து மீளும்
பொன் மீன்களுக்கு

‘கப்பி’களோடு முணுமுணுவெனும்
உதடியக்கம் புலப்படாது
‘கௌராமி’களுக்கு

உண்மையிலேயே
மீன்களின் உதடுகள்
செழுமையானவை
வனப்பும் வசீகரமும் மிக்கவை

‘கொய்கெண்டை’களோவென
குவிந்தன அவள் உதடுகள்
$$$
வாழ்தலுக்கிடையில்
அவ்வப்போது
இருத்தலை உறுதிப்படுத்திக்கொள்ள

சொற்ப நீர்த்தேங்கலின்
மேற்புறப்படலமென
மெய்சிலிர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது
வெறுங்காற்றுக்கு
@@@
அடர்வற்ற மந்தாரைச் செடியின்
இலைக்கற்றைக் கூரையின் கீழ்
தோளுக்குள் தலைசெருகி
குந்தித் தூங்கியது
ஒரு தேன்சிட்டு

காலாற நடந்துபோன ஓரிரவில்
கவனித்தோம்
பின்னர் உற்று நோக்கினோம்
சிலிர்ப்புண்டாயிற்று

இன்னும் நெருங்கினோம்
சப்தமற்று
கொஞ்சமும் சலனப்படாதிருந்தது

வசப்படுத்தும் மிக
அரிய தருணம்
கைகூடிற்று

அப்படியின்றி
மெல்லக் கடந்துபோனோம்

அப்போது அது
பறவையாகவே இல்லை
             -வி.அமலன் ஸ்டேன்லி

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான கவிதை...

கீதமஞ்சரி said...

இருத்தலை நிரூபிக்கும் காற்றுக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. மற்றவையும் அருமை.

ச.முத்துவேல் said...

@கவிதை வீதி சௌந்தர்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

@கீதா
உண்மைதான். நன்றி.