Wednesday, September 18, 2013

உள்ளே வந்துவிட்ட கொசு


உள்ளே வந்துவிட்ட கொசு

வாகாய் கையருகில்
நெடு நேரமாய் தியானித்திருந்த கொசுவை
அடிப்பதுபோல் கை ஓங்க பறந்துவிட்டது
கைக்கெட்டா இடம் சேர்ந்து
அவனைவிட உயரமாகிப்போனது
தன் இமை மயிர் அளவேயான கொசுவை
நசுக்கிவிட பற்கள் கடித்துக்கொண்டு
ரப்பர் பந்தை விட்டெறிந்தான்
12 முறை சென்றுவந்தும்
அவன் இலக்கைத் தாக்கும் தீரம் இளக்காரமாக
அமர்த்தலாய் உட்கார்ந்துகொண்டிருந்தது
ஒரேயொருமுறை அதனருகில் விழுந்த பந்தின்
நுனி தீண்டவியலாத சுவரும் கூரையும்
இணையும் கவைக்குள் குடியேறிவிட்டது
‘எல்லாக் கொசுக்களும் டெங்கு கொசுக்களல்ல
கொசு கடித்த எல்லாரும் டெங்குவில் சாவதுமில்லை’
இயேசுவே அவன் காதில் சமாதானம் உரைத்தும்
டெங்கு பயம் மண்டைக்குள் ர்ர்ரீங்கரித்தது.
இப்போதும் பயனிலாத பந்தையே விட்டெறிய
பட்டுத் திரும்பி எரியும் மின்விளக்கின் மேல் விழுந்தது
நல்லவேளை உடையவில்லை
இப்போது இயேசு ஏதும் சொல்லாமல் கைவிட்டதால்
தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்
‘இதை கொசுவாயிருந்தபோதே அடித்திருக்கலாம்’

Thursday, August 8, 2013

நான் சாகிறேனே

நான் சாகிறேனே
என்பது கூட அல்ல
என் கவலை
எனக்காக உழைத்திட்ட
இந்த என் உடலை
அப்படியே விட்டுவிட்டுப்
போகிறேனே...

Tuesday, July 16, 2013

கதிர்பாரதிக்கு நிறையவே மச்சங்கள்

கதிர்பாரதிக்கு நிறையவே மச்சங்கள்



கவிதைகளுக்கு எழுதப்படும் விமர்சனம், கவிதைகளை விட விமர்சகனைப் பொருத்தே அமைந்துவிடக்கூடியதுதானே இயல்பு! நான் எழுதும் விமர்சனத்தில் என்னைக் காட்டிக்கொள்ளும் அச்சத்துடனும், தயக்கத்துடனுமே கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுப்பைப் பற்றி தொடர்கிறேன்

கதிர்பாரதியின் இயற்பெயரைப் படித்துத் தெரிந்துகொண்டபோது ஏற்பட்ட காரணம் தெரியாத, அல்லது காரணம் தெரிந்த உற்சாகம், அடுத்த பக்கத்தைப் படித்தபோது வடிந்தே போனது. பின்னே என்னவாம்? எனக்கே எனக்கு மட்டும் கடுப்பேற்றக் கூடியது என்று நான் நம்பிக்கொள்ளும், அந்த வரிகள் இதுதான்.
’’ உலக ருசிகளையெல்லாம் ஒன்று திரட்டி என் மனைவி வைக்கும் மீன் குழம்பின் ருசிக்கு சமர்ப்பணம்’’
(எனக்கும்தான் கல்யாணம் ஆகிவிட்டது என்கிற தகவல், தெரியாதவர்களுக்காக)

கதிர்பாரதியின் முதல் தொகுப்பாகவே இருந்தாலும், பெருமையோடும், தைரியமாகவும் தமிழ்கூறும் நல்லுலகின் முன் வைக்கும் தகுதி படைத்த கவிதைகளின் தொகுப்பாகவே இருக்கிறது. பணியும், விருப்பமும் ஒன்றேயாக அமைந்துவிட்ட கதிர்பாரதியின் நற்பேறும், அனுபவமும், அவரது படைப்புகளிலும் வீணாகாமல் பிரதிபலிக்கிறது. கவிதைமொழி, உத்தி என்று கவிதையின் அம்சங்களில் நல்ல தேர்ச்சியோடு இருக்கிறது, கவிதைகள்.

தொகுப்பு குறித்த தொகுப்பான ஒரு பார்வையை வைக்குமுன், ஆங்காங்கே என் பார்வையை முன் வைக்கிறேன். வேறு யாருக்கு இது நெருக்கமாக இல்லாமல் போனாலும், கதிர்பாரதிக்கு நெருக்கமாய் இருக்கலாம்.

‘தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று’ என்கிற குறைந்தபட்ச சொற்களில் அமைந்த சிறிய வரியில், என் மனக்கண்ணில் விரியும் சலனக் காட்சி பெரியதாயிருக்கிறதால் மொழியை எண்ணி வியந்துபோனேன்.( கருப்பு வெள்ளை காலத்து திரைப்படமாகத்தான் ஓடியது).

உயிர்ப்பந்தல் போன்ற கவிதைகளில் தென்படும் கவிஞனின் விவசாய வாழ்வு எல்லோருக்கும் கிடைத்திடாத பாக்கியம். (இது என்ன? போகப்போக, கதிர்பாரதி, உலகத்திலுள்ள அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்றவர் பட்டியலில் சேர்ந்துவிடுவார் போலத் தோன்றுகிறதே!)

’கண்களிலிருந்து ஒளியையும், கொங்கைகளிலிருந்து கூச்சத்தையும்’ என்கிற வரி என்னை நிறையவே சலனமடையச் செய்தது. கொங்கைகள் எப்போதுமே மீறல்கள். அவைகளில் சில கட்டுக்கடங்காத திமிறல்கள். ஆனால், கூச்சம் என்பது அடங்குதல், குறுகுதல், உள்வாங்குதல். ஆனாலுமே கூட கொங்கைகளின் பண்பாக கதிர்பாரதியின் கூற்று பிடித்திருந்தது. ஒரு ஆணாக என் மனம், கொங்கைகளின் விஷயத்தில்  இந்த இரண்டும் கலந்த தன்மையைத்தான் விரும்புகிறது போலும்.

சில கவிதைகளை எனக்கு நானே சிறு சிறு திருத்தங்களை செய்து எனக்குகந்த வகையில் வாசித்துக் கொண்டேன். உதாரணமாக, ‘’ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்’’ என்கிற நல்ல கவிதையின் கடைசி வரியை நீக்கிவிட்டு.

யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட, புனைவிலேற்றி சொல்லப்பட்ட கவிதைகளை, ஒரு படிமமாக்கி, அப்படிமத்திற்கு பொருந்துகிற ஒரு சூழலை, என் வாசிப்பின் வழி, நான் கண்டுபிடித்துக் கொண்டபோதுதான், அக் கவிதைகள் என்னை வந்தடைகின்றன.இம் மாதிரியான கவிதைகளும் தொகுப்பில் அடக்கம். கோழிக்கால குறிப்புகள் போன்று சில கவிதைகளில் கவிஞரே கண்டுபிடிப்பை எளிதாக்கிவிடுகிறார்.

‘கொண்டலாத்தி குகுகுகுக்கும் கோடை’ என்கிற கவிதை, வெளியிடப்பட்ட காலத்திலேயே என்னை மிகவும் வசீகரித்த கவிதை. வெகு நாட்கள் கழிந்த பின்னும், எத்தனை முறை வாசித்தாலும் அத்தனை முறைகளிலும், அதே வசீகரத்தையும், வாசிப்பின்பத்தையும் இக் கவிதை தக்கவைத்துக்கொண்டிருப்பதே சிறப்பு.

தொகுப்பில் தனித்தயொரு சாயலில், குரலில் அமைந்துள்ள ’லாபங்களின் ஊடுருவல்’ கவிதை சொல் சொல்லாகக் கவர்ந்தும், லௌகீகத்திலிருந்து விலகிய தத்தளிப்பான வாழ்க்கை கொண்டவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்திருக்கிறது.

‘வேம்பின் புண்ணியத்தில் அத்தனைக் கசப்பாக இல்லை இந்தக் கோடை’ என்கிற வரியைப் படித்தபோது, ஒரு நிமிடம் தேவதேவனின் பக்கத்து இருக்கையில் கதிர்பாரதியை உட்கார்த்தி வைத்து அழகுப் பார்த்துக் கொண்டது என் உள்ளம்.

சில கவிதைகள், கவிஞனுக்கு ஏற்படுகிற தூண்டுதல்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கே ( தேவையில்லை என்றபோதும்) சவால் விடுகின்றன. ஆனால், மகன்களைப் பற்றிய கவிதையில் இந்த சவால் இல்லை. ’’மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது அவன் தரும் மழலை இன்பங்கள் மட்டுமே போதும். மற்றவையெல்லாம் உபரி’’ என்று ஒருமுறை முக நூலில் எழுதியிருந்தேன்.மகன்களால் நிறைய உதவி பெற்ற பாக்கியசாலியாகவும் இருக்கிறது கதிர்பாரதியின் வாழ்க்கை. ’இந்தாப்பா தண்ணி குடி’ என்கிற ஆறுதலெல்லாம் அதற்கும் மேலான கொடுப்பினையே. நிகழ்வுகளின் மீது, கவிஞன் வைக்கும் படைப்பூக்கமான சித்தரிப்புகளும், சிந்தனைகளும் கவிதைகளை மேலும் சிறப்பாக்குகிறது. கதிர்பாரதியின் கவித்திறனுக்கு எளிதில் சான்றளிக்கக் கூடியனவாக அமைந்துள்ளன மகன்களைப் பற்றிய கவிதைகள்.

சரி, குறைகள் என்று சொல்லிக்கொள்ளும்படியானவற்றை பட்டியலிட்டுவிடுகிறேன்.
-வாசகர்களிடம் நேரடியாக உரையாடும் தன்மையில் நிறைய கவிதைகளை எழுதியிருப்பது. அதிலும், வாசகர் தரப்பில் தானே காயை நகர்த்துவது.
- தமிழ்க் கவிதையில் நிறைய வடமொழிச் சொற்களை கலந்து எழுதியிருப்பது
-தொகுப்பை பக்கங்களின் எண்ணிக்கையில் தோராயமான பாதியாக பிரித்துக்கொண்டால், முதல் பாதி அளவுக்கு பின்பாதியில் சில கவிதைகள் வசீகரிக்காதது.
-விரிப்பின் கசங்களிலும், தலையணை பிதுங்களிலும்- என்கிற வரிகளில் எழுத்துப்பிழை

நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும் எழுதிக்கொண்டிருக்கும் காலச் சூழலில், பாடுபொருட்களில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடுகளை பார்த்துவிடமுடியவில்லைதான். கவிஞனின் கூறுமுறையால்தான் கவிதைகள் கவனத்தை ஈர்க்கமுடியும். கதிர்பாரதி நன்றாகவே கவனத்தை ஈர்க்கிறார்.


ஈசல் வார்த்தைகள், மறியின் பச்சையக் கனவுகள், கண்களில் உப்புச் செடி, பத்துத் தலை காமம், மிதவையின் மேல் நோக்கி எழும் ஆன்ம வேட்கை, நீர்ப்பள்ளம் போன்ற கவித்துவமான படைப்பூக்கம் மிகுந்த சொற்றொடர்கள் வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. வேதாகம மொழிநடையின் தாக்கம் கவிஞரின் மொழியில் நன்கு கலந்திருக்கிறது. வாசித்து கசப்பாகும்படியாகவோ, ஏமாற்றமளிக்கும்படியோ ஒரு கவிதைகூட இல்லை.

மெசியாவின் பெயரால் தலைப்பிடப்பட்டிருந்தாலும், சாத்தானின் குரலே தொகுப்பின் நிறைய இடங்களில் ஒலிக்கிறது. தாபங்களின் சாபங்கள், வாழ்க்கையின் சுமையை சுமக்க முடியாமல் கையறு நிலையில் கொட்டி ஆற்றிக்கொள்ளும் வசைகள், புலம்பல்கள் அவை.
                                           -ச.முத்துவேல்

Thursday, January 31, 2013

உயிர் எழுத்து 4 கவிதைகள்

உறுபசி

சலிப்படைந்த உணவை
வெறுத்து
தூங்கிப்போனான்
வைராக்கியத்தோடு
உறங்காமல் பசி விழித்திருக்க
நள்ளிரவில்
தூக்கம் களைந்து
புரண்டு புரண்டு படுத்தும்
பசி துரத்த
தாளாமல் எழுந்து
பழைய சோற்றை
ஆவேசத்துடன் புசிக்கும்போது
பழைய சோற்றுக்கு
கண்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர்
உதட்டோரங்களில்
          கூர்வாளாய் மின்னும் கேலிப்புன்னகை

எஸ்.பி.பி மேல் சத்தியம்
வடக்கிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்
எஸ்.பி.பி இந்தியில்
பாடிக்கொண்டிருந்தார்
கர்னாடகாவில் கன்னடத்தில்
ஆந்திராவில் தெலுங்கில்
கேரளாவில் மலையாளத்தில்
உலகம் முழுக்க காற்றலைகளில்
விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்
எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.
சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்
பல பெயர்களின் கும்பலில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்
ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது
தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்
எனினும் பொறித்தது
எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல
இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்
பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?
நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?


நிர்வாண நீர்
அம்மணம்
அசிங்கமாகிடாத
குழந்தை
நீரை
வாளியிலிருந்து
அள்ளியள்ளி
உச்சந்தலைக்கு மேல் வீசி வீசி
கைகொட்டிச் சிரிக்கிறது
கரைகள், கலன்கள் அணிவித்திருந்த
ஆடைகளைத் துறந்த நீர்
அந்தரத்தில் அம்மணமாய்
களியாட்டம் போட்டுவிட்டு
குழந்தையின் அம்மணத்தின் மேல்
நிர்வாணம் மறைக்க விரும்பா
நிர்வாண ஆடையாய் சரிகிறது


விலக்கப்பட்ட கனி

எங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்
ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறது
இன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதும்
இடையில் ஒருவன் அதை களவாட முயன்றதும்தான்
என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறது
இப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறது
காப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்
கண்களுக்குள்  நிறங்களோடு நின்றாடுகிறது
கடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்
அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்
மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன்
வனம் வனமாய் அலைந்து
திராட்சைப் பழங்கள் முதல்
பலாப்பழங்கள் வரை பறித்து
எனது பசியின் அறையில் நிரப்புகிறேன்
ருசி கொஞ்சம் ஆறியது போலிருக்கிறது
பசி தணிந்தது போல்தானிருக்கிறது
ல தேசத்துப் பழங்களாலும் நிரப்பப்பட்ட
எனது பசியின் அறை  
நடுவில் ஒரு சிறிய வெற்றிடத்தை
விட்டுவைத்திருக்கிறது
எனக்கு விலக்கப்பட்ட கனியின்
அளவிலேயே, உருவிலேயேயிருக்கிறது அவ்
விடம்

 நன்றி- உயிர் எழுத்து ஜனவரி’13

Tuesday, December 25, 2012

எஸ்.பி.பி மேல் சத்தியம்

எஸ்.பி.பி மேல் சத்தியம்


வடக்கிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்
எஸ்.பி.பி இந்தியில்
பாடிக்கொண்டிருந்தார்
கர்னாடகாவில் கன்னடத்தில்
ஆந்திராவில் தெலுங்கில்
கேரளாவில் மலையாளத்தில்
உலகம் முழுக்க காற்றலைகளில்
விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்
எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.
சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்
பல பெயர்களின் கும்பலில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்
ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது
தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்
எனினும் பொறித்தது
எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல
இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்
பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?
நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?

Monday, December 17, 2012

மீண்டும் வாழ்தல்


மீண்டும் வாழ்தல்

அடையாள அட்டை எண் 396
பணி ஓய்வு பெறும்போது
அடையாள அட்டை எண் 3342
பதினெட்டு பணிஆண்டுகள்  நிறைவுற்றிருந்தார்

இவர்களிருவருக்கும் முன்னும் பின்னும்
பல அடையாள அட்டைகள்
எனினும்
396க்கும் 3342க்கும் பல ஒற்றுமைகள்

396 வாழ்ந்த வாழ்க்கையையே
3342 மீண்டும் வாழ்வதும்
பெரிய வேறுபாடு
காலம் மட்டுமே என்பதையும்
3342 கண்டுணர்ந்தபோது
சலிப்பினால் இமைப்பொழுதில் இளைத்தார்

எஞ்சிய வாழ்நாட்களிலாவது
தனக்கெனவொரு தனித்த வாழ்வை
வாழ்ந்துவிடுவது என்று சூளுரைத்தார்
‘அந்த வாழ்க்கையும் யாராலாவது
வாழப்பட்டிருக்கலாமே’ என்று ஒலித்த அசரீரி 
வந்த திக்கில்
வெறுப்புடன் வெறுங்கையை வீசியதில்.
ஒரு மஞ்சள் மலரில் அமர்ந்திருந்த
சாகாவரம் பெற்ற வண்ணத்துப்பூச்சி
கலைந்து எழுந்து
அதே செடியின் இன்னொரு
மஞ்சள் மலரில் அமர்ந்து
உறிஞ்சத்தொடங்கியது

பரம்பரை



பரம்பரை

கறுப்பாயிருக்கிறவங்களை என்னால அந்தளவுக்கு நேசிக்க முடியறதில்ல.சகஜமாத் தொட்டுப் பேசறதுகூட இல்லைன்னா பாத்துக்கங்களேன். அதனாலதான் என் பையன் மேல எனக்கு அந்தளவு ஈடுபாடு இல்லையோன்னு யோசிச்சதுண்டு. அது உண்மைதான்னும் மனசுக்கு தெரியுது.ஆனா, என்னால  ஏனோ மாத்திக்க முடியல.எம் பையங்கிட்ட ஒட்டுதல் இல்லாம, எப்பவும் ஒரு வெறுப்போடயே இருக்கிறன்.

எங்கம்மாவும் இப்படித்தான்.அவளப் பாத்து, பாத்து, அவ பேசறதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளந்ததாலயே எனக்கும் இந்தக் கொணம் வந்திருக்கலாம். அவ பொதுவா எந்தக் கொழந்தைங்களையுமே கொஞ்சி நான் பார்த்ததேயில்லை.’’ டேய்..டேய் கம்மனாட்டி..இங்கப் பார்றா. அங்க என்னாடாப் பாக்கற..ங்கொப்பனை என்னாடா பாக்கற. ங்கொப்பனை நீ பாத்ததேயில்லயா? இங்கப் பார்றா..டேய்..இங்கப் பார்றான்னா..’’ இப்படித்தான் கொஞ்சுவா.ஒரு கொழந்தையைப் பார்த்தா, நாமும் ஒரு கொழந்தையா மாறி, எறங்கி வரணும்.அவளாவது, எறங்கறதாவது! ஆனா, பாக்க சிவப்பா அழகா இருக்கிற கொழந்தைங்கள மட்டும் தொட்டுப் பேசுவா.ஆனா, கொடுமை என்னான்னா அவளுக்குப் பொறந்த நாங்க எல்லாருமே கறுப்புத்தான்.எங்கப்பன் கறுப்பு அப்படியே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சி. எப்படி அந்தாளை எங்கம்மா கட்டிக்கிட்டாங்கிறது இன்னும் புரியாத புதிர்தான். அவளுக்கும் இந்த ஒலகத்தில எந்தவொரு மனுசாளு மேலயாவது உண்மையிலெயே அன்பு,பாசம்லாம் இருக்குதான்னு கேட்டீங்கன்னா, அதுக்கு ஒரே ஒரு ஆள்தான் உண்டு. அது அவங்க அப்பன், குப்புசாமி கவுண்டர் மட்டுந்தான். அந்த ஆள் ஓரளவு   நல்ல செவப்பாவே இருப்பாரு.அந்தப் பட்டிக்காட்டு ஊருக்கு, அந்த ஜாதிக்கி அது பெரிய கலரு, பெரிய விஷயம். அவரோட கலருதான் நமக்கும் வந்திருக்குங்கிற பாசமோ என்னவோ?. ஆனா, அதுவும் சரிதான். அவரு காலத்துல ஊருலயே பெரிய மனுஷன் வேற. எங்க தாத்தா பாக்க ஜெயஜாண்டிக்கா இருப்பாரு. இந்திரா காந்தி மூக்கு. சோமயாஜுலுன்னு ஒரு நடிகர் இருந்தாரே அவர ஞாபகப்படுத்தற மாதிரியான மொகம். ஆனா ரங்காராவு மாதிரி கம்பீரமான உருவம், அதே மாதிரி கணீர் குரல்.அவர் வச்சிருந்த வால்வு செட் ரேடியோல ந்யூஸ் கேட்க திண்ணையில பெருசுங்கல்லாம் ஒக்காந்துருக்கும். இவருக்கு மட்டும் ஒரு சேரை காத்தோட்டமா போட்டுக்கிட்டு, கால் மேல கால் போட்டுக்கிட்டு வாசலுக்கு வெளிய தன் ஒடம்பத் தானே தடவிக்குடுத்துக்கினே ஒக்காந்திருப்பாரு. வயல் வேலை முடிச்சிட்டு போறவங்க கூட நின்னு செய்தியில என்னா சொல்றான்னு கேட்டுட்டுப் போவாங்க. டவுன்லருந்து துக்ளக் புக்லாம் வாங்கிப் படிக்கிற அளவு ஊர்லயே வெவரமான ஆளு. நான் லீவுல ஊருக்குப் போயிருக்கறப்ப துக்ளக் புக்கைக் குடுத்துப் படிக்கச் சொல்லுவார் எங்க தாத்தா. ‘ டேய் டவுன் கேடி. கேடிக்குப் பொறந்த கேடி நீ மட்டும் எப்படியிருப்ப?அப்பனாட்டந்தான இருப்ப. இந்தா , இதைப் படின்னு சொல்வார். தாத்தாவுக்கு எங்கப்பாவ புடிக்காது. எங்க அம்மா ஏன் இப்படி இருக்கிறான்னா, அதுக்கு எங்கத் தாத்தன்தான் எல்லா வகையிலயும் காரணம். அந்தாளும் எந்தப் பசங்களாயிருந்தாலும் இப்படித்தான் பேசுவார். ஆனா, இப்ப யோசிச்சுப் பாத்தா எங்க அம்மாவைவிட பல மடங்கு எங்கத் தாத்தன் எவ்வளவோ பரவாயில்லன்னுதான் சொல்வேன்.ஏன்னா, அந்தாளுக்கு பாசம்னா என்னான்னு வாசனைக்காவது தெரியும். எனக்கு எங்க அப்பாவைத் திட்டுறாரேன்னு கோவமா வரும். படிக்க மாட்டேன். அப்புறம் அங்கிருக்கிற பெருசுங்க யாராவது சொன்னப்பறந்தான் படிப்பேன்.  நாலாவது,அஞ்சாவது படிக்கிற பையன் இப்படி சரசரன்னு படிக்கிறானேன்னு எல்லாரும் ஆச்சரியமாப் பேசிக்குவாங்க.அந்த ஊர்ப் பசங்கள என்னைக் காட்டித் திட்டுவாங்க.  நான் லீவுல போயிருக்கிற சில சமயங்கள்ல அங்க இன்னும் லீவ் விட்டிருக்கமாட்டாங்க. ஒரு சின்ன ஓட்டுவீடு மாதிரி இருக்கிற பள்ளிக்கூடம் எங்க தாத்தா வீட்டுக்குப் பக்கத்துலயே இருந்தது.அந்த பள்ளிக்கூடத்தை ஆச்சரியமா பாப்பேன். இந்த மாதிரி ஸ்கூல்ல படிக்காமபோயிட்டோம்மேன்னு ஏக்கம் வரும். ஏன்னா, பசங்களுக்கு ஒரு கட்டுப்பாடுஏ இல்லாம இருந்தது.அவங்கவங்க எழுந்து இஷ்டத்துக்கு ஓடறதும், சத்தம் போட்டு விளையாடுறதுக்கும், எதிரிக்கிலிருக்கிற எங்க மாமாவோட மளிகைக் கடைக்கு வர்றதும் பாக்க நம்பவே முடியல.எங்க தாத்தா  டெல்லிக்கி அப்பப்ப எதாவது மாநாட்டுக்குல்லாம் போய்வர்ற ஆளு.தோளில எப்பவும் பச்சைத் துண்டு போட்டிருப்பாரு.வீட்டுல ஒரு தலைவர் போட்டோ இருக்கும்.அவரும் பச்சைத் துண்டு போட்டிருப்பாரு.  ஊருக்குள்ள பெரிய அதிகாரமும், அந்தக் காலத்துலயே எழுதப் படிக்கவும் தெரிஞ்ச ஆள்.

எங்க மாமா ஒருமுறை சொன்னார்.அதாவது சின்னத் தாத்தாவோட மகன்.
’’ உங்க தாத்தா அந்தக் காலத்துலயே படிச்சவன்ங்கிறதாலதான் எங்கப்பன் சொத்துல நிறைய ஏமாத்தி எழுதி வாங்கிக்கிட்டான்.’’ அப்படிச் சம்பாதிச்ச சொத்துல பொண்ணுக்கும் பங்கு குடுத்தவராச்சே. இதனால எல்லாந்தான் எங்கம்மாவுக்கு அவங்க அப்பன் மேல பாசம். அப்பனைத் தவிர அவ பொறந்த வீட்டு ஜனங்க இன்னும் சிலர் மேல பாசம் உண்டுன்னு நான் ஒரு சின்ன லிஸ்ட் மனசுல வச்சிட்டிருந்தேன்.ஆனா, அவ அந்த லிஸ்டுல இருந்த எல்லாரையும் ஒன்னொன்னா காலி பண்ணிட்டா.

நான் சின்னப்பையனா இருக்கிறப்ப அவ அடிக்கடி ஒரு சம்பவத்தைத் தெருப்பொம்பளைங்கக் கிட்ட பெருமையா சொல்லிக்கினுருப்பா.  அது அவளோட சின்ன வயசில நடந்ததாம். அவங்க  ஊர்ல  இருக்கிற ஒரு குடிகாரன், பேரு என்னமோ சொல்வா.  இவ சின்ன வயாசாயிருக்கும்போது, அவளோட பின்னாலயே  நைஸா வந்து டபக்குன்னு பாவாடையத் தூக்கிட்டு, உள்ளப் பூந்துக்குனு ‘’ கவுன்ச்சி..ஒம்பொண்ணு என்னா செவப்பு! ன்னுவானாம். சொல்லிட்டுச் சொல்லிட்டு சிரிப்பா. எனக்குப் பத்திக்கினு வரும்.மொதல்லயெல்லாம் அந்த ஆளுமேலதான் கோவம் வந்துக்கிட்டிருந்தது.ஆனா, போவப்போவ இவ மேலதான் எரிச்சல் வந்துச்சி.சனியன் புடிச்சவ.விவஸ்தைன்னா என்னன்னே தெரியாதவ. மூஞ்சியிலயே போய் காறி துப்பலாமான்னு இருக்கும்.

எங்கம்மாவ எனக்கு சுத்தமாப் புடிக்காதுன்னாலும், அவக்கிட்டருந்து இந்தக் கறுப்பு, செவப்பு கொணம் மட்டும் மனசோடக் கலந்துபோய் இருக்குதேன்னு நினைச்குவேன்.ஆனாலும், அது கறை மாதிரி ஒட்டிக்கினு போவ மாட்டேங்குது ங்கிறதுதான் உண்மை..அதேமாதிரி கறுப்புலயே கூட பணக்காரங்க கறுப்பு சரி பரவாயில்லைங்கிற மாதிரி இருக்கும்.ஏன்னா, ஷைனிங். அண்டங்காக்காவைவிட சாதா காக்கா கலரு பரவாயில்லதானேங்கிற கதைதான். வெள்ளைக்காரனுக்கு கறுப்பருங்க மேல இருக்கிற வெறுப்பு எனக்கு ஓரளவு நியாயமாத்தான் தெரியுது. ஒருமுறை எங்க காலேஜ்ல செஞ்சிக் கோட்டைக்கு டூர் போயிருந்தப்ப நடந்த  ஒரு சம்பவத்தை அடிக்கடி  நெனைச்சிப்பேன்.எங்க செட்டுல இருந்த முருகன் செம கருப்பா இருப்பான்.அவன், அங்க சுத்திக்கிட்டிருந்த வெள்ளைக்கார சின்னப் பொண்ணுக்கிட்ட, பறக்கிற மாதிரி கையை விரிச்சிக்கிட்டு, ஆஆஊஊன்னு கத்திக்கிட்டே கிட்ட ஓடினான். அது பாவம் பயந்து, பதறிப்போயிடுச்சி. முருகங்கிட்ட வெள்ளைக்காரனும், வெள்ளைக்காரிச்சியும் கன்னாமுன்னான்னு கத்தினாங்க.  

நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறப்பகூட செவப்பான பொண்ணா இருக்கணும்கிறதுதான் நான் போட்ட முக்கியமான கண்டிஷன். கறுப்பா இருக்கிற பொண்ணுங்க, அவங்க என்னாதான் அழகா, அமைப்பாவே இருந்தாலுமே எனக்கு ஒரு இது வர்றதில்ல.செவப்பா பொண்ணு கட்டுனா பொறக்குறது செவப்பாப் பொறக்க வாய்ப்பும் இருக்குதே.ஆனா, அதையும் மீறி பொறக்குறது என்னாட்டம் கறுப்பா பொறந்துட்டா? அதுக்கென்னா பண்ணமுடியும்? எல்லாம் ஒரு முயற்சிதான்.பாப்பமே.அதனாலதான் செவப்பா பொண்ணுதேடி கட்டுனேன்.

நான் பயந்தமாதிரியே எம் பையன் கறுப்பா, என்னைவிடவே கறுப்பாப் பொறந்துட்டான்.அப்பவே ஒரு ஏமாத்தமும், வெறுப்பும் ஸ்டார்ட் ஆகிடுச்சின்னுதான்   நெனைக்கிறன்.அதுதான் நா எம் பையங்கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்குக் காரணமாயிருக்க முடியும்.ஆனா,அது மட்டுமேன்னு சொல்லிடவும் முடியாது. ஒரு கொழந்தைன்னா எப்படியெப்படியெல்லாம் இருக்குமோ, இருக்கணுமோ அப்படியெல்லாம் அவன் இல்லை. இதுவும் ஒரு முக்கியமான காரணம்.ஓடியாடி விளையாட மாட்டான்.துருதுருன்னிருக்க மாட்டான்.யார் எது கேட்டாலும் பேச மாட்டான்.அதுவேணும் இது வேணும்னு அடம் புடிக்கமாட்டான். வீட்டூக்கு வரவங்கள்லாம் பேசிப் பேசிப் பார்த்துட்டு நல்ல பையன், அமைதியான பையன்னுதான் சொல்லுவாங்க. முடி வேற வெட்டாம, சாமிக்கு நேந்துவுட்ட கணக்குக்குத்  தள்ளிக்கினே போய் நெறைய வளந்து குடுமியெல்லாம் போட்டு வச்சிருப்பா எம் பொண்டாட்டி. அதுவேற அசிங்கமா இருக்கும். எங்கம்மா பேரனைப் பாத்த கதையை சொல்லாம விட்டுட்டனே.

எம் பொண்டாட்டி கொழந்தை பொறந்ததும் அவங்கம்மா வீட்டுக்குப் போய் இருந்தா.  நாங்க இருக்கிறது தனிக்குடித்தனம், மெட்ராசுல. மெட்ராசுலயே பிரசவமும் பாத்துட்டோம். ரொம்ப நாள் கழிச்சி,  எங்கம்மா வெறுங்கையோட எம் மாமனார் வீட்டுக்குப்போய், கொழந்தையைப் பாத்திருக்கா.ஊர் ஒலகத்துல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். ஏன் இன்னும் பேரப்பையனைக்கூட போய் பாக்கலியான்னு. அதான். பாத்துட்டு, ‘இதென்னாஆ? இந்தப் பையன் இப்படியிருக்குது?கன்னங்கரேல்னு பரதேசியாட்டம்.. வயித்துலயிருக்கும்போதே குங்குமப்பூவுல்லாம் வாங்கிக் குடுத்திருக்கணும்.அவன் அப்பனைவிட கறுப்பாயிருக்குது.காசி செலவாயிடுமேன்னு பாத்தா இப்படித்தான் பொறக்கும் அது இதுன்னு கன்னாபின்னான்னு பேசிட்டுப் போயிருக்கிறா.
சொந்தப் புள்ளையான என் கல்யாணத்துக்கே வரமாட்டேன்னு கிராக்கிப் பண்ணவ.வர்றதுக்கு அதுவேணும், இதுவேணும்னு இதான் சமயம்னு எங்கிட்ட காசு புடுங்கினவ.எங் கல்யாணம் அவ ராஜாங்கம் நடத்துறதுக்கு ஒரு வாய்ப்பா இருக்குமே.ஆனா, அதை நான் அவளுக்கு நான் குடுக்கல. பெரியப்பா, பெரியம்மாவ முன்ன வச்சி கல்யாணம் பண்ணேன்.அவ ஆசைப்படி விட்டிருந்தன்னா எங் கல்யாணம் கந்தக் கோலமாகியிருக்கும்.அப்பேர்ப்பட்டவ மருமவள கிட்டயிருந்து ஏதாவது பாத்துப்பாளா என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள்லயே அவளை பாக்கிற வாய்ப்புகூட எம் பொண்டாட்டிக்கிக் கிடைக்கல.   நான் வீட்டுக்குப் போனதும் எங்கம்மா வந்துட்டுப் போன கதைய எங்கிட்ட சொன்னாங்க. தொட்டுக்கூட பாக்கலன்னு ஆச்சரியமா சொன்னாங்க எனக்கு ஆச்சரியமெல்லாம் ஒன்னுமில்ல.நேரா வண்டியயெடுத்துனு வீட்டுக்குப் போனன்.ரொம்ப நாளு கழிச்சி ,வருஷங்களே ஆகிப்போயிருக்கும், நானே அப்பதான் எங்க வீட்டுக்குப் போனேன். அதுக்கப்புறம் இதோ இன்னவரைக்கும் மறுபடியும் போவவும் இல்ல. அன்னிக்குப் போய் மண்டைய ஒடச்சிட்டன்.மனைக் கட்டையால அடிச்சி மண்டையில ரத்தம் வந்துடுச்சி. நான்  பாட்டுக்கு திரும்பிக்கூட பாக்காம வந்துனே இருந்துட்டன். அடிபட்டவ நிலைமையை நினைச்சி லேசா ஒரு பரிதாபம், பதட்டம் பயம் எனக்காவது வந்துச்சி.ஆனா, அவ என்னா தெரியுமா பண்ணாளாம். தெரு ஆளுங்க எத்தனையோ பேர் என்னா சொல்லியும் கேக்காம ஹாஸ்பிட்டலுக்குப் போவாத. நேரா போலீஸ்டேசனுக்குப் போன்னாளாம்.ஏற்கனவே ஒருவாட்டி, எம் பேர்ல போலீஸ்ல கம்ப்லெயிண்ட் குடுக்கபோனவதான் அவ. கேஸ் குடுத்தா என் வேலைக்கே வில்லங்கமாயிடும்னு தெரிஞ்ச நாட்டு வக்கீல்தான் அவ.அப்பேர்பட்டவதான் என்னைப் பெத்த மவராசி.  எங்கூடப் பொறந்தவங்க எல்லாருமே  எங்கம்மாவ அடிச்சிருக்காங்க.அடிக்கும்போது திருப்பி அடிப்பாங்க.ஆனா, நான் மட்டுந்தான் அடிச்சதேயில்ல. அடிச்சா கையப் புடிச்சுக்குவேன், இல்ல வெளியில ஓடிடுவேன்.எப்பவாவது பாத்திரங்களைத் தூக்கிப்போட்டு ஒடைச்சிடுவேன். இன்னுங்கூட வீட்டுல நினைவுச் சின்னங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆங்! எங்க வுட்டேன்? எம் பையனைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தம். ஒரு நாளு நான் சிக்னல் வீக்காயிருக்குதேன்னு தெருவுல நின்னுப் பேசிக்கினிருந்தன். அப்ப இளங்கோ அவம் பையனோட தெருவில  நடந்து போய்க்கிட்டிருந்தான். என்னைப் பார்த்துட்டு நின்னான். நான் வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போய் ஒக்கார வச்சிட்டு பேசிக்கிட்டிருந்தன். இளங்கோவோட பையன் யுவனும், எம் பையனும் ஒரே ஸ்கூல்ல ஃபஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்கிறானுங்க. அந்தப் பையன் எம் பையனைப் பார்த்துட்டு நல்லா சிரிச்சிச் சிரிச்சிப் பேசறான். இவன் என்னாடான்னா என்னைத் திரும்பித் திரும்பிப் பாக்கறதும், முழிக்கிறதுமாவே இருக்கான்.இளங்கோவும் பேச்சுக் குடுத்துப் பாக்கறான். எம் பையன் வாயவே தொறக்க மாட்டங்கறான்.  நானும் பேசுடா பேசுடா. யுவன் உங்கூடத்தானடா படிக்கிறான்.அவன் எப்படி பேசறான். அவங்கேக்கிறதுக்காவது பதில் சொல்லுங்கிறன். ம்ஹூம். எனக்காக் கடுப்பாயிடுச்சு. அப்படியே மண்டையிலயே ஒன்னுப் போட்டன்.இளங்கோதான் தடுத்தான்.பேசி முடிஞ்சி வீட்டுக்குக் கிளம்பும்போது, வெளிய போய் தெருவாசல்ல நின்னு ‘ சின்னப் பையந்தான அவன். அடிக்காத. அவன் உன்னைப் பாத்தாலே பயப்படுறான். அவங்கிட்ட நீ ஃப்ரீயா பேசினாத்தான அவனுக்கு பயம் போகும். நீ அவங்கிட்ட பேசறதேயில்லன்னு எனக்கேத் தெரியும்.எங்கியாவது வண்டியில ஒக்கார வச்சி வெளியில கூட்டினு போ. இன்னும் ஒருவாட்டிகூட உன்னை அவங்கூட வெளியில போயி நான் பார்த்ததேயில்ல. இன்னிக்கி லீவுதான. இப்பவே கூட்டிக்கிட்டு போ.ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.  எனக்குந்தான் நல்லாவே தெரியுது.ஆனாலும், என்னால மாத்திக்க முடியலயே.எப்பவாவது  நானே ஆச்சரியப்படுற மாதிரி ஒழுங்காப் பேசுனாக் கூட அவம் பண்றதப் பாக்கும்போது கோவம் வந்துடுது. அப்புறம் திட்டுதான், அடிதான்.

என்னதான் நம்ம மனசுக்குள்ளயேயிருந்தாலும், அதை இன்னொருந்தங்க சொல்லக் கேட்கும்போதுதான் நல்லா ஒரைக்குது. பையனை வெளியில வண்டியில கூட்டிக்கிட்டுப் போறன்.அவனுக்கு நல்லதா ட்ரஸ் போட்டுவுடுன்னதும் எம் பொண்டாட்டியால நம்ப முடியாம பாக்கிறா. நேரா சில்ட்ரன்ஸ் பார்க்குக்குக் கூட்டிட்டுப் போனேன். சறுக்கா மரம், ஊஞ்சல் எல்லாம் காட்டினேன். ஊஞ்சல் ஆடச் சொன்னா மாட்டெங்கறான்.பயப்படுறான்.பொறுமையா ஒக்கார வச்சி, ‘வினோத் நல்ல பையன்.தைரியமான பையன். இனிமேல் எதுக்குமே பயப்பட மாட்டாந்தான.ன்னு சொல்லி ஊஞ்சல்  ஆட்டினன்.சிரிச்சான்.பயத்தில என்னை ஒரு கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டான். அப்புறமா இறக்கி விட்டு அப்படியே நடத்திக் கூட்டிக்கிட்டுப் போனன்
‘அப்பா. அதோ அது என்னாது?
அப்பா. எங்க ஸ்கூல்லகூட ரோஸ்லாம் இருக்குது
அப்பா. யுவன் கூட எங்கக் கிளாஸ்தாம்பா
அப்பா. இனிமே நான் பயப்பட மாட்டேன் இல்லப்பா
அப்பா அப்பா அப்பான்னு நிறுத்தாம எதையாவது பேசிக்கிட்டேயிருந்தான். எவ்ளோ நாளா தேக்கி வச்சிக்கிட்டிருந்த அணைய ஒடைச்சா மாதிரி பேசிக்கிட்டேருந்தான். ஆனா, தண்ணி எங் கண்ணுலதான் வந்துக்கிட்டேயிருந்துச்சி..அப்படியே அவனுக்கு மொகங்காட்டாம திரும்பி பேச்சுக் குடுத்துக்கிட்டே வந்தன். அவனும் பேச்சை நிறுத்தவேயில்ல. 



                     

Tuesday, November 20, 2012

தீர்ப்பு


எண்ணிலடங்காத் துளிகலாலான
ஒற்றை நதி
நடக்கிறது
எண்ணிலடங்களடங்காக் கால்களால்
படைவீரர்களின் அணிவகுப்பாய்
தடைகளை உடைக்கிறது
வறட்சியை நனைத்து பசுமையாக்குகிறது
பாதைகளை உருவாக்குகிறது
எல்லைகளை அழிக்கிறது
தாவரங்களின் வேர் நாவுகளுக்கும்
விலங்குகளின்  நாக்குவேர்களுக்கும்
ஊர்கள் ஊர்களாய் தேடிச் சென்று
நடமாடும் தண்ணீர்ப் பந்தலாய்
தாகச்சூடு தணிக்கிறது

வீழும் அருவியில்
வானத்துப் புள்ளினங்களாவது அருந்தவியலுமா?
மீனினங்களாவது நீந்த முடியுமா?

ஒற்றைக்காலும் வானம் பார்க்க
தலைக்குப்புற விழுகிற அருவி
நீரின் வீழ்ச்சிதான்.

Thursday, November 8, 2012

இறுதி மூச்சில் தாலிப்பனை

இந்த வலைப்பூவில் எப்போதுமே அதிகளவில்  பார்க்கப்படும் பதிவாக இருப்பது தாலிப்பனை படங்கள் கொண்ட இந்தப் பதிவுகள்

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

http://thooralkavithai.blogspot.in/2009/12/blog-post_29.html

மேற்கண்ட பதிவுகளில் இடம்பெற்ற தாலிப்பனை தன் ஆயுளின் இறுதிக்காலத்தில் பூப்   பூத்து நிற்கிறது. அதன் தற்போதைய படங்கள்

 நன்றிகளுடன் பகிர்ந்துகொள்ளும் சுட்டி http://www.jeyamohan.in/?p=6063